1. திருமலைச் சருக்கம்

அதிகாரங்கள்

  1. திருமலைச் சிறப்பு (40)
  2. திருநாட்டுச் சிறப்பு (35)
  3. திருநகர்ச் சிறப்பு (50)
  4. திருக்கூட்டச் சிறப்பு (11)
  5. தடுத்தாட்கொண்ட புராணம் (203)

1 திருமலைச் சிறப்பு

#1
பொன்னின் வெண் திருநீறு புனைந்து என
பன்னும் நீள் பனி மால் வரை பால் அது
தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும்
மன்னி வாழ் கயிலை திரு மா மலை
#2
அண்ணல் வீற்றிருக்க பெற்றது ஆதலின்
நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும்
எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய
புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது
#3
நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி
இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர்
உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல்
மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை
#4
மேன்மை நான்_மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் கார் எதிர்
தான மாக்கள் முழக்கமும் தா_இல் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம்
#5
பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ்
அனித கோடி அணி முடி மாலையும்
புனித கற்பக பொன் அரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம்
#6
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறள் சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம்
#7
நாயகன் கழல் சேவிக்க நான்_முகன்
மேய காலம் அலாமையின் மீண்டு அவன்
தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று
ஆய அன்னமும் காணாது அயர்க்கும்-ஆல்
#8
காதில் வெண்_குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான்
சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு
மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ்
ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன்
#9
அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க
வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி
புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு
#10
வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான்
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான்
#11
நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர்
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார்
மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான்
#12
கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும்
மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன்
செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு
#13
அன்னதன் திரு தாழ் வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்று அறியா சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி
#14
யாதவன் துவரைக்கு இறை ஆகிய
மாதவன் முடி மேல் அடி வைத்தவன்
பூதநாதன் பொருவு_அரும் தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்
#15
அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி
#16
அங்கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு
பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிட
துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம்
இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும்
#17
அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள்
சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை
வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என
#18
கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிட
செய்ய நீள் சடை மா முனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்
#19
சம்புவின் அடி தாமரை போதுஅலால்
எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என
தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன்
நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான்
#20
என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம்
இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும்
#21
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர் சடை மெய்ப்பொருள் ஆகிய
வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன்
#22
அன்னவன் பெயர் ஆலாலசுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட
துன்னினான் நந்தனவன சூழலில்
#23
அங்கு முன் எமை ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட
திங்கள் வாள் முக சேடியர் எய்தினார்
பொங்குகின்ற கவின் உடை பூவைமார்
#24
அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல்
கந்தம் மாலை கமலினி என்பவர்
கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருள் என
#25
மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட
தீது_இலா திருத்தொண்ட தொகை தர
போதுவான் அவர் மேல் மனம் போக்கிட
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்
#26
முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன
பன் மலர் கொய்து செல்ல பனி மலர்
அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின்
#27
ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே
மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி
மீது தோன்றி அ மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய் என
#28
கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான்
செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என
#29
அங்கணாளன் அதற்கு அருள்செய்த பின்
நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்று சாரும் என்று
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன்
#30
அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர்
பந்த மானுட பால்படு தென் திசை
இந்த வான் திசை எட்டினும் மேல் பட
வந்த புண்ணியம் யாது என மாதவன்
#31
பொருவு_அரும் தவத்தான் புலி காலனாம்
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று
ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல்
#32
அ திருப்பதியில் நமை ஆளுடை
மெய் தவ_கொடி காண விருப்புடன்
அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று
இ திறம் பெறலாம் திசை எ திசை
#33
பூதம் யாவையின் உள் அலர் போது என
வேத மூலம் வெளிப்படும் மேதினி
காதல் மங்கை இதய கமலம் ஆம்
மாது_ஒர்_பாகனார் ஆரூர் மலர்ந்தது-ஆல்
#34
எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள்
தம் பிரானை தனி தவத்தால் எய்தி
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது
#35
நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து
பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலர கனல் மலர்
செங்கையாளர் ஐயாறும் திகழ்வது
#36
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணிபுரத்துடன் எங்கணும்
பூசனைக்கு பொருந்தும் இடம் பல
பேசில் அ திசை ஒவ்வா பிற திசை
#37
என்று மா முனி வன் தொண்டர் செய்கையை
அன்று சொன்னபடியால் அடியவர்
தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன்
#38
மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம்
புற்று இடத்து எம் புராணர் அருளினால்
சொற்ற மெய் திருத்தொண்டத்தொகை என
பெற்ற நற்பதிகம் தொழப்பெற்றதாம்
#39
அந்த மெய் பதிகத்து அடியார்களை
நம்-தம் நாதனாம் நம்பியாண்டார்நம்பி
புந்தி ஆர புகன்ற வகையினால்
வந்தவாறு வழாமல் இயம்புவாம்
#40
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்-தம் கூட்டம் நிறைந்து உறை
குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம்

