நாலாயிரத் திவ்விய பிரபந்தம் – மூன்றாம் ஆயிரம்

1.பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி(2082 – 2181 = 100)
2.பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி(2182 – 2281 = 100)
3.பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி(2282 – 2381 = 100)
4.திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி(2382 – 2477 = 96)
5.நம்மாழ்வார் – திருவிருத்தம்(2478 – 2577 = 100)
நம்மாழ்வார் – திருவாசிரியம்(2578 – 2584 = 7)
நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி(2585 – 2671 = 87)
6.திருமங்கை ஆழ்வார் – திருவெழுக்கூற்றிருக்கை(2672 = 1)
திருமங்கை ஆழ்வார் – சிறிய திருமடல்(2673 – 2712 = 40)
திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமடல்(2713 – 2790 = 78)
7.திருவரங்கத்து அமுதனார் – இராமானுச நூற்றந்தாதி(2791 – 2898 = 108)

1.பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி

#2082
வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

#2083
என்று கடல் கடைந்தது எ உலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்

#2084
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி

#2085
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரன்

#2086
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று

#2087
ஒன்றும் மறந்தறியேன் ஓத_நீர்_வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கம் மேயான் திசை

#2088
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு

#2089
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே
போர் ஆழி கையால் பொருது

#2090
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண்

#2091
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ
உலகு அளவும் உண்டோ உன் வாய்

#2092
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி

#2093
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செம் தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றாற்கு இயல்வு

#2094
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர்

#2095
அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர்இவர் எம்பெருமான் என்று சுவர் மிசை
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல்

#2096
முதல் ஆவார் மூவரே அ மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி_நீர்_வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது

#2097
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன்
கடல் ஓதம் கால் அலைப்ப கண்வளரும் செம் கண்
அடல் ஓத வண்ணர் அடி

#2098
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று

#2099
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றி
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்
மருது இடை போய் மண் அளந்த மால்

#2100
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலை துயின்ற ஆழியான் கோல
கரு மேனி செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று

#2101
பெற்றார் தளை கழல பேர்ந்து ஓர் குறள் உருவாய்
செற்றார் படி கடந்த செங்கண்மால் நல் தா
மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று

#2102
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூ அடியால்
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும்
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம்
அடை ஆழி நெஞ்சே அறி

#2103
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும்
காம்பு ஏய் மென் தோளி கடை வெண்ணெய் உண்டாயை
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு

#2104
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த
பூங்கோதையாள் வெருவ பொன்_பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத_வண்ணர் விரல்

#2105
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உற பிணித்த நான்று குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கு ஓத வண்ணா உரை

#2106
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போல திரை மேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி
இடந்தானை ஏத்தி எழும்

#2107
எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினை சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மன சுடரை தூண்டும் மலை

#2108
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானை
போர் கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்த்தனவும்
கார் கோடு பற்றியான் கை

#2109
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை

#2110
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி

#2111
தெளிது ஆக உள்ளத்தை செந்நிறீஇ ஞானத்து
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆக
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக்கொள்ளும் புரிந்து

#2112
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை

#2113
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையா பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத்து_அணையான் நகர்

#2114
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என்

#2115
என் ஒருவர் மெய் என்பர் ஏழ்_உலகு உண்டு ஆலிலையில்
முன் ஒருவன் ஆய முகில்_வண்ணா நின் உருகி
பேய் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர் கண்
ஆய் தாய் முலை தந்த ஆறு

#2116
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமா கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண்

#2117
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனது ஆகத்தானே இரணியனை
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ
மண் இரந்து கொண்ட வகை

#2118
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்

#2119
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியை கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
எம் என்னும் மாலது இடம்

#2120
இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேர் ஓத வண்ணர் பெரிது

#2121
பெரு வில் பகழி குறவர் கை செம் தீ
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று

#2122
குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான்
திறன் உரையே சிந்தித்திரு

#2123
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல்
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த
மால் ஓத_வண்ணர் மனம்

#2124
மன மாசு தீரும் அருவினையும் சாரா
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தம் தொழாநிற்பார் தமர்

#2125
தமர் உகந்தது எ உருவம் அ உருவம் தானே
தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து
எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அ வண்ணம் ஆழியான் ஆம்

#2126
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு

#2127
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி ஆள்வார்

#2128
வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள்
கை நாகம் காத்தான் கழல்

#2129
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவு ஆழி நெஞ்சே மகிழ்

#2130
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது

#2131
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி-பால் வண் கை நீர்
ஏற்றானை காண்பது எளிது

#2132
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்து ஒழியும் செவ்வே களியில்
பொருந்தாதவனை பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண்

#2133
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலை கைதொழுவர் சென்று

#2134
சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் திருமாற்கு அரவு

#2135
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய்
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண்-அவன்

#2136
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர்

#2137
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க நேரே
கடி கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடி கமலம் தன்னை அயன்

#2138
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு நமோ_நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது

#2139
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை அடை

#2140
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண்

#2141
சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு

#2142
உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் உலகினில்
செம் தீயும் மாருதமும் வானும் திருமால்-தன்
புந்தியில் ஆய புணர்ப்பு

#2143
புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ
ஏழ்_உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவ பொங்கு அணையான் தோள்

#2144
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்
கோள் நாக_அணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்

#2145
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வரும் ஆறு என் என் மேல் வினை

#2146
வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்
தினையேனும் தீக்கதி-கண் செல்லார் நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்
கரியானை கைதொழுத-கால்

#2147
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலை தலை மறையோர் வேட்பனவும் வேலை-கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர்

#2148
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு

#2149
உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி-தோறு ஊழி
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை உணர்வார் ஆர்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேத
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்

#2150
பாலன் தனது உருவாய் ஏழ்_உலகு உண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு

#2151
சொல்லுந்தனையும் தொழு-மின் விழும் உடம்பு
செல்லுந்தனையும் திருமாலை நல் இதழ்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று

#2152
நன்று பிணி மூப்பு கையகற்றி நான்கு ஊழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான்-மாட்டு அன்பு

#2153
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன்
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி
காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூண் ஆரம் பூண்டான் புகழ்

#2154
புகழ்வாய் பழிப்பாய் நீ பூம் துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ் நீர்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான்

