நாலடியார்

அறத்துப்பால் (1 -13) பொருட்பால் (14 – 37) காமத்துப்பால் (38 – 40)
1. துறவற இயல் (1 – 7)

  1. செல்வம் நிலையாமை
  2. இளமை நிலையாமை
  3. யாக்கை நிலையாமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. தூய்தன்மை
  6. துறவு
  7. சினமின்மை

2. இல்லற இயல் (8 – 13)

  1. பொறையுடைமை
  2. பிறன்மனை நயவாமை
  3. ஈகை
  4. பழவினை
  5. மெய்ம்மை
  6. தீவினையச்சம்
1. அரசு இயல் (14 – 20)

  1. கல்வி
  2. குடிப்பிறப்பு
  3. மேன்மக்கள்
  4. பெரியாரைப் பிழையாமை
  5. நல்லினம் சேர்தல்
  6. பெருமை
  7. தாளாண்மை

2. நட்பு இயல் (21 – 24)

  1. சுற்றம் தழால்
  2. நட்பாராய்தல்
  3. நட்பிற் பிழைபொறுத்தல்
  4. கூடா நட்பு

3. இன்ப இயல் (25 – 27)

  1. அறிவுடைமை
  2. அறிவின்மை
  3. நன்னெறியில் செல்வம்
4. துன்ப இயல் (28 – 31)

  1. ஈயாமை
  2. இன்மை
  3. மானம்
  4. இரவச்சம்

5. பொது இயல் (32)

  1. அவையறிதல்

6. பகை இயல் (33 – 36)

  1. புல்லறிவாண்மை
  2. பேதைமை
  3. கீழ்மை
  4. கயமை

7. பல்நெறி இயல் (37)

  1. பல்நெறி
1. இன்ப துன்ப இயல் (38)

  1. பொதுமகளிர்

2. இன்ப இயல் (39 – 40)

  1. கற்புடை மகளிர்
  2. காம நுதலியல்

*&அறத்துப்பால்
@1 செல்வம் நிலையாமை

#1
அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட
மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய்
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று

#2
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க
அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்

#3
யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்
சேனை தலைவராய் சென்றோரும் ஏனை
வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள

#4
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன்
வந்தது வந்தது கூற்று

#5
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால்
பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே
கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம்
தொடுத்து ஆறு செல்லும் சுரம்

#6
இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்

#7
தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்

#8
செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில்
கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி
மருங்கு அற கெட்டுவிடும்

#9
உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்
துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அஆ
இழந்தான் என்று எண்ணப்படும்

#10
உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும்
கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅது
வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட
உய்த்து ஈட்டும் தேனீ கரி
@2 இளமை நிலையாமை

#1
நரை வரும் என்று எண்ணி நல் அறிவாளர்
குழவியிடத்தே துறந்தார் புரை தீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப்பார்

#2
நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்பு தளையும் அவிழ்ந்தன உள் காணாய்
வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே
ஆழ் கலத்து அன்ன கலுழ்

#3
சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய்
பல் கழன்று பண்டம் பழிகாறும் இற்செறிந்து
காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறி படரும் ஆறு

#4
தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா
வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும் தன் கை கோல்
அம்மனை கோல் ஆகிய ஞான்று

#5
எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு
தனக்கு தாய் நாடியே சென்றாள் தனக்கு தாய்
ஆகியவளும் அதுஆனால் தாய் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து இ உலகு

#6
வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி
முறி ஆர் நறும் கண்ணி முன்னர் தயங்க
மறி குளகு உண்டு அன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடையாளர்கண் இல்

#7
பனி படு சோலை பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று இளமை நனி பெரிதும்
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்
கோல் கண்ணள் ஆகும் குனிந்து

#8
பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை
இரு சிகையும் உண்டீரோ என்று வரிசையால்
உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கை கோள்
எண்ணார் அறிவுடையார்

#9
மற்று அறிவாம் நல் வினை யாம் இளையம் என்னாது
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின்
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு

#10
ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால்
தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி
பிள்ளையை தாய் அலற கோடலால் மற்று அதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று
@3 யாக்கை நிலையாமை

#1
மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை
துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால்
எஞ்சினார் இ உலகத்து இல்

#2
வாழ்நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம்
வீழ் நாள் படாஅது எழுதலால் வாழ்நாள்
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும்
நிலவார் நில மிசை மேல்

#3
மன்றம் கறங்க மண பறை ஆயின
அன்று அவர்க்கு ஆங்கே பிண பறை ஆய் பின்றை
ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்

#4
சென்றே எறிப ஒருகால் சிறு வரை
நின்றே எறிப பறையினை நன்றே காண்
மு காலை கொட்டினுள் மூடி தீ கொண்டு எழுவார்
செத்தாரை சாவார் சுமந்து

#5
கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார் கண்டும் மணம் கொண்டு ஈண்டு
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் சாற்றுமே
டொண் டொண் டொண் என்னும் பறை

#6
நார் தொடுத்து ஈர்க்கில் என் நன்று ஆய்ந்து அடக்கில் என்
பார்த்துழி பெய்யில் என் பல்லோர் பழிக்கில் என்
தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்

#7
படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்

#8
யாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க யாக்கை
மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே
நிலையாது நீத்துவிடும்

#9
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி
இன்னினியே செய்க அறவினை இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற
சென்றான் எனப்படுதலால்

#10
கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே
சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து
@4 அறன்வலியுறுத்தல்

#1
அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி
புக தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிக தாம் வருந்தி இருப்பரே மேலை
தவத்தால் தவம் செய்யாதார்

#2
ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வது உரை

#3
வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை நினைத்து அதனை
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்

#4
அரும் பெறல் யாக்கையை பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த
சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன்
கோது போல் போகும் உடம்பு

#5
கரும்பு ஆட்டி கட்டி சிறு காலை கொண்டார்
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்
வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவது இலர்

#6
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்

#7
மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால்
எ துணையும் ஆற்ற பலவானால் தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்
கிடந்து உண்ண பண்ணப்படும்

#8
உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி
இறப்ப நிழல் பயந்த ஆஅங்கு அற பயனும்
தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால்
வான் சிறிதா போர்த்துவிடும்

#9
வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார்
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்

#10
மான அரும் கலம் நீக்கி இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால்
ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்
@5 தூய்தன்மை

#1
மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர்
ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவது ஓர் கோல்

#2
தோல் போர்வை மேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும்
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை
பொய்ம் மறையா காமம் புகலாது மற்று அதனை
பைம் மறியா பார்க்கப்படும்

#3
தக்கோலம் தின்று தலை நிறைய பூ சூடி
பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் என பெரியோர்
கண்டு கைவிட்ட மயல்

#4
தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று
கண் இல் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டு அன்ன
கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்

#5
முல்லை முகை முறுவல் முத்து என்று இவை பிதற்றும்
கல்லா புன்மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காண புறம் காட்டு உதிர்த்து உக்க
பல் என்பு கண்டு ஒழுகுவேன்

#6
குடரும் கொழுவும் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே
வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள்
எ திறத்தாள் ஈர்ம் கோதையாள்

#7
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய் புலனும்
கோதி குழம்பு அலைக்கும் கும்பத்தை பேதை
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த
கரும் தோளால் கண் விளக்கப்பட்டு

#8
பண்டம் அறியார் படு சாந்தும் கோதையும்
கண்டு பாராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி
பெடை சேவல் வன் கழுகு பேர்த்து இட்டு குத்தல்
முடை சாகாடு அச்சு இற்றுழி

#9
கழிந்தார் இடு தலை கண்டார் நெஞ்சு உட்க
குழிந்து ஆழ்ந்த கண்ணவாய் தோன்றி ஒழிந்தாரை
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று
சாற்றும்கொல் சால சிரித்து

#10
உயிர் போயார் வெண் தலை உட்க சிரித்து
செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை செயிர் தீர்ந்தார்
கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர்
பண்டத்துள் வைப்பது இலர்
@6 துறவு

