நாலாயிரத் திவ்விய பிரபந்தம் – இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி

#948
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

#949
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

#950
சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அ நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

#951
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

#952
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்

#953
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

#954
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரை பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின்
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம்

#955
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம்

#956
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

#957
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம்

#958
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே

#959
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே

#960
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே

#961
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே

#962
கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே

#963
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே

#964
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே

#965
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே

#966
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே

#967
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே

#968
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

#969
முதுகு பற்றி கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர்விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே

#970
உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே

#971
பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே

#972
பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றிஊன்றி தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே

#973
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போல சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ் கடலை கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே

#974
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்-மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே

#975
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கலுறில்
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே

#976
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றா முன்
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொலி
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே

#977
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆட கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே

#978
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன்
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#979
கானிடை உருவை சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்
தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#980
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#981
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான்
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#982
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#983
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#984
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#985
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#986
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர் குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும்
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே

#987
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கரும் கடல் முந்நீர்_வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே

#988
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றி செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே

#989
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே

#990
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே

#991
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே

#992
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை கல் ஒன்று ஏந்தி இன நிரைக்கா
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே

#993
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின் குறளாய் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே

#994
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும்
தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே

#995
வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே

#996
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே

#997
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே

#998
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#999
சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1000
சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமர கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1001
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1002
இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1003
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1004
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1005
ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1006
ஊன் இடை சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தான் உடை குரம்பை பிரியும்-போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

#1007
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண்குடை கீழ் உம்பரும் ஆகுவர் தாமே

#1008
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ்
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே

#1009
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப
சிலை கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள்குன்றமே

#1010
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே

#1011
எவ்வம் வெவ் வேல் பொன்_பெயரோன் ஏதலன் இன் உயிரை
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
கவ்வும் நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே

#1012
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே

#1013
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை
திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே

#1014
முனைத்த சீற்றம் விண் சுட போய் மூ_உலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே

#1015
நா தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய் கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே

#1016
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே

#1017
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்று உடைய
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன்
செங்கையாளன் செம் சொல் மாலை வல்லவர் தீது இலரே

#1018
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர்
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1019
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும்
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1020
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1021
பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1022
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1023
எண் திசைகளும் ஏழ்_உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1024
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1025
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன்
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன்
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும்
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1026
பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம்
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே

#1027
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ் செம் சொல் மாலைகள்
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி வான் உலகு ஆள்வரே

#1028
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னை காண்பது ஓர் ஆசையினால்
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே

#1029
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1030
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1031
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1032
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1033
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1034
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1035
நோற்றேன் பல் பிறவி நுன்னை காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1036
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

#1037
கண்ணாய் ஏழ்_உலகுக்கு உயிர் ஆய எம் கார்_வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

#1038
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரை களையாயே

#1039
இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய்
விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே

#1040
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே

#1041
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே

#1042
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாக_அணையாய் குறிக்கொள் எனை நீயே

#1043
மன்னா இ மனிச பிறவியை நீக்கி
தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே

#1044
மான் ஏய் மட_நோக்கி திறத்து எதிர்வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே

#1045
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே

#1046
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே

#1047
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே

#1048
வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
ஆன அந்தணற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே

#1049
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசை
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே

#1050
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடை
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே

#1051
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே

#1052
பொங்கு போதியும் பிண்டியும் உடை புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே

#1053
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே

#1054
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே

#1055
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும்
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே

#1056
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி ஆடி பலரும் பணிந்து ஏத்தி காண்கிலார்
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே

#1057
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே

#1058
காசை ஆடை மூடி ஓடி காதல்செய் தானவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1059
தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1060
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே

#1061
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1062
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே

#1063
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1064
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1065
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன்
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1066
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

#1067
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே

#1068
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே

#1069
வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே

#1070
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே

#1071
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே

#1072
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே

#1073
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே

#1074
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே

#1075
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகி போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே

#1076
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே

#1077
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான் உலகே

#1078
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1079
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1080
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர்
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1081
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட
நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1082
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1083
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1084
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1085
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1086
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல்
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே

#1087
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே

#1088
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனை கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே

#1089
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை
காண்டவத்தை கனல் எரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே

#1090
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1091
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின்
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி
காத்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1092
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க
காய்ந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1093
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1094
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை
ஊண் ஆக பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1095
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண் ஆர கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1096
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானை தொண்டனேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே

