பழமொழி நானூறு

பாடல் எண் எல்லைகள்
  1. 1 – 10
  2. 11 – 20
  3. 21 – 30
  4. 31 – 40
  5. 41 – 50
  6. 51 – 60
  7. 61 – 70
  8. 71 – 80
  9. 81 – 90
  10. 91 – 100
  1. 101 – 110
  2. 111 – 120
  3. 121 – 130
  4. 131 – 140
  5. 141 – 150
  6. 151 – 160
  7. 161 – 170
  8. 171 – 180
  9. 181 – 190
  10. 191 – 200
  1. 201 – 210
  2. 211 – 220
  3. 221 – 230
  4. 231 – 240
  5. 241 – 250
  6. 251 – 260
  7. 261 – 270
  8. 271 – 280
  9. 281 – 290
  10. 291 – 300
  1. 301 – 310
  2. 311 – 320
  3. 321 – 330
  4. 331 – 340
  5. 341 – 350
  6. 351 – 360
  7. 361 – 370
  8. 371 – 380
  9. 381 – 390
  10. 391 – 400
  1. மிகைப் பாடல்கள்
  1. தற்சிறப்புப் பாயிரம்


#1
அரிது அவித்து ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஒக்கமே போல
பெரியதன் ஆவி பெரிது

#2
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார் முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை இல்லை
கனா முந்துறாத வினை

#3
கல்வியான் ஆய கழி நுட்பம் கல்லார் முன்
சொல்லிய நல்லவும் தீய ஆம் எல்லாம்
இவர் வரை நாட தமரை இல்லார்க்கு
நகரமும் காடு போன்று ஆங்கு

#4
கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து உரைப்பார் வித்தகர் வேட்கையால்
வண்டு வழி படரும் வாள் கண்ணாய் தோற்பன
கொண்டு புகாஅர் அவை

#5
புலம் மிக்கவரை புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனா நலம் மிக்க
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே
பாம்பு அறியும் பாம்பின கால்

#6
ஈனுலகத்துஆயின் இசை பெறூஉம் அஃது இறந்து
ஏனுலகத்துஆயின் இனிது அதூஉம் தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி

#7
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்
மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான்
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே
தாஅம் தர வாரா நோய்

#8
எ நெறியானும் இறைவன் தன் மக்களை
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி
மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும்
தான் செய்த பாவை தனக்கு

#9
திருந்தாய் நீ ஆர்வத்தை தீமை உடையார்
வருந்தினார் என்றே வயப்படுவது உண்டோ
அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டியக்கண்ணும்
பொருந்தா மண் ஆகா சுவர்

#10
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவு இன்றி தீர்ந்தார் போல் சொல்லி அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே
இரு தலை கொள்ளி என்பார்

#11
மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும்
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க
இன நலம் நன்கு உடையஆயினும் என்றும்
மன நலம் ஆகாவாம் கீழ்

#12
விழும் இழை நல்லார் வெருள் பிணை போல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும் தொழுநையுள்
மாலையும் மாலுள் மயக்குறுத்தாள் அஃதால் அ
சால்பினை சால்பு அறுக்குமாறு

#13
பாப்பு கொடியாற்கு பால் மேனியான் போல
தாக்கி அமருள் தலைப்பெய்யார் போக்கி
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே
கழி விழா தோள் ஏற்றுவார்

#14
தாம் நட்டு ஒழுகுதற்கு தக்கார் என வேண்டா
யார் நட்பதுஆயினும் நட்பு கொளல் வேண்டும்
கான் அட்டு நாறும் கதுப்பினாய் தீற்றாதோ
நாய் நட்டால் நல்ல முயல்

#15
அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் பொங்கி
அறை பாய் அருவி அணி மலை நாட
உறற்பால யார்க்கும் உறும்

#16
நண்பு ஒன்றி தம்மாலே நாட்டப்பாட்டார்களை
கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்தீயார்
பண் கொண்ட தீம் சொல் பணை தோளாய் யார் உளரோ
தம் கன்று சா கறப்பார்

#17
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்க தாம் கொள்ளார்
நிலை பொருள் என்று அதனை நீட்டித்தல் வேண்டா
புலை பொருள் தங்கா வெளி

#18
தக்காரோடு ஒன்றி தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரை தாம் தேறார்
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ
அக்காரம் சேர்ந்த மணல்

#19
கறுத்து ஆற்றி தம்மை கடிய செய்தாரை
பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின்
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே
தான் தோன்றிட வரும் சால்பு

#20
காவலனை ஆக வழிபட்டார் மற்று அவன்
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்
ஆ அணைய நின்றதன் கன்று முலை இருப்ப
தாய் அணல் தான் சுவைத்து அற்று

#21
உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரை முது மக்கள் உவப்ப நரை முடித்து
சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை
கல்லாமல் பாகம் படும்

#22
உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப
நரி கூ கடற்கு எய்தாவாறு

#23
அருமையுடைய பொருள் உடையார் தங்கண்
கருமம் உடையாரை நாடார் எருமை மேல்
நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு
தேரை வழி சென்றார் இல்

#24
இசைவ கொடுப்பதூஉம் இல் என்பதூஉம்
வசை அன்று வையத்து இயற்கை அஃது அன்றி
பசை கொண்டவன் நிற்க பாத்து உண்ணான்ஆயின்
நசை கொன்றான் செல் உலகம் இல்

#25
உரிதினில் தம்மொடு உழந்தமை கண்டு
பிரிவு இன்றி போற்றப்படுவார் திரிவு இன்றி
தாம் பெற்றதனால் உவவார் பெரிது அகழின்
பாம்பு காண்பாரும் உடைத்து

#26
விடல் அரிய துப்பு உடைய வேட்கையை நீக்கி
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய்
பெற்ற விடக்கு நுகர்தல் கடல் நீந்தி
கன்று அடியுள் ஆழ்ந்துவிடல்

#27
தேர்ந்து கண்ணோடாது தீ வினையும் அஞ்சலராய்
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உடைத்து தீர்ந்த
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு

#28
தாம் ஆற்றகில்லாதார் தாம் சாரப்பட்டாரை
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு முரண் அஞ்சி போவாரே
உண் ஓட்டு அகல் உடைப்பார்

#29
முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினான் ஆகாப்பது இல்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது

#30
நிறையான் மிகுகலா நேரிழையாரை
சிறையான் அகப்படுத்தல் ஆகா அறையோ
வருந்த வலிதினின் யாப்பினும் நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல்

#31
எமர் இது செய்க எமக்கு என்று வேந்தன்
தமரை தலைவைத்த காலை தமர் அவற்கு
வேலின்வாய்ஆயினும் வீழ்வார் மறுத்து உரைப்பின்
ஆல் என்னின் பூல் என்னுமாறு

#32
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரை
பொருளால் அறுத்தல் பொருளே பொருள் கொடுப்ப
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர் வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது

#33
வெம் சின மன்னவன் வேண்டாத செய்யினும்
நெஞ்சத்து கொள்வ சிறிதும் செயல் வேண்டா
என் செய்து அகப்பட்டக்கண்ணும் எடுப்புபவோ
துஞ்சு புலியை துயில்

#34
பரந்த திறலாரை பாசி மேல் இட்டு
கரந்து மறைக்கலும் ஆமோ நிரந்து எழுந்த
வேயின் திரண்ட தோள் வேல் கண்ணாய் விண் இயங்கும்
ஞாயிற்றை கை மறைப்பார் இல்

#35
தமன் என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்
நமன் என்று காயினும் தான் காயான் மன்னே
அவன் இவன் என்று உரைத்து எள்ளி மற்று யாரோ
நம நெய்யை நக்குபவர்

#36
மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை
ஒற்கப்பட முயறும் என்றல் இழுக்கு ஆகும்
நற்கு எளிது ஆகிவிடினும் நளிர் வரை மேல்
கல் கிள்ளி கை உய்ந்தார் இல்

#37
வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை
துய்த்து வழங்கி இரு பாலும் அ தக
தக்குழி நோக்கி அறம் செய்க அஃது அன்றோ
எய்ப்பினில் வைப்பு என்பது

#38
உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண் பொருளை
கற்றானை நோக்கியே கைவிடுக கற்றான்
கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும்
இழவு அன்று எருது உண்ட உப்பு

#39
நாட்டி கொளப்பட்டார் நன்மை இலர்ஆயின்
காட்டி களைதும் என வேண்டா ஓட்டி
இடம்படுத்த கண்ணாய் இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல்

#40
பயன் நோக்காது ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி
இசை நோக்கி ஈகின்றார் ஈகை வயமா போல்
ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப
கூலிக்கு செய்து உண்ணுமாறு

#41
வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும் அஃதே போல்
கள்ளம் உடையாரை கண்டே அறியலாம்
ஒள் அமர் கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்

#42
விளிந்தாரே போல பிறர் ஆகி நிற்கும்
முளிந்தாரை தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கணாயினும் ஆராயான் ஆகி
தெளிந்தான் விரைந்து கெடும்

#43
மறந்தானும் தாம் உடைய தாம் போற்றின் அல்லால்
சிறந்தார் தமர் என்று தேற்றார் கை வையார்
கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப
இறந்தது பேர்த்து அறிவார் இல்