#2155
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால்
மங்கையான் பூ_மகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு

#2156
காப்பு உன்னை உன்ன கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் மூப்பு உன்னை
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி

#2157
வழிநின்று நின்னை தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம்

#2158
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்

#2159
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
பை நாக_பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய் நாக பூம் போது கொண்டு

#2160
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து

#2161
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்

#2162
ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை
பற்றி கடத்தும் படை

#2163
படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை

#2164
வரை குடை தோள் காம்பு ஆக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே உரவு உடைய
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர் மேல்
பேர் ஆழி கொண்ட பிரான்

#2165
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி

#2166
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ

#2167
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல்
இடைகழியே பற்றி இனி

#2168
இனி யார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரி தாள் கோ-மின் கனி சாய
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு

#2169
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்-தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
என் ஆகில் என்னே எனக்கு

#2170
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்-
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம்
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ
மா மேனி காட்டும் வரம்

#2171
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்

#2172
ஊன குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞான சுடர் கொளீஇ நாள்-தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்

#2173
வான் ஆகி தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு

#2174
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால்
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின்
சேவடி-மேல் ஈடு அழிய செற்று

#2175
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழ்_உலகும்
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்
மறையவற்கு காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா

#2176
நா வாயில் உண்டே நமோ_நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மா_கதி-கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
தீக்கதி-கண் செல்லும் திறம்

#2177
திறம்பாது என் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கண் பிடி

#2178
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன்
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர் பொன்

#2179
பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்

#2180
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்

#2181
ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை

2.பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி


#2182
அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞான தமிழ் புரிந்த நான்

#2183
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன்-தன் நாமங்கள்
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு

#2184
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர்

#2185
நகர் இழைத்து நித்திலத்து நாள்மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி

#2186
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து

#2187
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார்_ஓத_வண்ணன் கழல்

#2188
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே உகந்து

#2189
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று

#2190
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து

#2191
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை

#2192
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
ஆர் ஓத வல்லார் அவர்

#2193
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து

#2194
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு

#2195
பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து

#2196
திரிந்தது வெம் சமத்து தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு

#2197
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று

#2198
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றை
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு

#2199
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த ஏழ்_உலகே தாமரை கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு

#2200
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழ கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே
பார் விளங்க செய்தாய் பழி

#2201
பழி பாவம் கையகற்றி பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம்-மாதோ வழு இன்றி
நாரணன்-தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம்

#2202
தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது

#2203
அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரை பெற்றால் கரியது ஓர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து

#2204
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளம் கனிக்கு கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம்
அளந்து அடி கீழ் கொண்ட அவன்

#2205
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கரு வரை மண் கார் ஓத
சீற்ற தீ ஆவானும் சென்று

#2206
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனை கூறும்-கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர்-தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து

#2207
வந்தித்து அவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்தி
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி

#2208
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்

#2209
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும்
தேவாதிதேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன்

#2210
மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனை தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய் நீ

#2211
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேர் ஓத மேனி பிரான்

#2212
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து

#2213
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து

#2214
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை

#2215
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி

#2216
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது

#2217
சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு

#2218
இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசைமுகனை தந்தாய் பொருந்திய நின்
பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு

#2219
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து

#2220
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறி-மின் ஏழைகாள் ஓத்து அதனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு

#2221
சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினை-மின் கண்டீர் திரு பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்

#2222
பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை

#2223
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதார் அ தோள்

#2224
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு

#2225
சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண்மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு

#2226
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று

#2227
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல் நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர்மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்

#2228
மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து
காலை தொழுது எழு-மின் கைகோலி ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து

#2229
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை

#2230
மலை ஏழும் மாநிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த
நஞ்சு உரத்து பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என் நெஞ்சே அழை

#2231
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து

#2232
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம்
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய்
பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீர்_ஆழி_வண்ணன் நிறம்

#2233
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி

#2234
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது
பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு

#2235
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கைவிடேல் என்று

#2236
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே இன்ப
கடல் ஆழி நீ அருளி காண்

#2237
காண கழி காதல் கைமிக்கு காட்டினால்
நாணப்படும் என்றால் நாணுமே பேணி
கரு மாலை பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நங்கள் திரு

#2238
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்பிடி-மின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நால் திசையும் கேட்டீரே நாம்

#2239
நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின்
பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று
அருள் நீர்மை தந்த அருள்

#2240
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து

#2241
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று

#2242
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னை
பிரமாணித்தார் பெற்ற பேறு

#2243
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின்
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு

#2244
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடு சாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை

#2245
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை
பரு மொழியால் காண பணி

#2246
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது

#2247
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையா
காரணமும் வல்லையேல் காண்

#2248
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கை
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி

#2249
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுக கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ

#2250
கோ ஆகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மா ஏகி செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர்

#2251
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்

#2252
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த-போது

#2253
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும்
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து

#2254
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான்

#2255
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் யானே
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லேன் பெருகு

#2256
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை

#2257
வரை சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரை பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதி பணிவது உறும்

#2258
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்

#2259
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன்
கை அனைத்தும் ஆர கழுவினான் கங்கை நீர்
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின்

#2260
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள்
முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர்

#2261
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் ஆர்ந்த
அடி கோலம் கண்டவர்க்கு என்-கொலோ முன்னை
படி கோலம் கண்ட பகல்

#2262
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் கனவில்
மிக கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிக கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு

#2263
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ
கோலத்தால் இல்லை குறை

#2264
குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும்
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும்
மாயன்-கண் சென்ற வரம்

#2265
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த
சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது

#2266
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தி தொழுதேன் சொலப்பட்ட
நல் மாலை ஏத்தி நவின்று

#2267
நவின்று உரைத்த நாவலர்கள் நாள்மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம்
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான்
எ தவத்தால் காண்பன்-கொல் இன்று

#2268
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கரு கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்

#2269
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசல் கதவு

#2270
கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவி போர் யானை ஒசித்து பதவியாய்
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்

#2271
மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணி
திருமாலை செம் கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின்

#2272
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்-மினோ பல் நூல்
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி

#2273
அடியால் முன் கஞ்சனை செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன்
நாமமே ஏத்து-மின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது

#2274
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடா முன்னம் வடி சங்கம்
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்து-மினோ உற்று

#2275
உற்று வணங்கி தொழு-மின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில்_வண்ணன் பற்றி
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு

#2276
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்

#2277
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்

#2278
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செம் கண் நெடுமால் திருமார்பா பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய்
குடமூக்கு கோயிலா கொண்டு

#2279
கொண்டு வளர்க்க குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடமாக கொண்ட இறை

#2280
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால்

#2281
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு

3.பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி


#2282
திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன்
என் ஆழி வண்ணன்-பால் இன்று

#2283
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று
திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டுகொண்டு என் மனம்

#2284
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்து
செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓத_வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து

#2285
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண்மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூ அடியால்
அன்று உலகம் தாயோன் அடி

#2286
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு

#2287
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்

#2288
கழல் தொழுதும் வா நெஞ்சே கார் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை
நண்ணற்கு அரியானை நாம்

#2289
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண்

#2290
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில்_வண்ணன் கார் கடல்_நீர்_வண்ணன்
திரு மா மணி_வண்ணன் தேசு

#2291
தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசு_இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு

#2292
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத
பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான்

#2293
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும்
நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்-தோறும்
பைம் கோத_வண்ணன் படி

#2294
படி வட்ட தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு

#2295
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து

#2296
பணிந்து உயர்ந்த பௌவ படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணை கிடக்கும் வந்து

#2297
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று

#2298
சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால்
என்ற நாள் எ நாளும் நாள் ஆகும் என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய்

#2299
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண்
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின்
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க அருள்

#2300
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன்

#2301
முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அ உலகம் ஈர் அடியால்
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே
திருமாலே செம் கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ அதனை பேசு

#2302
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர் துழாய் மாலையான் தேசு உடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனை கொன்றான் வடிவு

#2303
வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு

#2304
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர்
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே
மனம் துழாய் மாலாய் வரும்

#2305
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும்
சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும்
தொடர் ஆழி நெஞ்சே தொழுது

#2306
தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம்
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து

#2307
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார்

#2308
ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கரும் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து

#2309
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று
பேய்ச்சி பால் உண்ட பிரான்

#2310
பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய்
தெருளா மொழியானை சேர்ந்து

#2311
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி
இறைபாடி ஆய இவை

#2312
இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்

#2313
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாக கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன்

#2314
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒரு நாள் உண்டவனே மெய்ம்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று

#2315
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல்
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை
கடந்தானை நெஞ்சமே காண்

#2316
காண்காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண் கண்
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை

#2317
கைய கனல் ஆழி கார் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயன் அவற்கு

#2318
அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கரும் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம்
திகழும் திருமார்பன் தான்

#2319
தானே தனக்கு உவமன் தன் உருவே எ உருவும்
தானே தவ உருவும் தாரகையும் தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை

#2320
இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய்
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்

#2321
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்க கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்

#2322
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாக கொண்டு அன்று உலகு_அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ

#2323
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழல் ஊதி
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
தெரி உகிரால் கீண்டான் சினம்

#2324
சின மா மத களிற்றின் திண் மருப்பை சாய்த்து
புனம் மேய பூமி அதனை தனமாக
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
ஓர் அகலத்து உள்ளது உலகு

#2325
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செம் தீயும் ஆவான் பல கதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி

#2326
புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டு கொண்டான் மலை

#2327
மலை முகடு மேல் வைத்து வாசுகியை சுற்றி
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான்

#2328
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ

#2329
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய்
தேவாசுரம் பொருதாய் செற்று

#2330
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்று
பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரி
சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து

#2331
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த
மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன்

#2332
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்காபுரம் எரித்தான் எய்து

#2333
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும்
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று

#2334
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாய குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள்

#2335
தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு
பெண் அகலம் காதல் பெரிது

#2336
பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல தெரியும்-கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன்
நீள் நெடும் கண் காட்டும் நிறம்

#2337
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு

#2338
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த
கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருள்-தன் மேல் கண்டாய் தெளி

#2339
தெளிந்த சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு

#2340
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும்
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள்
பெருமான் அடி சேரப்பெற்று

#2341
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மா சகடம்
முற்ற காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்று
குணிலை விளம் கனிக்கு கொண்டு எறிந்தான் வெற்றி
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு

#2342
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை
இளம் குமரன்-தன் விண்ணகர்

#2343
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு

#2344
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

#2345
இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு

#2346
அங்கற்கு இடர் இன்றி அந்தி பொழுதத்து
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து

#2347
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பண கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மது கைடவரும் வயிறு உருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு

#2348
ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கை
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து

#2349
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என பேர்ந்து கார்த்த
களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
விளங்கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு

#2350
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்

#2351
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மத தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு

#2352
களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள்
குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று

#2353
குன்று ஒன்றின் ஆய குறமகளிர் கோல் வளை கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளம் குமரர் கோமான் இடம்

#2354
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நா-தன்னால் உள்ள நலம்

#2355
நலமே வலிது-கொல் நஞ்சு ஊட்டு வன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான்
தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து

#2356
சார்ந்து அகடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு

#2357
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய் மலர் தூய் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து

#2358
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடி போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
அடி போது நங்கட்கு அரண்

#2359
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஓது கதி மாயனையே ஓர்த்து

#2360
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
நிரை ஆர மார்வனையே நின்று

#2361
நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு

#2362
நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்கும்-கால் நெஞ்சத்து
பேராது நிற்கும் பெருமானை என்-கொலோ
ஓராது நிற்பது உணர்வு

#2363
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி

#2364
இனி அவன் மாயன் என உரைப்பரேலும்
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன்

#2365
உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாக தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண் தாமரை நெடும் கண் மாயவனை யாவரே
கண்டார் உகப்பர் கவி

#2366
கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய்
செவியின் ஆர் கேள்வியராய் சேர்ந்தார் புவியினார்
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
ஏற்று உயிரை அட்டான் எழில்

#2367
எழில் கொண்ட மின்னு கொடி எடுத்து வேக
தொழில்கொண்டு தான் முழங்கி தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல
கார் வானம் காட்டும் கலந்து