மேல்

2 திருநாட்டுச் சிறப்பு

#1
பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள்
கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலி சோழர் காவிரி
நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன்
#2
ஆதி மா தவ முனி அகத்தியன் தரு
பூத நீர் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்தது ஓர்
ஓத நீர் நித்தில தாமம் ஒக்கும்-ஆல்
#3
சைய மால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ_மகட்கு நல் செவிலி போன்றது
வையகம் பல் உயிர் வளர்த்து நாள்-தொறும்
உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது
#4
மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும்
சால்பினால் பல் உயிர் தருதல் மாண்பினால்
கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால்
போலும் நான்_முகனையும் பொன்னி மா நதி
#5
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழி
கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே
#6
வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடையநாயகி
உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது
#7
வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு
செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்கும்-ஆல்
#8
வாச நீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர்
தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே
#9
மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புது மது பொங்கிட
வாவியின் பொலி நாடு வளம் தர
காவிரி புனல் கால் பரந்து ஓங்கும்-ஆல்
#10
ஒண் துறை தலை மா மத கூடு போய்
மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட
மள்ளர் குரைத்த கை ஓசை போய்
அண்டர் வானத்தின் அ புறம் சாரும்-ஆல்
#11
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவே
#12
உழுத சால் மிக ஊறி தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திர தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம்
#13
மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய
கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள்
தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார்
வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார்
#14
செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை
அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப
பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார்
#15
கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன
சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம்
அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன
வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம்
#16
கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி
வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு
அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும்
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம்
#17
காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு
மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை
கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன
நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம்
#18
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்_மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவும்-ஆல்
#19
அன்னம் ஆடும் அகன் துறை பொய்கையில்
துன்னும் மேதி படிய துதைந்து எழும்
கன்னி வாளை கமுகின் மேல் பாய்வன
மன்னு வான் மிசை வானவில் போலும்-ஆல்
#20
காவினில் பயிலும் களி வண்டு இனம்
வாவியில் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அ தடம் மீது எழ பாய் கயல்
தாவி அ பொழிலின் கனி சாடும்-ஆல்
#21
சாலி நீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு
வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி
சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர்
ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம்
#22
பத்தியின்-பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல்
மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம்
#23
அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார்
சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார்
விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார்
#24
சாலியின் கற்றை துற்ற தட வரை முகடு சாய்த்து
கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல்
மேல் வலம்கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே
#25
வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி
செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன
கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல்
மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு
#26
அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி
பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும்
#27
கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர்
சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி
பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின்
வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்
#28
நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும்
கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும்
தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும்
நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும்
#29
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்
போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும்
#30
மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்
பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும்
செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும்
#31
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்
#32
பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும்
வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும்
தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும்
#33
மாடு போதகங்கள் எங்கும் வண்டு போது அகங்கள் எங்கும்
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்
#34
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும்
ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும்
#35
நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும்
பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால்
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ

மேல்

3 திருநகரச் சிறப்பு

#1
சொன்ன நாட்டிடை தொன்மையில் மிக்கது
மன்னும் மா மலராள் வழிபட்டது
வன்னி ஆறு மதி பொதி செம் சடை
சென்னியார் திருவாரூர் திருநகர்
#2
வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணி முழவு ஓசையும்
கீத ஓசையுமாய் கிளர்வுஉற்றவே
#3
பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதி செழு மணி தேர் ஒலி
மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி
எல்லை இன்றி எழுந்து உள எங்கணும்
#4
மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும்
ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன
#5
அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திரு சேடி பரவை ஆம்
மங்கையார் அவதாரம் செய் மாளிகை
#6
படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய்
நடந்த செந்தாமரை அடி நாறும்-ஆல்
#7
செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையின் பூம் துகள் வீழ்ந்து உடன்
அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல்
#8
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம்
தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைம்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்
#9
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள்
வளத்தொடும் பல ஆறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்
#10
ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்கும்-ஆல்
சீர் அணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழும்-ஆல்
#11
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர்
#12
நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி
மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து
அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல்
#13
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங்கதிரோன் வழி தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மா மணி பூண் மனு வேந்தனே
#14
மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான்
விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்_இலாதன மாண இயற்றினான்
#15
கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட
சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட
செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு
பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான்
#16
பொங்கு மா மறை புற்று இடம் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமை-ஆல்
#17
அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி
மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான்
#18
தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும்
சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி
கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று
பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான்
#19
அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன்
#20
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில்-நின்று
மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ
கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான்
பொங்கிய தானை சூழ தேர் மிசை பொலிந்து போந்தான்
#21
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர்
விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி
அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி
#22
தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே
#23
அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டே
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுக்குற்று வீழும்
#24
மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று
சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள
செற்ற என் செய்கேன் என்று தேரில்-நின்று இழிந்து வீழ்ந்தான்
#25
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும்
நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்
மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு
உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான்
#26
வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்
சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான்
#27
தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்
பொன் அணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே
#28
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா
தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது
#29
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூம் கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி
ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார்
#30
மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி
என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி
முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான்
#31
வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால்
இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக
தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான்
#32
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம்
வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு
இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும்
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான்
#33
மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும்
என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும்
தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும்
அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல்
#34
மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல்
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார்
#35
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு
குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ
#36
மா நில காவலன் ஆவான் மன் உயிர் காக்கும்-காலை
தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ
#37
என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான்
#38
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர்
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல்
பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார்
#39
அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன்
இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த
செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான்
#40
அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின்
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால்
வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர்
#41
போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர்
தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான்
ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின்
#42
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன்
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என
அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்
#43
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை
முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப
தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான்
#44
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்
மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான்
#45
தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான்
#46
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்
#47
அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன்
மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ
#48
அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன்
மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே
#49
பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான்
வென்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும்
#50
இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல்
புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ
அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில்