#44
கை ஆர உண்டமையால் காய்வார் பொருட்டாக
பொய்யாக தம்மை பொருள் அல்ல கூறுபவேல்
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப
செய்யாத எய்தா எனின்

#45
நோவ உரைத்தாரை தாம் பொறுக்கல் ஆற்றாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவு உரை
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய் அது அன்றோ
தீ இல்லை ஊட்டும் திறம்

#46
முகம் புறத்து கண்டால் பொறுக்கலாதாரை
அகம் புகுதும் என்று இரக்கும் ஆசை இரும் கடத்து
தக்க நெறியிடை பின்னும் செல பெறார்
ஒக்கலை வேண்டி அழல்

#47
ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால்
மா இரு ஞாலத்து மண்பு ஒருவன் போல்கலார்
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும்
காய்கலாவாகும் நிலா

#48
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்
உரை ஒழியாவாகும் உயர்ந்தோர்கண் குற்றம்
மரை ஆ கன்று ஊட்டும் மலை நாட மாயா
நரை ஆன் புறத்து இட்ட சூடு

#49
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலான் ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் கூர் அம்பு
அடி இழுப்பின் இல்லை அரண்

#50
கற்றது ஒன்று இன்றிவிடினும் குடி பிறந்தார்
மற்றொன்று அறிவாரின் மாண் மிக நல்லரால்
பொற்ப உரைப்பான் புக வேண்டா கொற்சேரி
துன்னூசி விற்பவர் இல்

#51
இயல் பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயல் பகை தூண்டி விடுத்து ஓர் நயத்தால்
கறு வழங்கி கைக்கு எளிதா செய்க அதுவே
சிறு குரங்கின் கையால் துழா

#52
பாரதத்துள்ளும் பணையம் தம் தாயமா
ஈர்ஐம்பதின்மரும் போர் எதிர்த்து ஐவரொடு
ஏதிலர் ஆகி இடை விண்டார் ஆதலால்
காதலரொடு ஆடார் கவறு

#53
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்று அவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் நல்ல
வினை மரபின் மற்று அதனை நீக்குமதுவே
மனை மரம் ஆய மருந்து

#54
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையை பெறுதல் உறுதியே
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும் அது அன்றோ
முள்ளினால் முள் களையுமாறு

#55
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அ நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆகும் ஆயினால்
ஆற்று உணா வேண்டுவது இல்

#56
எமக்கு துணையாவார் யாவர் என்று எண்ணி
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா
பிறர்க்கு பிறர் செய்வது ஒன்று உண்டோ இல்லை
தமக்கு மருத்துவர் தாம்

#57
கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல் என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால் மெய்யா
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்
கடம் பெற்றான் பெற்றான் குடம்

#58
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம் பயில் சோலை மலை நாட என்றும்
குரங்கினுள் நல் முகத்த இல்

#59
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்று தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டு அலர் தார் மார்ப கலி ஊழி காலத்து
கெட்டார்க்கு நட்டாரோ இல்

#60
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே ஆற்ற
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை மற்று இல்லை
மரம் போக்கி கூலி கொண்டார்

#61
உணற்கு இனிய இன் நீர் பிறிதுழி இல் என்னும்
கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை
முற்ற பகலும் முனியாது இனிது ஓதி
கற்றலின் கேட்டலே நன்று

#62
கழுமலத்து யாத்த களிரும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால் விழுமிய
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது

#63
எவ்வம் துணையா பொருள் முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர குறும்பு இயங்கும்
கோ புக்குழி செய்வது இல்

#64
கல்லாதவரிடை கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை ஒருவற்கு நல்லாய்
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு

#65
வென்று அடுகிற்பாரை வேர்ப்பித்து அவர் காய்வது
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்
குன்றொடு தேன் கலாம் வெற்ப அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று

#66
முன் இன்னார்ஆயினும் மூடும் இடர் வந்தால்
பின் இன்னார் ஆகி பிரியார் ஒரு குடியார்
பொன்னா செயினும் புகாஅர் புனல் ஊர
துன்னினார் அல்லர் பிறர்

#67
சுற்றத்தார் நட்டார் என சென்று ஒருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் கொற்ற புள்
ஊர்ந்து உலகம் தாவிய அண்ணலேஆயினும்
சீர்ந்தது செய்யாதார் இல்

#68
எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின்
தினை துணையேயானும் அணி கொண்டல் நன்றே
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப
பனை பதித்து உண்ணார் பழம்

#69
தத்தம் பொருளும் தமர்தம் வளமையும்
முந்துற நாடி புறந்தரல் ஓம்புக
அம் தண் அருவி மலை நாட சேண் நோக்கி
நந்து நீர் கொண்டதே போன்று

#70
சிறியவர் எய்திய செல்வத்தின் மாண்ட
பெரியவர் நல்குரவு நன்றே தெரியின்
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின்
முது நெய் தீது ஆகலோ இல்

#71
வான் பாட்டவர் பகை கொள்ளினும் மேலாயார்
புன் பாட்டவர் பகை கோடல் பயம் இன்றே
கண் பாட்ட பூ காவி கானல் அம் தண் சேர்ப்ப
வெண் பாட்டம் வெள்ளம் தரும்

#72
நடலை இலர் ஆகி நன்று உணராராய
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
கடலுளால் மா வடித்து அற்று

#73
யானும் மற்று இ இருந்த எம் முன்னும் ஆயக்கால்
ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல்
படை மாறு கொள்ள பகை தூண்டல் அஃதே
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு

#74
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து கைம்மிக
நண்ணி அவர்க்கு நலன் உடைய செய்பவேல்
எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து
உண்ணி பறித்துவிடல்

#75
பெரியார்க்கு செய்யும் சிறப்பினை பேணி
சிறியார்க்கு செய்துவிடுதல் பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர அது அன்றோ
நாய் மேல் தவிசு இடுமாறு

#76
செரு கெழு மன்னர் திறல் உடையார் சேர்ந்தால்
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ
உருத்த சுணங்கின் ஒளியிழாய் கூரிது
எருத்து வலியதன் கொம்பு

#77
அன்பின் நெகிழ வழிபட்டு கொள்ளாது
நின்ற பொழுதின் முடிவித்து கொள்வதே
கன்று விட்டு ஆ கறக்கும் போழ்தில் கறவானாய்
அம்பு விட்டு ஆ கறக்குமாறு

#78
இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப உணர்வார்க்கு
அணி மலை நாட அளறு ஆடிக்கண்ணும்
மணி மணி ஆகிவிடும்

#79
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும் நாவாய்
களிகள் போல் தூங்கும் கடல் சேர்ப்ப வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல்

#80
காழ் ஆர மார்ப கசடு அற கை காவா
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்து கொண்டு நேர்ந்து ஊக்கல் குறுநரிக்கு
நல்ல நாராயம் கொளல்

#81
நாடி நமர் என்று நன்கு புறந்தந்தாரை
கேடு பிறரொடு சூழ்தல் கிளர் மணி
நீடு அகல் வெற்ப நினைப்பு இன்றி தாம் இருந்த
கோடு குறைத்துவிடல்

#82
பொற்பவும் பொல்லாதனவும் புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ வில் கீழ்
அரி தாய் பரந்து அகன்ற கண்ணாய் அறியும்
பெரிது ஆள்பவனே பெரிது

#83
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமை காப்பு அமையும்
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை
தன் செய்ய தானே கெடும்

#84
இது மன்னும் தீது என்று இயைந்ததூஉம் ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும் மது நெய்தல்
வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப
தீ நாள் திரு உடையார்க்கு இல்

#85
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
கட்டங்க வெல் கொடி கொண்டானும் கொண்டானே
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டியுழி

#86
உழை இருந்து நுண்ணிய கூறி கருமம்
புரை இருந்தவாறு அறியான் புக்கான் விளிதல்
நிரை இருந்து மாண்ட அரங்கினுள் வட்டு
கரை இருந்தார்க்கு எளிய போர்

#87
கள்ளி அகிலும் கரும் காக்கை சொல்லும் போல்
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட நாய் கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு

#88
தெற்ற பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப தாம் தெற்ற
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்

#89
கண்ணின் மணியே போல் காதலால் நட்டரும்
உண்ணும் துணையும் உளரா பிறர் ஆவர்
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும்
உண்ணும் துணை காக்கும் கூற்று

#90
செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அ நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே
வெந்நீரில் தண்ணீர் தெளித்து

#91
பெரு மலை நாட பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர் அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல் பனையின் மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டு அற்று

#92
பொலம் தார் இராமன் துணையாக போதந்து
இலங்கை கிழவற்கு இளையான் இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான் பெரியாரை
சார்ந்து கெழீஇயலார் இல்

#93
சால மறைத்து ஓம்பி சான்றவர் கைகரப்ப
காலை கழிந்ததன் பின்றையும் மேலை
கறவை கன்று ஊர்ந்தானை தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பு இளமை இல்

#94
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால்
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்
கற்பால் இலங்கு அருவி நாட மற்று யாரானும்
சொல் சோர்விலாதாரோ இல்

#95
தத்தமக்கு கொண்ட குறியோ தவம் அல்ல
செத்துக சாந்து படுக்க மனம் ஒத்து
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே
நுகத்து பகல் ஆணி போன்று

