நான்மணிக்கடிகை

பாடல் எண் எல்லைகள்


#0 கடவுள் வாழ்த்து
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முது நீர் பழனத்து தாமரை தாளின்
புது மலர் ஒக்கும் நிறம்
படியை மடியகத்து இட்டான் அடியினான்
மு கால் கடந்தால் முழு நிலம் அ காலத்து
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான் சோவின்
அருமை அழித்த மகன்

#1
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும்
கொள்ளற்க கொள்ளார் கை மேற்பட உள் சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல்லவற்றை விரைந்து

#2
பறை பட வாழா அசுணமா உள்ளம்
குறை பட வாழார் உரவோர் நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா
சொல் பட்டால் சாவதாம் சால்பு

#3
மண்ணி அறிப மணி நலம் பண் அமைத்து
ஏறிய பின் அறிப மா நலம் மாசு அற
சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன்

#4
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் பெரும் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும் அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி

#5
கல்லில் பிறக்கும் கதிர் மணி காதலி
சொல்லில் பிறக்கும் உயர் மதம் மெல்லென்
அருளில் பிறக்கும் அற நெறி எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்

#6
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனை
கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல் புலை ஒக்கும்
போற்றாதார் முன்னர் செலவு

#7
கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண் பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அ பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்

#8
கற்றார் முன் தோன்றா கழிவு இரக்கம் காதலித்து ஒன்று
உற்றார் முன் தோன்றா உறா முதல் தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம்
வெகுண்டார் முன் தோன்றா கெடும்

#9
நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்
தான் செல் உலகத்து அறம்

#10
கந்தில் பிணிப்பர் களிற்றை கதம் தவிர
மந்திரத்தினால் பிணிப்பர் மா நாகம் கொந்தி
இரும்பின் பிணிப்பர் கயத்தை சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல்

#11
கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றா கொளல் வேண்டும் என்றும்
விடல் வேண்டும் தன்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கம் சிதைக்கும் வினை

#12
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எலாம் கொல் ஏறு
கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர்
தவத்தான் தருக்குவர் நோய்

#13
பறை நன்று பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று பீடு இலா மாந்தரின் பண் அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீ புகுதல் நன்று

#14
வள பாத்தியுள் வளரும் வண்மை கிளை குழாம்
இன் சொல் குழியுள் இனிது எழூஉம் வன் சொல்
கரவு எழூஉம் கண் இல் குழியுள் இரவு எழூஉம்
இன்மை குழியுள் விரைந்து

#15
இன்னாமை வேண்டின் இரவு எழுக இ நிலத்து
மன்னுதல் வேண்டின் இசை நடுக தன்னொடு
செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்

#16
கடல் குட்டம் போழ்வர் கலவர் படை குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோம் இல்
தவ குட்டம் தன்னுடையான் நீந்தும் அவை குட்டம்
கற்றான் கடந்துவிடும்

#17
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இள நலம் தூக்கு இல்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த்து உயிர்

#18
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல் சின செ வேல்
நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல்

#19
பெற்றான் அதிர்ப்பின் பிணை அன்னாள்தான் அதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருள் அதிர்க்கும் பற்றிய
மண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும் பண் அதிர்ப்பின்
பாடல் அதிர்ந்துவிடும்

#20
மனைக்கு பாழ் வாணுதல் இன்மை தான் செல்லும்
திசைக்கு பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்கு பாழ் மூத்தோரை இன்மை தனக்கு பாழ்
கற்று அறிவு இல்லா உடம்பு

#21
மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனை
பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த
கலம் சிதைக்கும் பாலின் சுவையை குலம் சிதைக்கும்
கூடார்கண் கூடிவிடின்

#22
புகழ் செய்யும் பொய்யா விளக்கம் இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை காணா
குருடரா செய்வது மம்மர் இருள் தீர்ந்த
கண்ணரா செய்வது கற்பு

#23
மலைப்பினும் வாரணம் தாங்கும் குழவி
அலைப்பினும் அன்னே என்று ஓடும் சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினை செய்யார் ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்

#24
நசை நலம் நட்டார்கண் நந்தும் சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும் விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும்

#25
அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கு ஒத்த
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய
கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை
நட்டார்கண் விட்ட வினை

#26
கோல் நோக்கி வாழும் குடி எல்லாம் தாய் முலை
பால் நோக்கி வாழும் குழவிகள் வான
துளி நோக்கி வாழும் உலகம் உலகின்
விளி நோக்கி இன்புறூஉம் கூற்று

