திரிகடுகம்

பாடல் எண் எல்லைகள்


#0 கடவுள் வாழ்த்து
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் காமரு சீர்
தண் நறும் பூம் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய
மாய சகடம் உதைத்ததூஉம் இ மூன்றும்
பூவை பூ வண்ணன் அடி

#1
அருந்ததி கற்பினார் தோளும் திருந்திய
தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இ மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து

#2
தன் குணம் குன்றா தகைகையும் தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும் நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழி செலவும் இ மூன்றும்
மேல் முறையாளர் தொழில்

#3
கல்லார்க்கு இனனா ஒழுகலும் காழ் கொண்ட
இல்லாளை கோலால் புடைத்தலும் இல்லம்
சிறியாரை கொண்டு புகலும் இ மூன்றும்
அறியாமையால் வரும் கேடு

#4
பகை முன்னர் வாழ்க்கை செயலும் தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றி சேறலும் முன் தன்னை
காய்வானை கை வாங்கி கோடலும் இ மூன்றும்
சால உறுவான் தொழில்

#5
வழங்கா துறை இழிந்து நீர் போக்கும் ஒப்ப
விழைவு இலா பெண்டிர் தோள் சேர்வும் உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இ மூன்றும்
அரும் துயரம் காட்டும் நெறி

#6
பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார்
திறன் வேறு கூறின் பொறையும் அற வினையை
கார் ஆண்மை போல ஒழுகலும் இ மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு

#7
வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான்
செல்வ குடியுள் பிறத்தலும் பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும் இ மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா

#8
தொல் அவையுள் தோன்றும் குடிமையும் தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இ மூன்றும்
தாம் தம்மை கூறா பொருள்

#9
பெருமை உடையார் இனத்தின் அகறல்
உரிமை இல் பெண்டிரை காமுற்று வாழ்தல்
விழுமிய அல்ல துணிதல் இ மூன்றும்
முழு மக்கள் காதல் அவை

#10
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவை களனும் பாத்து உண்ணா
தன்மையிலாளர் அயல் இருப்பும் இ மூன்றும்
நன்மை பயத்தல் இல

#11
விளியாதான் கூத்தாட்டு காண்டலும் வீழ
களியாதான் காவாது உரையும் தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும்
ஊர் எல்லாம் நோவது உடைத்து

#12
தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இ மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது

#13
சீலம் அறியான் இளங்கிளை சால
குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி
மாண்ட குணத்தான் தவசி என்று இ மூவர்
யாண்டும் பெறற்கு அரியார்

#14
இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும்
செறுவொடு நிற்கும் சிறுமை இ மூன்றும்
குறுகார் அறிவுடையார்

#15
பொய் வழங்கி வாழும் பொறியறையும் கை திரிந்து
தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும் ஊழினால்
ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர்
நட்க படாஅதவர்

#16
மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும் மாசு இல் சீர்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் உண்ணு நீர்
கூவல் குறை இன்றி தொட்டானும் இ மூவர்
சாவா உடம்பு எய்தினார்

#17
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாரா தலைமகனும் வாய் பகையுள்
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் இ மூவர்
கல்வி புணை கைவிட்டார்

#18
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு
இரு தலையும் இன்னா பிரிவும் உருவினை
உள் உருக்கி தின்னும் பெரும் பிணியும் இ மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும்

#19
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும் எல்லில்
பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர்
நாடுங்கால் தூங்குபவர்

#20
ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
பசிப்ப மடியை கொளலும் கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும் இ மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன

#21
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் செரு வாய்ப்ப
செய்தவை நாடா சிறப்புடைமை எய்த
பல நாடி நல்லவை கற்றல் இ மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள்

#22
பற்று என்னும் பாச தளையும் பல வழியும்
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும்
வித்து அற வீடும் பிறப்பு

#23
தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும் தெற்றென
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு

#24
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொலும்
தூண்டிலின் உள்பொதிந்த தேரையும் மாண்ட சீர்
காழ்த்த பகைவர் வணக்கமும் இ மூன்றும்
ஆழ்ச்சி படுக்கும் அளறு

#25
செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும் நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும் இ மூவர்
கைத்து உண்ணார் கற்றறிந்தார்