மேல்

4 திருக்கூட்டச் சிறப்பு

#1
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங்கோயிலில்
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூது எயில் திரு வாயில் முன் ஆயது
#2
பூவார் திசை_முகன் இந்திரன் பூ மிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது
தேவாசிரியன் எனும் திருக்காவணம்
#3
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனி மேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பால்_கடல் போல்வது
#4
அகில காரணர் தாள் பணிவார்கள் தாம்
அகிலலோகமும் ஆளற்கு உரியர் என்று
அகிலலோகத்து உளார்கள் அடைதலின்
அகிலலோகமும் போல்வது அதனிடை
#5
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
மெய் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார்
கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார்
இ திறத்தவர் அன்றியும் எண்_இலார்
#6
மாசு_இலாத மணி திகழ் மேனி மேல்
பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எ திசையும் விளக்கினார்
பேச ஒண்ணா பெருமை பிறங்கினார்
#7
பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும்
மாது_ஓர்_பாகர் மலர் தாள் மறப்பு இலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
கோது_இலாத குண பெரும் குன்று ஆனார்
#8
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
#9
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதும் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ
#10
வேண்டுமாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார்-தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்ன அறிந்து ஏத்துகேன்
#11
இந்த மா தவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன்
சுந்தர திருத்தொண்டத்தொகை தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்