#27
கற்ப கழி மடம் அஃகும் மடம் அஃக
புற்கம் தீர்ந்து இ உலகின் கோள் உணரும் கோள் உணர்ந்தால்
தத்துவம் ஆன நெறி படரும் அ நெறி
இப்பால் உலகின் இசை நிறீஇ உப்பால்
உயர்ந்த உலகம் புகும்

#28
குழித்துழி நிற்பது நீர் தன்னை பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் அழித்து
செறிவுழி நிற்பது காமம் தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு

#29
திருவின் திறல் உடையது இல்லை ஒருவற்கு
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை இலம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்

#30
புகை வித்தா பொங்கு அழல் தோன்றும் சிறந்த
நகை வித்தா தோன்றும் உவகை பகை ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும் முளைத்த பின்
இன்னா வித்து ஆகிவிடும்

#31
பிணி அன்னர் பின் நோக்கா பெண்டிர் உலகிற்கு
அணி அன்னர் அன்புடைய மாக்கள் பிணி பயிலும்
புல் அன்னர் புல்லறிவின் ஆடவர் கல் அன்னர்
வல்லென்ற நெஞ்சத்தவர்

#32
அந்தணரின் நல்ல பிறப்பு இல்லை என் செயினும்
தாயின் சிறந்த தமர் இல்லை யாதும்
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை எண்ணின்
இளமையோடு ஒப்பதூஉம் இல்

#33
இரும்பின் இரும்பு இடை போழ்ப பெரும் சிறப்பின்
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப தேரின்
அரிய அரியவற்றால் கொள்ப பெரிய
பெரியரான் எய்தப்படும்

#34
மற களி மன்னர் முன் தோன்றும் சிறந்த
அற களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்
விய களி நல்கூர்ந்தார் மேற்றாம் கய களி
ஊரில் பிளிற்றிவிடும்

#35
மையால் தளிர்க்கும் மலர் கண்கள் மால் இருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் பெய்யல்
முழங்க தளிர்க்கும் குருகு இலை நட்டார்
வழங்க தளிர்க்குமாம் மேல்

#36
நகை இனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகை இனிது தொட்டு வழங்கின் தகை உடைய
பெண் இனிது பேணி வழிபடின் பண் இனிது
பாடல் உணர்வாரகத்து

#37
கரப்பவர்க்கு செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும்
இரப்பவர்க்கு செல்சார் ஒன்று ஈவோர் பரப்பு அமைந்த
தானைக்கு செல்சார் தறுகண்மை ஊன் உண்டல்
செய்யாமை செல்சார் உயிர்க்கு

#38
கண்டதே செய்பவாம் கம்மியர் உண்டு என
கேட்டதே செய்ப புலன் ஆள்வார் வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் முனியாதார்
முன்னிய செய்யும் திரு

#39
திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற
மறைக்க மறையாதாம் காமம் முறையும்
இறை வகையான் நின்றுவிடும்

#40
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால்
நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும் நல்லாள்
உடம்படின் தானே பெருகும் கெடும் பொழுதில்
கண்டனவும் காணா கெடும்

#41
போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த
வேர் அறின் வாடும் மரம் எல்லாம் நீர் பாய்
மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின்
மன்னர் சீர் வாடிவிடும்

#42
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார் யார்க்கும்
காதலார் என்பார் தகவு உடையார் மேதக்க
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி தாய் என்பாள்
முந்து தான் செய்த வினை

#43
பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட
ஐவரால் தானே வினை கெடும் பொய்யா
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின்
நண்பினார் நண்பு கெடும்

#44
நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர் சென்ற
விருந்தும் விருப்பு இலார் முன் சாம் அரும் புணர்ப்பின்
பாடல் சாம் பண் அறியாதார் முன்னர் ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து

#45
நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய
மாற்றம் உரைக்கும் வினை நலம் தூக்கின்
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம்
முகம் போல முன் உரைப்பது இல்

#46
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்
தவம் இலார் இல்வழி இல்லை தவமும்
அரசு இலார் இல்வழி இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்

#47
போதினான் நந்தும் புனை தண் தார் மற்று அதன்
தாதினான் நந்தும் சுரும்பு எல்லாம் தீது இல்
வினையினான் நந்துவர் மக்களும் தத்தம்
நனையினான் நந்தும் நறா

#48
சிறந்தார்க்கு அரிய செறுதல் எஞ்ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல்
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று
இல் என்றல் யார்க்கும் அரிது

#49
இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
உரை சுடும் ஒண்மை இலாரை வரை கொள்ளா
முன்னை ஒருவன் வினை சுடும் வேந்தனையும்
தன் அடைந்த சேனை சுடும்

#50
எள்ளற்பொருளது இகழ்தல் ஒருவனை
உள்ளற்பொருளது உறுதி சொல் உள் அறிந்து
சேர்தற்பொருளது அற நெறி பல் நூலும்
தேர்தற்பொருள பொருள்