#1
விளக்கு புக இருள் மாய்ந்த ஆங்கு ஒருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய்
தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது

#2
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி
தலையாயர் தம் கருமம் செய்வார் தொலைவு இல்லா
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல்

#3
இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயர் தாம் உய்ய கொண்டு

#4
துன்பம் பல நாள் உழந்தும் ஒரு நாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம்
இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு
அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார்

#5
கொன்னே கழிந்த அன்று இளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ
நல் நெறி சேர நமக்கு

#6
மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் பூண்ட
மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே
கடி என்றார் கற்று அறிந்தார்

#7
ஊக்கி தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய
தாக்க அரும் துன்பங்கள்தாம் தலைவந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல் ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர்

#8
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி மற்று
எம்மை இகழ்ந்த வினை பயத்தான் உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்

#9
மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை கைவாய்
கலங்காமல் காத்து உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்

#10
துன்பமே மீதூர கண்டும் துறவு உள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம்
இசைதொறும் மற்று அதன் இன்னாமை நோக்கி
பசைதல் பரியாதாம் மேல்
@7 சினமின்மை

#1
மதித்து இறப்பாரும் இறக்க மதியார்
மிதித்து இறப்பாரும் இறக்க மிதித்து ஏறி
ஈயும் தலை மேல் இருத்தலால் அஃது அறிவார்
காயும் கதம் இன்மை நன்று

#2
தண்டா சிறப்பின் தம் இன் உயிரை தாங்காது
கண்டுழி எல்லாம் துறப்பவோ மண்டி
அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர்

#3
காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து

#4
நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் ஓர்த்து அதனை
உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர் கேட்ப
துள்ளி தூண் முட்டுமாம் கீழ்

#5
இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்
இல்லான் கொடையே கொடை பயன் எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை

#6
கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னா சொல்
எல்லாரும் காண பொறுத்து உய்ப்பர் ஒல்லை
இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு

#7
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை
பேர்த்து இன்னா செய்யாமை நன்று

#8
நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றி பரக்கும் அடும் காலை
நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்

#9
உபகாரம் செய்து அதனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்ற செயினும் உபகாரம்
தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடி பிறந்தார்க்கு இல்

#10
கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு
@8 பொறையுடைமை

#1
கோதை அருவி குளிர் வரை நல் நாட
பேதையோடு யாதும் உரையற்க பேதை
உரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்
வழுக்கி கழிதலே நன்று

#2
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
தாரித்திருத்தல் தகுதி மற்று ஓரும்
புகழ்மையா கொள்ளாது பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையா கொண்டுவிடும்

#3
காதலார் சொல்லும் கடும் சொல் உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப
ஆவது அறிவார் பெறின்

#4
அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்ப செய்து பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பு உடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது

#5
வேற்றுமை இன்றி கலந்து இருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றும் துணையும் பொறுக்க பொறான்ஆயின்
தூற்றாதே தூர விடல்

#6
இன்னா செயினும் இனிய ஒழிக என்று
தன்னையா தான் நோவின் அல்லது துன்னி
கலந்தாரை கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது

#7
பெரியார் பெரு நட்பு கோடல் தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ அரியரோ
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட
நல்ல செய்வார்க்கு தமர்

#8
வற்றி மற்று ஆற்ற பசிப்பினும் பண்பு இலார்க்கு
அற்றம் அறிய உரையற்க அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மை
துறக்கும் துணிவு இலாதார்

#9
இன்பம் பயந்த ஆங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கு அருவி நாட
பழி ஆகா ஆறே தலை

#10
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடை மிடைந்த சொல்
@9 பிறன்மனை நயவாமை

#1
அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்
நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம்
நம்பற்க நாண் உடையார்

#2
அறம் புகழ் கேண்மை பெருமை இ நான்கும்
பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம்
நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று
அச்சத்தோடு இ நால் பொருள்

#3
புக்க இடத்து அச்சம் போதரும் போது அச்சம்
துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமை காப்பு அச்சம்
எ காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன் இல் புகல்

#4
காணின் குடி பழி ஆம் கையுறின் கால் குறையும்
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய
துன்பம் பயக்குமால் துச்சாரி நீ கண்ட
இன்பம் எனக்கு எனைத்தால் கூறு

#5
செம்மை ஒன்று இன்றி சிறியார் இனத்தர் ஆய்
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ உம்மை
வலியால் பிறர் மனை மேல் சென்றாரே இம்மை
அலி ஆகி ஆடி உண்பார்

#6
பல்லார் அறிய பறை அறைந்து நாள் கேட்டு
கல்யாணம் செய்து கடி புக்க மெல் இயல்
காதல் மனையாளும் இல்லாளா என் ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு

#7
அம்பல் அயல் எடுப்ப அஞ்சி தமர் பரீஇ
வம்பலம் பெண் மரீஇ மைந்துற்று நம்பும்
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின்
தலை நக்கி அன்னது உடைத்து

#8
பரவா வெளிப்படா பல்லோர்கண் தங்கா
உரவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே
விரவாருள் நாணுப்படல் அஞ்சி யாதும்
உரையாது உள் ஆறிவிடும்

#9
அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும்
வெம்பி சுடினும் புறம் சுடும் வெம்பி
கவற்றி மனத்தை சுடுதலால் காமம்
அவற்றினும் அஞ்சப்படும்

#10
ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும் நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும்
@10 ஈகை

#1
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ள இடம் போல் பெரிது உவந்து மெல்ல
கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டை கதவு

#2
முன்னரே சாம் நாள் முனி தக்க மூப்பு உள
பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும்
கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து

#3
நடுக்குற்று தன் சேர்ந்தார் துன்பம் உடையார்
கொடுத்து தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
மிடுக்கு உற்று பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினை உலந்தக்கால்

#4
இம்மி அரிசி துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்து உண்மின் நும்மை
கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து
அடாஅ அடுப்பினவர்

#5
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் வறுமையால்
ஈதல் இசையாதுஎனினும் இரவாமை
ஈதல் இரட்டி உறும்

#6
நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படு பனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்
குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றை பனை

#7
பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும் உலகம்
செயற்பால செய்யாவிடினும் கயல் புலால்
புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப
என்னை உலகு உய்யும் ஆறு

#8
ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது
ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் ஆற்றின்
மலி கடல் தண் சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல்
பொலி கடன் என்னும் பெயர்த்து

#9
இறப்ப சிறிது என்னாது இல் எனாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க முறை புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞை போல்
பைய நிறைத்துவிடும்

#10
கடிப்பு இகு கண் முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல்
@11 பழவினை

#1
பல் ஆவுள் உய்த்துவிடினும் குழ கன்று
வல்லது ஆம் தாய் நாடி கோடலை தொல்லை
பழவினையும் அன்ன தகைத்தே தன் செய்த
கிழவனை நாடி கொளற்கு

#2
உருவும் இளமையும் ஒண் பொருளும் உட்கும்
ஒரு வழி நில்லாமை கண்டும் ஒரு வழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்று வீழ் தக்கது உடைத்து

#3
வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை
அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களம் கனியை
கார் என செய்தாரும் இல்

#4
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பால் அனையவும் அன்ன ஆம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனை
சிறப்பின் தணிப்பாரும் இல்

#5
தினை துணையர் ஆகி தம் தேசு உள் அடக்கி
பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர்
நினைப்ப கிடந்தது எவன் உண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற

#6
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வது அறிதிரேல் கல்லாதார்
சேதனம் என்னும் அ சேறு அகத்து இன்மையால்
கோது என்று கொள்ளாதாம் கூற்று

#7
இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ
அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப
முன்னை வினை ஆய்விடும்

#8
அறியாரும் அல்லர் அறிவது அறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல் வளி ஓடி
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப
செய்த வினையான் வரும்