#1097
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை
கடம் ஆரும் கரும் களிறு வல்லான் வெல் போர் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே

#1098
நண்ணாத வாள் அவுணர் இடை புக்கு வானவரை
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே

#1099
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி
நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார் வண்ண முது முந்நீர் கடல்மல்லை தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே

#1100
ஏனத்தின் உருவு ஆகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே

#1101
விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து
கண்டாரை கடல்மல்லை தலசயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே

#1102
பிச்ச சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே
கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம்
நச்சி தொழுவாரை நச்சு என்தன் நல் நெஞ்சே

#1103
புலன் கொள் நிதி குவையோடு புழை கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணி குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம்
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே

#1104
பஞ்சி சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்ச பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா
கஞ்சை கடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம்
நெஞ்சில் தொழுவாரை தொழுவாய் என் தூய் நெஞ்சே

#1105
செழு நீர் மலர் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லை தலசயனம்
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே

#1106
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம்
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே

#1107
கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லை தலசயனத்து
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் ஆவாரே

#1108
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1109
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள்
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1110
சாந்தமும் பூணும் சந்தன குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன்
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1111
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1112
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1113
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1114
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்
வளம் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1115
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1116
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே

#1117
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே

#1118
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி மூ_உலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1119
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1120
செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1121
மஞ்சு உயர் மா மணி குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1122
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1123
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும்
பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1124
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1125
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே

#1126
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே

#1127
மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே

#1128
சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1129
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தி
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1130
உரம் தரு மெல் அணை பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய் கடலுள்
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1131
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1132
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1133
திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1134
இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனை கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1135
குடை திறல் மன்னவனாய் ஒருகால் குரங்கை படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1136
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட கடல் போல முழங்கும் குரல் கடுவாய்
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே

#1137
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே

#1138
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1139
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1140
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட
செழும் தட நீர் கமலம் தீவிகை போல் காட்டும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1141
தாங்கு_அரும் போர் மாலி பட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீம் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1142
கறை வளர் வேல் கரன் முதலா கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1143
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானை கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1144
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1145
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை
போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1146
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே

#1147
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானை காண்பர் தாமே

#1148
இரும் தண் மாநிலம் ஏனம் அதுவாய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நல் மலர் தேறல்
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே

#1149
மின்னும் ஆழி அங்கை-அவன் செய்யவள் உறை தரு திருமார்பன்
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல்
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே

#1150
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே

#1151
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே

#1152
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர்
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பக கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு திருவயிந்திரபுரமே

#1153
கூன் உலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளம் கொடியோடும்
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம் கவின் ஆரும்
வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே

#1154
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல்
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே

#1155
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர்
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே

#1156
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர்
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல்
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே

#1157
மூவர் ஆகிய ஒருவனை மூ_உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே

#1158
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாட தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய்
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1159
காயோடு நீடு கனி உண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1160
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1161
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல்
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1162
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர்
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1163
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1164
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1165
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1166
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே

#1167
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
கார் ஆர் புயல் கை கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே

#1168
வாட மருது இடை போகி மல்லரை கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடு உயர் பூம் பொழில் தில்லை சித்திரகூடத்து உள்ளானே

#1169
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண்
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1170
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு
திண் திறல் பாட வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1171
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1172
பருவ கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து
உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இன மால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1173
எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்ய பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல
தெய்வ புள் ஏறி வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1174
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லை சித்திரகூடத்து உள்ளானே

#1175
பொங்கி அமரில் ஒருகால் பொன்_பெயரோனை வெருவ
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய்
சிங்க உருவின் வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1176
கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழ்_உலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை
திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே

#1177
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார்
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தான் இவை கற்று வல்லார் மேல் சாரா தீவினை தானே

#1178
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1179
நான்முகன் நாள் மிகை தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1180
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய் அணைந்து களை களையாது ஏறும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1181
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால்
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1182
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1183
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1184
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1185
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1186
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி
துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே

#1187
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முக தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே

#1188
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆருயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும்
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே

#1189
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே

#1190
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே

#1191
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே

#1192
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே

#1193
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே

#1194
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ
புலவ புண்ணியனே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே

#1195
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே

#1196
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே

#1197
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன்
வல்லராய் உரைப்பார்க்கு இடம் ஆகும் வான் உலகே