#51
யாறு உள் அடங்கும் குளம் உள வீறு சால்
மன்னர் விழையும் குடி உள தொல் மரபின்
வேதம் உறுவன பாட்டு உள வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள

#52
எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான்
ஒரு தொடையான் வெல்வது கோழி உருவோடு
அறிவு உடையாள் இல்வாழ்க்கை பெண் என்ப சேனை
செறிவு உடையான் சேனாபதி

#53
யானை உடையார் கதன் உவப்பர் மன்னர்
கடும் பரி மா காதலித்து ஊர்வர் கொடும் குழை
நல்லாரை நல்லவர் நாண் உவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு

#54
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை ஈன்றாளின்
என்ன கடவுளும் இல்

#55
கற்று அன்னர் கற்றாரை காதலர் கண்ணோடார்
செற்று அன்னர் செற்றாரை சேர்ந்தவர் தெற்றென
உற்றது உரையாதார் உள் கரந்து பாம்பு உறையும்
புற்று அன்னர் புல்லறிவினார்

#56
மாண்டவர் மாண்ட வினை பெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே யாண்டும்
பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்
துறப்பார் துறக்கத்தவர்

#57
என்றும் உளவாகும் நாளும் இரு சுடரும்
என்றும் பிணியும் தொழில் ஒக்கும் என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்

#58
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன்

#59
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான் மற்று அவன்
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல் பகை ஆகும்
பாடு அறியாதானை இரவு

#60
நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல் சேர்ந்து
வழுத்த வரம் கொடுப்பர் நாகர் தொழு திறந்து
கன்று ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி
நன்று ஊட்ட நந்தும் விருந்து

#61
பழி இன்மை மக்களால் காண்க ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக பொருளின்
நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக புகழ்ச்சியான்
போற்றாதார் போற்றப்படும்

#62
கண்ணுள்ளும் காண்புழி காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள

#63
திரி அழல் காணின் தொழுப விறகின்
எரி அழல் காணின் இகழ்ப ஒரு குடியில்
கல்லாது மூத்தானை கைவிட்டு கற்றான்
இளமை பாராட்டும் உலகு

#64
கைத்து உடையான் காமுற்றது உண்டாகும் வித்தின்
முளை குழாம் நீர் உண்டேல் உண்டாம் திரு குழாம்
ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்று அவள்
துன்புறுவாள்ஆகின் கெடும்

#65
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து
புல்லினான் இன்புறூஉம் காலேயம் நெல்லின்
அரிசியான் இன்புறூஉம் கீழ் எல்லாம் தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல்

#66
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவா இலார் செய்யும் வினை

#67
கைத்து இல்லார் நல்லவர் கைத்து உண்டாய் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் பைத்து எழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையாதவர்

#68
மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகல் நீர்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்பு
வானம் உரைத்துவிடும்

#69
பதி நன்று பல்லார் உறையின் ஒருவன்
மதி நன்று மாசு அற கற்பின் நுதி மருப்பின்
ஏற்றான் வீறு எய்தும் இன நிரை தான் கொடுக்கும்
சோற்றான் வீறு எய்தும் குடி

#70
ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய அறம் செயல் தோட்ட
குளத்து அனைய தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்து அனைய வாழ்வார் வழக்கு

#71
ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும்
நாழிகையானே நடந்தன தாழீயா
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெம் சொலால் இன்புறுவார்

#72
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால் முரியும் எல்லாம்
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய்
பொய்யா வித்து ஆகிவிடும்

#73
தேவர் அனையர் புலவரும் தேவர்
தமர் அனையர் ஓர் ஊர் உறைவார் தமருள்ளும்
பெற்று அன்னர் பேணி வழிபடுவார் கற்று அன்னர்
கற்றாரை காதலவர்

#74
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே மருத்துவன்
சொல் என்ற போழ்தே பிணி உரைக்கும் நல்லார்
விடுக என்ற போழ்தே விடுக உரியான்
தா எனின் தாயம் வகுத்து

#75
நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினான் காண்ப அணியவற்றை தொக்கு இருந்து
எண்ணினான் எண்ணப்படும்

#76
சாவாத இல்லை பிறந்த உயிர் எல்லாம்
தாவாத இல்லை வலிகளும் மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையில்
கேடு இன்றி சென்றாரும் இல்

#77
சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா

#78
நா அன்றோ நட்பு அறுக்கும் தேற்றம் இல் பேதை
விடும் அன்றோ வீங்க பிணிப்பின் அவாஅ
படும் அன்றோ பல் நூல் வலையில் கெடும் அன்றோ
மாறு உள் நிறுக்கும் துணிபு