#2368
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை
அந்தி வான் காட்டும் அது

#2369
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழு-மின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து

#2370
முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு

#2371
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ
வண் துழாய் மால் அளந்த மண்

#2372
மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணி
கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன்

#2373
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறைசெய்து என் நெஞ்சே நினை

#2374
நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து

#2375
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து

#2376
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
சிந்த பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து

#2377
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்க தழும்பாமே கேழ்த்த
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன்
அடி தாமரை ஆம் அலர்

#2378
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை

#2379
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு

#2380
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்து
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்கு சார்வு

#2381
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண்
தேன் அமரும் பூ மேல் திரு

4.திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி


#2382
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய் சங்கரனை தான் படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை
சிந்தாமல் கொள்-மின் நீர் தேர்ந்து

#2383
தேரும்-கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே எ தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான்-பால்

#2384
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து
ஒரு பொருளை வானவர் தம் மெய் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு

#2385
ஆறு சடை கரந்தான் அண்டர்_கோன் தன்னோடும்
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே வேறு ஒருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும்
சொல்லானை சொன்னேன் தொகுத்து

#2386
தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி

#2387
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே ஆதலால் இன்று

#2388
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னை அன்றி இலை

#2389
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண்மால் சேரா குலை கொண்ட
ஈரைந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை

#2390
குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு

#2391
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும்
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண
வல்லமே அல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து

#2392
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்கு-மின்கள் தண் மலரால் சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து

#2393
மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய்
மடு கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு

#2394
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன்

#2395
நாராயணன் என்னை ஆளி நரகத்து
சேராமல் காக்கும் திருமால்-தன் பேரான
பேச பெறாத பிண சமயர் பேச கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர

#2396
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை

#2397
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர்
தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியால் மறைத்தாரால்

#2398
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய் தவத்தோன் ஞாலம்
அளந்தானை ஆழி கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானை தான் வணங்குமாறு

#2399
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாக கீறிய கோளரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை
சாத்தியிருப்பார் தவம்

#2400
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம்
ஈப்பாயும் எ உயிர்க்கும் நீ

#2401
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவ தேவதேவனும் நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை

#2402
இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரிவட்ட கண்கள் இவையா
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கி காட்டும் அழகு

#2403
அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணி-மின் குழவியாய்
தான் ஏழ்_உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து

#2404
வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து

#2405
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சின போர் சுவேதனை சேனாபதியாய்
மன போர் முடிக்கும் வகை

#2406
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று

#2407
மற்று தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
கற்றை சடையான் கரி கண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கட_வண்ணா யான் உன்னை
கண்டு கொள்கிற்குமாறு

#2408
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாக கொள்வனோ பேதைகாள் நீறாடி
தான் காண மாட்டாத தார் அகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது

#2409
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு

#2410
உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே
மகப்பு உருவன் தானே மதிக்கில் மிக புருவம்
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால்
அன்றிக்கொண்டு எய்தான் அவன்

#2411
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவு_அணையின் மேல்

#2412
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை

#2413
கதை பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதை பொருள் தான்
வாய்ந்த குணத்து படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி

#2414
அடி சகடம் சாடி அரவு ஆட்டி யானை
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடி பவள
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு

#2415
குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்

#2416
தாளால் உலகம் அளந்த அசைவே-கொல்
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து_அணை

#2417
நாகத்து_அணை குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணை பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்

#2418
வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு

#2419
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
எ தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு

#2420
அழைப்பன் திருவேங்கடத்தானை காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழை பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு

#2421
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்

#2422
காணலுறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனை சென்று

#2423
சென்று வணங்கு-மினோ சேண் உயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும்
கடி கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு

#2424
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும்
குடை ஏற தாம் குவித்து கொண்டு

#2425
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து

#2426
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு

#2427
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று

#2428
நன் மணி_வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீ
ரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேங்கடம்

#2429
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு
வானவரை காப்பான் மலை

#2430
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீற கடைந்த பெருமான் திருநாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று

#2431
கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம்
கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு

#2432
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_
வண்ணனே உன்னை பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை

#2433
விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலை-கால்
விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார்
கடம் உண்டார் கல்லாதவர்

#2434
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லா
தேவரை தேறேல்-மின் தேவு

#2435
தேவராய் நிற்கும் அ தேவும் அ தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை

#2436
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அவர்

#2437
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரி
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு

#2438
ஒருங்கு இருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என்

#2439
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு

#2440
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்

#2441
ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின்
தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்

#2442
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு

#2443
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்
தார் தன்னை சூடி தரித்து

#2444
தரித்திருந்தேன் ஆகவே தாரா கண போர்
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னை தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது

#2445
போதான இட்டு இறைஞ்சி ஏத்து-மினோ பொன் மகர
காதானை ஆதி பெருமானை நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது

#2446
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும்
வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்

#2447
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாக_அணை நெடிய மாற்கு திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்

#2448
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல்
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக
நாரணனை நா_பதியை ஞான பெருமானை
சீரணனை ஏத்தும் திறம்

#2449
திறம்பேல்-மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவராய் போது-மின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரை கூவி செவிக்கு

#2450
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறை பொருளும் அத்தனையேதான்

#2451
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன்
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்

#2452
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன்
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு-அதனை கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ்ஞானம் இல்

#2453
இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும்
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம்
ஆவனவும் நால் வேத மா தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்

#2454
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த
பேர் ஆழியான்-தன் பெருமையை கார் செறிந்த
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டை தானத்தின் பதி

#2455
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா

#2456
நா கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக
தீ கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூ கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்த
செல்வனார் சேவடி மேல் பாட்டு

#2457
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு

#2458
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை
கல் கொண்டு தூர்த்த கடல்_வண்ணன் என் கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எ வினையும் மாயுமால் கண்டு

#2459
கண்டு வணங்கினார்க்கு என்னாம்-கொல் காமன் உடல்
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து

#2460
ஆய்ந்து கொண்டு ஆதி பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து

#2461
விரைந்து அடை-மின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம்
பாடின ஆடின கேட்டு படு நரகம்
வீடின வாசல் கதவு