மேல்

5 தடுத்தாட்கொண்ட புராணம்

#1
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி
செம் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு
#2
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா
திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே
#3
மாது_ஒரு_பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால்
தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார்
#4
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பிஆரூரர் என்றே நாமமும் சாற்றி மிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி
செம்பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில்
#5
நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள்
அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
#6
பெருமை சால் காதல் பிள்ளையாய் பின்னும் தங்கள்
வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார்
#7
தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால்
செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார்
#8
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
நலம் மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்
#9
மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை
பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி
கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார்
#10
மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி
அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்
#11
மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலர் ஆகி
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள்
#12
மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய
துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை
புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார்
#13
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி
தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப
தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண
காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான்
#14
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன
வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான்
நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையும் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்
#15
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்
பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால்
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்
#16
அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி
முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான்
#17
தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி
மான் மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி
பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான்
#18
தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார்
#19
மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க
நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன்
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி
பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார்
#20
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர்
நயந்து பல்லாண்டு போற்ற நான்_மறை ஒலியின் ஓங்க
வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார்
#21
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும்
பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க
குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி
#22
அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும்
இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும்
நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும்
கரும் கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே
#23
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க
பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட
அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில்
வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல்
#24
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார்
#25
கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார்
பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்
#26
ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர்
பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார்
#27
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும்
ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்
#28
ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த
சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்
#29
கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த
தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க
#30
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க
#31
பண்டி சரி கோவண உடை பழமை கூர
கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள
#32
மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ
அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி
#33
வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்
#34
என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும்
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே
நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார்
#35
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான்
முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே
நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்
#36
நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல்
மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான்
#37
ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான்
#38
என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும்
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர்
நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார்
#39
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசை உத்தரிய துகில் தாங்கி மேல் சென்று
அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால்
இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன
#40
மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார்
#41
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார்
#42
கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று
தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை
#43
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல்
பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற
வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
மால் அயன் தொடராதானை வலிந்து பின்தொடரல்உற்றார்
#44
ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்திடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற
ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்
#45
மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற
இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான்
#46
அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற
திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார்
#47
என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது
அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்று இவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான்
#48
குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி
பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க
விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன்
பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார்
#49
வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ
போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர்
ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான்
#50
செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த
வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார்
எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி
#51
வேதபாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்று
நாதன் ஆம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தான்
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி
மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான்
#52
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார்
வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை
தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்
#53
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ
தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான்
அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார்
#54
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை
தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல்
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான்
#55
அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல
செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி
இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும்
#56
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை
மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்
#57
வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல
செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார்
அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார்
#58
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி
தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான்
#59
அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால்
வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து
#60
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர்
மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம்
தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார்
#61
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில்
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்
#62
திரண்ட மா மறையோர்-தாமும் திருநாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார்
#63
நான்_மறை முனிவனார்க்கு நம்பிஆரூரர் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார்
#64
திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி
அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில்
வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார்
#65
பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து
பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல
திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்
#66
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி
தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்
#67
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து
நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார்
#68
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட
கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக
மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார்
#69
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூ_மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார்
#70
மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை
சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார்
#71
தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று
#72
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட
கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார்
#73
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார்
முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல்உற்றார்
#74
கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால்
மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான்
பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம்
இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்
#75
முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில்
குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால்
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்
#76
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்-தனை இன்னும்
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான்
#77
அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்
#78
நாவலர் கோன் ஆரூரன்-தனை வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின்
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான்-தனை பணிந்து திருப்பதிகம் பாடினார்
#79
சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால்
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார்
#80
புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள
அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம்
மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர்
#81
திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர்
நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார்
#82
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில்
செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார்
#83
உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி
விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார்
#84
வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர்
விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள்
பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற
பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார்
#85
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல்
பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார்
#86
அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என்
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்
#87
அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட
செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான்
#88
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து
தம்மானை அறியாத சாதியார் உளரே என்று
அம்மானை திருவதிகை வீரட்டானத்து அமர்ந்த
கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார்
#89
பொன் திரளும் மணி திரளும் பொரு கரி வெண் கோடுகளும்
மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும்
வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி
#90
அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த
பொங்கு நதி தென் கரை போய் போர் வலி தோள் மாவலி-தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார்
#91
பரம்பொருளை பணிந்து தாள் பரவி போய் பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி
அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார்
#92
தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண்
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை
மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி
#93
நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம்
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார்
#94
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த
பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ
#95
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க
வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும்
தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்
#96
மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம்
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன
சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்
#97
பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை
ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய
#98
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ
முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு
#99
அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும்
மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும்
#100
போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்
#101
ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும்
மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும்
சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும்
நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும்
#102
எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி
புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி
#103
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து
காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன்
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார்
#104
பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில்
#105
வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு
#106
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும்
சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின்
வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்
#107
தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து
பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்
