திணைமொழி ஐம்பது

பாடல் எண் எல்லைகள்


*@1 குறிஞ்சி

#1
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி
புகை கொடுக்க பெற்ற புலவோர் துகள் பொழியும்
வான் உயர் வெற்ப இரவின் வரல் வேண்டா
யானை உடைய சுரம்

#2
கண முகை கை என காந்தள் கவின்
மண முகை என்று எண்ணி மந்தி கொண்டாடும்
விறல் மலை நாட வரவு அரிதாம்கொல்லோ
புனமும் அடங்கின காப்பு

#3
ஓங்கல் இறுவரை மேல் காந்தள் கடி கவின
பாம்பு என ஓடி உரும் இடிப்ப கண்டு இரங்கும்
பூம் குன்ற நாடன் புணர்ந்த அ நாள் போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை

#4
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு எல்லிடை
கானவர் மக்கள் கனல் என கை காய்த்தும்
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி
மேனி பசப்பு கெட

#5
விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார்
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர்
வில்லினர் வேலர் விரைந்து செல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர்

#6
யானை உழலும் அணி கிளர் நீள் வரை
கானக வாழ்க்கை குறவர் மகளிரேம்
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல்
காணினும் காய்வர் எமர்

#7
யாழும் குழலும் முழவும் இயைந்தென
வீழும் அருவி விறல் மலை நல் நாட
மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின்
ஊர் அறி கெளவை தரும்

#8
வேங்கை மலர வெறி கமழ் தண் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுக மற்று இ புறம்
போந்தது இல் ஐய களிறு

#9
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி
கணி நிற வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும்
மணி நிற மாலை பொழுது

#10
பலவின் பழம் பெற்ற பைம் கண் கடுவன்
எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன்
புலவும்கொல் தோழி புணர்வு அறிந்து அன்னை
செலவும் கடிந்தாள் புனத்து
*@2 பாலை

#11
கழுநீர் மலர் கண்ணாய் கெளவையோ நிற்க
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்
அழி நீர ஆகி அரித்து எழுந்து தோன்றி
வழி நீர் அறுத்த சுரம்

#12
முரி பரல ஆகி முரண் அழிந்து தோன்றி
எரி பரந்த கானம் இயை பொருட்கு போவீர்
அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார் யார் தேரும் இடத்து

#13
ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்
பொலந்தொடீஇ பொய்த்த குயில்

#14
புன்கு பொரி மலரும் பூம் தண் பொழில் எல்லாம்
செம் கண் குயில் அகவும் போழ்து கண்டும்
பொருள் நசை உள்ளம் துரப்ப துறந்தார்
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு

#15
சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து
ஆர் பொருள் வேட்கையவர்

#16
கரும் கால் மராஅ நுணாவோடு அலர
இரும் சிறை வண்டு இனம் பாலை முரல
அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய்
விரும்பு நாம் செல்லும் இடம்

#17
கல் அதர் வாயில் கடும் துடிகள் பம்பும்
வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ
நல்கா துறந்த நமர்

#18
கதிர் சுட கண் உடைந்து முத்தம் சொரியும்
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு
எதிர்வன போலிதே எல் வளையோ கொன்னே
உதிர்வன போல உள

#19
கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி
முலையொடு சோர்கின்ற பொன் வண்ணம் அன்னோ
வளையோடு சோரும் என் தோள்

#20
ஏற்றிய வில்லின் எயினர் கடும் சுரம்
பாற்றினம் சேர படு நிழல் கண்டு அஞ்சி
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள்
ஆற்றும்கொல் ஐய நடந்து
*@3 முல்லை

#21
அஞ்சனம் காயா மலர குருகிலை
ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன காதலர்
வந்தார் திகழ்க நின் தோள்

#22
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்
நல் நுதல் மாதராய் ஈதோ நமர் வருவர்
பல் நிற முல்லை அரும்ப பருவம் செய்து
இன் நிறம் கொண்டது இ கார்

#23
சென்றார் வருவர் செறிதொடீஇ கார் இஃதோ
வெம் சின வேந்தர் முரசின் இடித்து உரறி
தண் கடல் நீத்தம் பருகி தலைசிறந்து
இன்றையின் நாளை மிகும்

#24
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால்
வெம் சினம் பொங்கி இடித்து உரறி கார் வானம்
தண் பெயல் கான்ற புறவு

#25
கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த
உருகு மட மான் பிணையோடு உகளும்
உருவ முலையாய் நம் காதலர் இன்னே
வருவர் வலிக்கும் பொழுது

#26
இரும் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி
கரும் கொடி முல்லை கவின முழங்கி
பெரும் பெயல் தாழ பெயர் குறி செய்தார்
பொருந்த நமக்கு உரைத்த போழ்து

