ஆசாரக்கோவை

பாடல் எண் எல்லைகள்


#1 ஆசார வித்து பெருவாயின் முள்ளியார்
நன்றி அறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு
இன்னாத எ உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல் இனத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து

#2 ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை
இலக்கணத்தால் இ எட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்

#3 தக்கணை முதலியவை மேற்கொள்ளல் இன்னிசை சிந்தியல் வெண்பா
தக்கிணை வேள்வி தவம் கல்வி இ நான்கும்
மு பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால்
எ பாலும் ஆகா கெடும்

#4 முந்தையோர் கண்ட நெறி இன்னிசை வெண்பா
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை

#5 எச்சிலுடன் தீண்ட தகாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீ தேவர்
உச்சம் தலையோடு இவை என்ப யாவரும்
திட்பத்தால் தீண்டா பொருள்

#6 எச்சிலுடன் காண கூடாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு
அத்தக வீழ்மீனோடு இ ஐந்தும் தெற்றென
நன்கு அறிவார் நாளும் விரைந்து

#7 எச்சில்கள் இன்னிசை சிந்தியல் வெண்பா
எச்சில் பலவும் உள மற்று அவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயில்விழைச்சு
இவை எச்சில் இ நான்கு

#8 எச்சிலுடன் செய்ய கூடாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார்

#9 காலையில் கடவுளை வணங்குக இன்னிசை சிந்தியல் வெண்பா
நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇ தெய்வத்தை
தான் அறியுமாற்றால் தொழுது எழுக அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி

#10 நீராட வேண்டிய சமயங்கள் பஃறொடை வெண்பா
தேவர் வழிபாடு தீ கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர் களைதல் ஊண் பொழுது
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ் மக்கள்
மெய் உறல் ஏனை மயல் உறல் ஈர்ஐந்தும்
ஐயுறாது ஆடுக நீர்

#11 பழைமையோர் கண்ட முறைமை இன்னிசை வெண்பா
உடுத்து அலால் நீர் ஆடார் ஒன்று உடுத்து உண்ணார்
உடுத்த ஆடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை

#12 செய்யாமல் தவிர்க்க வேண்டியவை இன்னிசை சிந்தியல் வெண்பா
தலை உரைத்த எண்ணெயால் எ உறுப்பும் தீண்டார்
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்பு
குறை எனினும் கொள்ளார் இரந்து

#13 இன்னிசை வெண்பா
நீருள் நிழல் புரிந்து நோக்கார் நிலம் இரா
கீறார் இரா மரமும் சேரார் இடர் எனினும்
நீர் தொடாது எண்ணெய் உரையார் உரைத்த பின்
நீர் தொடார் நோக்கார் புலை

#14 நீராடும் முறை இன்னிசை வெண்பா
நீராடும் போழ்தில் நெறி பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவினவர்

#15 உடலை போல் போற்ற தக்கவை இன்னிசை சிந்தியல் வெண்பா
ஐம் பூதம் பார்ப்பார் பசு திங்கள் நாயிறு
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும்

#16 யாவரும் கூறிய நெறி சவலை வெண்பா
அரசன் உவாத்தியான் தாய் தந்தை தம்முன்
நிகர் இல் குரவர் இ ஐவர் இவர் இவரை
தேவரை போல தொழுது எழுக என்பதே
யாவரும் கண்ட நெறி

#17 நல்லறிவாளர் செயல் இன்னிசை வெண்பா
குரவர் உரை இகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் நிறை உவா
மெல் கோலும் தின்னார் மரம் குறையார் என்பதே
நல் அறிவாளர் துணிவு

#18 உணவு உண்ணும் முறைமை இன்னிசை வெண்பா
நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலம் செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார்
உண்டார் போல் வாய்பூசி செல்வர் அது எடுத்து
கொண்டார் அரக்கர் குறித்து

#19 கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை இன்னிசை சிந்தியல் வெண்பா
காலின் நீர் நீங்காமை உண்டிடுக பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேர் அறிவாளர் துணிவு

#20 உண்ணும் விதம் இன்னிசை வெண்பா
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு
உண்க உகாஅமை நன்கு

#21 ஒழுக்கம் பிழையாதவர் செய்வது இன்னிசை சிந்தியல் வெண்பா
விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்

#22 பிற திசையும் நல்ல இன்னிசை சிந்தியல் வெண்பா
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழி கட்டில் பாடு

#23 உண்ண கூடாத முறைகள் இன்னிசை சிந்தியல் வெண்பா
கிடந்து உண்ணார் நின்று உண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிக உண்ணார் கட்டில் மேல் உண்ணார்
இறந்து ஒன்றும் தின்னற்க நின்று