#26
ஒல்வது அறியும் விருந்தினனும் ஆர் உயிரை
கொல்வது இடை நீக்கி வாழ்வானும் வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும் இ மூவர்
ஞாலம் எனப்படுவார்

#27
உண் பொழுது நீராடி உண்டலும் என் பெறினும்
பால் பற்றி சொல்லா விடுதலும் தோல் வற்றி
சாயினும் சான்றாண்மை குன்றாமை இ மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்

#28
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்
இல்லது காமுற்று இருப்பானும் கல்வி
செவி குற்றம் பார்த்திருப்பானும் இ மூவர்
உமி குத்தி கை வருந்துவார்

#29
பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்றாமை
கண் விழைந்து கையுறினும் காதல் பொருட்கு இன்மை
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை இ மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு

#30
தன் நச்சி சென்றாரை எள்ளா ஒருவனும்
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தானும்
என்றும் அழுக்காறு இகந்தானும் இ மூவர்
நின்ற புகழ் உடையார்

#31
பல் அவையுள் நல்லவை கற்றலும் பாத்து உண்டு ஆங்கு
இல்லறம் முட்டாது இயற்றலும் வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை

#32
நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை நல் மொழியை
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்

#33
கோல் அஞ்சி வாழும் குடியும் குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும் வேலின்
கடை மணி போல் திண்ணியான் காப்பும் இ மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்

#34
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறை நிலை கோடா அரசும் சிறைநின்று
அலவலை இல்லா குடியும் இ மூவர்
உலகம் எனப்படுவார்

#35
முந்நீர் திரையின் எழுந்து இயங்கா மேதையும்
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும்
மை நீர்மை இன்றி மயல் அறுப்பான் இ மூவர்
மெய் நீர்மை மேல் நிற்பவர்

#36
ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையெம் என்பானும்
தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும்
காமுறு வேள்வியில் கொல்வானும் இ மூவர்
தாம் அறிவர் தாம் கண்டவாறு

#37
குறளையுள் நட்பு அளவு தோன்றும் உறல் இனிய
சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு

#38
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றி
கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய
பல் பொருள் வெஃகும் சிறுமையும் இ மூன்றும்
செல்வம் உடைக்கும் படை

#39
புலை மயக்கம் வேண்டி பொருள்பெண்டிர் தோய்தல்
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல் சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும்
நன்மை இலாளர் தொழில்

#40
வெகுளி நுணுக்கும் விறலும் மகளிர்கட்கு
ஒத்த ஒழுக்கம் உடைமையும் பாத்து உண்ணும்
நல் அறிவாண்மை தலைப்படலும் இ மூன்றும்
தொல்லறிவாளர் தொழில்

#41
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் துளங்கினும்
தன் குடிமை குன்றா தகைமையும் அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை

#42
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரை தீ போல் ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு

#43
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் மாசு அற்ற
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம் பொய் இன்றி
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள்

#44
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்
புல்ல புடை பெயரா கங்குலும் இல்லார்க்கு ஒன்று
ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் இ மூன்றும்
நோயே உரன் உடையார்க்கு

#45
ஆற்றானை ஆற்று என்று அலைப்பானும் அன்பு இன்றி
ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் கூற்றம்
வரவு உண்மை சிந்தியாதானும் இ மூவர்
நிரயத்து சென்று வீழ்வார்

#46
கால் தூய்மை இல்லா கலி மாவும் காழ் கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெம் களிறும் சீறி
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இ மூன்றும்
குறுகார் அறிவுடையார்

#47
சில் சொல் பெரும் தோள் மகளிரும் பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும்
நா தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இ மூன்றும்
காப்பு இகழல் ஆகா பொருள்

#48
வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய
கைப்பதனை கட்டி என்று உண்பானும் இ மூவர்
மெய் பொருள் கண்டு வாழ்வார்

#49
ஏவியது மாற்றும் இளம் கிளையும் காவாது
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும் இ மூவர்
இம்மைக்கு உறுதி இலார்

#50
கொள் பொருள் வெஃகி குடி அலைக்கும் வேந்தனும்
உள் பொருள் சொல்லா சல மொழி மாந்தரும்
இல் இருந்து எல்லை கடப்பாளும் இ மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்

#51
தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்த கல் இன்னார் கயவர் இவர் மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்

#52
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வி இ மூன்றும்
குறியுடையார்கண்ணே உள