#96
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர்
கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல்
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர்
ஈடு இல்லதற்கு இல்லை பாடு

#97
தழங்குகுரல் வானத்து தண் பெயல் பெற்றால்
கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான்
விழைந்தவரை வேறு அன்றி கொண்டு ஒழுகல் வேண்டா
பழம் பகை நட்பு ஆதல் இல்

#98
வெள்ளம் பகை வரினும் வேறு இடத்தார் செய்வது என்
கள்ளம் உடைத்து ஆகி சார்ந்த கழி நட்பு
புள் ஒலி பொய்கை புனல் ஊர அஃது அன்றோ
உள் இல்லத்து உண்ட தனிசு

#99
அடங்கி அகப்பட்ட ஐந்தினையும் காத்து
தொடங்கிய மூன்றினால் மாண்டு ஈண்டு உடம்பு ஒழிய
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலை செய்தாரே
கொல்லி மேல் கொட்டு வைத்தார்

#100
நல்கூர்ந்தவர்க்கு நனி பெரியர் ஆயினார்
செல் விருந்து ஆகி செலல் வேண்டா ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம் குருவி
குறங்கு அறுப்ப சோரும் குடர்

#101
பரிய படுமவர் பண்பு இலரேனும்
திரிய பெறுபவோ சான்றோர் விரி திரை
பார் எறியும் முந்நீர் துறைவ கடன் அன்றோ
ஊர் அறிய நட்டார்க்கு உணா

#102
எனக்கு தகவு அன்றால் என்பதே நோக்கி
தனக்கு கரி ஆவான் தானாய் தவற்றை
நினைத்து தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
என செய்யார் மாணா வினை

#103
நிரம்பி நிரையத்தை கண்டு அ நிரையும்
வரம்பு இல் பெரியானும் புக்கான் இரங்கார்
கொடி ஆர மார்ப குடி கெட வந்தால்
அடி கெட மன்றிவிடல்

#104
நல்லவும் தீயவும் நாடி பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தை
புல்லம் புறம் புல்லுமாறு

#105
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலை பேரானை பெற்று கடைக்கால்
செயிர் அறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிர் உடையார் எய்தா வினை

#106
வாள் திறலானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கு ஒளி காட்ட
பொரு அறு தன்மை கண்டு அஃது ஒழிந்தார் அஃதால்
உருவு திரு ஊட்டுமாறு

#107
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் கற்றா
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர
மரம் குரைப்ப மண்ணா மயிர்

#108
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழம் கன்று ஏறு ஆதலும் உண்டு

#109
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என்
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை

#110
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய் செய்வது என்
வல்லை அரசு ஆட்கொளின்

#111
நன்றே ஒருவன் துணை கோடல் பாப்பு இடுக்கண்
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் விண் தோயும்
குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே
ஒன்றுக்கு உதவாத ஒன்று

#112
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா அடைந்தாரை
மாண்டிலர் என்றே மறுப்ப கிடந்ததோ
பூண் தாங்கு இள முலை பொற்றொடீஇ பூண்ட
பறை அறையா போயினார் இல்

#113
இடையீடு உடையார் இவர் அவரோடு என்று
தலையாயர் ஆய்தந்தும் காணார் கடையாயார்
முன் நின்று கூறும் குறளை தெரிதலால்
பின் இன்னா பேதையார் நட்பு

#114
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால்
இற்றே அவரை தெளியற்க மற்றவர்
யாவரே வேண்டினும் நன்கு ஒழுகார் கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு

#115
அகலம் உடைய அறிவு உடையார் நாப்பண்
புகல் அரியார் புக்கு அவர் தாமே இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ
பாண் சேரி பல் கிழிக்குமாறு

#116
அமர் விலங்கி அற்ற அறியவும்பட்டார்
எமர் மேலை இன்னரால் யார்க்கு உரைத்தும் என்று
தமர் மறையா கூழ் உண்டு சேறல்அதுவே
மகன் மறையா தாய் வாழுமாறு

#117
தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றி
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்
நோய் இன்று எனினும் அடுப்பின் கடை முடங்கும்
நாயை புலியாம் எனல்

#118
கட்டு உடைத்தாக கருமம் செய வைப்பின்
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டா பொருள் இல்லை இல்லையே
அட்டாரை ஒட்டா கலம்

#119
ஒற்கம் தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின் மேல் வற்பத்தால்
தன் மேல் நலியும் பசி பெரிதுஆயினும்
புல் மேயாது ஆகும் புலி

#120
பல் நாளும் நின்ற இடத்தும் கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால் மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும் செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்

#121
காடு உறை வாழ்க்கை கடு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும்
கையுளது ஆகி விடினும் குறும்பூழ்க்கு
செய் உளது ஆகும் மனம்

#122
விலங்கேயும் தம்மொடு உடன் உறைதல் மேவும்
கலந்தாரை கைவிடுதல் ஒல்லா இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட இன்னாதே
பேஎயொடானும் பிரிவு

#123
கருவினுள் கொண்டு கலந்தாரும் தம்முள்
ஒருவழி நீடி உறைதலோ துன்பம்
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல்
திருவொடும் இன்னாது துச்சு

#124
தம் குற்றம் நீக்கலர் ஆகி பிறர் குற்றம்
எங்கெங்கும் நீக்கற்கு இடை புகுதல் எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது
அயல் வளி தீர்த்துவிடல்

#125
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே
சுரை ஆழ அம்மி மிதப்பு

#126
ஆற்ற பெரியார் பகை வேண்டி கொள்ளற்க
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டானால்
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல்

#127
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்

#128
காட்டி கருமம் கயவர் மேல் வைத்து அவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கு என்று அமர்ந்து இருத்தல்
மா புரை நோக்கின் மயில் அன்னாய் பூசையை
காப்பிடுதல் புன் மீன் தலை

#129
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட மா காய்த்து
தன் மேல் குணில் கொள்ளுமாறு

#130
நெடியது காண்கலாய் நீ அளியை நெஞ்சே
கொடியது கூறினாய் மன்ற அடியுளே
முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும்

#131
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
தம் மேல் புகழ் பிறர் பாராட்ட தம் மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க களிப்பினும்
சோர பொதியாதவாறு

#132
செய்த கருமம் சிறிதானும் கைகூடா
மெய்யா உணரவும் தாம் படார் எய்த
நல தக தம்மை புகழ்தல் புலத்தகத்து
புள் அரைக்கால் விற்பேம் எனல்

#133
பண்டு இன்னர் என்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்
விண்டவரோடு ஒன்றி புறன் உரைப்பின் அஃது அன்றோ
உண்ட இல் தீ இடுமாறு

#134
பல நாளும் ஆற்றார்எனினும் அறத்தை
சில நாள் சிறந்தவற்றால் செய்க முலை நெருங்கி
நைவது போலும் நுசுப்பினாய் நல் அறம்
செய்வது செய்யாது கேள்

#135
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே
அம்பலம் தாழ் கூட்டுவார்

#136
அரு விலை மாண் கலனும் ஆன்ற பொருளும்
திரு உடையர்ஆயின் திரிந்தும் வருமால்
பெரு வரை நாட பிரிவு இன்று அதனால்
திருவினும் திட்பமே நன்று

#137
தோற்றம் அரிது ஆய மக்கள் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறம் செய்க மாற்று இன்றி
அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்றுடன் இயைந்து
துஞ்ச வருமே துயக்கு

#138
கற்றானும் கற்றார் வாய் கேட்டானும் அல்லாதான்
தெற்ற உணரான் பொருள்களை எற்றே
அறிவு இலான் மெய் தலைப்பாடு பிறிது இல்லை
நாவல் கீழ் பெற்ற கனி

#139
பெரியாரை சார்ந்தார் மேல் பேதைமை கந்தா
சிறியார் முரண் கொண்டு ஒழுகல் வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப புலம் புகின்
தீ நாய் எடுப்புமாம் எண்கு

#140
மரம் போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ
பள்ளியுள் ஐயம் புகல்

#141
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார் தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல் விட்டு காக்கை தினல்

#142
நாணார் பரியார் நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களை பேணி
ஒழுக்கி அவரொடு உடனுறைசெய்தல்
புழு பெய்து புண் பொதியுமாறு

#143
பரந்தவர் கொள்கை மேல் பால் ஆறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க
வரம்பு இல் பெருமை தருமே பிரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும்

#144
தமர் அல்லவரை தலையளித்தக்கண்ணும்
அமரா குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்
கவர் நிலம் செய்து அமைத்து கட்டியக்கண்ணும்
உவர் நிலம் உட்கொதிக்குமாறு

#145
ஒல்லாது ஒன்று இன்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு
இடரா இயலும் இலங்கு நீர் சேர்ப்ப
கடலுள்ளும் காண்பவே நன்கு

#146
கடுப்ப தலை கீறி காலும் இழந்து
நடை தாரா என்பதூஉம் பட்டு முடத்தொடு
பேர் பிறிது ஆக பெறுதலால் போகாரே
நீர் குறிது ஆக புகல்

#147
பொருள் அல்லார் கூறிய பொய் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து
ஆடுபவரோடே ஆடார் உணர்வு உடையார்
ஆடு மணை பொய் காலே போன்று