#24 பெரியோருடன் இருந்து உண்ணும் முறை இன்னிசை சிந்தியல் வெண்பா
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால்

#25 கசக்கும் சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை இன்னிசை சிந்தியல் வெண்பா
கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக
துய்க்க முறை வகையால் ஊண்

#26 உண்ணும்கலம் இன்னிசை வெண்பா
முதியவரை பக்கத்து வையார் விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து
அன்பின் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்

#27 உண்டபின் செய்ய வேண்டியவை பஃறொடை வெண்பா
இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா
மு கால் குடித்து துடைத்து முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி

#28 நீர் குடிக்கும் முறை இன்னிசை சிந்தியல் வெண்பா
இரு கையால் தண்ணீர் பருகார் ஒரு கையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இரு கை
சொறியார் உடம்பு மடுத்து

#29 மாலையில் செய்ய கூடியவை இன்னிசை சிந்தியல் வெண்பா
அந்தி பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கு இகழார் முன் அந்தி
அல்கு உண்டு அடங்கல் வழி

#30 உறங்கும் முறை இன்னிசை சிந்தியல் வெண்பா
கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள்
உடல் கொடுத்து சேர்தல் வழி

#31 இடையில் செல்லாமை முதலியன இன்னிசை சிந்தியல் வெண்பா
இரு தேவர் பார்ப்பார் இடை போகார் தும்மினும்
மிக்கார் வழுத்தின் தொழுது எழுக ஒப்பார்க்கு
உடன் செல்க உள்ளம் உவந்து

#32 மலம் சிறுநீர் கழிக்க கூடாத இடங்கள் இன்னிசை வெண்பா
புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம்
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று
ஈர்ஐந்தின்கண்ணும் உமிழ்வோடு இரு புலனும்
சோரார் உணர்வு உடையார்

#33 மலம் சிறுநீர் கழிக்கும் முறை குறள் வெண்பா
பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார்
பகல் பெய்யார் தீயினுள் நீர்

#34 மலம் சிறுநீர் கழிக்கும் முறை இன்னிசை வெண்பா
பத்து திசையும் மனத்தால் மறைத்த பின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இரு புலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்தும் என்பார்

#35 வாய் அலம்ப ஆகாத இடங்கள் இன்னிசை வெண்பா
நடைவரவு நீரகத்து நின்று வாய்பூசார்
வழி நிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார் கலத்தினால்
பெய் பூச்சு சீராது எனின்

#36 ஒழுக்கமற்றவை பஃறொடை வெண்பா
சுடர் இடை போகார் சுவர் மேல் உமியார்
இடர் எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்
படை வரினும் ஆடை வளி உரைப்ப போகார்
பலர் இடை ஆடை உதிராரே என்றும்
கடன் அறி காட்சியவர்

#37 நரகத்துக்கு செலுத்துவன நேரிசை வெண்பா
பிறர் மனை கள் களவு சூது கொலையோடு
அறன் அறிந்தார் இ ஐந்தும் நோக்கார் திறன் இலர் என்று
எள்ள படுவதூஉம் அன்றி நிரயத்து
செல்வுழி உய்த்திடுதலான்

#38 எண்ண கூடாதவை இன்னிசை வெண்பா
பொய் குறளை வெளவல் அழுக்காறு இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அரு நிரயத்து உய்த்திடும்
தெய்வமும் செற்றுவிடும்

#39 தெய்வத்துக்கு பலியூட்டிய பின் உண்க இன்னிசை சிந்தியல் வெண்பா
தமக்கு என்று உலை ஏற்றார் தம்பொருட்டு ஊன் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனை பலி
ஊட்டினமை கண்டு உண்க ஊண்

#40 சான்றோர் இயல்பு இன்னிசை சிந்தியல் வெண்பா
உயர்ந்ததின் மேல் இரார் உள் அழிவு செய்யார்
இறந்து இன்னா செய்தக்கடைத்தும் குரவர்
இளம் கிளைகள் உண்ணும் இடத்து

#41 சில செய்ய கூடியவையும் செய்ய கூடாதவையும் இன்னிசை சிந்தியல் வெண்பா
கண் எச்சில் கண் ஊட்டார் காலொடு கால் தேயார்
புண்ணியம் ஆய தலையோடு உறுப்பு உறுத்த
நுண்ணிய நூல் உணர்வினார்

#42 மனைவியை சேரும் காலமும் நீங்கும் காலமும் இன்னிசை சிந்தியல் வெண்பா
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின்
ஈர்ஆறு நாளும் இகவற்க என்பதே
பேர் அறிவாளர் துணிவு