#2462
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழி ஆகி கலந்து

#2463
கலந்தான் என் உள்ளத்து காமவேள் தாதை
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே அலர்ந்து அலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து

#2464
வேந்தராய் விண்ணவராய் விண் ஆகி தண்ணளியாய்
மாந்தராய் மாதுவாய் மற்று எல்லாமாய் சார்ந்தவர்க்கு
தன் ஆற்றான் நேமியான் மால்_வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்

#2465
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும்
கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழ காதல் பூண்டேன் தொழில்

#2466
தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த
வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன்

#2467
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன் ஒப்பான் தானாய் உளன் காண் தமியேற்கும்
என் ஒப்பார்க்கு ஈசன் இமை

#2468
இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்

#2469
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்-போது ஓடி
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீர
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமய
பந்தனையார் வாழ்வேல் பழுது

#2470
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு

#2471
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர்

#2472
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று

#2473
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கரு இருந்த நாள் முதலா காப்பு

#2474
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை
விட துணியார் மெய் தெளிந்தார் தாம்

#2475
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டி களப்படுத்து பை தெளிந்த
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று

#2476
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி

#2477
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்

5.நம்மாழ்வார் – திருவிருத்தம்


#2478
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

#2479
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண்
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழு நீர் முகில்_வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே

#2480
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே

#2481
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே
முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே

#2482
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய்
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம்
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே

#2483
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்க
கடாவிய வேக பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் கா-மின்கள் ஞாலத்துள்ளே

#2484
ஞாலம் பனிப்ப செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே

#2485
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இ நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே

#2486
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே

#2487
மாயோன் வடதிருவேங்கட நாட வல்லி_கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே

#2488
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம்பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கை
பெரியன கெண்டை குலம் இவையோ வந்து பேர்கின்றவே

#2489
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே

#2490
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே

#2491
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணை பேர் ஒளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர்
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இ செழும் கயலே

#2492
கயலோ நும கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல்_வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே

#2493
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையை
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே

#2494
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே

#2495
கடல் கொண்டு எழுந்தது வானம் அ வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே

#2496
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே

#2497
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே

#2498
சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நல் நீர்
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே

#2499
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர்
தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே

#2500
புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே

#2501
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கை
கயல் பாய்வன பெரு நீர் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால்
புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே

#2502
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே

#2503
நானிலம் வாய் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம்
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே

#2504
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய்
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே

#2505
தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே

#2506
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே

#2507
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர்
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே

#2508
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள்
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே

#2509
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே

#2510
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே

#2511
சிதைக்கின்றது ஆழி என்று ஆழியை சீறி தன் சீறடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண் தார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே

#2512
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே

#2513
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே

#2514
கொடும் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய
கடும் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அருவினையேன்
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே

#2515
கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல்
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே

#2516
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே

#2517
கோல பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ

#2518
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே

#2519
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே

#2520
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே

#2521
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே

#2522
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

#2523
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே

#2524
திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே

#2525
மெல்லியல் ஆக்கை கிருமி குருவில் மிளிர்தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னை
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லா கொள்வதோ உண்டு பண்டுபண்டே

#2526
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே

#2527
ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே

#2528
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான்
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே

#2529
அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய்
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய்
மழை கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே

#2530
வார் ஆயின முலையாள் இவள் வானோர் தலைமகன் ஆம்
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய்
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ்
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசு-மினே

#2531
வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே

#2532
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே

#2533
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே

#2534
புல குண்டல புண்டரீகத்த போர் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே

#2535
கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே

#2536
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு
உள பெரும் காதலின் நீளியவாய் உள ஓங்கு முந்நீர்
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன்
தள பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே

#2537
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே

#2538
வாசகம் செய்வது நம்பரமே தொல்லை வானவர்-தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால்
தாயவனாய் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே

#2539
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன்
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே

#2540
வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
தண் மென் கமல தடம் போல் பொலிந்தன தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே

#2541
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாம சொல் கற்றனமே

#2542
கற்று பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம்
உற்று பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம்
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ்
உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் எம்மை உண்கின்றவே

#2543
உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே

#2544
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே

#2545
மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலை பொன் வாசிகையும்
தோய் தழை பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ்
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே

#2546
கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான்
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம்
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
வார் ஏற்று இள முலையாய் வருந்தேல் உன் வளை திறமே

#2547
வாய் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் முடி மேல்
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே

#2548
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம்பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே

#2549
சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கரும் திணிம்பை
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே

#2550
வால் வெண் நிலவு உலகு ஆர சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும்
சால்பின் தகைமை-கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே

#2551
தளர்ந்தும் முறிந்தும் வரு திரை பாயல் திரு நெடும் கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே

#2552
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவ
குலாகின்ற வெம் சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறி
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே

#2553
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே

#2554
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே

#2555
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல்
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே

#2556
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும்
பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே

#2557
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே

#2558
உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளை
பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே

#2559
எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள்
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே

#2560
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
முளரி குரம்பை இதுஇதுவாக முகில்_வண்ணன் பேர்
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே

#2561
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்குஅங்கு எல்லாம்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என்தன் மாணிக்கமே

#2562
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே

#2563
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும்
முடை கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே

#2564
புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின்
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே

#2565
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன்
திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும்
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே

#2566
தீவினைக்கு ஆரு நஞ்சை நல்வினைக்கு இன் அமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால்
தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே

#2567
தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால்
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம்
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே

#2568
சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும்
ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலி-மாட்டு
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே

#2569
பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று
காணலும் ஆம்-கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே

#2570
காலை வெய்யோற்கு முன் ஓட்டு கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நல் ஞான துறை படிந்து ஆடி கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே

#2571
மை படி மேனியும் செந்தாமரை கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்
எப்படி ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே

#2572
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே

#2573
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே

#2574
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணார கண்டு
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே

#2575
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும்
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே

#2576
ஈன சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

#2577
நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர்
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே

நம்மாழ்வார் – திருவாசிரியம்


#2578
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செ வாய்
திகழ் பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண்வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த
தாமரை உந்தி தனி பெரு நாயக
மூ_உலகு அளந்த சேவடியோயே

