கார் நாற்பது

பாடல் எண் எல்லைகள்



#1
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார் போல்
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து

#2
கடும் கதிர் நல்கூர கார் செல்வம் எய்த
நெடும் காடு நேர் சினை ஈன கொடுங்குழாய்
இன்னே வருவர் நமர் என்று எழில் வானம்
மின்னும் அவர் தூது உரைத்து

#3
வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள
உரும் இடி வானம் இழிய எழுமே
நெருநல் ஒருத்தி திறத்து

#4
ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள
காடும் கடுக்கை கவின் பெற பூத்தன
பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து

#5
இகழுநர் சொல் அஞ்சி சென்றார் வருதல்
பகழி போல் உண்கண்ணாய் பொய் அன்மை ஈண்டை
பவழம் சிதறியவை போல கோபம்
தவழும் தகைய புறவு

#6
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி
வடு இடை போழ்ந்து அகன்ற கண்ணாய் வருந்தல்
கடிது இடி வானம் உரறும் நெடு இடை
சென்றாரை நீடல்மின் என்று

#7
நச்சியார்க்கு ஈதலும் நண்ணார் தெறுதலும்
தற்செய்வான் சென்றார் தரூஉம் தளரியலாய்
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வி தீ போல
எ சாரும் மின்னும் மழை

#8
மண் இயல் ஞாலத்து மன்னும் புகழ் வேண்டி
பெண் இயல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு

#9
கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று
எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை
முன்கை இறப்ப துறந்தார் வரல் கூறும்
இன் சொல் பலவும் உரைத்து

#10
வான் ஏறு வானத்து உரற வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி
மேனி தளிர்ப்ப வரும்

#11
புணர்தரு செல்வம் தருபாக்கு சென்றார்
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல்
பூம் குலை ஈன்ற புறவு

#12
மை எழில் உண் கண் மயில் அன்ன சாயலாய்
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்
நெய் அணி குஞ்சரம் போல இரும் கொண்மூ
வைகலும் ஏரும் வலம்

#13
ஏந்து எழில் அல்குலாய் ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல் தாழ வேந்தர்
களிறு எறி வாள் அரவம் போல கண் வெளவி
ஒளிறுபு மின்னும் மழை

#14
செல்வம் தரல் வேண்டி சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை இலங்கு எயிறு ஈன நறும் தண் கார்
மெல்ல இனிய நகும்

#15
திருந்திழாய் காதலர் தீர்குவர் அல்லர்
குருந்தின் குவி இணர் உள் உறை ஆக
திருந்து இன் இளி வண்டு பாட இரும் தும்பி
இன் குழல் ஊதும் பொழுது

#16
கரும் குயில் கையற மா மயில் ஆல
பெரும் கலி வானம் உரறும் பெருந்தோள்
செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி
பயலை பழங்கண் கொள

#17
அறை கல் இறுவரை மேல் பாம்பு சவட்டி
பறை குரல் ஏறொடு பெளவம் பருகி
உறைத்து இருள் கூர்ந்தன்று வானம் பிறை தகை
கொண்டன்று பேதை நுதல்

#18
கல் பயில் கானம் கடந்தார் வர ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப
செல்வர் மனம் போல் கவின் ஈன்ற நல்கூர்ந்தார்
மேனி போல் புல்லென்ற காடு

#19
நாஞ்சில் வலவன் நிறம் போல பூம் சினை
செம் கால் மராஅம் தகைந்தன பைம் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி
நெடு இடை சென்றது என் நெஞ்சு

#20
வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன
ஆறும் பதம் இனிய ஆயின ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க செரு மன்னர்
சேனை போல் செல்லும் மழை

#21
பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லை போது எல்லாம் செவ்வி நறு நுதல்
செல்வ மழை தடம் கண் சில் மொழி பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப வடிந்து

#22
இளையரும் ஈர்ம் கட்டு அயர உளை அணிந்து
புல் உண் கலி மாவும் பூட்டிய நல்லார்
இள நலம் போல கவினி வளம் உடையார்
ஆக்கம் போல் பூத்தன காடு

#23
கண் திரள் முத்தம் கடுப்ப புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள புயல் கான்று
கொண்டு எழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ
ஒண்டொடி ஊடும் நிலை

#24
எல்லா வினையும் கிடப்ப எழு நெஞ்சே
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்
பல் இரும் கூந்தல் பனி நோனாள் கார் வானம்
எல்லியும் தோன்றும் பெயல்

#25
கரும் கால் வரகின் பொரி போல் அரும்பு அவிழ்ந்து
ஈர்ம் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன
சேர்ந்தன செய் குறி வாரார் அவர் என்று
கூர்ந்த பசலை அவட்கு

#26
நலம் மிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி
புலம் எலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை

#27
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க
குருகிலை பூத்தன கானம் பிரிவு எண்ணி
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட
பள்ளியுள் பாயும் பசப்பு

#28
இமிழ் இசை வானம் முழங்க குமிழின் பூ
பொன் செய் குழையின் துணர் தூங்க தண் பதம்
செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர்
கவ்வை அழுங்க செலற்கு

#29
பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன தங்கா
தகை வண்டு பாண் முரலும் கானம் பகை கொண்டல்
எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம்
செவ்வி உடைய சுரம்

#30
வரை மல்க வானம் சிறப்ப உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற
ஊதை உளரும் நறும் தண் கா பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து

#31
கார் சேண் இகந்த கரை மருங்கின் நீர் சேர்ந்து
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி
திருநுதற்கு யாம் செய் குறி

#32
கடாஅவுக பாக தேர் கார் ஓட கண்டே
கெடாஅ புகழ் வேட்கை செல்வர் மனம் போல்
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும் கானம்
பிடாஅ பெருந்தகை நற்கு

#33
கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி
குடமலை ஆகத்து கொள் அப்பு இறைக்கும்
இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை
மடமொழி எவ்வம் கெட

#34
விரி திரை வெள்ளம் வெறுப்ப பருகி
பெரு விறல் வானம் பெரு வரை சேரும்
கரு அணி காலம் குறித்தார் திரு அணிந்த
ஒள் நுதல் மாதர் திறத்து

#35
சென்ற நம் காதலர் சேண் இகந்தார் என்று எண்ணி
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர
வென்றி முரசின் இரங்கி எழில் வானம்
நின்றும் இரங்கும் இவட்கு

#36
சிரல்வாய் வனப்பின ஆகி நிரல் ஒப்ப
ஈர்ம் தண் தளவம் தகைந்தன சீர்த்தக்க
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர்
நல் விருந்து ஆக நமக்கு

#37
கரும் கடல் மேய்ந்த கமம் சூழ் எழிலி
இரும் கல் இறுவரை ஏறி உயிர்க்கும்
பெரும் பத காலையும் வாரார்கொல் வேந்தன்
அரும் தொழில் வாய்த்த நமர்

#38
புகர் முகம் பூழி புரள உயர் நிலைய
வெம் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்
தண் பதக்காலையும் வாரார் எவன்கொலோ
ஒண்டொடி ஊடும் நிலை

#39
அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கரும் குரல் நொச்சி பசும் தழை சூடி
இரும் புனம் ஏர் கடிகொண்டார் பெரும் கெளவை
ஆகின்று நம் ஊர் அவர்க்கு

#40
வந்தன செய் குறி வாரார் அவர் என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம்
ஈந்தும் மென் பேதை நுதல்

#41 சிறப்புப் பாயிரம்
முல்லை கொடி மகிழ மொய் குழலார் உள் மகிழ
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ தீம் தமிழை வார்க்குமே
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து