#148
முன் நலிந்து ஆற்ற முரண் கொண்டு எழுந்தாரை
பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று
காம்பு அன்ன தோளி கலங்க கடித்து ஓடும்
பாம்பு பல் கொள்வாரோ இல்

#149
நெறியால் உணராது நீர்மையும் இன்றி
சிறியார் எளியரால் என்று பெரியாரை
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல்
திங்களை நாய் குரைத்து அற்று

#150
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்குஆயினும்
வீற்று வழி அல்லால் வேண்டினும் கைகூடா
தேற்றார் சிறியர் எனல் வேண்டா நோற்றார்க்கு
சோற்று உள்ளும் வீழும் கறி

#151
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசு உடை செல்வம் தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப அது அன்றோ
நாய் பெற்ற தெங்கம் பழம்

#152
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்
கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு என வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்

#153
பூம் தண் புனல் புகார் பூமி குறி காண்டற்கு
வேந்தன் வினாயினான் மாந்தரை சான்றவன்
கொண்டு அதனை நாணி மறைத்தலால் தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணி சொலல்

#154
இஞ்சி அடைத்துவைத்து ஏமாந்து இருப்பினும்
அஞ்சி அகப்படுவர் ஆற்றாதார் அஞ்சி
இருள் புக்கு இருப்பினும் மெய்யே வெரூஉம் புள்
இருளின் இருந்தும் வெளி

#155
ஆற்ற வினை செய்தார் நிற்ப பல உரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள்
வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமை சாகாடு எழல்

#156
தன் நலிகிற்பான் தலை வரின் தான் அவற்கு
பின் நலிவானை பெறல் வேண்டும் என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே
நாய் பின்னதாக தகர்

#157
வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை
புலி கலாம் கொள் யானை பூம் குன்ற நாட
வலி அலாம் தாக்கு வலிது

#158
மறுமை ஒன்று உண்டோ மன பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள்
கட்டி அடையை களைவித்து கண் செரீஇ
இட்டிகை தீற்றுபவர்

#159
அறம் செய்பவற்கும் அறவுழி நோக்கி
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம்
புறம் செய்ய செல்வம் பெருகும் அறம் செய்ய
அல்லவை நீங்கிவிடும்

#160
வருவாய் சிறிதுஎனினும் வைகலும் ஈண்டின்
பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும் ஒருவாறு
ஒளி ஈண்டி நின்றால் உலகம் விளக்கும்
துளி ஈண்டில் வெள்ளம் தரும்

#161
இனி யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்
தனியேம் யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா
முனிவு இலராகி முயல்க முனியாதார்
முன்னியது எய்தாமை இல்

#162
கூஉய் கொடுப்பது ஒன்று இல் எனினும் சார்ந்தார்க்கு
தூஉய் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை
யாப்புள் வேறு ஆகிவிடும்

#163
தோற்றம் பெரிய நசையினார் அ நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல் ஆற்றின்
கயல் புரை உண்கண் கனங்குழாய் அஃதால்
உயவு நெய்யுள் குளிக்குமாறு

#164
செறலின் கொலை புரிந்து சேண் உவப்பர் ஆகி
அறிவின் அருள் புரிந்து செல்லார் பிறிதின்
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார்
தயிர் சிதைத்து மற்றொன்று அடல்

#165
மறு மனத்தான் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தான் ஆகி ஒழுகின் தெறு மனத்தார்
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்

#166
தோற்றத்தால் பொல்லார் துணை இலார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால்
ஆற்றாது அவர் அழுத கண்ணீர்அவை அவர்க்கு
கூற்றமாய் வீழ்ந்துவிடும்

#167
உடுக்கை மருந்து உறையுள் உண்டியோடு இன்ன
கொடுத்து குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து இன் சொல்
ஈயாமை என்ப எருமை அறிந்து ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு

#168
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு விடான் ஆகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது

#169
கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்பு உடைய மன்னர்க்கே துப்புரவு அது அல்லால்
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்
சுரத்திடை தீர பெயல்

#170
உரிஞ்சி நடப்பாரை உள் அடி நோவ
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப
பெரும் பழியும் பேணாதார்க்கு இல்

#171
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள்
பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்று உறா முன்றிலோ இல்

#172
உறு மகன் ஆக ஒருவனை நாட்டி
பெறு மாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை அதுவே
குறுமக்கள் காவு நடல்

#173
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ கேள் தீயன
ஆவதே போன்று கெடும்

#174
யாம் தீய செய்த மலை மறைத்தது என்று எண்ணி
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல்
மண இல் கமழும் மலி திரை சேர்ப்ப
கணையிலும் கூரியவாம் கண்

#175
வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெம் சமத்து
வாள் ஆண்மையானும் வலியராய் தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று

#176
உரைத்தவர் நாவோ பருந்து எறியாது என்று
சிலைத்து எழுந்து செம்மாப்பவரே மலைத்தால்
இழைத்தது இகவாதவரை கனற்றி
பலி புறத்து உண்பர் உணா

#177
களமர் பலரானும் கள்ளம் படினும்
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல்
அரிநர் அணை திறக்கும் ஊர அறுமோ
நரி நக்கிற்று என்று கடல்

#178
ஆள்தகை மன்னரை சேர்ந்தார் தாம் அலவுறினும்
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க
பூண் தகு மார்ப பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும்

#179
யாவரேயானும் இழந்த பொருள் உடையார்
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை
பட தோன்றும் நல்லாய் நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும்

#180
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப
உள்ள மாண்பு இல்லா ஒருவரை தெள்ளி
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல்
பறைக்கண் கடிப்பு இடுமாறு

#181
வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால் யாம் ஒன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே மற்று அதனை
ஐயம் இலர் ஆகி செய்க அது அன்றோ
செய்க என்றான் உண்க என்னுமாறு

#182
கொழித்து கொளப்பட்ட நண்பின் அவரை
பழித்து பலர் நடுவண் சொல்லாடார் என்கொல்
விழித்து அலரும் நெய்தல் துறைவ உரையார்
இழித்தக்க காணின் கனா

#183
வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் உளவா
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால் கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல்

#184
பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை தன்
சொல்லாலே தன்னை துயர்ப்படுக்கும் நல்லாய்
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும்

#185
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும் உடுத்தாரை
உண்டி வினவுவார் இல்

#186
கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான் உற்று இயம்பும்
நீத்த நீர் சேர்ப்ப இளையானேஆயினும்
மூத்தானே ஆடு மகன்

#187
செருக்கு உடை மன்னர் இடை புக்கு அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின் தனக்கு
திருத்தலும் ஆகாது தீது ஆம் அதுவே
எருத்திடை வைக்கோல் தினல்

#188
இம்மை பழியும் மறுமைக்கு பாவமும்
தம்மை பிரியார் தமர் போல் அடைந்தாரின்
செம்மை பகை கொண்டு சேராதார் தீயரோ
மைம்மைப்பின் நன்று குருடு

#189
எய்தா நகை சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாரா கொண்டு விடுவர்மன் அஃதால்
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல்

#190
தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும்
தாமே தமியர் புகல் வேண்டா தீமையான்
ஊர் மிகின் இல்லை கரியே ஒலித்து உடன்
நீர் மிகின் இல்லை சிறை

#191
பண்டு உருத்து செய்த பழ வினை வந்து எம்மை
இன்று ஒறுக்கின்றது என நினையார் துன்புறுக்கும்
மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய்
ஏவலாள் ஊரும் சுடும்

#192
கற்று ஆற்றுவாரை கறுப்பித்து கல்லாதார்
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின்
தானும் நடவான் முடவன் பிடிப்பூணி
யானையொடு ஆடல் உறவு

#193
தீ பால் வினையினை தீரவும் அஞ்சாராய்
காப்பாரே போன்று உரைத்த பொய் குறளை ஏய்ப்பர் முன்
சொல்லொடு ஒருப்படார் சோர்வு இன்றி மாறுபவே
வில்லொடு காக்கையே போன்று

#194
நெடும் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு
நடுங்கி பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே
கொடும்பாடு உடையான் குடி

#195
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால்
பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும்
ஓர்த்தது இசைக்கும் பறை

#196
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் உரை பிறிது
கொண்டு எடுத்து கூறல் கொடும் கழி தண் சேர்ப்ப
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று

#197
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டு உடைத்தாக கருதிய நல் அறம்
முட்டு உடைத்தாகி இடை வீழ்ந்து ஒழிதலின்
நட்டு அறான் ஆதலே நன்று

#198
இறப்ப எமக்கு ஈது இளிவரவு என்னார்
பிறப்பின் சிறியாரை சென்று பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே
தால அடைக்கலமே போன்று

#199
தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் அ பொருள்
தொக்க வகையும் முதலும் அது ஆனால்
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல்
அக்காரம் பால் செருக்குமாறு

#200
உடை பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி நடக்கையின்
ஒள்ளியன் அல்லான் மேல் வைத்தல் குரங்கின் கை
கொள்ளி கொடுத்துவிடல்

#201
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி
பொய் மேலேகொண்டு அ இறைவன் கொன்றார் குறைப்பர்
தம் மேலே வீழ பனை