#43 உடன் உறைதலுக்கு ஆகாத காலம் இன்னிசை வெண்பா
உச்சிஅம் போழ்தோடு இடை யாமம் ஈர்அந்தி
மிக்க இரு தேவர் நாளோடு உவாத்திதி நாள்
அட்டமியும் ஏனை பிறந்த நாள் இ அனைத்தும்
ஒட்டார் உடனுறைவின்கண்

#44 நாழி முதலியவற்றை வைக்கும் முறை இன்னிசை வெண்பா
நாழி மணை மேல் இரியார் மணை கவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் படாஅர் அறியாதார்
தம் தலைக்கண் நில்லாவிடல்

#45 பந்தலில் வைக்க தகாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
துடைப்பம் துகள் காடு புல் இதழ் செத்தல்
கரும் கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்தரகத்து

#46 வீட்டை பேணும் முறைமை பஃறொடை வெண்பா
காட்டு களைந்து கலம் கழீஇ இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து சிறுகாலை
நீர் சால் கரகம் நிறைய மலர் அணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீ பெய்க
நல்லது உறல் வேண்டுவார்

#47 நூல் ஓதுதற்கு ஆகாத காலம் இன்னிசை வெண்பா
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அ பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நில துளக்கு விண் அதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்

#48 அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள் இன்னிசை சிந்தியல் வெண்பா
கலியாணம் தேவர் பிதிர் விழா வேள்வி என்று
ஐவகை நாளும் இகழாது அறம் செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்

#49 நடை உடை முதலியவற்றை தக்கபடி அமைத்தல் இன்னிசை சிந்தியல் வெண்பா
உடை நடை சொற்செலவு வைதல் இ நான்கும்
நிலைமைக்கும் ஆண்மைக்கும் கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்

#50 கேள்வியுடையவர் செயல் இன்னிசை வெண்பா
பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவு இன்றி
இல்லாரை எள்ளி இகந்து உரையார் தள்ளியும்
தாங்க அரும் கேள்வியவர்

#51 தம் உடல் ஒளி விரும்புபவர் செய்ய தக்கவை இன்னிசை சிந்தியல் வெண்பா
மின் ஒளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
தம் ஒளி வேண்டுவார் நோக்கார் பகல் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று

#52 தளராத உள்ளத்தவர் செயல் இன்னிசை சிந்தியல் வெண்பா
படிறும் பயனிலவும் பட்டி உரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத்தவர்

#53 ஒழுக்கமுடையவர் செய்யாதவை இன்னிசை வெண்பா
தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம் கரத்தல் கை புடை தோன்ற
உறுப்பு செகுத்தலோடு இன்னவை எல்லாம்
பயிற்றார் நெறிப்பட்டவர்

#54 விருந்தினர்க்கு செய்யும் சிறப்பு இன்னிசை சிந்தியல் வெண்பா
முறுவல் இனிதுரை கால் நீர் மணை பாய்
கிடக்கையோடு இ ஐந்தும் என்ப தலை சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு

#55 அறிஞர் விரும்பாத இடங்கள் பஃறொடை வெண்பா
கறுத்த பகை முனையும் கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்
குணம் நோக்கி கொண்டவர் கோள் விட்டுழியும்
நிகர் இல் அறிவினார் வேண்டார் பலர் தொகு
நீர்க்கரையும் நீடு நிலை

#56 தவிர்வன சில பஃறொடை வெண்பா
முளி புல்லும் கானமும் சேரார் தீக்கு ஊட்டார்
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா
கானம் தமியர் இயங்கார் துளி அஃகி
நல்குரவு ஆற்ற பெருகினும் செய்யாரே
தொல் வரவின் தீர்ந்த தொழில்

#57 நோய் வேண்டாதவர் செய்ய கூடாதவை இன்னிசை வெண்பா
பாழ் மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்
தாமே தமியர் புகாஅர் பகல் வளரார்
நோய் இன்மை வேண்டுபவர்

#58 ஒருவர் புறப்படும்போது செய்ய தகாதவை இன்னிசை வெண்பா
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும்
எங்கு உற்று சேறிரோ என்னாரே முன் புக்கு
எதிர் முகமா நின்றும் உரையார் இரு சார்வும்
கொள்வர் குரவர் வலம்

#59 சில தீய ஒழுக்கங்கள் இன்னிசை சிந்தியல் வெண்பா
உடம்பு நன்று என்று உரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீ நந்த கொள்ளார் அதனை
பட காயார் தம்மேல் குறித்து

#60 சான்றோருடன் செல்லும் போது செய்ய தகாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்
ஆன்று அவிந்த மூத்த விழுமியார்தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து