#79
கொடுப்பின் அசனம் கொடுக்க விடுப்பின்
உயிர் இடையிட்ட விடுக்க எடுப்பின்
கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்துவிடல்

#80
நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம்
குலனும் குடிமையும் கல்லாமை கீழ் சாம்
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா
பண்டத்தின் கீழ் சாம் பகடு

#81
நல்லார்க்கு தம் ஊர் என்று ஊர் இல்லை நன்னெறி
செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா
கடைகட்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை தம் கைத்து
உடையார்க்கும் எ ஊரும் ஊர்

#82
கல்லா ஒருவர்க்கு தம் வாயில் சொல் கூற்றம்
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்

#83
நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம் கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும்

#84
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம் என்றும்
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் பிறன் ஆளும்
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல்
கேளிர் ஒரீஇவிடல்

#85
கள்ளாமை வேண்டும் கடிய வருதலான்
தள்ளாமை வேண்டும் தகுதி உடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை

#86
பெருக்குக நட்டாரை நன்றின்பால் உய்த்து
தருக்குக ஒட்டாரை காலம் அறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்து சினம்

#87
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரை நிற்பர் நல் பெண்டிர் நட்டு அமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு

#88
மறை அறிப அந்தண் புலவர் முறையொடு
வென்றி அறிப அரசர்கள் என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃது அன்றி
அணங்கல் வணங்கின்று பெண்

#89
பட்டாங்கே பட்டு ஒழுகும் பண்பு உடையாள் காப்பினும்
பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி முட்டினும்
சென்றாங்கே சென்று ஒழுகும் காமம் கரப்பினும்
கொன்றான்மேல் நிற்கும் கொலை

#90
வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார்
இன்கண் பெருகின் இனம் பெருகும் சீர் சான்ற
மென்கண் பெருகின் அறம் பெருகும் வன்கண்
கயம் பெருகின் பாவம் பெரிது

#91
இளமை பருவத்து கல்லாமை குற்றம்
வளம் இலா போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞர் இல் போழ்தில் சினம் குற்றம் குற்றம்
தமர் அல்லார் கையகத்து ஊண்

#92
எல்லா இடத்தும் கொலை தீது மக்களை
கல்லா வளரவிடல் தீது நல்லார்
நலம் தீது நாண் அற்று நிற்பின் குலம் தீது
கொள்கை அழிந்தக்கடை

#93
ஆசாரம் என்பது கல்வி அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல்

#94
கள்ளின் இடும்பை களி அறியும் நீர் இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பு இடும்பை
பல் பெண்டிராளன் அறியும் கரப்பு இடும்பை
கள்வன் அறிந்துவிடும்

#95
வடு சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் கற்றார் வாய்
சாயினும் தோன்றா கரப்பு சொல் தீய
பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல்
கீழ்கள் வாய் தோன்றிவிடும்

#96
வாலிழையார் முன்னர் வனப்பு இலான் பாடு இலன்
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன்
கற்றான் ஒருவனும் பாடு இலனே கல்லாதார்
பேதையார் முன்னர் படின்

#97
மாசு படினும் மணி தன் சீர் குன்றாதாம்
பூசி கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும்

#98
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண் ஒக்கும் போற்றார் உடனுறைவு பண்ணிய
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும்
பண்பு உடையாள் இல்லா மனை

#99
ஏரி சிறிதுஆயின் நீர் ஊரும் இல்லத்து
வாரி சிறிதுஆயின் பெண் ஊரும் மேலை
தவம் சிறிதுஆயின் வினை ஊரும் ஊரும்
உரன் சிறிதுஆயின் பகை

#100
அலைப்பான் பிறிது உயிரை ஆக்கலும் குற்றம்
விலைப்பாலின் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலும் குற்றமே ஆம்

#101
மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்
தமக்கு தகை சால் புதல்வர் மனக்கு இனிய
காதல் புலவர்க்கு கல்வியே கல்விக்கும்
ஓதின் புகழ் சால் உணர்வு

#102 மிகைப் பாடல்
முனியார் அரிய முயல்வார் அவரின்
முனியார் அறம் காமுறுவர் இனிய
இரங்கார் இசை வேண்டும் ஆடவர் அன்பிற்கு
உயங்கார் அறிவுடையார்

#103 கூடுதல் மிகைப் பாடல்கள்
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்

#104
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும் ஒருவன்
குணன் அடங்க குற்றம் உளானும் ஒருவன்
கணன் அடங்க கற்றானும் இல்

#105
இன் சொலான் ஆகும் கிழமை இனிப்பு இலா
வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின்
நாவினான் ஆகும் அருள் மனம் அ மனத்தான்
வீவு இலா வீடு ஆய்விடும்