#9
ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும்
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால
தீண்டாவிடுதல் அரிது

#10
சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா
உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும்
சிறு காலை பட்ட பொறியும் அதனால்
இறு காலத்து என்னை பரிவு
@12 மெய்ம்மை

#1
இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும்
வசை அன்று வையகத்து இயற்கை நசை அழுங்க
நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து

#2
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை
எக்காலும் குன்றல் இலராவர் அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு

#3
கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ம் குன்ற நாட
தொடர்பு உடையேம் என்பார் சிலர்

#4
வடு இலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இரு தலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலை பெய்து
அடுவது போலும் துயர்

#5
நல் ஆவின் கன்றுஆயின் நாகும் விலை பெறூஉம்
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும்
புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்

#6
இடம் பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் தடம் கண்ணாய்
உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும்
கைப்பு அறா பேய் சுரையின் காய்

#7
தம்மை இகழ்வாரை தாம் அவரின் முன் இகழ்க
என்னை அவரொடு பட்டது புன்னை
விறல் பூம் கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும்

#8
ஆ வேறு உருவினஆயினும் ஆ பயந்த
பால் வேறு உருவின அல்லவாம் பால் போல்
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல்
உருவு பல கொளல் ஈங்கு

#9
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார் யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர்
கடைபோக செல்வம் உய்த்தார்

#10
தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று
யாங்கணும் தேரின் பிறிது இல்லை ஆங்கு தாம்
போற்றி புனைந்த உடம்பும் பயன் இன்றே
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது
@13 தீவினையச்சம்

#1
துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம் கெட்ட
புல்லறிவாளர் வயிறு

#2
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும்
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும்
கூட்டுள் ஆய் கொண்டு வைப்பார்

#3
அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகி
துக்க தொழுநோய் எழுபவே அ கால்
அலவனை காதலித்து கால் முரித்து தின்ற
பழவினை வந்து அடைந்தக்கால்

#4
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம்
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப
கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி
கடு வினையர் ஆகியார் சார்ந்து

#5
பெரியவர் கேண்மை பிறை போல நாளும்
வரிசை வரிசையா நந்தும் வரிசையால்
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு

#6
சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள்
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன்
பாம்பு கண்டு அன்னது உடைத்து

#7
யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை
தேரும் துணைமை உடையவர் சாரல்
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள்
மனம் வேறு செய்கையும் வேறு

#8
உள்ளத்தால் நள்ளாது உறுதி தொழிலர் ஆய்
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை தெள்ளி
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட
மனத்துக்கண் மாசு ஆய்விடும்

#9
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு

#10
மனை பாசம் கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும்
சிறு வரையேஆயினும் செய்த நன்று அல்லால்
உறு பயனோ இல்லை உயிர்க்கு
*&பொருட்பால்
@14 கல்வி

#1
குஞ்சி அழகும் கொடும் தானை கோட்டு அழகும்
மஞ்சள் அழகும் அழகு அல்ல நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

#2
இம்மை பயக்குமால் ஈய குறைவு இன்றால்
தம்மை விளக்குமால் தாம் உளரா கேடு இன்றால்
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து

#3
களர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமிதா கொள்வர்
கடை நிலத்தோர்ஆயினும் கற்று உணர்ந்தோரை
தலை நிலத்து வைக்கப்படும்

#4
வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன
விச்சை மற்று அல்ல பிற

#5
கல்வி கரை இல கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து

#6
தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணின் கடைப்பட்டார் என்று இகழார் காணாய்
அவன் துணையா ஆறு போய் அற்றே நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்

#7
தவல் அரும் தொல் கேள்வி தன்மை உடையார்
இகல் இலர் எஃகு உடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதுஆயின் காண்பாம் அகல் வானத்து
உம்பர் உறைவார் பதி

#8
கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி
தூரின் தின்று அன்ன தகத்துஅரோ பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு

#9
கல்லாரேஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின்
நல் அறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்
ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்கு தான் பயந்து ஆங்கு

#10
அலகு சால் கற்பின் அறிவன் நூல் கல்லாது
உலக நூல் ஓதுவது எல்லாம் கலகல
கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்
@15 குடிப்பிறப்பு

#1
உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்
குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்
இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா
கொடி புல் கடிக்குமோ மற்று

#2
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும்
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும்
மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம்
எய்தியக்கண்ணும் பிறர்க்கு

#3
இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலொடு இன்ன குடி பிறந்தார்
குன்றா ஒழுக்கமா கொண்டார் கயவரொடு
ஒன்றா உணரற்பாற்று அன்று

#4
நல்லவை செய்யின் இயல்பு ஆகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழி ஆகும் எல்லாம்
உணரும் குடி பிறப்பின் ஊதியம் என்னோ
புணரும் ஒருவர்க்கு எனின்

#5
கல்லாமை அச்சம் கயவர் தொழில் அச்சம்
சொல்லாமையுள்ளும் ஒரு சோர்வு அச்சம் எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் மரத்தார் இ
மாணா குடி பிறந்தார்

#6
இன நன்மை இன் சொல் ஒன்று ஈதல் மற்று ஏனை
மன நன்மை என்று இவை எல்லாம் கன மணி
முத்தொடு இமைக்கும் முழங்கு உவரி தண் சேர்ப்ப
இல் பிறந்தோர்கண்ணே உள

#7
செய்கை அழிந்து சிதல் மண்டிற்றுஆயினும்
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும்
எவ்வம் உழந்தக்கடைத்தும் குடி பிறந்தார்
செய்வர் செயற்பாலவை

#8
ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல்
செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடி பிறந்தார்

#9
செல்லா இடத்தும் குடி பிறந்தார் செய்வன
செல் இடத்தும் செய்யார் சிறியவர் புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய் பரிமா போல்
பொரு முரண் ஆற்றுதல் இன்று

#10
எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடி பிறந்தார்
அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர்
அற்ற கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால்
தெற்றென தெள் நீர் படும்
@16 மேன்மக்கள்

#1
அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள்
மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசு உறின்

#2
இசையும் எனினும் இசையாது எனினும்
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின்
நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ
அரிமா பிழைப்ப எய்த கோல்

#3
நரம்பு எழுந்து நல்கூர்ந்தார்ஆயினும் சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் உரம் கவறா
உள்ளம் எனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பாலவை

#4
செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர்
தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர்
நல் வரை நாட சில நாள் அடிப்படின்
கல் வரையும் உண்டாம் நெறி

#5
புல்லா எழுத்தின் பொருள் இல் வறும் கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி
நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன்
பல்லாருள் நாணல் பரிந்து

#6
கடித்து கரும்பினை கண் தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்
வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர்
கூறார் தம் வாயின் சிதைந்து

#7
கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ
எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் தள்ளியும்
வாயின் பொய் கூறார் வடு அறு காட்சியார்
சாயின் பரிவது இலர்

#8
பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய
புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும்
அறம் கூற வேண்டா அவற்கு

#9
பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்று இகழ்ப என்னானும்
வேண்டினும் நன்று மற்று என்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு

#10
உடையார் இவர் என்று ஒருதலையா பற்றி
கடையாயார் பின் சென்று வாழ்வர் உடைய
பிலம் தலைப்பட்டது போலாதே நல்ல
குலம் தலைப்பட்ட இடத்து
@17 பெரியாரைப் பிழையாமை

#1
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்த பின்
ஆர்க்கும் அருவு அணி மலை நாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது

#2
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை
கொன்னே தலைக்கூட பெற்றிருந்தும் அன்னோ
பயன் இல் பொழுதா கழிப்பரே நல்ல
நயம் இல் அறிவினவர்

#3
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகை மக்களால் மதிக்கற்பால நயம் உணரா
கை அறியா மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்
வையார் வடித்த நூலார்

#4
விரி நிற நாகம் விடர் உளதேனும்
உருமின் கடும் சினம் சேண் நிற்கும் உட்கும்
அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்
பெருமை உடையார் செறின்