#202
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு
தக்கது அறியார் தலைசிறத்தல் எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப அகலுள் நீராலே
துடும்பல் எறிந்துவிடல்

#203
சுட்டி சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்
பட்ட இழுக்கம் பலவானால் பட்ட
பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை ஊழே அடும்

#204
கன்றி முதிர்ந்த கழிய பல் நாள் செயினும்
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்
ஒன்றாய்விடினும் உயர்ந்தார் படும் குற்றம்
குன்றின் மேல் இட்ட விளக்கு

#205
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை
ஏஎய் இரவு எல்லாம் காத்தாலும் வாஅய்
படற்பாலார்கண்ணே படுமே பொறியும்
தொடற்பாலார்கண்ணே தொடும்

#206
முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்
இறை திரியான் நேர் ஒத்தல் வேண்டும் முறை திரிந்து
நேர் ஒழுகான்ஆயின் அதுவாம் ஒரு பக்கம்
நீர் ஒழுக பால் ஒழுகுமாறு

#207
அறிவு அன்று அழகு அன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனற்பாடும் செய்யும் எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த
என்று ஊடு அறுப்பினும் மன்று

#208
இல்வாழ்க்கையானும் இலிங்கானும் மேற்கொள்ளார்
நல் வாழ்க்கை போக நடுவு நின்று எல்லாம்
ஒருதலையா சென்று துணியாதவரே
இரு தலையும் கா கழிப்பார்

#209
முதுமக்கள் அன்றி முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்அது மன்னும்
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட
மன்றத்து மையல் சேர்ந்து அற்று

#210
தாம் அகத்தான் நட்டு தமர் என்று ஒழுகியக்கால்
நாண் அகத்து தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல்
மான் அமர் கண்ணி மறந்தும் பரியலரால்
கானகத்து உக்க நிலா

#211
உழந்ததூஉம் பேணார் ஒறுத்தமை கண்டும்
விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப
முழம் குறைப்ப சாண் நீளுமாறு

#212
உலப்பு இல் உலகத்து உறுதியே நோக்கி
குலைத்து அடக்கி நல் அறம் கொள்ளார் கொளுத்தல்
மலைத்து அழுது உண்ணா குழவியை தாயர்
அலைத்து பால் பெய்துவிடல்

#213
சேர்ந்தார் ஒருவரை சேர்ந்து ஒழுகப்பட்டவர்
தீர்ந்தாரா கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்கு
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம்
எல்லாம் பொய் அட்டு ஊணே வாய்

#214
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல்
வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகும்
தாறா படினும் தலைமகன் தன் ஒளி
நூறுஆயிரவர்க்கு நேர்

#215
சிறந்து நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல் பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப அதுவே
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு

#216
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடம் கண்டு அறிவாம் என்று எண்ணி இராஅர்
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய் சான்றோர்
கடம் கொண்டு செய்வர் கடன்

#217
ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும் ஒப்புரவு
ஆற்றும் குடி பிறந்த சான்றவன் ஆற்றவும்
போற்ற படாதாகி புல் இன்றி மேயினும்
ஏற்று கன்று ஏறு ஆய்விடும்

#218
அடுத்து ஒன்று இரந்தார்க்கு ஒன்று ஈந்தானை கொண்டான்
படுத்து ஏழையாம் என்று போகினும் போக
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய் யாவர்க்கேயானும்
கொடுத்து ஏழை ஆயினார் இல்

#219
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால்
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல்
நீர் அற நீர் சார்வு அறும்

#220
உறுகண் பலவும் உணராமை கந்தா
தறுகண்மை ஆகாதாம் பேதை தறுகண்
பொறி பட்டவாறு அல்லால் பூணாது என்று எண்ணி
அறிவு அச்சம் ஆற்ற பெரிது

#221
முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும்
பின்னும் பிழைப்ப பொறுப்பவோ இன் இசை
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர ஈனுமோ
வாழை இரு கால் குலை

#222
தொடி தோள் மடவார் துணை முலை ஆகம்
மடுத்து அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது

#223
ஆணம் உடைய அறிவினார் தம் நலம்
மானும் அறிவினவரை தலைப்படுத்தல்
மான் அமர் கண்ணாய் மறம் கெழு மா மன்னர்
யானையால் யானை யாத்து அற்று

#224
தருக்கி ஒழுகி தகவு அல்ல செய்தும்
பெருக்க மதித்த பின் பேணாத செய்தும்
கரப்பு உடை உள்ளம் கனற்றுபவரே
செருப்பிடை பட்ட பரல்

#225
விடலைமை செய்ய வெருண்டு அகன்று நில்லாது
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்
மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப
கடல் படா எல்லாம் படும்

#226
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர் துகிர் புரையும்
செம் வாய் மணி முறுவல் சின்மொழி செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்

#227
புரைய கலந்தவர்கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க
வரையக நாட விரையின் கருமம்
சிதையும் இடர் ஆய்விடும்

#228
கற்றார் பலரை தன் கண்ணாக இல்லாதான்
உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணை பயிரும் மா மலை நாட
சுரையாழ் நரம்பு அறுத்து அற்று

#229
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம் கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ சான்றோர்
கயவர்க்கு உரையார் மறை

#230
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
இனம் கழு ஏற்றினார் இல்

#231
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்
போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ
யார் மேற்றா கொள்ளினும் கொண்டீக காணுங்கால்
ஊர் மேற்று அமணர்க்கும் ஓடு

#232
தமரேயும் தம்மை புகழ்ந்து உரைக்கும் போழ்தின்
அமராது அதனை அகற்றலே வேண்டும்
அமை ஆரும் வெற்ப அணியாரே தம்மை
தமவேயும் கொள்ளா கலம்

#233
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
தாமா சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்
போம் ஆறு அறியா புலன் மயங்கி ஊர் புக்கு
சாம் மா கண் காணாதவாறு

#234
தீயன அல்ல செயினும் திறல் வேந்தன்
காய்வன செய்து ஒழுகார் கற்று அறிந்தார் காயும்
புலி முன்னர் புல்வாய்க்கு போக்கு இல் அதுவே
வலி முன்னர் வை பாரம் இல்

#235
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார்
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழி பெற்றால்
கிடப்புழியும் பெற்றுவிடும்

#236
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா
துனியால் திரை உலாம் தூங்கு நீர் சேர்ப்ப
பனியால் குளம் நிறைதல் இல்

#237
முயறலே வேண்டா முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக
கயல் இகல் உண்கண்ணாய் கரியவரோ வேண்டா
அயல் அறியா அட்டூணோ இல்

#238
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மா வினை மாண பொதிகிற்பார் தீ வினை
அஞ்சில் என் அஞ்சாவிடில் என் குருட்டு கண்
துஞ்சில் என் துஞ்சாக்கால் என்

#239
உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ உண்ணா
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்

#240
மறாஅதவனும் பலர் ஒன்று இரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி பொறாஅன்
கரந்து உள்ளதூஉம் மறைக்கும் அதனால்
இரந்து ஊட்கு பன்மையோ தீது

#241
மொய் கொண்டு எழுந்த அமரகத்து மாற்றார் வாய்
பொய் கொண்டு அறை போய் திரிபவர்க்கு என்கொலாம்
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய் சான்றவர்
கை உண்டும் கூறுவர் மெய்

#242
பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர்
அருத்தம் அடி நிழலாரை வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அது அன்றோ
வண்டு தாது உண்டுவிடல்

#243
கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மை புகழ்ந்து உரைப்பர் தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட
நிறை குடம் நீர் தளும்பல் இல்

#244
தெரிவு உடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார்
பரியாரிடை புகார் பண்பு அறிவார் மன்ற
விரியா இமிழ் திரை வீங்கு நீர் சேர்ப்ப
அரிவாரை காட்டார் நரி

#245
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ
மைந்து இறைகொண்ட மலை மார்ப ஆகுமோ
நந்து உழுத எல்லாம் கணக்கு

#246
நினைத்தது இது என்று அ நீர்மையை பார்த்து
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார் புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட
கடிஞையுள் கல் இடுவார் இல்

#247
தம் தீமை இல்லவர் நட்டவர் தீமையையும்
எம் தீமை என்றே உணர்ப தாம் அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப
ஒருவர் பொறை இருவர் நட்பு

#248
அம் கோல் அவிர் தொடி ஆழியான்ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர்
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும்
தண் கோல் எடுக்குமாம் மொய்

#249
நல் அவை கண்டக்கால் நா சுருட்டி நன்று உணரா
புல் அவையுள் தம்மை புகழ்ந்து உரைத்தல் புல்லார்
புடை தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில் ஏற்றி
இடை கலத்து எய்துவிடல்

#250
தாக்குற்ற போழ்தில் தமரே போல் நன்கு உரைத்து
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ மேன்மைக்கண்
நோக்கு அற்றவரை பழித்தல் என் என்னானும்
மூக்கு அற்றதற்கு இல் பழி

#251
கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரை
பண்டு அறிவார் போலாது தாமும் அவரேயாய்
விண்டு ஒரீஇ மாற்றிவிடுதல் அது அன்றோ
விண்டற்கு விண்டல் மருந்து

#252
ஆற்றார் இவர் என்று அடைந்த தமரையும்
தோற்ற தாம் எள்ளி நலியற்க போற்றான்
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும்
உடையானை கௌவிவிடும்