#1198
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே

#1199
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே

#1200
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே

#1201
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே

#1202
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே

#1203
தார் ஆய தன் துளவம் வண்டு உழுத வரை மார்பன்
போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதி திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ

#1204
கொண்டு அரவ திரை உலவு குரை கடல் மேல் குலவரை போல்
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ

#1205
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தை குடம் ஆடி
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே

#1206
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே

#1207
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ் மாலை
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே

#1208
கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ

#1209
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளி போல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ

#1210
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குல பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ

#1211
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ

#1212
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர்-கொலோ

#1213
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்-கொலோ

#1214
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ

#1215
முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ

#1216
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணை தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ

#1217
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே

#1218
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1219
முதலை தனி மா முரண் தீர அன்று முது நீர் தட செம் கண் வேழம் உய்ய
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம்
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1220
கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1221
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1222
இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான்
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1223
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1224
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில்
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1225
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1226
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து
பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே

#1227
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்க களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே

#1228
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1229
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1230
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1231
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1232
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1233
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளை பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1234
விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில்
இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால்
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1235
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும்
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1236
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1237
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே

#1238
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1239
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1240
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1241
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1242
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1243
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1244
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1245
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1246
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

#1247
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே

#1248
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல்
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே

#1249
யாவருமாய் யாவையுமாய் எழில் வேத பொருள்களுமாய்
மூவருமாய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத்தேவனார்தொகையே

#1250
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும்
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்
தேன் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே

#1251
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நல் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே

#1252
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம்
தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல்
திண் திறலார் பயில் நாங்கை திருத்தேவனார்தொகையே

#1253
ஞாலம் எல்லாம் அமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம்
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல்
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே

#1254
ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்
சேடு ஏறு பொழில் தழுவு திருத்தேவனார்தொகையே

#1255
வார் ஆரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்
சீர் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே

#1256
கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம்
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே

#1257
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார்தொகை மேல்
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே

#1258
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர வண்புருடோத்தமமே

#1259
பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில்
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே

#1260
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே

#1261
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு
ஒருங்க மல்லரை கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே

#1262
சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே

#1263
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதர கால் நிமிர்த்தருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே

#1264
உளைய ஒண் திறல் பொன்_பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே

#1265
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே

#1266
இந்து வார் சடை ஈசனை பயந்த நான்முகனை தன் எழில் ஆரும்
உந்தி மா மலர் மீமிசை படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய்
மந்தி மாம்பணை மேல் வைகும் நாங்கூர் வண்புருடோத்தமமே

#1267
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில்
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே

#1268
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே

#1269
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
மறை பெரும் பொருளை வானவர் கோனை கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே

#1270
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
கடல்_நிற_வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே

#1271
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே

#1272
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே
தே மலர் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
காமனை பயந்தான்-தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே

#1273
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே

#1274
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை
செம் சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
அஞ்சன குன்றம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே

#1275
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை
தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே

#1276
களங்கனி_வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே

#1277
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே
வானவர் கோனை கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனம்_இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றி கற்று வல்லார்கள்
மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே

#1278
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1279
பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம்
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1280
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1281
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1282
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1283
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1284
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழ பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1285
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1286
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே

#1287
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே

#1288
தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1289
கவ்வை வாள் எயிற்று வன் பேய் கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவி போந்த
தெய்வ நீர் கமழும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1290
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள்
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை
தீ தொழில் பயிலும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1291
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை
தீம் கனி நுகரும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1292
கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1293
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1294
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1295
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இ தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களும் ஆய எந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய
செம் கயல் உகளும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1296
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே

#1297
திங்கள் தோய் மாட நாங்கூர் திருமணிக்கூடத்தானை
மங்கையர்_தலைவன் வண் தார் கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே

#1298
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை
காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே

#1299
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1300
உருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ ஓட்டி
கருத்து உடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை
கருத்தனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1301
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை
கனை கழல் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1302
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து
மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1303
மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1304
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை
காத்தனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1305
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று
கா வளம் கடிது இறுத்து கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே

#1306
சந்தமாய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்-தோறும் மட மயில் ஆலும் நாங்கை
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே

#1307
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை
காவளம்பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி
கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே

#1308
கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரை களையாயே

#1309
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
செந்தாமரை நீர் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் அடியேன் இடரை களையாயே

#1310
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே

#1311
கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே

#1312
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடா வருவேன் வினை ஆயின-பாற்றே

#1313
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்
செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே

#1314
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல்வினை தீர்த்தருளாயே

#1315
வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே

#1316
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே

#1317
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் என வல்லவர் வானவர் தாமே

#1318
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1319
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும்
செம் சொலாளர் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1320
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்றுஎன்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1321
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1322
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1323
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1324
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டா செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி
பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1325
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1326
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

#1327
பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே

#1328
நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே

#1329
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே

#1330
பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மை காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே

#1331
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே

#1332
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தைதந்தை ஆவீர் அடியோமுக்
கே எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே

#1333
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில்
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே

#1334
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே

#1335
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே

#1336
எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே

#1337
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்று திரிவார் உலகத்தில்
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே

#1338
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்-பால் திருவெள்ளியங்குடி அதுவே

#1339
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவ கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே

#1340
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில்
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே

#1341
கறவை முன் காத்து கஞ்சனை காய்ந்த காளமேக திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால்
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே

#1342
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்று உறை கோயில்
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே

#1343
காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே

#1344
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில்
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே

#1345
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே

#1346
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில்
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே

#1347
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே

#1348
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான்
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே

#1349
கள்ள குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம்
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய்
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே

#1350
மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம்
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே

#1351
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம்
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள்
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே

#1352
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம்
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவின் மறையாளர் புள்ளம்பூதங்குடி தானே

#1353
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் புள்ளம்பூதங்குடி தானே

#1354
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம்
குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும
புடை ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே

#1355
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம்
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே

#1356
துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம்பூதங்குடி தானே

#1357
கற்றா மறித்து காளியன் தன் சென்னி நடுங்க நடம்பயின்ற
பொன் தாமரையாள் தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி தன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே

#1358
தாம் தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர் போல்
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே

#1359
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர் போல்
நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே

#1360
பிள்ளை உருவாய் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே

#1361
கூற்று ஏர் உருவின் குறளாய் நிலம் நீர்
ஏற்றான் எந்தை பெருமான் ஊர் போல்
சேற்று ஏர் உழவர் கோதை போது ஊண்
கோல் தேன் முரலும் கூடலூரே

#1362
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகள் ஊர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிர
கொண்டல் அதிரும் கூடலூரே

#1363
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
துக்கம் துடைத்த துணைவர் ஊர் போல்
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே

#1364
கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமரும் ஊர் போல
பெரும் தண் முல்லைப்பிள்ளை ஓடி
குருந்தம் தழுவும் கூடலூரே

#1365
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்
மலை வாழ் எந்தை மருவும் ஊர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே

#1366
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருக புகுந்த ஒருவர் ஊர் போல்
அருகு கைதை மலர கெண்டை
குருகு என்று அஞ்சும் கூடலூரே

#1367
காவி பெருநீர்_வண்ணன் கண்ணன்
மேவி திகழும் கூடலூர் மேல்
கோவை தமிழால் கலியன் சொன்ன
பாவை பாட பாவம் போமே

#1368
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே

#1369
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே
உயர் கொள் மாதவி போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய்
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே

#1370
வெய்யனாய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே

#1371
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே

#1372
மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே
கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே

#1373
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே

#1374
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே

#1375
முன் இ ஏழ்_உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே

#1376
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி
தீம் குயில் மிழற்றும் படப்பை திருவெள்ளறை நின்றானே

#1377
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐயிரண்டும்
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே

#1378
உந்தி மேல் நான்முகனை படைத்தான் உலகு உண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே

#1379
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் மணி நீள் முடி
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால்
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே

#1380
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட ஆழி தட கை குறளன் இடம் என்பரால்
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே

#1381
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்
துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே

#1382
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல்
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே

#1383
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்
குலை எடுத்த கதலி பொழிலூடும் வந்து உந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே

#1384
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே

#1385
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய
தானும் ஆய தரணி தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே

#1386
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே

#1387
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல்
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே

#1388
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர்-தம் உயிராளன் ஒலி திரை நீர் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே

#1389
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான்
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே

#1390
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும்
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின்
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே

#1391
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கை
யே ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இ உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளை செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே

#1392
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர்

#1393
தாது ஆடு வன மாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள் காண்-மின்
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே

#1394
வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த
தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே

#1395
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள்
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே

#1396
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பௌழியன் ஐம் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே

#1397
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண்குடை கீழ் மன்னவராய் பொன் உலகில் வாழ்வர் தாமே

#1398
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கரு மணியை
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த
அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே

#1399
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு
ஆராது என்று இருந்தானை கண்டது தென் அரங்கத்தே

#1400
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும்
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும்
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்
ஆன் ஆயன் ஆனானை கண்டது தென் அரங்கத்தே

#1401
வளர்ந்தவனை தடம் கடலுள் வலி உருவில் திரி சகடம்
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனை
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள்
அளந்தவனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே

#1402
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின்
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே

#1403
தம் சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது
கஞ்சனை கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெம் சினத்த கொடும் தொழிலோன் விசை உருவை அசைவித்த
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே

#1404
சிந்தனையை தவ நெறியை திருமாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே

#1405
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே

#1406
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே

#1407
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே

#1408
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1409
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1410
மன்னு மாநிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும்
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1411
மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1412
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1413
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1414
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன்
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால்
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1415
ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒருகால் உடைய தேர் ஒருவனாய் உலகில்
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1416
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்கு
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே

#1417
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே

#1418
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1419
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1420
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1421
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1422
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1423
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம்
தன்னை அஞ்சி நின் சரண் என சரணாய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1424
ஓது வாய்மையும் உவனிய பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1425
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1426
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

#1427
மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே

#1428
கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும்
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே

#1429
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே

#1430
ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து ஆகம் தன்னால்
ஒருவனை சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல்
கருவரை_வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே

#1431
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே

#1432
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கர செல்வன் தென்பேர் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே

#1433
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால்
இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான்
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்த கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே

#1434
வெண்ணெய் தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி
கண்ணி ஆர் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே

#1435
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே

#1436
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம்
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே

#1437
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலை கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆட கூடுவர் நீள் விசும்பே

#1438
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட மார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1439
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான்
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1440
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழியாமை முன நாள்
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1441
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர்
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1442
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1443
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான்
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1444
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1445
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர்
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1446
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே

#1447
நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே

#1448
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடி மேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1449
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்_நுதல் நஞ்சு உண்ண கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1450
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1451
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினையாய்
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1452
பார் எழு கடல் எழு மலை எழுமாய்
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓரெழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1453
கார் கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு அரும் நிலையினையாய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1454
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1455
காதல்செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடி புண்ணியனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1456
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை
காதல்செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே

#1457
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர் கலிகன்றி சொன்ன
பா மரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே

#1458
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1459
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே

#1460
மான் ஏய் நோக்கியர் தம் வயிற்று குழியில் உழைக்கும்
ஊன் ஏய் ஆக்கை தன்னை உதவாமை உணர்ந்துஉணர்ந்து
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த
தேனே நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1461
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து
செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே

#1462
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1463
கல்லா ஐம்புலன்கள் அவை கண்டவாறு செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1464
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இட கருதி
கூறா ஐவர் வந்து குமைக்க குடிவிட்டவரை
தேறாது உன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1465
தீ வாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1466
போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே

#1467
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர்-தம் கொடி மாநகர் கூடுவரே

#1468
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால் திருவிண்ணகரானே

#1469
துறந்தேன் ஆர்வ செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே

#1470
மான் ஏய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே

#1471
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகரானே

#1472
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனை
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே

#1473
மை ஒண் கரும் கடலும் நிலனும் மணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே

#1474
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே

#1475
முளிந்தீந்த வெம் கடத்து மூரி பெரும் களிற்றால்
விளிந்தீந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது திருவிண்ணகரானே

#1476
சொல்லாய் திருமார்வா உனக்கு ஆகி தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில்
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே

#1477
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை
கார் ஆர் புயல் தட கை கலியன் ஒலி மாலை
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே

#1478
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1479
கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1480
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தி திகழும் ஊர்
நம் கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1481
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1482
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழாத முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1483
மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன்
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான்
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1484
வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் உரை கேட்பதன் முன்
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1485
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மை
கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1486
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாத முன்
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே

#1487
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே

#1488
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான் ஊர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே

#1489
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்
சினை ஆர் தேமாம் செம் தளிர் கோதி குயில் கூவும்
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே

#1490
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர்
மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நான புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே

#1491
உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர்
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்-தோறும் நடம் ஆட
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே

#1492
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே

#1493
பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் உண்டு
புகு வாய் நின்ற போதகம் வீழ பொருதான் ஊர்
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே

#1494
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி
நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே

#1495
வெள்ளை புரவி தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர்
கொள்ளை கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும்
நள்ள கமல தேறல் உகுக்கும் நறையூரே