#5
எம்மை அறிந்திலிர் எம் போல்வார் இல் என்று
தம்மை தாம் கொள்வது கோள் அன்று தம்மை
அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்
பெரியரா கொள்வது கோள்

#6
நளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை விளிவு இன்றி
அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே
தொல் புகழாளர் தொடர்பு

#7
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா துன்னி
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு

#8
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும்
பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய
உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி உறும்

#9
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும் ஒல்வ
கொடாஅது ஒழிந்த பகலும் உரைப்பின்
படாஅ ஆம் பண்பு உடையார்கண்

#10
பெரியார் பெருமை சிறு தகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்
@18 நல்லினம் சேர்தல்

#1
அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த
நல் சார்வு சார கெடுமே வெயில் முறுக
புல் பனி பற்று விட்ட ஆங்கு

#2
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம்
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார் வாய் சொல்

#3
அடைந்தார் பிரிவும் அரும் பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் தொடங்கி
பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை
உற புணர்க அம்மா என் நெஞ்சு

#4
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் பிறப்பினுள்
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பு ஆற்றி நட்க பெறின்

#5
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும்
குல மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர்
நல மாட்சி நல்லாரை சார்ந்து

#6
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய
அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மையர்ஆயினும் சீர் பெறுவர்
குன்று அன்னார் கேண்மை கொளின்

#7
பாலொடு அளாய நீர் பால் போல் ஆகும் அல்லது
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல
பெரியார் பெருமையை சார்ந்து

#8
கொல்லை இரும் புனத்து குற்றி அடைந்த புல்
ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு
மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல்
செல்லாவாம் செற்றார் சினம்

#9
நில நலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம்
குல நலத்தால் ஆகுவர் சான்றோர் கல நலத்தை
தீ வளி சென்று சிதைத்த ஆங்கு சான்றாண்மை
தீ இனம் சேர கெடும்

#10
மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர் புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறி புனம் தீ பட்டக்கால்
@19 பெருமை

#1
ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்
காதலவரும் கருத்து அல்லர் காதலித்து
ஆதும் நாம் என்னும் அவாவினை கைவிட்டு
போவதே போலும் பொருள்

#2
இ சார்வின் ஏமாந்தோம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணி
பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் அ சார்வு
நின்றன போன்று நிலையா என உணர்ந்தார்
என்றும் பரிவது இலர்

#3
மறுமைக்கு வித்து மயல் இன்றி செய்து
சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம் காரணம்
இன்றி பலவும் உள

#4
உறைப்பு அரும் காலத்தும் ஊற்று நீர் கேணி
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும்
சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையார்
ஆஅயக்கண்ணும் அரிது

#5
உறு புனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும்
கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம்
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி
செய்வர் செயற்பாலவை

#6
பெரு வரை நாட பெரியார்கண் தீமை
கரு நரை மேல் சூடே போல் தோன்றும் கரு நரையை
கொன்று அன்ன இன்னா செயினும் சிறியார் மேல்
ஒன்றானும் தோன்றா கெடும்

#7
இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண்
பசைந்த துணையும் பரிவு ஆம் அசைந்த
நகையேயும் வேண்டாத நல் அறிவினார்கண்
பகையேயும் பாடு பெறும்

#8
மெல்லிய நல்லாருள் மென்மை அது இறந்து
ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம்
சலவருள் சால சலமே நலவருள்
நன்மை வரம்பாய் விடல்

#9
கடுக்கி ஒருவன் கடும் குறளை பேசி
மயக்கிவிடினும் மன பிரிப்பு ஒன்று இன்றி
துளக்கம் இலாதவர் தூய மனத்தார்
விளக்கினுள் ஒண் சுடரே போன்று

#10
முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து
பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று
மு குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள் நீக்கிவிடும்
@20 தாளாண்மை

#1
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல்
கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப
வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு

#2
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம்
காழ் கொண்டகண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வு இன்றி தன்னை செயின்

#3
உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள்
சிறு தேரை பற்றியும் தின்னும் அறிவினால்
கால் தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்

#4
இசையாதுஎனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால்
கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று

#5
நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை தொல் சிறப்பின்
ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை
என்று இவற்றால் ஆகும் குலம்

#6
ஆற்றும் துணையும் அறிவினை உள் அடக்கி
ஊற்றம் உடையார் உணர்வு உடையார் ஊற்றம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின் கீழ் பட்டது உலகு

#7
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற
புதல்வன் மறைப்ப கெடும்

#8
ஈனமாய் இல் இருந்து இன்றி விளியினும்
மானம் தலைவருவ செய்பவோ யானை
வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள்
அரிமா மதுகையவர்

#9
தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி
தேம் கமழ் நாற்றம் இழந்த ஆங்கு ஓங்கும்
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக்கடை

#10
பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
கருனை சோறு ஆர்வர் கயவர் கருனையை
பேரும் அறியார் நனி விரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்து ஆய்விடும்
@21 சுற்றம் தழால்

#1
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகன் கண்டு தாய் மறந்த ஆஅங்கு
அசாஅ தான் உற்ற வருத்தம் உசாஅ தன்
கேளிரை காண கெடும்

#2
அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல்
பல்லார் பயன் துய்ப்ப தான் வருந்தி வாழ்வதே
நல் ஆண்மகற்கு கடன்

#3
அடுக்கல் மலை நாட தன் சேர்ந்தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர் அடுத்து அடுத்து
வன் காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன் காய் பொறுக்கலா கொம்பு

#4
உலகு அறிய தீர கலப்பினும் நில்லா
சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல்
ஒற்கம் இலாளர் தொடர்பு

#5
இன்னர் இனையர் எமர் பிறர் என்னும் சொல்
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும்
தலைமக்கள் ஆகற்பாலார்

#6
பொன் கலத்து பெய்த புலி உகிர் வான் புழுக்கல்
அக்காரம் பாலொடு அமரார் கைத்து உண்டலின்
உப்பு இலி புற்கை உயிர் போல் கிளைஞர்மாட்டு
எ கலத்தானும் இனிது

#7
நாள் வாய் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெம் கருனை வேம்பு ஆகும் கேளாய்
அபரான போழ்தின் அடகு இடுவரேனும்
தமர் ஆயார்மாட்டே இனிது

#8
முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டி உண்பாரும் குறடு போல் கைவிடுவர்
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படுவார்

#9
நறு மலர் தண் கோதாய் நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வது ஒன்று உண்டோ இறும் அளவும்
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரொடு
துன்புறுவ துன்புறாக்கால்

#10
விருப்பு இலார் இல்லத்து வேறு இருந்து உண்ணும்
வெருக்கு கண் வெம் கருனை வேம்பு ஆம் விருப்புடை
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர் தண் புற்கை
என்பொடு இயைந்த அமிழ்து
@22 நட்பாராய்தல்

#1
கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்தின் கரும்பு தின்று அற்றே குருத்திற்கு
எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு

#2
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர்
நல் புடை கொண்டமை அல்லது பொன் கேழ்
புனல் ஒழுக புள் இரியும் பூம் குன்ற நாட
மனம் அறியப்பட்டது ஒன்று அன்று

#3
யானை அனையவர் நண்பு ஒரீஇ நாய் அனையார்
கேண்மை கெழீஇ கொளல் வேண்டும் யானை
அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்த வேல்
மெய்யதா வால் குழைக்கும் நாய்

#4
பல நாளும் பக்கத்தார்ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும்
நீத்தார் என கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு

#5
கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி தோட்ட
கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல்

#6
கடையாயார் நட்பில் கமுகு அனையர் ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்
எண்ண அரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே
தொன்மை உடையார் தொடர்பு

#7
கழுநீருள் கார் அடகேனும் ஒருவன்
விழுமிதா கொள்ளின் அமிழ்து ஆம் விழுமிய
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார்
கைத்து உண்டல் காஞ்சிரம் காய்