#253
நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர் என்று ஒன்று
உளைய உரையாது உறுதியே கொள்க
வளை ஒலி ஐம்பாலாய் வாங்கியிருந்து
தொளை எண்ணார் அப்பம் தின்பார்

#254
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து
தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ
மஞ்சு சூழ் சோலை மலை நாட யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை அரண்

#255
சொல்லாமை நோக்கி குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி செல்வத்து
இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே என்றும்
கடலுள் துலாம் பண்ணினார்

#256
மாணா பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்தது போல்
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை
காணா களிக்கும் களி

#257
அன்பு அறிந்த பின் அல்லால் யார் யார்க்கும் தம் மறையை
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க தின்குறுவான்
கொல்வாங்கு கொன்ற பின் அல்லது உய கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல்

#258
விதி பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்
கதிப்பவர் நூலினை கையிகந்தார் ஆகி
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்
மதிப்புறத்து பட்ட மறு

#259
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்
ஓப்ப படினும் உணங்கலை புள் கவரும்
போற்றி புறந்தந்தக்கண்ணும் பொருளினை
காப்பாரின் பார்ப்பார் மிகும்

#260
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும்
மிக்க சிறப்பினர்ஆயினும் தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு

#261
மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல் வினையை
ஆய்வு இன்றி செய்யாதார் பின்னை வழி நினைந்து
நோய் காண் பொழுதின் அறம் செய்வார் காணாமை
நாய் காணின் கல் காணாவாறு

#262
கரும் தொழிலர் ஆய கடையாயார் தம் மேல்
பெரும் பழி ஏறுவ பேணார் இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ மற்று அஞ்சாதே
தின்பது அழுவதன்கண்

#263
அகம் தூய்மை இல்லாரை ஆற்ற பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால் இகந்து
நினைந்து தெரியானாய் நீள் கயத்துள் ஆமை
நனைந்து வா என்றுவிடல்

#264
கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல் சின வேந்தன் அவை காட்டும் மல்கி
தலைப்பெய்து இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலை பெயல் காட்டும் துணை

#265
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார் பனி அஞ்சி
வேழம் பிடி தழூஉம் வேய் சூழ் மலை நாட
ஊழ் அம்பு வீழா நிலத்து

#266
வினை பயம் ஒன்று இன்றி வேற்றுமை கொண்டு
நினைத்து பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்
புன பொன் அவிர் சுணங்கின் பூம் கொம்பர் அன்னாய்
தனக்கு இன்னா இன்னா பிறக்கு

#267
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர்
தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும்
முன் கை நெடியார்க்கு தோள்

#268
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல் உரைக்கு
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்று அறிந்தார் தீம் தேன்
முசு குத்தி நக்கும் மலை நாட தம்மை
பசு குத்தின் குத்துவார் இல்

#269
அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள் உடையாரை புகழாதார் இல்லை
பொரு படை கண்ணாய் அதுவால் திரு உடையார்
பண்டம் இருவர் கொளல்

#270
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்தது போல்
வெற்பு அறை மேல் தாழும் விலங்கு அருவி நல் நாட
கற்பறிவு போகா கடை

#271
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் பொறியின்
மணி பொன்னும் சாந்தமும் மாலையும் மற்று இன்ன
அணி எல்லாம் ஆடையின் பின்

#272
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்
ஒல்லை வெகுளார் உலகு ஆண்டும் என்பவர்
சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே
கொல்லையில் கூழ் மரமே போன்று

#273
எண்ண குறைபடா செல்வமும் இற்பிறப்பும்
மன்னருடைய உடைமையும் மன்னரால்
இன்னர் எனல் வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை

#274
செல்வ துணைமையும் தம் வாழ்நாள் துணைமையும் தாம்
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால் வாழார் பதி மகிழ்ந்து வாழ்வாரே
முள்ளி தேன் உண்ணுமவர்

#275
நன்கு ஒன்று அறிபவர் நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும்
ஒன்று இரண்டாம் வாணிகம் இல்

#276
சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்
கல் எறிந்தால் போல கலாம் தலைக்கொள்வாரை
இல் இருந்து ஆற்ற முனிவித்தல் உள் இருந்து
அச்சாணி தாம் கழிக்குமாறு

#277
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால் ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல்

#278
நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் நல்கூர்ந்து
வாடிய காலத்தும் வட்குபவோ வாடி
வலித்து திரங்கி கிடந்தேவிடினும்
புலி தலை நாய் மோத்தல் இல்

#279
விட்டு கருமம் செயவைத்த பின்னரும்
முட்டாது அவரை வியங்கொளவேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும்
கொட்டாமல் செல்லாது உளி

#280
குரைத்து கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு
புரைத்து எழுந்து போகினும் போவர் அரக்கு இல் உள்
பொய் அற்ற ஐவரும் போயினார் இல்லையே
உய்வதற்கு உய்யா இடம்

#281
பொருந்தாதவரை பொருது அட்டக்கண்ணும்
இருந்து அமையார் ஆகி இறப்ப வெகுடல்
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப அதுவே
அரிந்து அரிகால் நீர் படுக்குமாறு

#282
உடையதனை காப்பான் உடையான் அதுவே
உடையானை காப்பதூஉம் ஆகும் அடையின்
புதற்கு புலியும் வலியே புலிக்கு
புதலும் வலியாய்விடும்

#283
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்த பின்
நல் செய்கை செய்வார் போல் காட்டி நசை அழுங்க
வற்கென்ற செய்கை அதுவால் அ வாயுறை
புல் கழுத்தில் யாத்துவிடல்

#284
காத்து ஆற்றுகிற்பாரை கண்டால் எதிர் உரையார்
பார்த்து ஆற்றாதாரை பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள்
சேப்பிலைக்கு கூர்த்துவிடல்

#285
காப்பான் மட மகள் காப்பான் கைப்பட்டிருந்தும்
மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள்ஆயினாள் தீ புகை போல்
மஞ்சு ஆடு வெற்ப மறைப்பினும் ஆகாதே
தம் சாதி மிக்குவிடும்

#286
விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத்தவர்க்கும்
வருந்தும் பசி களையார் வம்பர்க்கு உதவல்
இரும் பணை வில் வென்ற புருவத்தாய் ஆற்ற
கரும் பனை அன்னது உடைத்து

#287
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும்
எளியாரை எள்ளாதார் இல்

#288
தம் நடை நோக்கார் தமர் வந்தவாறு அறியார்
செம் நடை சேரா சிறியார் போல் ஆகாது
நின் நடையானே நட அத்தா நின் நடை
நின்இன்று அறிகிற்பார் இல்

#289
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வுழியும் ஏமாப்ப செய்வதாம் மெல் இயல்
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு
மென்றிருந்து பாகு செயல்

#290
அல்லவை செய்குப அல்லாப்பின் அல்லாக்கால்
செல்வது அறிகிலர் ஆகி சிதைத்து எழுவர்
கல்லா கயவர் இயற்கை நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல்

#291
எய்ப்புழி வைப்பாம் என போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய் பைத்தொடீஇ
அச்சு இடையிட்டு திரியின் அது அன்றோ
மச்சு ஏற்றி ஏணி களைவு

#292
வழங்கார் வலி இலார் வாய் சொல்லும் பொல்லார்
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்
இழந்தது இல் செல்வம் பெறுதல் அதுவே
பழம் செய் போர்பு ஈன்றுவிடல்

#293
தம்மால் முடிவதனை தாம் ஆற்றி செய்கலார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல்
செல் நீர் அருவி மலை நாட பாய்பவோ
வெந்நீரும் ஆடாதார் தீ

#294
ஒருவன் உணராது உடன்று எழுந்த போருள்
இருவரிடை நட்பான் புக்கால் பெரிய
வெறுப்பினால் பேர்த்து செறுப்பின் தலையுள்
குறு கண்ணி ஆகிவிடும்

#295
சிறப்பு உடை மன்னரை செவ்வியான் நோக்கி
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை
விறல் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்
புறத்து அமைச்சின் நன்று அகத்து கூன்

#296
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃது அன்றி
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்

#297
ஒன்றால் சிறிதால் உதவுவது ஒன்று இல்லையால்
என்று ஆங்கு இருப்பின் இழுக்கம் பெரிது ஆகும்
அன்றை பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேராதவர்

#298
மானமும் நாணும் அறியார் மதி மயங்கி
ஞானம் அறிவார் இடை புக்கு தாம் இருந்து
ஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும்
யானை பல் காண்பான் புகல்

#299
உளைய உரைத்துவிடினும் உறுதி
கிளைகள் வாய் கேட்பது நன்றே விளை வயலுள்
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர
தாய் மிதித்த ஆகா முடம்

#300
குலத்து சிறியார் கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும் எழுதல் நிலத்து
நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா
தலை கீழா காதிவிடல்

#301
நோக்கி அறிகல்லா தம் உறுப்பு கண்ணாடி
நோக்கி அறிப அதுவே போல் நோக்கி
முகன் அறிவார் முன்னம் அறிப அதுவே
மகன் அறிவு தந்தை அறிவு