#53
குருடன் மனையாள் அழகும் இருள் தீர
கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும் பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும்
எண்ணின் தெரியா பொருள்

#54
தன் பயம் தூக்காரை சார்தலும் தான் பயவா
நன் பயம் காய்வின்கண் கூறலும் பின் பயவா
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இ மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்

#55
அரு மறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் இ மூவர்
ஒற்றாள் எனப்படுவார்

#56
முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு வந்த
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு

#57
கொட்டி அளந்து அமையா பாடலும் தட்டித்து
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் துச்சிருந்தான்
நாளும் கலாம் காமுறுதலும் இ மூன்றும்
கேள்வியுள் இன்னாதன

#58
பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர் உவப்ப தழுவுதல் கேளிராய்
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும்
மன்னற்கு இளையான் தொழில்

#59
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைம் கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்
கள் உண்டு வாழ்வான் குடிமையும் இ மூன்றும்
உள்ளன போல கெடும்

#60
பேஎய் பிறப்பில் பெரும் பசியும் பாஅய்
விலங்கின் பிறப்பின் வெருவும் புலம் தெரியா
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும்
துக்க பிறப்பாய்விடும்

#61
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முன் காத்தல் வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள்

#62
நன்றி பயன் தூக்கா நாண் இலியும் சான்றோர் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும் நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும் இ மூவர்
எச்சம் இழந்து வாழ்வார்

#63
நோவு அஞ்சாதாரோடு நட்பும் விருந்து அஞ்சும்
ஈர்வளையை இல்லத்து இருத்தலும் சீர் பயவா
தன்மையிலாளர் அயல் இருப்பும் இ மூன்றும்
நன்மை பயத்தல் இல

#64
நல் விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும்
இல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் தொல் குடியின்
மக்கள் பெறலின் மனை கிழத்தி இ மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன்

#65
அச்சம் அலை கடலின் தோன்றலும் ஆர்வு உற்ற
விட்டு அகலகில்லாத வேட்கையும் கட்டிய
மெய் நிலை காணா வெகுளியும் இ மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு

#66
கொழுநனை இல்லாள் கறையும் வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும் பற்றிய
கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும்
சால்போடு பட்டது இல

#67
எதிர் நிற்கும் பெண்ணும் இயல்பு இல் தொழும்பும்
செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி மயிர் நரைப்ப
முந்தை பழ வினையாய் தின்னும் இவை மூன்றும்
நொந்தார் செய கிடந்தது இல்

#68
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் இ உலகின்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் எ உயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இ மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உல

#69
அரும் தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் நொந்து
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும்
பெறுமாறு அரிய பொருள்

#70
காவோடு அற குளம் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் தீது இகந்து
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் இ மூவர்
செல்வர் எனப்படுவார்

#71
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண்டு அவை போர் புகலும் கொடுத்து அளிக்கு
ஆண்மை உடையவர் நல்குரவும் இ மூன்றும்
காண அரிய என் கண்

#72
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்
மறவனை எ உயிரும் அஞ்சும் இ மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள்

#73
இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல் என்பானும்
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும்
விரி கடலூடு செல்வானும் இ மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார்

#74
கொலைநின்று தின்று ஒழுகுவானும் பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று
ஈக என்பவனை நகுவானும் இ மூவர்
யாதும் கடைப்பிடியாதார்

#75
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண்
தக்கது அறியும் தலைமகனும் இ மூவர்
பொத்து இன்றி காழ்த்த மரம்

#76
மாரி நாள் வந்த விருந்தும் மனம் பிறிதாய்
காரியத்தில் குன்றா கணிகையும் வீரியத்து
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் இ மூவர்
போற்றற்கு அரியார் புரிந்து

#77
கயவரை கையிகந்து வாழ்தல் நயவரை
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல் தெள்ளி
வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள

#78
தூய்மை உடைமை துணிவு ஆம் தொழில் அகற்றும்
வாய்மை உடைமை வனப்பு ஆகும் தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள்

#79
பழி அஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அரும் தவம் விட்டானும் கொண்டிருந்து
இல் அஞ்சி வாழும் எருதும் இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய்

#80
முறை செய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சின்
நிறை இலான் கொண்ட தவமும் நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து

#81
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்
நாள் கழகம் பார்க்கும் நயம் இலா சூதனும்
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர்
ஆசை கடலுள் ஆழ்வார்