#61 நூல்முறை உணர்ந்தவர் துணிவு இன்னிசை சிந்தியல் வெண்பா
வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறை பால் தம் குரவரை போல் ஒழுகல்
நூல் முறையாளர் துணிவு

#62 சான்றோர்க்கு செய்யும் ஒழுக்கம் இன்னிசை சிந்தியல் வெண்பா
கால்வாய் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்ப குரவர்க்கு இவை இவை
சாரத்தால் சொல்லிய மூன்று

#63 கற்றவர் கண்ட நெறி இன்னிசை சிந்தியல் வெண்பா
துறந்தாரை பேணலும் நாணலும் தாம் கற்ற
மறந்தும் குரவர் முன் சொல்லாமை மூன்றும்
திறம் கண்டார் கண்ட நெறி

#64 வாழக்கடவர் எனப்படுபவர் இன்னிசை வெண்பா
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசு பெண்டிர் என்று இவர்கட்கு
ஆற்ற வழி விலங்கினாரே பிறப்பினுள்
போற்றி எனப்படுவார்

#65 தனித்திருக்க கூடாதவர் இன்னிசை சிந்தியல் வெண்பா
ஈன்றாள் மகள் தன் உடன்பிறந்தாள்ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்

#66 மன்னருடன் பழகும் முறை இன்னிசை வெண்பா
கடை விலக்கின் காயார் கழி கிழமை செய்யார்
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார்
இடை அறுத்து போகி பிறன் ஒருவன் சேரார்
கடைபோக வாழ்தும் என்பார்

#67 குற்றம் ஆவன இன்னிசை வெண்பா
தமக்கு உற்ற கட்டுரையும் தம்மின் பெரியார்
உரைத்தற்கு உற்ற உரையும் அஃது அன்றி
பிறர்க்கு உற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடு குற்றம் ஆகிவிடும்

#68 நல்ல நெறி இன்னிசை வெண்பா
பெரியார் உவப்பன தாம் உவவார் இல்லம்
சிறியாரை கொண்டு புகாஅர் அறிவு அறியா
பிள்ளையேயானும் இழித்து உரையார் தம்மோடு
அளவளாவு இல்லா இடத்து

#69 மன்னர் செய்கையில் வெறுப்படையாமை முதலியன இன்னிசை வெண்பா
முனியார் துனியார் முகத்து எதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்
இனியவை யாம் அறிதும் என்னார் கசிவு இன்று
காக்கை வெள்ளென்னும் எனின்

#70 மன்னன் முன் செய்ய தகாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகை இல் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியாரகத்து

#71 மன்னன் முன் சொல்ல கூடாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
இறைவர் முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலம் உடையார் கூறார் பகைவர் போல்
பாரித்து பல் கால் பயின்று

#72 வணங்கக்கூடாத இடங்கள் இன்னிசை சிந்தியல் வெண்பா
பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர் பெரியார் செல்லும் இடத்து

#73 மன்னர் முன் செய்ய தகாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி

#74 ஆசிரியரிடம் நடக்கும் முறைமை இன்னிசை வெண்பா
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல் ஒழிந்தக்கால்

#75 சான்றோர் அவையில் செய்ய கூடாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
உடுக்கை இகவார் செவி சொறண்டார் கை மேல்
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து

#76 சொல்லும் முறைமை இன்னிசை வெண்பா
விரைந்து உரையார் மேன்மேல் உரையார் பொய் ஆய
பரந்து உரையார் பாரித்து உரையார் ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே பொருள் அடங்க காலத்தால்
சொல்லுக செவ்வி அறிந்து

#77 நல்ல குலப்பெண்டிர் இயல்பு இன்னிசை சிந்தியல் வெண்பா
தம் மேனி நோக்கார் தலை உளரார் கைநொடியார்
எ மேனிஆயினும் நோக்கார் தலைமகன்தம்
மேனி அல்லால் பிற

#78 மன்னர் அவையில் செய்ய கூடாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனை
சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று
தேர்வார் போல் நிற்க திரிந்து

#79 பெரியோரிடம் உள்ள முச்செயல்கள் நேரிசை வெண்பா
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும் அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை இ மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள

#80 சான்றோர் பெயர் முதலியவற்றை கூறாமை நேரிசை வெண்பா
தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார் புலையரையும்
நன்கு அறிவார் கூறார் முறை

#81 ஆன்றோர் செய்யாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
புழைக்கடை பின் புகார் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வவ்
தொழிற்கு உரியர் அல்லாதவர்