#8
நாய் கால் சிறு விரல் போல் நன்கு அணியர்ஆயினும்
ஈ கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு

#9
தெளிவு இலார் நட்பின் பகை நன்று சாதல்
விளியா அரு நோயின் நன்றால் அளிய
இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று

#10
மரீஇ பலரொடு பல் நாள் முயங்கி
பொரீஇ பொருள் தக்கார் கோடலே வேண்டும்
பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇ பின்னை பிரிவு
@23 நட்பிற் பிழைபொறுத்தல்

#1
நல்லார் என தாம் நனி விரும்பி கொண்டோரை
அல்லார் எனினும் அடக்கி கொளல்வேண்டும்
நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டு
புல் இதழ் பூவிற்கும் உண்டு

#2
செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர் நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே
தாம் வேண்டி கொண்டார் தொடர்பு

#3
இறப்பவே தீய செயினும் தன் நட்டார்
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ நிற கோங்கு
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட
ஒருவர் பொறை இருவர் நட்பு

#4
மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம்
கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப
விடுதற்கு அரியார் இயல்பு இலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ

#5
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரை
பொன்னாக போற்றி கொளல்வேண்டும் பொன்னோடு
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம்
இல்லத்தில் ஆக்குதலால்

#6
இன்னா செயினும் விடுதற்கு அரியாரை
துன்னா துறத்தல் தகுவதோ துன்ன அரும் சீர்
விண் குத்தும் நீள் வரை வெற்ப களைபவோ
கண் குத்திற்று என்று தம் கை

#7
இலங்கு நீர் தண் சேர்ப்ப இன்னா செயினும்
கலந்து பழி காணார் சான்றோர் கலந்த பின்
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார்
தாமும் அவரின் கடை

#8
ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும்
நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல்
கழுமியார் செய்த கறங்கு அருவி நாட
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று

#9
தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர்தம்மை
தமர் அன்மை தாம் அறிந்தார்ஆயின் அவரை
தமரினும் நன்கு மதித்து தமர் அன்மை
தம்முள் அடக்கிக்கொளல்

#10
குற்றமும் ஏனை குணமும் ஒருவனை
நட்ட பின் நாடி திரிவேனேல் நட்டான்
மறை காவா விட்டவன் செல்வுழி செல்க
அறை கடல் சூழ் வையம் நக
@24 கூடா நட்பு

#1
செறிப்பு இல் பழம் கூரை சேறு அணை ஆக
இறைத்தும் நீர் ஏற்றும் கிடப்பர் கறை குன்றம்
பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட
தம் கருமம் முற்றும் துணை

#2
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய்
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி
வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு

#3
நுண் உணர்வினாரொடு கூடி நுகர்வு உடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்
புணர்தல் நிரயத்துள் ஒன்று

#4
பெருகுவது போல தோன்றி வை தீ போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் அருகு எல்லாம்
சந்தன நீள் சோலை சாரல் மலை நாட
பந்தம் இலாளர் தொடர்பு

#5
செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனை
செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அ நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்

#6
ஒரு நீர் பிறந்து ஒருங்கு நீண்டக்கடைத்தும்
விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்
கருமங்கள் வேறுபடும்

#7
முற்றல் சிறு மந்தி முற்பட்ட தந்தையை
நெற்று கண்டு அன்ன விரலால் ஞெமிர்த்திட்டு
குற்றி பறிக்கும் மலை நாட இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு

#8
முட்டு உற்ற போழ்தில் முடுகி என் ஆர் உயிரை
நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் நட்டான்
கடி மனை சுட்டு அழித்தான் செல்வுழி செல்க
நெடுமொழி வையம் நக

#9
ஆன் படு நெய் பெய் கலனுள் அது களைந்து
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு
நல் வரை நாட நயம் உணர்வார் நண்பு ஒரீஇ
புல்லறிவினாரோடு நட்பு

#10
உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை
பருகற்கு அமைந்தபால் நீர் அளாய் அற்றே
தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம்
விரி பெடையோடு ஆடி விட்டு அற்று
@25 அறிவுடைமை

#1
பகைவர் பணிவு இடம் நோக்கி தகவு உடையார்
தாமேயும் நாணி தலைச்செல்லார் காணாய்
இளம் பிறை ஆயக்கால் திங்களை சேராது
அணங்கு அரும் துப்பின் அரா

#2
நளி கடல் தண் சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் பணிவு இல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்

#3
எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை வட திசையும்
கொன்னாளர் சால பலர்

#4
வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன்
தீம் சுவை யாதும் திரியாதாம் ஆங்கே
இனம் தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை
மனம் தீது ஆம் பக்கம் அரிது

#5
கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும் மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்து அனையர் அல்லர் எறி கடல் தண் சேர்ப்ப
மனத்து அனையர் மக்கள் என்பார்

#6
பராஅரை புன்னை படு கடல் தண் சேர்ப்ப
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல
மரூஉ செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்
விராஅஅய் செய்யாமை நன்று

#7
உணர உணரும் உணர்வு உடையாரை
புணர புணருமாம் இன்பம் புணரின்
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை
பிரிய பிரியுமாம் நோய்

#8
நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலை கலக்கி கீழ் இடுவானும் நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னை
தலையாக செய்வானும் தான்

#9
கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை உடையாரும் சேறல் அரு மரபின்
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப
பேதைமை அன்று அது அறிவு

#10
கருமமும் உள்படா போகமும் துவ்வா
தருமமும் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப
பட்டினம் பெற்ற கலம்
@26 அறிவின்மை

#1
நுண் உணர்வு இன்மை வறுமை அஃது உடைமை
பண்ண பணைத்த பெரும் செல்வம் எண்ணுங்கால்
பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ
கண் அவா தக்க கலம்

#2
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் பாடு அழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் தொல் சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து

#3
கல் என்று தந்தை கழற அதனை ஓர்
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல
எழுத்து ஓலை பல்லார் முன் நீட்ட விளியா
வழு கோலை கொண்டுவிடும்

#4
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறிவாளரிடை புக்கு மெல்ல
இருப்பினும் நாய் இருந்து அற்றே இராஅது
உரைப்பினும் நாய் குரைத்து அற்று

#5
புல்லா புன்கோட்டி புலவரிடை புக்கு
கல்லாத சொல்லும் கடை எல்லாம் கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள் மேல்
படாஅ விடுபாக்கு அறிந்து

#6
கற்று அறிந்த நாவினார் சொல்லார் தம் சோர்வு அஞ்சி
மற்றையர் ஆவார் பகர்வர் பனையின் மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சை ஓலைக்கு இல்லை ஒலி

#7
பன்றி கூழ் பத்தரில் தே மா வடித்து அற்றால்
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால்
குன்றின் மேல் கொட்டும் தறி போல் தலை தகர்ந்து
சென்று இசையா ஆகும் செவிக்கு

#8
பாலால் கழீஇ பல நாள் உணக்கினும்
வாலி தாம் பக்கம் இருந்தைக்கு இருந்து அன்று
கோலால் கடாஅய் குறினும் புகல் ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு

#9
பொழிந்து இனிது நாறினும் பூ மிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈ போல் இழிந்தவை
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய்
தேன் கலந்த தேற்ற சொல் தேர்வு

#10
கற்றார் உரைக்கும் கசடு அறு நுண் கேள்வி
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர்
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்
@27 நன்னெறியில் செல்வம்

#1
அருகலது ஆகி பல பழுத்தக்கண்ணும்
பொரி தாள் விளவினை வாவல் குறுகா
பெரிது அணியர்ஆயினும் பீடு இலார் செல்வம்
கருதும் கடப்பாட்டது அன்று

#2
அள்ளிக்கொள்வு அன்ன குறு முகிழஆயினும்
கள்ளி மேல் கை நீட்டார் சூடும் பூ அன்மையால்
செல்வம் பெரிது உடையர்ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார்