#27
ஆயர் இனம் பெயர்த்து ஆம்பல் அடைதர
பாய முழங்கி படு கடலுள் நீர் முகந்து
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை
சேயவர் செய்த குறி

#28
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி
கதிர் மறை மாலை கனை பெயல் தாழ
பிதிரும் முலை மேல் சுணங்கு

#29
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத
காடு எலாம் கார் செய்து முல்லை அரும்பு ஈன
ஆறு எலாம் நுண் அறல் வார அணியிழாய்
போதராய் காண்பாம் புறவு

#30
அருவி அதிர குருகிலை பூப்ப
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற
வரி வளை தோளி வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்தது இ கார்
*@4 மருதம்

#31
பழனம் படிந்த படு கோட்டு எருமை
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன்
கிழமை உடையன் என் தோட்கு

#32
கணை கால் நெடு மருது கான்ற நறும் தாது
இணை கால நீலத்து இதழ் மேல் சொரியும்
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன்
இணைத்தான் எமக்கும் ஓர் நோய்

#33
கடையாயார் நட்பே போல் காஞ்சி நல் ஊர
உடைய இள நலம் உண்டாய் கடை அ
கதிர் முலை ஆகத்து கண் அன்னார் சேரி
எதிர் நலம் ஏன்று நின்றாய்

#34
செந்நெல் விளை வயல் ஊரன் சில் பகல்
தன் நலம் என் அலார்க்கு ஈயான் எழு பாண
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்கு புக்கு நின்று ஆய்

#35
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும்
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன்
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு அவர்
மேனி ஒழியவிடும்

#36
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர
நொந்தால் மற்று உன்னை செயப்படுவது என் உண்டாம்
தந்தாயும் நீயே தர வந்த நல் நலம்
கொண்டாயும் நீ ஆயக்கால்

#37
பல் காலும் வந்து பயின்று உரையல் பாண கேள்
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள்
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல
நல்லவருள் நாட்டம் இலேம்

#38
நல் வயல் ஊரன் நலம் உரைத்து நீ பாண
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா ஒழிதி நீ
எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல்
சொல்லும் அவர் வண்ணம் சோர்வு

#39
கரும் கயத்து ஆங்கண் கழுமிய நீலம்
பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான் வியல் நலம் உண்டான்
கரும்பின் கோது ஆயினேம் யாம்

#40
ஆம்பல் அணி தழை ஆரம் துயல்வரும்
தீம் புனல் ஊரன் மகள் இவள் ஆய்ந்த நறும்
தே மலர் நீலம் பிணையல் செறி மலர்
தாமரை தன்னையர் பூ
*@5 நெய்தல்

#41
நெய்தல் படப்பை நிறை கழி தண் சேர்ப்பன்
கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான்
செய்த குறியும் பொய் ஆயின ஆயிழையாய்
ஐதுகொல் ஆன்றார் தொடர்பு

#42
முத்தம் அரும்பும் முட தாள் முது புன்னை
தத்தும் திரை தயங்கும் தண் அம் கடல் சேர்ப்ப
சித்திர பூம் கொடி அன்னாட்கு அருளீயாய்
வித்தக பைம் பூண் நின் மார்பு

#43
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ
நெறி இறா கொட்கும் நிமிர் கழி சேர்ப்பன்
அறிவு அறா இன் சொல் அணியிழையாய் நின் இல்
செறிவு அறா செய்த குறி

#44
இன மீன் இரும் கழி ஓதம் உலாவ
மணி நீர் பரக்கும் துறைவ தகுமோ
குண நீர்மை குன்றா கொடி அன்னாள் பக்கம்
நினை நீர்மை இல்லா ஒழிவு

#45
கடல் கொழித்திட்ட கதிர் மணி முத்தம்
படம் அணி அல்குல் பரதர் மகளிர்
தொடலை சேர்த்து ஆடும் துறைவ என் தோழி
உடலும் உறு நோய் உரைத்து

#46
முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண்
குருகு இனம் ஆர்க்கும் கொடும் கழி சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும் என் தோழி
உரு அழி உள் நோய் கெட

#47
அணி பூம் கழி கானல் அற்றை நாள் போலான்
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி
தணியும் என் மென் தோள் வளை

#48
கறங்கு மணி நெடும் தேர் கண் வாள் அறுப்ப
பிறங்கு மணல் மேல் அலவன் பரப்ப
வறம் கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க
நிறம் கூரும் மாலை வரும்

#49
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும்
கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும் என் நெஞ்சு

#50
பவழமும் முத்தும் பளிங்கும் விரைஇ
புகழ கொணர்ந்து புறவு அடுக்கும் முன்றில்
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி
திகழும் திரு அமர் மார்பு
*