#108
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்
#109
ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு
சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு
மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து
நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து
#110
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடும் திரு வீதியை வணங்கி
மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில்
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார்
#111
புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர்
அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம்
பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில்
சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார்
#112
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம்
கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள
#113
மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி
தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று
பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார்
#114
இருக்கு ஓலம்இடும் பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள
வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி
பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய்
திருக்கோலக்கா இறைஞ்சி செந்தமிழ்_மாலைகள் பாடி
#115
தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால்
ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி
மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார்
#116
வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும்
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர்
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்
#117
மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை
முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து
பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்
தென் நாவலூர் ஆளி திருவாரூர் சென்று அணைந்தார்
#118
தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று
நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார்
#119
தம்பிரான் அருள்செய்ய திருத்தொண்டர் அது சாற்றி
எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால்
நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால்
உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார்
#120
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க
தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும்
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும்
ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார்
#121
சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி
தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார்
#122
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க
செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார்
#123
வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர்-தம்மை நோக்கி
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார்
#124
வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி
தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும்
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார்
#125
புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும்
பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்
#126
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட
#127
வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே
#128
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே
வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே
நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார்
#129
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும்
வென்றி அடல் விடை போல் நடந்து வீதிவிடங்கப்பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார்
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார்
#130
மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான்
சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன
தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார்
#131
இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து
முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு
பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில்
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்
#132
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம்
பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம்
விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி
#133
பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள்
விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார்
#134
மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச
தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி
கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன்
தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன
#135
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன
பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம்
கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற
#136
பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி
அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம்
கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப
உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்
#137
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ
தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ
ஓங்கு பூங்கோயில் உள்ளார் ஒருவரை அன்பினோடும்
பூம் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார்
#138
அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும்
பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்
#139
புற்று இடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய்
வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார்
#140
கற்பகத்தின் பூம் கொம்போ காமன்-தன் பெரு வாழ்வோ
பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ
அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார்
#141
ஓவிய நான்_முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ
மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து
நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார்
#142
தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப
பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார்
#143
கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும்
#144
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால்
தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ
மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்
#145
அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால்
உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும்
வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி
கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப
#146
பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம்
தாம் கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும்
தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய் புகுந்தார்
#147
வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன
அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்
சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப
#148
பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல்
ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்
ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை
#149
என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால்
முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு
நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக
#150
பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்
#151
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து
எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என
செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார்
#152
பாசம் ஆம் வினை பற்று அறுப்பான் மிகும்
ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பது ஓர்
தேசு மன்ன என் சிந்தை மயக்குற
ஈசனார் அருள் எ நெறி சென்றதே
#153
உம்பர் நாயகர்-தம் கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்குஉற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று
எம்பிரான் அருள் எ நெறி சென்றதே
#154
பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
வந்து மால் செய்து மான் எனவே விழித்து
எந்தையார் அருள் எ நெறி சென்றதே
#155
என்று சாலவும் ஆற்றலர் என் உயிர்
நின்றது எங்கு என நித்தில பூண் முலை
மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான்
சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின்
#156
காவி நேர்வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரை இயம்பாது இருந்து
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில்
#157
நாட்டு நல் இசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை
காட்டுவன் கடலை கடைந்து என்ப போல்
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக
#158
எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு
பொய்கையில் பகல் போக்கிய புள் இனம்
வைகு சேக்கை கண் மேல்செல வந்தது
பையுள் மாலை தமியோர் புனிப்பு உற
#159
பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன்
அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்
#160
மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று
நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா
#161
அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர்
வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல்
பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்
#162
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்
நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா
#163
வாவி புள் ஒலி மாறிய மாலையில்
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெரும் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்
#164
தம் திரு கண் எரி தழலில் பட்டு
வெந்த காமன் வெளியே உரு செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார்
#165
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி
சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி
#166
அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண
கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால்
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய்
#167
பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்
புறம் பணை தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம்
#168
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்
தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்
#169
கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல
இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும்
தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற
மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள்
#170
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார்
வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால்
மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து
#171
அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட
மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன
இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட
சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள்
#172
என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம்
வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க
நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது
#173
ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி
ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன
மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து
#174
மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும்
கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி
இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்
#175
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர்
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல்
அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய
#176
புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர்
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார்
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார்
#177
தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால்
ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான்
நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே
ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்
#178
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும்
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார்
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி
#179
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம்
இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான்
அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது
#180
காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி
சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ
தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார்
#181
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக
பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்
#182
தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திருப்பதிகம்
பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும்
மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார்
#183
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி
சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி
#184
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி
சந்தனத்து அளறு தோய்ந்த குங்கும கலவை சாத்தி
சுந்தர சுழியம் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற
#185
கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற
சைவ மெய் திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார்
#186
நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும்
மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும்
தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற
#187
கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ
மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்
#188
பொலம் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத
இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல்
நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும்
அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில்
#189
கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார்
#190
அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார்
கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும்
படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு
#191
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை
நன் பெரும் பரம ஆனந்த நன் மது
என் தரத்தும் அளித்து எதிர்நின்றன
#192
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின
காலன் ஆர் உயிர் மாள கறுத்தன
மாலை தாழ் குழல் மா மலையாள் செம் கை
சீலம் ஆக வருட சிவந்தன
#193
நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன
வேதி யாதவர் தம்மை வேதிப்பன
சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய
ஆதி மால் அயன் காணா அளவின
#194
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன
பூத நாத நின் புண்டரீக பதம்
#195
இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும்
அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார்
#196
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று
#197
நாதனார் அருளி செய்ய நம்பிஆரூரர் நான் இங்கு
ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை
கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற
#198
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்செய்ய கேட்டு
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன
#199
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன்
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று
எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார்
#200
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில்
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்தருள
அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார்
#201
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார்
#202
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை
செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த
எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்
#203
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார்
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன்

மேல்