#3
மல்கு திரைய கடல் கோட்டு இருப்பினும்
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர்
செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும்
நல்குவார்கட்டே நசை

#4
புணர் கடல் சூழ் வையத்து புண்ணியமோ வேறே
உணர்வது உடையார் இருப்ப உணர்வு இலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே
பட்டும் துகிலும் உடுத்து

#5
நல்லார் நயவர் இருப்ப நயம் இலா
கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் தொல்லை
வினை பயன் அல்லது வேல் நெடும் கண்ணாய்
நினைப்ப வருவது ஒன்று இல்

#6
நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய்
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து

#7
நயவார்கண் நல்குரவு நாண் இன்றுகொல்லோ
பயவார்கண் செல்வம் பரம்ப பயின்கொல்
வியவாய் காண் வேல் கண்ணாய் இ இரண்டும் ஆங்கே
நயவாது நிற்கும் நிலை

#8
வலவைகள் அல்லாதார் கால் ஆறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் வலவைகள்
கால் ஆறும் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேல் ஆறு பாய விருந்து

#9
பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட
மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும்
வெண்மை உடையார் விழு செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன நகைத்து

#10
ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயார் எனின்
@28 ஈயாமை

#1
நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு
அடைத்தவாம் ஆண்டை கதவு

#2
எத்துணையானும் இயைந்த அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர் மற்றை
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார்
அழிந்தார் பழி கடலத்துள்

#3
துய்த்து கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான்
வைத்து கழியும் மடவோனை வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்

#4
கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தால் பெற்ற பெரும் செல்வம் இல்லத்து
உரு உடை கன்னியரை போல பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்படும்

#5
எறி நீர் பெரும் கடல் எய்தி இருந்தும்
அறு நீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை

#6
எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை
எனது எனது என்று இருப்பன் யானும் தனதுஆயின்
தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான்
யானும் அதனை அது

#7
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் உழந்து அதனை
காப்பு உய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார் தம் கை நோவ
யாப்பு உய்ந்தார் உய்ந்த பல

#8
தனது ஆக தான் கெட்டான் தாயத்தவரும்
தமது ஆய போழ்தே கொடாஅர் தனது ஆக
முன்னே கொடுப்பின் அவர் கடியார் தான் கடியான்
பின்னை அவர் கொடுக்கும் போழ்து

#9
இரவலர் கன்று ஆக ஈவார் ஆ ஆக
விரகின் சுரப்பதாம் வண்மை விரகு இன்றி
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து
கொல்ல சுரப்பதாம் கீழ்

#10
ஈட்டலும் துன்பம் மற்று ஈட்டிய ஒண் பொருளை
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் காத்த
குறை படின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு
உறை பதி மற்றை பொருள்
@29 இன்மை

#1
அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும்
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்
ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை

#2
நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும்
யாரும் அறிவர் பகை நுட்பம் தேரின்
நிரப்பு இடும்பையாளன் புகுமே புகையும்
புகற்கு அரிய பூழை நுழைந்து

#3
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம் பொறி வண்டு இனம் கொல்லை
கலாஅல் கிளி கடியும் கானக நாட
இலாஅர்க்கு இல்லை தமர்

#4
உண்டாய போழ்தின் உடைந்துழி காகம் போல்
தொண்டு ஆயிரவர் தொகுபவே வண்டாய்
திரிதரும் காலத்து தீது இலிரோ என்பர்
ஒருவரும் இ உலகத்து இல்

#5
பிறந்த குலம் மாயும் பேர் ஆண்மை மாயும்
சிறந்த தம் கல்வியும் மாயும் கறங்கு அருவி
கல் மேல் கழூஉம் கண மலை நல் நாட
இன்மை தழுவப்பட்டார்க்கு

#6
உள் கூர் பசியால் உழை நசைஇ சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் உள்ளூர்
இருந்து உயிர் கொன்னே கழியாது தான் போய்
விருந்தினன் ஆதலே நன்று

#7
நீர்மையே அன்றி நிரம்ப எழுந்த தம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும்
அல்லல் அடையப்பட்டார்

#8
இட்டு ஆற்றுப்பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டு ஆற்றுப்பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும்
கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று

#9
கடகம் செறிந்த தம் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண்டு அட்டு குடை கலனா
உப்பு இலி வெந்தை தின்று உள் அற்று வாழ்பவே
துப்புரவு சென்று உழந்தக்கால்

#10
ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டு இனம்
பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் நீர்த்து அருவி
தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட
வாழாதார்க்கு இல்லை தமர்
@30 மானம்

#1
திரு மதுகை ஆக திறன் இலார் செய்யும்
பெருமிதம் கண்ட கடைத்தும் எரி மண்டி
கானம் தலைப்பட்ட தீ போல் கனலுமே
மானம் உடையார் மனம்

#2
என்பாய் உகினும் இயல்பு இலார் பின் சென்று
தம் பாடு உரைப்பரோ தம் உடையார் தம் பாடு
உரையாமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாம் உற்ற நோய்

#3
யாம்ஆயின் எம் இல்லம் காட்டுதும் தாம்ஆயின்
காணவே கற்பு அழியும் என்பார் போல் நாணி
புறம் கடை வைத்து ஈவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு

#4
இம்மையும் நன்று ஆம் இயல் நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தலால் செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய் நன்றே காண்
மானம் உடையார் மதிப்பு

#5
பாவமும் ஏனை பழியும் பட வருவ
சாயினும் சான்றவர் செய்கலார் சாதல்
ஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவை போல்
அரு நவை ஆற்றுதல் இன்று

#6
மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக்கண்ணும் பெரு முத்தரையரே
செல்வரை சென்று இரவாதார்

#7
கடை எலாம் காய் பசி அஞ்சும் மற்று ஏனை
இடை எலாம் இன்னாமை அஞ்சும் புடை உலாம்
வில் புருவ வேல் நெடும் கண்ணாய் தலை எலாம்
சொல் பழி அஞ்சிவிடும்

#8
நல்லர் பெரிது அளியர் நல்கூர்ந்தார் என்று எள்ளி
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன்
உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ
தலையாய சான்றோர் மனம்

#9
நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று நாள் நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண் அன்றாம் எச்சத்தின்
மெல்லியர் ஆகி தம் மேலாயர் செய்தது
சொல்லாது இருப்பது நாண்

#10
கடமா தொலைச்சிய கான் உறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும் இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்
@31 இரவச்சம்

#1
நம்மாலே ஆவர் இ நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மால் ஆம் ஆக்கம் இலர் என்று தம்மை
மருண்ட மனத்தார் பின் செல்பவோ தாமும்
தெருண்ட அறிவினவர்

#2
இழி தக்க செய்து ஒருவன் ஆர உணலின்
பழி தக்க செய்யான் பசித்தல் தவறோ
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்து பிறக்கும் பிறப்பு

#3
இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர்
செல்லாரும் அல்லர் சிறு நெறி புல்லா
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்

#4
திரு தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று
எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல்

#5
கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும்
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு

#6
இன்னா இயைக இனிய ஒழிக என்று
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு
ஏதிலவரை இரவு

#7
என்றும் புதியார் பிறப்பினும் இ உலகத்து
என்றும் அவனே பிறக்கலான் குன்றின்
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்

#8
புறத்து தன் இன்மை நலிய அகத்து தன்
நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அ நிலையே
மாயானோ மாற்றிவிடின்

#9
ஒருவர் ஒருவரை சார்ந்து ஒழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுதல் அல்லால் பரிசு அழிந்து
செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே
பைய தாம் செல்லும் நெறி

#10
பழமை கந்து ஆக பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க கிழமை
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து
அறாஅர் சுடுவது ஓர் தீ
@32 அவையறிதல்

#1
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர்
அஞ்ஞானம் தந்திட்டு அது ஆங்கு அற துழாய்
கை ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
சொல் ஞானம் சோர விடல்