#82 மனைவியின் உள்ளம் மாறுபடுதல் இன்னிசை சிந்தியல் வெண்பா
வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்
ஒள்ளியம் என்பார் இடம் கொள்ளார் தெள்ளி
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும்

#83 கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை இன்னிசை வெண்பா
நிரல்பட செல்லார் நிழல் மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார்
அரசர் படை அளவும் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்தும் என்பார்

#84 பழகியவை என இகழ தகாதவை இன்னிசை வெண்பா
அளை உறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழை உறை சீயமும் என்று இவை நான்கும்
இளைய எளிய பயின்றன என்று எண்ணி
இகழின் இழுக்கம் தரும்

#85 செல்வம் கெடும் வழி நேரிசை வெண்பா
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார்
மன்னரின் மேம்பட செய்யற்க செய்பவேல்
மன்னிய செல்வம் கெடும்

#86 பெரியவரை உண்டது யாது என வினவ கூடாது இன்னிசை சிந்தியல் வெண்பா
உண்டது கேளார் குரவரை மிக்காரை
கண்டுழி கண்டால் முகம் திரியார் புல்லரையும்
உண்டது கேளார் விடல்

#87 கட்டிலில் படுத்திருப்பவருக்கு செய்ய தகாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
கிடந்தாரை கால் கழுவார் பூப்பெய்யார் சாந்தம்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார் தாம் கட்டில் மிசை

#88 பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள் இன்னிசை சிந்தியல் வெண்பா
உதவி பயன் உரையார் உண்டி பழியார்
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும் என்பார்

#89 கிடைக்காதவற்றை விரும்பாமை இன்னிசை சிந்தியல் வெண்பா
எய்தாத வேண்டார் இரங்கார் இழந்ததற்கு
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சியவர்

#90 தலையில் சூடிய மோத்தல் முதலானவை இன்னிசை சிந்தியல் வெண்பா
தலைக்கு இட்ட பூ மேவார் மோந்த பூ சூடார்
பசு கொடுப்பின் பார்ப்பார் கை கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்

#91 பழியாவன இன்னிசை சிந்தியல் வெண்பா
மோட்டுடை போர்வையோடு ஏக்கழுத்தம் தாள் இசைப்பு
காட்டுளேயானும் பழித்தார் மரம் தம்மின்
மூத்த உள ஆகலான்

#92 அந்தணரின் சொல்லை கேட்க நேரிசை வெண்பா
தலைஇய நல் கருமம் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள் கேட்டு செய்யார் தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டு செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல

#93 சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை இன்னிசை சிந்தியல் வெண்பா
மன்றத்து நின்று உஞற்றார் மாசு திமிர்ந்து இயங்கார்
என்றும் கடும் சொல் உரையார் இருவராய்
நின்றுழியும் செல்லார் விடல்

#94 ஐயம் இல்லாத அறிவினர் செய்கை இன்னிசை வெண்பா
கை சுட்டி கட்டுரையார் கால் மேல் எழுத்து இடார்
மெய் சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்து ஏலார்
ஐயம் இல் காட்சியவர்

#95 பொன்னை போல் காக்க தக்கவை இன்னிசை வெண்பா
தன் உடம்பு தாரம் அடைக்கலம் தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும்
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்

#96 எறும்பு முதலியவை போல் செயல் செய்தல் இன்னிசை வெண்பா
நந்து எறும்பு தூக்கணம்புள் காக்கை என்று இவை போல்
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து தம் கருமம்
அ பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எ பெற்றியானும் படும்

#97 சான்றோர் முன் சொல்லும் முறை இன்னிசை சிந்தியல் வெண்பா
தொழுதானும் வாய் புதைத்தானும் அஃது அன்றி
பெரியார் முன் யாதும் உரையார் பழி அவர்
கண்ணுளே நோக்கி உரை

#98 புக கூடாத இடங்கள் இன்னிசை சிந்தியல் வெண்பா
சூதர் கழகம் அரவர் அறா களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்

#99 அறிவினர் செய்யாதவை இன்னிசை சிந்தியல் வெண்பா
உரல் களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கு அற்ற காட்சியார் நோக்கார் எடுத்து இசையார்
இல்லம் புகாஅர் விடல்

#100 ஒழுக்கத்தினின்று விலகியவர் பஃறொடை வெண்பா
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிர் இழந்தான் அஞ்சினான் உண்பான்
அரசர் தொழில் தலைவைத்தான் மணாளன் என்று
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார்

#101 சிறப்பு பாயிரம்
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி
ஆரிடத்து தான் அறிந்த மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை என தொகுத்தான் தீரா
திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர்
பெருவாயின் முள்ளி என்பான்
*