#2579
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆ
ருயிர் உருகி உக்க நேரிய காதல்
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு
அசைவோர் அசைக திருவொடு மருவிய
இயற்கை மாயா பெரு விறல் உலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே

#2580
குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே
இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே

#2581
ஊழி-தோறு ஊழி ஓவாது வாழிய
என்று யாம் தொழ இசையும்-கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும்பாழ் காலத்து இரும் பொருட்கு
எல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான்முக கொழு முளை
ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி
மூ_உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே

#2582
மா முதல் அடி போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஒன்று விண் செலீஇ நான்முக புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ தாமரை காடு
மலர் கண்ணொடு கனி வாய் உடையதும்
ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்து அன்ன
கற்பக காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே

#2583
ஓஓ உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க
மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தான் அறி
தெய்வம் பேணுதல் தனாது
புல்லறிவாண்மை பொருந்த காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாய பிறவியுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே

#2584
நளிர் மதி சடையனும் நான்முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே

நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி


#2585
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம் நல் பூவை
பூ ஈன்ற வண்ணன் புகழ்

#2586
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை

#2587
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என்

#2588
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
கரும் சோதி கண்ணன் கடல் புரையும் சீல
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று

#2589
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ அம்மா காட்டும் நெறி

#2590
நெறி காட்டி நீக்குதியோ நின்-பால் கரு மா
முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய்
என் செய்தால் என் படோம் யாம்

#2591
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த
அம்மா நின் பாதத்து அருகு

#2592
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம்
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய
நுண்பு உடையீர் நும்மை நுமக்கு

#2593
நுமக்கு அடியோம் என்றுஎன்று நொந்து உரைத்து என் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு

#2594
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே
நாமா மிக உடையோம் நாழ்

#2595
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே ஆழாத
பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ
நீரும் நீ ஆய் நின்ற நீ

#2596
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே நீ என்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு

#2597
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மால் காட்டு உன் மேனி சாய்

#2598
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் நீ யார் போய்
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
பாம்பார் வாய் கைம் நீட்டல் பார்த்து

#2599
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம்
தம் மேனி தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய
செம் மேனி கண்வளர்வார் சீர்

#2600
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து

#2601
சூழ்ந்து அடியார் வேண்டின-கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
தாள் வரை வில் ஏந்தினார் தாம்

#2602
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல் உருவை யார் அறிவார் சொல்லு

#2603
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக
காத்தானை காண்டும் நீ காண்

#2604
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் மாணி
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று

#2605
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதைய
கார் உருவன் தான் நிமிர்த்த கால்

#2606
காலே பொத திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து

#2607
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எ உயிர்க்கும் தான்

#2608
தானே தனி தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்

#2609
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே சீர் ஆர்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இன தலைவன் கண்ணனால் யான்

#2610
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை
கானும் மலையும் புக கடிவான் தான் ஓர்
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து

#2611
அடியால் படி கடந்த முத்தோ அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று

#2612
அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும்
கட்கண்ணால் காணாத அ உருவை நெஞ்சு என்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து

#2613
உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர
தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு

#2614
இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு

#2615
அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழல
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ
தடம் கடலை மேயார் தமக்கு

#2616
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது

#2617
யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
பாறுபாறு ஆக்கினான்-பால்

#2618
பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழி
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று

#2619
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை
வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான்
அன்புடையன் அன்றே அவன்

#2620
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர்
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம்
அவனே என தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம்

#2621
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய்
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம்
அது கரமே அன்பால் அமை

#2622
அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள்
ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை

#2623
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்
போய் உபகாரம் பொலிய கொள்ளாது அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு

#2624
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே
போய் போஒய் வெம் நரகில் பூவியேல் தீ பால
பேய் தாய் உயிர் கலாய் பால் உண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி

#2625
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி இடிய வாங்கி வலிய நின்
பொன் ஆழி கையால் புடைத்திடுதி கீளாதே
பல் நாளும் நிற்கும் இ பார்

#2626
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை

#2627
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ
மன துயரை மாய்க்கும் வகை

#2628
வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும்
மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
மேலை தாம் செய்யும் வினை

#2629
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன் அடிக்கள் நான்

#2630
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும்
தேங்கு ஓத நீர் உருவன் செங்கண்மால் நீங்காத
மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதி ஆம் நெஞ்சே நினை

#2631
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு

#2632
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே
கொன்றானையே மனத்து கொண்டு

#2633
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான்
வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள்
கார் உருவம் காண்-தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேர் உரு என்று எம்மை பிரிந்து

#2634
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால்
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல்
மா வாய் பிளந்தார் மனம்

#2635
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்க்கு மாண்பு

#2636
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
உண்ண வாய் தான் உறுமோ ஒன்று

#2637
ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்

#2638
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் ஆன் ஈன்ற
கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆஆ மருங்கு

#2639
மருங்கு ஓதம் மோதும் மணி நாக_அணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மன கவலை தீர்ப்பார் வரவு

#2640
வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி

#2641
வழி தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால்

#2642
மாலே படி சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால்
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு

#2643
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்
பேர் ஓதம் சிந்து திரை கண்வளரும் பேராளன்
பேர் ஓத சிந்திக்க பேர்ந்து

#2644
பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய்
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை

#2645
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள்
மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின்
தாது இலகு பூ தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீது இலகி தான் கிடக்கும் மீன்

#2646
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடு இலா வான் குடைக்கு தான் ஓர்
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள்
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின்

#2647
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பரு செவியும் ஈர்ந்த பரன்

#2648
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கைதான் தொழாவே கலந்து

#2649
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு

#2650
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது

#2651
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில்
அதுவோ பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்

#2652
கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும்
புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்து அகம்

#2653
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையர் ஆவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால்
சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து

#2654
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே
யாது ஆகில் யாதே இனி

#2655
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர்
அகத்து உலவு செம் சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின் உந்தி முதல்

#2656
முதல் ஆம் திருவுருவம் மூன்று அன்பர் ஒன்றே
முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே
புகர் இலகு தாமரையின் பூ

#2657
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண்-தோறும் பாவியேன்
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