#82
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் பாய்ந்து எழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இ மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி

#83
உப்பின் பெரும் குப்பை நீர் படின் இல் ஆகும்
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல் ஆகும்
செப்பம் உடையார் மழை அனையர் இ மூன்றும்
செப்ப நெறி தூராவாறு

#84
வாய் நன்கு அமையா குளனும் வயிறு ஆர
தாய் முலை உண்ணா குழவியும் சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இ மூவர்
நல்குரவு சேரப்பட்டார்

#85
எள்ளப்படும் மரபிற்று ஆகலும் உள் பொருளை
கேட்டு மறவாத கூர்மையும் முட்டு இன்றி
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும் இ மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்

#86
அற்பு பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்
கற்பு பெரும் புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நய நீர்மை நீங்கல் இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை

#87
கொல்வது தான் அஞ்சான் வேண்டலும் கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும் இருந்து
விழு நிதி குன்றுவிப்பானும் இ மூவர்
முழுமக்கள் ஆகற்பாலார்

#88
பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும்
தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணுமாறும்
பிணை செல்வம் மாண்பு இன்று இயங்கல் இவை மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு

#89
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்
பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும்
இறந்து இன்னா சொல்லகிற்பானும் இ மூவர்
பிறந்தும் பிறந்திலாதார்

#90
ஈதற்கு செய்க பொருளை அற நெறி
சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும்
அருள் புரிந்து சொல்லுக சொல்லை இ மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு

#91
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் மறுவந்து
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் இ மூன்றும்
மன்னா உடம்பின் தொழில்

#92
விழு திணை தோன்றாதவனும் எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும் என்றும்
இறந்துரை காமுறுவானும் இ மூவர்
பிறந்தும் பிறவாதவர்

#93
இருளாய் கழியும் உலகமும் யாதும்
தெரியாது உரைக்கும் வெகுள்வும் பொருள் அல்ல
காதற்படுக்கும் விழைவும் இவை மூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு

#94
நண்பு இலார்மாட்டு நசை கிழமை செய்வானும்
பெண்பாலை காப்பு இகழும் பேதையும் பண்பு இல்
இழுக்கு ஆய சொல்லாடுவானும் இ மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார்

#95
அறிவு அழுங்க தின்னும் பசி நோயும் மாந்தர்
செறிவு அழுங்க தோன்றும் விழைவும் செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை

#96
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய் வகை செய்வான் தவசி கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர் மூவர்
பெய் என பெய்யும் மழை

#97
ஐம் குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வு உற்ற
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் நெஞ்சு அமர்ந்த
கற்பு உடையாளை துறத்தலும் இ மூன்றும்
நல் புடை இலாளர் தொழில்

#98
செம் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வெம் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும்
திங்கள் மு மாரிக்கு வித்து

#99
கற்றாரை கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும் முட்டு இன்றி
அல்லவை செய்யும் அலவலையும் இ மூவர்
நல் உலகம் சேராதவர்

#100
பத்திமை சான்ற படையும் பலர் தொகினும்
எ துணையும் அஞ்சா எயில் அரணும் வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும் இ மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு

# 101 புறத்திரட்டு 1222
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம் போல் ஒளிவிடுதல் இ மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள

# 102 புறத்திரட்டு 1228
பொருள் இல் ஒருவற்கு இளமையும் போற்றும்
அருள் இல் ஒருவற்கு அறனும் தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும்
பரித்தாலும் செய்யா பயன்

#103
சால் நெறி பாரா உழவனும் தன் மனையில்
மானம் ஒன்று இல்லா மனையாளும் சேனை
உடன் கொண்டு மீளா அரசும் இ மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா

#104
ஏர் குற்றம் பாரா உழவனும் இன் அடிசில்
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும் ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர்
இருந்திட்டு என் போய் என் இவர்

#105 சிறப்புப்பாயிரம்
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்
அலகு இல் அக நோய் அகற்றும் நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச்சங்கம்
மருவு நல்லாதன் மருந்து

#106
செல்வ திருத்துளார் செம்மல் செரு அடு தோள்
நல்லாதன் என்னும் பெயரானே பல்லார்
பரிவோடு நோய் அவிய பன்னி ஆராய்ந்து
திரிகடுகம் செய்த மகன்
*