#2
நா பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும்
தீ புலவர் சேரார் செறிவுடையார் தீ புலவன்
கோட்டியுள் குன்ற குடி பழிக்கும் அல்லாக்கால்
தோள் புடைக்கொள்ளா எழும்

#3
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர்
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார் சுற்ற
செல உரைக்கும் ஆறு அறியார் தோற்பது அறியார்
பல உரைக்கும் மாந்தர் பலர்

#4
கற்றதூஉம் இன்றி கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை
நல்லாரிடை புக்கு நாணாது சொல்லி தன்
புல்லறிவு காட்டிவிடும்

#5
வென்றி பொருட்டால் விலங்கு ஒத்து மெய் கொள்ளார்
கன்றி கறுத்து எழுந்து காய்வாரோடு ஒன்றி
உரை வித்தகம் எழுவார் காண்பவே கையுள்
சுரை வித்து போலும் தம் பல்

#6
பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்று அவரை
ஈன்றாட்கு இறப்ப பரிந்து

#7
பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிபட்டு
கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம்
முறி புரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும்
அறிதற்கு அரிய பொருள்

#8
புத்தகமே சால தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் மற்று அவற்றை
போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு

#9
பொழிப்பு அகலம் நுட்பம் நூல் எச்சம் இ நான்கின்
கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் பழிப்பு இல்
நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட
உரை ஆமோ நூலிற்கு நன்கு

#10
இல் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும்
சொல் பிறரை காக்கும் கருவியரோ இல் பிறந்த
நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார்
புல்லறிவு தாம் அறிவது இல்
@33 புல்லறிவாண்மை

#1
அருளின் அறம் உரைக்கும் அன்பு உடையார் வாய் சொல்
பொருள் ஆக கொள்வர் புலவர் பொருள் அல்லா
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால் கூழை
மூழை சுவை உணராத ஆங்கு

#2
அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார்
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்
செவ்வி கொளல் தேற்றாத ஆங்கு

#3
இமைக்கும் அளவில் தம் இன் உயிர் போம் ஆற்றை
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும் தினை துணையும்
நன்றி புரிகல்லா நாண் இல் மட மாக்கள்
பொன்றில் என் பொன்றாக்கால் என்

#4
உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்
பலர் மன்னும் தூற்றும் பழியால் பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவன் ஒருவன்
தண்டி தனி பகை கோள்

#5
எய்தி இருந்த அவை முன்னர் சென்று எள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான்
விய தக்கான் வாழும் எனின்

#6
மூப்பு மேல் வாராமை முன்னே அற வினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி
புறத்து இரு போகு என்னும் இன்னா சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப்படும்

#7
தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்று ஆற்றார்
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளை
போக்குவார் புல்லறிவினார்

#8
சிறுகாலையே தமக்கு செல்வுழி வல்சி
இறுகிறுக தோட்கோப்பு கொள்ளார் இறுகிறுகி
பின் அறிவாம் என்று இருக்கும் பேதையார் கை காட்டும்
பொன்னும் புளி விளங்காய் ஆம்

#9
வெறுமை இடத்தும் விழு பிணி போழ்தும்
மறுமை மனத்தாரே ஆகி மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்து
சிந்தியார் சிற்றறிவினார்

#10
என்னே மற்று இ உடம்பு பெற்றும் அறம் நினையார்
கொன்னே கழிப்பர் தம் வாழ்நாளை அன்னோ
அளவு இறந்த காதல் தம் ஆர் உயிர் அன்னார்
கொள இழைக்கும் கூற்றமும் கண்டு
@34 பேதைமை

#1
கொலைஞர் உலை ஏற்றி தீ மடுப்ப ஆமை
நிலை அறியாது அ நீர் படிந்து ஆடிய அற்றே
கொலை வல் கொடும் கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை
வலையகத்து செம்மாப்பார் மாண்பு

#2
பெரும் கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன்
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால்
இல் செய் குறைவினை நீக்கி அற வினை
மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு

#3
குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும்
விலங்காமல் எய்தியக்கண்ணும் நலம் சான்ற
மை அறு தொல் சீர் உலகம் அறியாமை
நெய் இலா பால் சோற்றின் நேர்

#4
கல் நனி நல்ல கடை ஆய மாக்களின்
சொல் நனி தாம் உணராஆயினும் இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்று
உற்றவர்க்கு தாம் உதவலான்

#5
பெறுவது ஒன்று இன்றியும் பெற்றானே போல
கறுவு கொண்டு ஏலாதார்மாட்டும் கறுவினால்
கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நா தின்னும் நல்ல சுனைத்து

#6
தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை
நல் தளிர் புன்னை மலரும் கடல் சேர்ப்ப
கல் கிள்ளி கை இழந்து அற்று

#7
ஆகாதுஎனினும் அகத்து நெய் உண்டாகின்
போகாது எறும்பு புறம் சுற்றும் யாதும்
கொடாஅர்எனினும் உடையாரை பற்றி
விடாஅர் உலகத்தவர்

#8
நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார்
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார் எல்லாம்
இனியார் தோள் சேரார் இசை பட வாழார்
முனியார்கொல் தாம் வாழும் நாள்

#9
விழைந்து ஒருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை தழங்குரல்
பாய் திரை சூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய் நலம் இல்லாதார்மாட்டு

#10
கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும்
பக்கத்தார் பாராட்ட பாடு எய்தும் தான் உரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தன் என்று எள்ளப்படும்
@35 கீழ்மை

#1
கப்பி கடவதா காலை தன் வாய் பெயினும்
குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க
கனம் பொதித்த நூல் விரித்து காட்டினும் கீழ் தன்
மனம் புரிந்தவாறே மிகும்

#2
காழ் ஆய கொண்டு கசடு அற்றார்தம் சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் கீழ்தான்
உறங்குவாம் என்று எழுந்து போமாம் அஃது அன்றி
மறங்குமாம் மற்று ஒன்று உரைத்து

#3
பெரு நடை தாம் பெறினும் பெற்றி பிழையாது
ஒரு நடையர் ஆகுவர் சான்றோர் பெரு நடை
பெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாட
வற்று ஆம் ஒரு நடை கீழ்

#4
தினை அனைத்தேஆயினும் செய்த நன்று உண்டால்
பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர் பனை அனைத்து
என்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட
நன்று இல நன்று அறியார்மாட்டு

#5
பொன் கலத்து ஊட்டி புறந்தரினும் நாய் பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும் அ சீர்
பெருமை உடைத்தா கொளினும் கீழ் செய்யும்
கருமங்கள் வேறுபடும்

#6
சக்கர செல்வம் பெறினும் விழுமியோர்
எ காலும் சொல்லார் மிகுதி சொல் எ காலும்
முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனா எண்ணிவிடும்

#7
மை தீர் பசும் பொன் மேல் மாண்ட மணி அழுத்தி
செய்தது எனினும் செருப்பு தன் காற்கே ஆம்
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை
செய் தொழிலால் காணப்படும்

#8
கடுக்கென சொல்வற்று ஆம் கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்து அடுத்து
வேகம் உடைத்து ஆம் விறல் மலை நல் நாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்

#9
பழையர் இவர் என்று பல் நாள் பின் நிற்பின்
உழை இனியர் ஆகுவர் சான்றோர் விழையாதே
கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப
எள்ளுவர் கீழாயவர்

#10
கொய் புல் கொடுத்து குறைத்து என்றும் தீற்றினும்
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள்
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை
செய்தொழிலால் காணப்படும்
@36 கயமை

#1
ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையர்ஆயினும்
காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல்
போத்து அறார் புல் அறிவினார்

#2
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை வழும்பு இல் சீர்
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது

#3
கண மலை நல் நாட கண் இன்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் குணன் அழுங்க
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா

#4
கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போல செயல் தேற்றார் கூடி
புதுப்பெருக்கம் போல தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றையவர்

#5
தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா
உளி நீரர் மாதோ கயவர் அளி நீரார்க்கு
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார் பெறின்