#2658
என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உரு காட்டார் குன்று
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி

#2659
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு

#2660
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினை படலம்
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல்
உலகு அளந்த மூர்த்தி உரை

#2661
உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி ஆகும் துணை

#2662
துணை நாள் பெரும் கிளையும் தொல் குலமும் சுற்றத்து
இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில்
ஓவா தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக உண்

#2663
உள் நாட்டு தேசு அன்றே ஊழ்வினையை அஞ்சுமே
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே மண் நாட்டில்
ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு

#2664
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான்
பாதமே ஏத்தா பகல்

#2665
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார்
செழும் பரவை மேயார் தெரிந்து

#2666
தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து

#2667
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து

#2668
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே
தங்கத்தான் ஆமேலும் தங்கு

#2669
தங்கா முயற்றியவாய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத
தண் அம் பால் வேலைவாய் கண்வளரும் என்னுடைய
கண்ணன்-பால் நல் நிறம் கொள் கார்

#2670
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது

#2671
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்

6.திருமங்கை ஆழ்வார் – திருவெழுக்கூற்றிருக்கை


#2672
ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில்
ஒரு முறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில்
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூ_உலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறை பறவை
ஏறி நால் வாய் மு மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன்
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக்கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன்
அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை
ஏழ்_உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவை பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்க செற்றனை
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய்
மூர்த்தி மூன்றாய் இரு வகை பயனாய்
ஒன்றாய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர் சோலை வண் கொடி படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த
கற்போர் புரிசை கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே

திருமங்கை ஆழ்வார் – சிறிய திருமடல்


#2673
கார் ஆர் வரை கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர் சுட்டி செங்கலுழி பேர் ஆற்று
பேர் ஆர மார்வில் பெரு மா மழை கூந்தல்
நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ2
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும்

#2674
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர்ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று

#2675
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும்

#2676
வாராது ஒழிவது ஒன்று உண்டே அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டு காக்கை பின் போவதே
ஏர் ஆர் இள முலையீர் என்தனக்கு உற்றது தான்

#2677
கார் ஆர் குழல் எடுத்து கட்டி கதிர் முலையை
வார் ஆர வீக்கி மணிமேகலை திருத்தி
ஆர்ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே

#2678
ஆர்ஆர் என சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இள முலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்கு சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து

#2679
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி

#2680
தார் ஆர் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்

#2681
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு

#2682
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்

#2683
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய

#2684
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்-மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகெனோ
ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்-மின்

#2685
ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய்
வார் ஆர் வன முலையாள் மத்து ஆர பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த

#2686
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானை கண்டு அவளும்
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு

#2687
ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியளாய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்

#2688
நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு

#2689
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம்

#2690
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வன முலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால்

#2691
போர் ஆர் நெடு வேலோன் பொன்_பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை

#2692
சீர் ஆர் திருமார்பின் மேல் கட்டி செம் குருதி
சோரா கிடந்தானை குங்கும தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும்

#2693
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கி கடைந்தான் திரு துழாய்

#2694
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு

#2695
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர் நும் மகளை
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று

#2696
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை

#2697
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும்

#2698
ஈரா புகுதலும் இ உடலை தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்

#2699
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்து ஒழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன்

#2700
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்ன-கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன்

#2701
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு

#2702
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடும் கண்கள்

#2703
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்

#2704
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வன முலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்

#2705
பேராயம் எல்லாம் ஒழிய பெரும் தெருவே
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு

#2706
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை

#2707
கார் ஆர் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்

#2708
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்

#2709
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே

#2710
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல்

#2711
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள்
மன்னி அ நாகத்து_அணை மேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை

#2712
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரை கவரி வீச நில_மங்கை

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமடல்


#2713
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல்

#2714
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையை

#2715
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல்
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான்

#2716
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே நான்கினிலும்

#2717
பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலை குரம்பை துஞ்சியும் வெம் சுடரோன்

#2718
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்

#2719
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்

#2720
தொல் நெறி-கண் சென்றாரை சொல்லு-மின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரை கற்பிப்போம் யாமே அது நிற்க

#2721
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிர கண் வானவர்_கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்

#2722
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாள் நெடும் கண்

#2723
கன்னியரால் இட்ட கவரி பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த

#2724
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண்

#2725
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்

#2726
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகை மேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார்

#2727
பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளி மேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீல
சின்ன நறும் தாது சூடி ஓர் மந்தாரம்

#2728
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல்
நல் நறும் சந்தன சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்

#2729
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு

#2730
இன்ன உருவின் இமையா தடம் கண்ணார்
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே

#2731
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்

#2732
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு
அதனை யாம் தெளியோம்

#2733
மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழும் சந்தன குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய்

#2734
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்

#2735
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்

#2736
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவ தளராதார் காமவேள்

#2737
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல்

#2738
சின்ன மலர் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன்

#2739
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வள நாடு கைவிட்டு மாதிரங்கள்

#2740
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன்

#2741
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே

#2742
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி-தன் இன் உயிராம் காதலனை காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள்

#2743
கல் நவில் தோள் காளையை கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே பூம் கங்கை

#2744
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி தனஞ்சயனை
பன்னாகராயன் மட பாவை பாவை-தன்

#2745
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன்-தன்

#2746
பொன் வரை ஆகம் தழீஇ கொண்டு போய் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள்

#2747
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்து தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய

#2748
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன்

#2749
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான்

#2750
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா

#2751
மின்னும் அணி முறுவல் செ வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழை சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள்

#2752
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே
பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு

#2753
என் உறு நோய் யான் உரைப்ப கேள்-மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாட கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்

#2754
மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்

#2755
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகத குன்றின் மருங்கே ஓர்
இன் இள வஞ்சி_கொடி ஒன்று நின்றதுதான்

#2756
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே
மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய்
முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய்
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழிய போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி உகுத்த

#2757
இன் நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்-கொலோ
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரி கூட்டகத்து
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்
கல் நவில் தோள் காமன் கருப்பு சிலை வளைய
கொல் நவிலும் பூம் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன் மேல்

#2758
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன்

#2759
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லி கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து

#2760
பொன் மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமை காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின்