#302
சிறிய பொருள் கொடுத்து செய்த வினையால்
பெரிய பொருள் கருதுவாரே விரி பூ
விராஅம் புனல் ஊர வேண்டு அயிரை இட்டு
வராஅஅல் வாங்குபவர்

#303
இன்றி அமையா இரு முது மக்களும்
பொன்றினமை கண்டும் பொருள் பொருளா கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம் செய்க ஊர்ந்து உருளின்
குன்று வழி அடுப்பது இல்

#304
கடம் கொண்ட ஒண் பொருளை கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு தம்மினே என்றால் தொடங்கி
பகை மேற்கொண்டார் போல கொண்டார் வெகுடல்
நகை மேலும் கைப்பாய்விடும்

#305
உறாஅ வகையது செய்தாரை வேந்தன்
பொறாஅஅன் போல பொறுத்தால் பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல் அது அன்றோ
கூன் மேல் எழுந்த குரு

#306
ஒன்னார் அட நின்ற போழ்தின் ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க துன்னினார்
நன்மை இலராய்விடினும் நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல்

#307
தமராலும் தம்மாலும் உற்றால் ஒன்று ஆற்றி
நிகராக சென்றாரும் அல்லர் இவர் திரை
நீத்த நீர் தண் சேர்ப்ப செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு

#308
ஆணியா கொண்ட கருமம் பதிற்றியாண்டும்
பாணித்தே செய்ப வியங்கொள்ளின் காணி
பயவாமை செய்வார் ஆர் தம் சாகாடேயும்
உயவாமை சேறலோ இல்

#309
இடு குடை தேர் மன்னர் எமக்கு அமையும் என்று
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு
முடிதல் எனைத்தும் உணரா முயறல்
கடிய கனைத்துவிடல்

#310ட்ச்
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதா
பரியார் பயன் இன்மை செய்து பெரியார் சொல்
கொள்ளாது தாம் தம்மை காவாதவர் பிறரை
கள்ளரா செய்குறுவார்

#311
மன்னவன் ஆணை கீழ் மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செய பெறுப புன்னை
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப
மரத்தின் கீழ் ஆகா மரம்

#312
முன் பெரிய நல்வினை முட்டு இன்றி செய்யாதார்
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம்
முதல் இலார்க்கு ஊதியம் இல்

#313
தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றும் கண்ணோடுவர் மேன்மக்கள் தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும் சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு

#314
அடைய பயின்றவர் சொல் ஆற்றுவரா கேட்டல்
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய் அஃதால்
இடையன் எறிந்த மரம்

#315
ஊக்கி உழந்து ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை
நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல்
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழி தண் சேர்ப்ப
காக்கையை காப்பு இட்ட சோறு

#316
தொடுத்த பெரும் புலவன் சொல் குறை தீர
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான்
தொடுத்து இன்னர் என்னலோ வேண்டா கொடுப்பவர்
தாம் அறிவர் தம் சீர் அளவு

#317
வரை புரை வேழத்த வன் பகை என்று அஞ்சி
உரையுடை மன்னருள் புக்கு ஆங்கு அவையுள்
நிரை உரைத்து போகாது ஒன்று ஆற்ற துணிக
திரை அவித்து ஆடார் கடல்

#318
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப தாம் உடைய
மாற்றார் கொடுத்து இருப்ப வள்ளன்மை மாற்றாரை
மண் பற்றி கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்
பெண் பெற்றான் அஞ்சான் இழவு

#319
முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்

#320
காப்பு இறந்து ஓடி கழி பெரும் செல்வத்தை
கோ பரியான் கொள்ளின் கொடுத்து இராது என் செய்வர்
நீத்த பெரியார்க்கேஆயினும் ஈத்தவை
மேவின் பரிகாரம் இல்

#321
தன் தூக்கி தன் துணையும் தூக்கி பயன் தூக்கி
மற்று அது கொள்வ மதி வல்லார் அற்று அன்றி
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகிவிடும்

#322
எம் கண் அனையர் என கருதின் ஏதமால்
தம்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால்
வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்க அல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு

#323
செறிவு உடை தார் வேந்தன் செவ்வி மாறாமல்
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப வறிது உரைத்து
பிள்ளைகளை மருட்டும் தாயர் போல் அம்புலி மேல்
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது

#324
கொடையும் ஒழுக்கமும் கோள் உள் உணர்வும்
உடையர் எனப்பட்டு ஒழுகி பகைவர்
உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின் படை தகைமை நன்று

#325
முன்னை உடையது காவாது இகழ்ந்து இருந்து
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் இன் இயற்கை
பைத்து அகன்ற அல்குலாய் அஃதால் அ வெண்ணெய் மேல்
வைத்து மயில் கொள்ளுமாறு

#326
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளி கூறல்
மிளகு உளு உண்பான் புகல்

#327
உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி பயத்தான்
வினை முதிரின் செய்தான் மேல் ஏறும் பனை முதிரின்
தாய் தாள் மேல் வீழ்ந்துவிடும்

#328
நிலத்தின் மிகை ஆம் பெரும் செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரை சார்ந்து
நிலத்து நிலைகொள்ளா காலரே காணின்
உலக்கை மேல் காக்கை என்பார்

#329
அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி குடிகள் மேல்
கூட்டு இறப்ப கொண்டு தலையளிப்பின் அஃது அன்றோ
சூட்டு அறுத்து வாயில் இடல்

#330
தன்னின் வலியானை தான் உடையன் அல்லாக்கால்
என்ன குறையன் இளையரால் மன்னும்
புலியின் பெரும் திறலஆயினும் பூசை
எலி இல்வழி பெறா பால்

#331
கொடி திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல் என் உண்டாம் மாண் இழாய் கள்ளை
குடித்து குழைவாரோ இல்

#332
சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றி
கற்றொறும் கல்லாதேன் என்று வழி இரங்கி
உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல்
கற்றொறும் தான் கல்லாதவாறு

#333
பாற்பட்டு வாழ்வர்எனினும் குடிகள் மேல்
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே
கோல் தலையேஆயினும் கொண்டீக காணுங்கால்
பால் தலை பால் ஊறல் இல்

#334
விளக்கு விலை கொடுத்து கோடல் விளக்கு
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்கு
மருள் படுவதுஆயின் மலை நாட என்னை
பொருள் கொடுத்து கொள்ளார் இருள்

#335
பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி
யாவர்க்கேஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடா திண் அன்பினார்க்கேயும்
நோவ செயின் நோன்மை இல்

#336
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா இமையாரும்
அ காலத்து ஓம்பி அமிழ்து கோட்பட்டமையின்
நல் காப்பின் தீ சிறையே நன்று

#337
நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறர் உணரார் நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும்
அயிலாலே போழ்ப அயில்

#338
இரு கயல் உண்கண் இளையவளை வேந்தன்
தருக என்றால் தன் ஐயரும் நேரார் செரு அறைந்து
பாழி தோள் வட்டித்தார் காண்பாம் இனிது அல்லால்
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல்

#339
விழு தொடையர் ஆகி விளங்கி தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன்
நெய்த்தலை பால் உக்குவிடல்

#340
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை
தேரும் திறம் அரிதால் தேமொழீஇ ஆரும்
குல குல வண்ணத்தர் ஆகுப ஆங்கே
புல புல வண்ணத்த புள்

#341
தாமேயும் தம்மை புறந்தர ஆற்றாதார்
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள்
ஏமாரார் கோங்கு ஏறினார்

#342
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி
துறந்தார் தொடர்ப்பாடு கோடல் கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட அஃது அன்றோ
யானை போய் வால் போகாவாறு

#343
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர்
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும்
இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்
அழகொடு கண்ணின் இழவு

#344
இரப்பவர்க்கு ஈய குறைபடும் என்று எண்ணி
கரப்பவர் கண்டறியார்கொல்லோ பரப்பில்
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப
இறைத்தொறும் ஊறும் கிணறு

#345
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ
நிரை புறம் காத்த நெடியோனேஆயின்
உரைத்தால் உரை பெறுதல் உண்டு

#346
இம்மை தவமும் அறமும் என இரண்டும்
தம்மை உடையார் அவற்றை சலம் ஒழுகல்
இம்மை பழி ஏயும் அன்றி மறுமையும்
தம்மை தாம் ஆர்க்கும் கயிறு

#347
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப்படற்பாலான் முன்னி
மொழிந்தான் மொழி அறியான் கூறல் முழந்தாள்
கிழிந்தானை மூக்கு பொதிவு

#348
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு

#349
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை
காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு

#350
கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண்
சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று எல் அருவி
பாய் வரை நாட பரிசு அழிந்தாரொடு
தேவரும் மாற்றல் இலர்

#351
கூர் அறிவினார் வாய் குணம் உடை சொல் கொள்ளாது
கார் அறிவு கந்தா கடியன செய்வாரை
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ
ஊர் அறியா மூரியோ இல்

#352
ஒருவர் உரைப்ப உரைத்தால் அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற்பாலா
பெரு வரை நாட சிறிதேனும் இன்னாது
இருவர் உடன் ஆடல் நாய்

#353
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி
அயில் போலும் கண்ணாய் அடைந்தார் போல் காட்டி
மயில் போலும் கள்வர் உடைத்து

