11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்

அதிகாரங்கள்

  1. பத்தராய்ப் பணிவார் புராணம் (8)
  2. பரமனைப் பாடுவோர் புராணம் (2)
  3. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் (1)
  4. திருவாரூர்ப் பிறந்தார் புராணம் (2)
  5. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் (3)
  6. முழுநீறு பூசிய முனிவர் புராணம் (6)
  7. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் (2)

1 பத்தாராய்ப் பணிவார் புராணம்

#1
ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்
#2
தா அரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார்
மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்
#3
அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கி வரும் உவகையுடன் தாம் விரும்பி பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார்
#4
யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார்
பாதாரவிந்தத்தின்-பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில்
போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல்
#5
சங்கரனை சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார்
செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்
#6
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிக களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை
மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார்
#7
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார்
#8
சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டி தாம் அதனால்
பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார்

மேல்

2 பரமனையே பாடுவார் புராணம்

#1
புரம் மூன்றும் செற்றானை பூண் நாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை
பரமனையே பாடுவார்-தம் பெருமை பாடுவாம்
#2
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார்
பன்றியுடன் புள் காணா பரமனையே பாடுவார்

மேல்

3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

#1
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து
பூரண மெய் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்த
தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார்

மேல்

4 திருவாரூர் பிறந்தார் புராணம்

#1
அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ
#2
திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார்
பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே

மேல்

5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

#1
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து
மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்
#2
தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ
பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ
#3
நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன்

மேல்

6 முழுநீறு பூசிய முனிவர் புராணம்

#1
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி
காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக
#2
அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும்
#3
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு
சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள்
வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே
#4
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி
மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும்
#5
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர்
அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே
#6
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில்
பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை
ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே

மேல்

7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

#1
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும்
நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே
#2
செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே

மேல்