#2761
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிர கட்டுண்டு மாலைவாய்

#2762
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிதாய் நெடிது ஆகும்
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த

#2763
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில்_வண்ணன் காயாவின்

#2764
சின்ன நறும் பூம் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்து
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரம் கண்

#2765
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்து கொல்லாதே வல்லாளன்

#2766
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய

#2767
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழி படை தட கை வீரனை
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்

#2768
தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி-தன்

#2769
பொன் இயலும் வேள்வி-கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும்

#2770
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணை-கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த

#2771
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ்_உலகும் போய் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல்

#2772
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூம் குடந்தை போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவள குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்

#2773
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கை கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறை மேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்

#2774
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர்-தம்

#2775
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர்

#2776
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய்

#2777
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லை சித்திரகூடத்து என் செல்வனை

#2778
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழி படையானை கோட்டியூர்

#2779
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில்

#2780
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம்

#2781
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல்

#2782
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணி
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில்

#2783
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள்மதியை நான் வணங்கும்

#2784
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்

#2785
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள்

#2786
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி களவின்-கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய்

#2787
தன் வயிறார விழுங்க கொழும் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர்-தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குல பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்று

#2788
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளை தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா

#2789
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான்

#2790
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல்

7.திருவரங்கத்து அமுதனார் – இராமானுச நூற்றந்தாதி


#2791
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே

#2792
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமல பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே

#2793
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே

#2794
என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னை பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே

#2795
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே

#2796
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே

#2797
மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியை கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே

#2798
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற
திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே

#2799
இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

#2800
மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னொடும் ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன்
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே

#2801
சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே

#2802
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல்செய்யா
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே

#2803
செய்யும் பசும் துளப தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே

#2804
கதிக்கு பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலை கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே

#2805
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே

#2806
தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே

#2807
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே

#2808
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே

#2809
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ_மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே

#2810
ஆர பொழில் தென் குருகை_பிரான் அமுத திருவாய்
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரை பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரி பருகும் இராமாநுசன் என்தன் மா நிதியே

#2811
நிதியை பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே

#2812
கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூ_உலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என்தன் சேம வைப்பே

#2813
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே

#2814
மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்-தொறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய் தவம் போற்றும் புலை சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே

#2815
கார் ஏய் கருணை இராமாநுச இ கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே

#2816
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம்
மெய் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே

#2817
கொள்ள குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே

#2818
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சி பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே

#2819
கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான்
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே

#2820
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே

#2821
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ்
பூண்ட அன்பாளன் இராமாநுசனை பொருந்தினமே

#2822
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே

#2823
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே

#2824
நிலத்தை செறுத்து உண்ணும் நீச கலியை நினைப்பு அரிய
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்
புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின்
நலத்தை பொறுத்தது இராமாநுசன் தன் நய புகழே

#2825
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே

#2826
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரண சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே

#2827
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே

#2828
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே
போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே

#2829
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே

#2830
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல்
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே

#2831
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே

#2832
ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே

#2833
சுரக்கும் திருவும் உணர்வும் சொல புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியை
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லு-மினே

#2834
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர்
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே

#2835
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை
தேறும் அவர்க்கும் எனக்கும் உனை தந்த செம்மை சொல்லால்
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே

#2836
கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே

#2837
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே

#2838
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே

#2839
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூம் கமல
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே

#2840
உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே

#2841
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர்
முடிய பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே

#2842
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடை தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே

#2843
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும்
நற்பொருள் தன்னை இ நானிலத்தே வந்து நாட்டினனே

#2844
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன நாரணனை
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே

#2845
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும்
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே

#2846
கோ குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனை போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே

#2847
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள்
உற்றவரே தனக்கு உற்றவராய் கொள்ளும் உத்தமனை
நல் தவர் போற்றும் இராமாநுசனை இ நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே

#2848
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே

#2849
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அ இருளை துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே

#2850
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்-தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே

#2851
கொழுந்துவிட்டு ஓடி படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே

#2852
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள்
பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யா
பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே

#2853
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
அடியை தொடரும்படி நல்க வேண்டும் அறு சமய
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ
படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே

#2854
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேத கொழும் தண்டம் ஏந்தி குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே

#2855
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே

#2856
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்-தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே

#2857
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே

#2858
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ
தேரினில் செப்பிய கீதையின் செம்மை பொருள் தெரிய
பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே

#2859
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே

#2860
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னை சார்ந்தவரே

#2861
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்தது அ தாமரை தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே

#2862
கைத்தனன் தீய சமய கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே

#2863
வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இ தாரணியோர்கட்கு தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே

#2864
தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில்
சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே

#2865
செய்த்தலை சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே

#2866
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட பொன்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள்
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே

#2867
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே

#2868
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே

#2869
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து இந்த பூதலத்தே
மெய்யை புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே

#2870
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே

#2871
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே

#2872
தெரிவுற்ற ஞானம் செறியப்பெறாது வெம் தீவினையால்
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே

#2873
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே

#2874
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே

#2875
ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமாநுசனை தொழும் பெரியோர்
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே

#2876
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனை கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே

#2877
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்கு
உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில்
புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை பொரும் கலியே

#2878
கலி மிக்க செந்நெல் கழனி குறையல் கலை பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம்
புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே

#2879
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர்-தனக்கு ஓர்
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே

#2880
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை இரும் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே

#2881
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம்
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே

#2882
புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இ காரணம் கட்டுரையே

#2883
கட்ட பொருளை மறை பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டி களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே

#2884
தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியா பிறவி
பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னை சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே

#2885
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே

#2886
வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே

#2887
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரை தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே

#2888
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே

#2889
தற்க சமணரும் சாக்கிய பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே

#2890
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும்
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே

#2891
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே

#2892
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ்
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே

#2893
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய்
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே

#2894
கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழும் கொண்டலே

#2895
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே

#2896
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே

#2897
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே

#2898
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்ன தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ மன்னவே