#354
நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்கு புக்கால்
மெலிந்து அவன் வீழாமை கண்டு மலிந்து அடைதல்
பூ பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்
ஏ பிழைத்து கா கொள்ளுமாறு

#355
பொருந்தா பழி என்னும் பொல்லா பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி மருந்தின்
தணியாது விட்டக்கால் தண் கடல் சேர்ப்ப
பிணி ஈடு அழித்துவிடும்

#356
பெரிய குடி பிறந்தாரும் தமக்கு
சிறியார் இனமா ஒழுகல் வெறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் அஃது அன்றோ
பூவொடு நார் இயைக்குமாறு

#357
செயல் வேண்டா நல்லவை செய்விக்கும் தீய
செயல் வேண்டி நிற்பின் விலக்கும் இகல் வேந்தன்
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்
முன் இன்னா மூத்தார் வாய் சொல்

#358
தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால்
என்ன படினும் அவர் செய்வ செய்வதே
இன் ஒலி வெற்ப இடர் என்னை துன்னூசி
போம் வழி போகும் இழை

#359
மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்று அவிந்தார் ஆகி நினைத்திருந்து
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல் எனின்
சென்று படுமாம் உயிர்

#360
பேதுறவு தீர பெருக்க தலையளித்து
ஆசு அறுவ செய்யாராய் ஆற்ற பெருகினும்
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார் குடி

#361
முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும்
தொல்லை அளித்தாரை கேட்டு அறிதும் சொல்லின்
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப
அறி மடமும் சான்றோர்க்கு அணி

#362
எனை பல் பிறப்பினும் ஈண்டி தாம் கொண்ட
வினை பயன் மெய் உறுதல் அஞ்சி எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
குழி புழி ஆற்றா குழிக்கு

#363
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு அது
கும்பியில் உந்தி சென்று எறிதலால் தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும்

#364
வழிப்பட்டவரை வலியரா செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் விழுத்தக்க
பை அரவு அல்குல் பணை தோளாய் பாத்து அறிவு என்
மெல்ல கவுள் கொண்ட நீர்

#365
பல் நாள் தொழில் செய்து உடைய கவர்ந்து உண்டார்
இன்னாத செய்யாமை வேண்டி இறைவர்க்கு
பொன் யாத்து கொண்டு புகுதல் குவளையை
தன் நாரால் யாத்துவிடல்

#366
பல் கிளையுள் பாத்துறான் ஆகி ஒருவனை
நல்குரவால் வேறாக நன்கு உணரான் சொல்லின்
உரையுள் வளவிய சொல் சொல்லாதது போல்
நிரை உள்ளே இன்னா வரைவு

#367
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்
நல்லேம் யாம் என்று ஒருவன் நன்கு மதித்தல் என்
சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்

#368
தமக்கு உற்றதே ஆக தம் அடைந்தார்க்கு உற்றது
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம்
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ம் குன்ற நாட
உமி குற்று கை வருந்துமாறு

#369
மாற்றத்தை மாற்றம் உடைத்தலான் மாற்றவர்க்கு
ஆற்றும் வகையான் அவர் களைய வேண்டுமே
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான் ஆற்றுவான்
நூற்றுவரை கொண்டுவிடும்

#370
இறப்ப சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும் நனி வெந்நீர்
இல்லம் சுடுகலாவாறு

#371
ஊழாயினாரை களைந்திட்டு உதவாத
கீழாயினாரை பெருக்குதல் யாழ் போலும்
தீம் சொல் மழலையாய் தேனார் பலா குறைத்து
காஞ்சிரை நட்டுவிடல்

#372
மடங்க பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கி பிறர் உடைமை மேவார் குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப
கடலொடு காட்டு ஒட்டல் இல்

#373
தெற்ற அறிவு உடையார்க்கு அல்லால் திறன் இல்லா
முற்றலை நாடி கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து கசடு அற்ற காலையும்
அற்றதன்பால் தேம்பல் நன்று

#374
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால்
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே
இல் சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாதே
பல் கட்டு அ பெண்டிர் மகார்

#375
நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின்
கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின்
பேர்த்து நாய் கவ்வினார் இல்

#376
எல்லா திறத்தும் இறப்ப பெரியாரை
கல்லா துணையார் கயப்பித்தல் சொல்லின்
நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு
மறைந்து யானை பாய்ச்சிவிடல்

#377
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடி கொண்டு
கடைப்பிடி இல்லார் பால் வைத்து கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டு திரியின் அது பெரிது
உக்கு ஓடி காட்டிவிடும்

#378
உருத்து எழு ஞாட்பினுள் ஒன்னார் தொலைய
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே
கருத்தினால் கூறை கொள்வார்

#379
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார் பொருளை
தொடரும் தம் பற்றினால் வைத்து இறப்பாரே
அடரும் பொழுதின்கண் இட்டு குடர் ஒழிய
மீ வேலி போக்குபவர்

#380
பல் ஆண்டும் ஈண்டி பழுதா கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே
வளம் நெடிது கொண்டது அறாஅது அறுமோ
குளம் நெடிது கொண்டது நீர்

#381
இரவலர் தம் வரிசை என்பார் மடவார்
கரவலராய் கை வண்மை பூண்ட புரவலர்
சீர் வரைய ஆகுமாம் செய்கை சிறந்து அனைத்தும்
நீர் வரையவாம் நீர் மலர்

#382
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும்
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய் அஃது அன்றோ
கல்லொடு கை எறியுமாறு

#383
சீர் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்
நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும்
இளைது என்று பாம்பு இகழ்வார் இல்

#384
இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின் எதிர் நிற்றல் ஏதம் அகல போய்
என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான்
முன்கை வளையும் தொடும்

#385
ஆறா சினத்தன் அறிவு இலன் மற்று அவனை
மாறி ஒழுகல் தலை என்ப ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப
தெளியானை தேறல் அரிது

#386
தீர்ந்தேம் என கருதி தேற்றாது ஒழுகி தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார்
பழமை கந்து ஆக பரியார் புதுமை
முழ நட்பின் சாண் உட்கு நன்று

#387
மறையாது இனிது உரைத்தல் மாண் பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்து கோடல் முறையால்
நடுவணா சென்று அவரை நன்கு எறிதல் அல்லால்
ஒடி எறிய தீரா பகை

#388
செய்த கொடுமை உடையான் அதன் பயம்
எய்த உரையான் இடரினால் எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவார்க்கு
பரிகாரம் யாது ஒன்றும் இல்

#389
மடியை வியங்கொள்ளின் மற்றை கருமம்
முடியாதவாறே முயலும் கொடி அன்னாய்
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்
மூரி எருத்தான் உழவு

#390
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்து களையின் முதிராது எதிர்த்து
நனி நிற்ப செய்தவர் நண்பு எலாம் தீர்க்க
தனி மரம் காடு ஆவது இல்

#391
வெண்குடை கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல் செய்வது என் பொங்கு
படு திரை சேர்ப்ப மற்று இல்லையே யானை
தொடு உண்ணின் மூடும் கலம்

#392
செல்லற்க சேர்ந்தார் புலம்புற செல்லாது
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும்
நாடுக தான் செய்த நுட்பத்தை கேளாதே
ஓடுக ஊர் ஓடுமாறு

#393
ஓத நீர் வேலி உலகத்தார் இ நெறி
காதலர் என்பது அறிந்து அல்லால் யாது ஒன்றும்
கானக நாட பயிலார் பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும்

#394
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும் தேயாது சொல்

#395
மெய் நீரர் ஆகி விரிய புகுவார்க்கும்
பொய் நீரர் ஆகி பொருளை முடிப்பார்க்கும்
எ நீரர்ஆயினும் ஆக அவரவர்
தம் நீரர் ஆதல் தலை

#396
தொடி முன்கை நல்லாய் அ தொக்க பொருளை
குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரை தண் சேர்ப்ப
மூரியை தீற்றிய புல்

#397
வேந்தன் மதித்து உணரப்பட்டாரை கொண்டு ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப ஆய்ந்த
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும்

#398
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று
பட்டு ஆர் அகல் அல்குலார் படர்ந்து ஒட்டி
தொடங்கினார் இல்லத்து அதன் பின் துறவா
உடம்பினால் என்ன பயன்

#399
பூத்தாலும் காயா மரம் உள மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர் பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு

#400
நாண் இன்றி ஆகாது பெண்மை நயவிய
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால்
கைத்து இன்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்து இன்றி சம்பிரதம் இல்

#401 மிகைப் பாடல்கள்
அருளுடைமை கொல்லாமை ஐந்தடக்கல் வாய்மை
இருள் அடையா கல்வியொடு ஈகை புரை இல்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாக பெற்றால்
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை

#402
அமைய பொருள் இல்லார் ஆற்றாதார் என்பது
இமையத்து அனையார்கண் இல்லை சிமைய
தகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட
நகையேதான் ஆற்றிவிடும்

#403
அறியாமையோடு இளமை ஆவதாம் ஆங்கே
செறிய பெறுவதாம் செல்வம் சிறிய
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய்
பறை பெற்றாள் ஆடாதோ பாய்ந்து

#404 தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி
பண்டை பழமொழி நானூறும் கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கு அடியும் செய்து அமைத்தான்
இன் துறை வெண்பா இவை
*