#6
மலை நலம் உள்ளும் குறவன் பயந்த
விளை நிலம் உள்ளும் உழவன் சிறந்து ஒருவர்
செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை
வைததை உள்ளிவிடும்

#7
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு
எழுநூறு நன்றி செய்து ஒன்று தீதுஆயின்
எழுநூறும் தீதாய்விடும்

#8
ஏட்டை பருவத்தும் இல் பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழு மக்கள் கோட்டை
வயிரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி
செயிர் வேழம் ஆகுதல் இன்று

#9
இன்று ஆதும் இ நிலையே ஆதும் இனி சிறிது
நின்று ஆதும் என்று நினைத்திருந்து ஒன்றி
உரையின் மகிழ்ந்து தம் உள்ளம் வேறு ஆகி
மரை இலையின் மாய்ந்தார் பலர்

#10
நீருள் பிறந்து நிறம் பசியதுஆயினும்
ஈரம் கிடையகத்து இல் ஆகும் ஓரும்
நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும்
அறை பெரும் கல் அன்னார் உடைத்து
@37 பல்நெறி

#1
மழை திளைக்கும் மாடம் ஆய் மாண்பு அமைந்த காப்பு ஆய்
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம் விழை தக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியது ஓர் காடு

#2
வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய் கிடந்தும்
இழுக்கினை தாம் பெறுவர்ஆயின் இழுக்கு எனைத்தும்
செய்குறா பாணி சிறிதே அ சில் மொழியார்
கை உறா பாணி பெரிது

#3
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை
அட்டில் புகாதாள் அரும் பிணி அட்டதனை
உண்டி உதவாதாள் இல் வாழ் பேய் இ மூவர்
கொண்டானை கொல்லும் படை

#4
கடி என கேட்டும் கடியான் வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர்
இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல் என்பவே
கல் கொண்டு எறியும் தவறு

#5
தலையே தவம் முயன்று வாழ்தல் ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் கடையே
புணராது என்று எண்ணி பொருள் நசையால் தம்மை
உணரார் பின் சென்று நிலை

#6
கல்லா கழிப்பர் தலையாயார் நல்லவை
துவ்வா கழிப்பர் இடைகள் கடைகள்
இனிது உண்ணேம் ஆர பெறேம் யாம் என்னும்
முனிவினால் கண்பாடு இலர்

#7
செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அ
செந்நெல்லே ஆகி விளைதலால் அ நெல்
வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர
மகன் அறிவு தந்தை அறிவு

#8
உடை பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு
புடை பெண்டிர் மக்களும் கீழும் பெருகி
கடைக்கால் தலைக்கண்ணது ஆகி குடை கால் போல்
கீழ் மேலாய் நிற்கும் உலகு

#9
இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அ நோய்
தணியாத உள்ளம் உடையார் மணி வரன்றி
வீழும் அருவி விறல் மலை நல் நாட
வாழ்வின் வரை பாய்தல் நன்று

#10
புது புனலும் பூம் குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பு அற நாடின் வேறு அல்ல புது புனலும்
மாரி அறவே அறுமே அவர் அன்பும்
வாரி அறவே அறும்
@38 பொதுமகளிர்

#1
விளக்கு ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கு அற நாடின் வேறு அல்ல விளக்கு ஒளியும்
நெய் அற்றகண்ணே அறுமே அவர் அன்பும்
கை அற்றகண்ணே அறும்

#2
அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள் நம்மொடு
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின்
மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே
கால் கால்நோய் காட்டி கலுழ்ந்து

#3
அம் கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை
கொடுப்பது ஒன்று இல்லாரை கொய் தளிர் அன்னார்
விடுப்பர் தம் கையால் தொழுது

#4
ஆணம் இல் நெஞ்சத்து அணி நீல கண்ணோர்க்கு
காணம் இல்லாதார் கடு அனையர் காணவே
செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு

#5
பாம்பிற்கு ஒரு தலை காட்டி ஒரு தலை
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர்
விலங்கு அன்ன வெள்ளறிவினார்

#6
பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மை பிரியலம் என்று உரைத்த
பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே
நிற்றியோ போதியோ நீ

#7
ஆமா போல் நக்கி அவர் கை பொருள் கொண்டு
சேமா போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமது என்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை

#8
ஏமாந்த போழ்தின் இனியார் போன்று இன்னாராய்
தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின்
தம் நெறி பெண்டிர் தட முலை சேராரே
செம் நெறி சேர்தும் என்பார்

#9
ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி
எமர் என்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமர் அல்லர் தம் உடம்பினார்

#10
உள்ளம் ஒருவன் உடையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி
அறித இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பினவர்
@39 கற்புடை மகளிர்

#1
அரும் பெறல் கற்பின் அயிராணி அன்ன
பெரும் பெயர் பெண்டிர் எனினும் விரும்பி
பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்
நறு நுதலாள் நன்மை துணை

#2
குட நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும்
கடன் நீர்மை கையாறா கொள்ளும் மட மொழி
மாதர் மனை மாட்சியாள்

#3
நால் ஆறும் ஆறாய் நனி சிறிதாய் எ புறனும்
மேல் ஆறு மேல் உறை சோரினும் மேலாய
வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின்
இல்லாள் அமைந்ததே இல்

#4
கட்கு இனியாள் காதலன் காதல் வகை புனைவாள்
உட்கு உடையாள் ஊராண் இயல்பினாள் உட்கி
இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும்
மட மொழி மாதராள் பெண்

#5
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும்
அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால்
பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார்

#6
உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால்
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ
நாண் உடையாள் பெற்ற நலம்

#7
கரும் கொள்ளும் செம் கொள்ளும் தூணி பதக்கு என்று
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா
நல் நுதலார் தோய்ந்த வரை மார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்

#8
கொடியவை கூறாதி பாண நீ கூறின்
அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின்
இட கண் அனையம் யாம் ஊரற்கு அதனால்
வல கண் அனையார்க்கு உரை

#9
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது
ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க
தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம்
நோக்கி இருந்தேனும் யான்

#10
அரும்பு அவிழ் தாரினாள் எம் அருளும் என்று
பெரும் பொய் உரையாதி பாண கரும்பின்
கடை கண் அனையம் யாம் ஊரற்கு அதனால்
இடை கண் அனையார்க்கு உரை
*&காமத்துப்பால்
@40 காம நுதலியல்

#1
முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம்
நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப
புல்லா புலப்பது ஓர் ஆறு

#2
தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம்
விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு இம் என
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம்
நெய்தல் அறைந்து அன்ன நீர்த்து

#3
கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள்
கை மாலை இட்டு கலுழ்ந்தாள் துணை இல்லார்க்கு
இ மாலை என் செய்வது என்று

#4
செல் சுடர் நோக்கி சிதர் அரி கண் கொண்ட நீர்
மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின்
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன்
தோள் வைத்து அணை மேல் கிடந்து

#5
கண் கயல் என்னும் கயத்தினால் காதலி
பின் சென்றது அம்ம சிறு சிரல் பின் சென்றும்
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம்
கோட்டிய வில் வாக்கு அறிந்து

#6
அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு அன்னோ
பரல் கானம் ஆற்றினகொல்லோ அரக்கு ஆர்ந்த
பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று
அஞ்சி பின் வாங்கும் அடி

#7
ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர்
மாலை பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வன முலை மேல்
கோலம் செய் சாந்தம் திமிர்ந்து

#8
கடக்க அரும் கானத்து காளை பின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அ நிலையே
கற்றான் அஃது ஊருமாறு

#9
முலைக்கண்ணும் முத்தும் முழு மெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் கலை கணம்
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என்
பூம் பாவை செய்த குறி

#10
கண் மூன்று உடையானும் காக்கையும் பை அரவும்
என் ஈன்ற யாயும் பிழைத்தது என் பொன் ஈன்ற
கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின்
பாங்கனார் சென்ற நெறி
*