#1496
பாரை ஊரும் பாரம் தீர பார்த்தன்-தன்
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர்
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே

#1497
தாம துளப நீள் முடி மாயன் தான் நின்ற
நாம திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காம கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே

#1498
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும்
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1499
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1500
பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர்
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற கழல் மன்னர் மணி முடி மேல் காகம் ஏற
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1501
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர்
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1502
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1503
தன்னாலே தன் உருவம் பயந்த தானாய் தயங்கு ஒளி சேர் மூ_உலகும் தானாய் வானாய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1504
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர்
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன்
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1505
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1506
தாராளன் தண் அரங்க ஆளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே

#1507
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை
பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே

#1508
ஆளும் பணியும் அடியேனை கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே

#1509
முனியாய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய
தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில்
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே

#1510
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள் ஆர் புறவில் பூம் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட
நள் ஆர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே

#1511
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல்
களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே

#1512
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே

#1513
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தை துணித்து உகந்தான்
பள்ளி கமலத்திடை பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே

#1514
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே

#1515
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து
கந்து ஆர் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே

#1516
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே

#1517
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கை கலியன் ஒலிசெய் தமிழ் மாலை
பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழவினைகள்
மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே

#1518
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே

#1519
முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அ நீரை மீனாய் அமைத்த பெருமானை
தென் ஆலி மேய திருமாலை எம்மானை
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே

#1520
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனை செம் கமல_கண்ணானை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே

#1521
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர் துழாய் மாலை முடியானை
நாள்-தோறும் நாடி நறையூரில் கண்டேனே

#1522
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன்
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே

#1523
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே

#1524
கட்டு ஏறு நீள் சோலை காண்டவத்தை தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே

#1525
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே

#1526
பொங்கு ஏறு நீள் சோதி பொன் ஆழி-தன்னோடும்
சங்கு ஏறு கோல தட கை பெருமானை
கொங்கு ஏறு சோலை குடந்தை கிடந்தானை
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே

#1527
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன் உலகில் வானவர்க்கு புத்தேளிர் ஆகுவரே

#1528
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ_உலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே

#1529
கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே

#1530
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே

#1531
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர்
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே

#1532
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும்
மிக கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர்
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும்
புக கரந்த திருவயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே

#1533
பொன் முத்தும் அரி உகிரும் புழை கை மா கரி கோடும்
மின்ன தண் திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே

#1534
சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில்
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர்
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்_கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே

#1535
குலை ஆர்ந்த பழு காயும் பசும் காயும் பாளை முத்தும்
தலை ஆர்ந்த இளம் கமுகின் தடம் சோலை திருநறையூர்
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே

#1536
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர்
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே

#1537
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன்
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே

#1538
கிடந்த நம்பி குடந்தை மேவி கேழலாய் உலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே

#1539
விடம் தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன்
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால்
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே

#1540
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே

#1541
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே

#1542
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம்
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே

#1543
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே

#1544
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே

#1545
கடும் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையை சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே

#1546
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே

#1547
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவி தடம் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவி சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே

#1548
கறவா மட நாகு-தன் கன்று உள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை எனை பணி எந்தை பிரானே

#1549
வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும்
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே

#1550
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகி களிக்கின்றேன்
கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி
ஊரே உகந்தாயை உகந்து அடியேனே

#1551
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல்மல்லை கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே

#1552
வில் ஏர் நுதல் நெடும் கண்ணியும் நீயும்
கல் ஆர் கடும் கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் உன்னை யான் வணங்கி தொழும் ஆறே

#1553
பனி ஏய் பரம் குன்றின் பவள திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய
கனியே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே

#1554
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்தில தொத்தே
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு
கதியே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே

#1555
அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே

#1556
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே

#1557
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே

#1558
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளிய-கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ

#1559
ஓடா ஆள் அரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மை கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ

#1560
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே

#1561
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ

#1562
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்தி காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நான் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ

#1563
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயை போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ

#1564
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர்
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ

#1565
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ

#1566
ஊன் நேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீம் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ

#1567
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியை
கல் நீர மால் வரை தோள் கலிகன்றி மங்கையர்_கோன்
சொல் நீர சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே

#1568
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்ப களித்தேனே

#1569
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து தான் எனக்கு
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே

#1570
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே

#1571
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே

#1572
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே

#1573
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே

#1574
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே

#1575
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர் தாம் நுகர்கின்றது ஓர்
கனியை காதல்செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே

#1576
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே

#1577
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே

#1578
கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே

#1579
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே

#1580
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளை
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரின் பொலிகின்றாரே

#1581
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்து பொன்றி வீழ
போர் ஆளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்
பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே

#1582
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே

#1583
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே

#1584
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே

#1585
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை
கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே

#1586
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் போது ஒருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என்-கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே

#1587
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே

#1588
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருள்-கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே

#1589
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து
தேரில் பாகனாய் ஊர்ந்த தேவதேவன் ஊர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சி போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே

#1590
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர் போலும்
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள்
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே

#1591
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே

#1592
பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய்
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே

#1593
ஏடு இலங்கு தாமரை போல் செ வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாட தனி சூலம் போழ கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே

#1594
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீல கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே

#1595
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே

#1596
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும்
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே

#1597
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லி கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லி பொதும்பில் குயில் கூவும் மங்கை_வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை சொல்ல பாவம் நில்லாவே

#1598
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அம் கமல_கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே

#1599
கோ ஆனார் மடிய கொலை ஆர் மழு கொண்டருளும்
மூவா வானவனை முழுநீர்_வண்ணனை அடியார்க்கு
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதிதேவனை யான் கண்டுகொண்டு திளைத்தேனே

#1600
உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே

#1601
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே

#1602
கஞ்சனை காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை
வஞ்சன பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை
செம் சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சன_குன்றம்-தன்னை அடியேன் கண்டுகொண்டேனே

#1603
பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரி யானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும்
கரியானை அடியேன் கண்டுகொண்டு களித்தேனே

#1604
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா
உருவாய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கரு ஆர் கற்பகத்தை கண்டுகொண்டு களித்தேனே

#1605
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன்
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதி-தொறும்
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற
கலை ஆர் சொற்பொருளை கண்டுகொண்டு களித்தேனே

#1606
பேரானை குடந்தை பெருமானை இலங்கு ஒளி சேர்
வார் ஆர் வன முலையாள் மலர் மங்கை நாயகனை
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கார் ஆர் கரு முகிலை கண்டுகொண்டு களித்தேனே

#1607
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர் வான் உலகே

#1608
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவ செம் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திருமார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1609
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1610
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனை
செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1611
பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்
நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1612
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1613
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய்
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1614
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார்_வண்ணா கடல் போல் ஒளி_வண்ணா
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணா போகமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1615
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1616
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து
போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

#1617
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே

#1618
செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1619
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின்
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1620
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின்
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1621
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1622
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின்
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல்
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1623
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டி
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின்
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1624
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன்
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1625
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின்
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே

#1626
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடைய செற்ற
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின்
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும்
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே

#1627
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே

#1628
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே

#1629
தெருவில் திரி சிறு நோன்பியர் செம் சோற்றொடு கஞ்சி
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து
உருவ குறள் அடிகள் அடி உணர்-மின் உணர்வீரே

#1630
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால்
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே

#1631
வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒரு-பால்
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே

#1632
நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர் சலசயனத்து
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே

#1633
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர் சலசயனம்
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே

#1634
சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர் சலசயன
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே

#1635
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செ வாய் மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்து
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே

#1636
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே

#1637
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர் சலசயனத்து
ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே

#1638
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை
கரும்பினை கனியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1639
மெய் நல தவத்தை திவத்தை தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை
மை நிற கடலை கடல்_வண்ணனை மாலை ஆலிலை பள்ளி கொள் மாயனை
நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலை கரும்பினிடை தேறலை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1640
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ்
மங்குலை சுடரை வடமாமலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1641
பேய் முலை தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1642
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை
காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1643
துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1644
திருத்தனை திசை நான்முகன் தந்தையை தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1645
வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள்
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை
கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1646
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினை கண்கள் ஆரளவும் நின்று கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே

#1647
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள் தானே

#1648
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1649
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால்
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1650
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1651
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால்
போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1652
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால்
கடி கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1653
பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1654
செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால்
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1655
கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1656
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால்
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ

#1657
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனை கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானை கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே

#1658
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திரு தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே

#1659
நீள் நிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே

#1660
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ

#1661
உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார் கடல்_
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ

#1662
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என்தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே

#1663
வடவரை-நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே

#1664
தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர்
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே

#1665
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ணபுரம் தொழ போயினாள்
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே

#1666
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
கள் அவிழ் சோலை கணபுரம் கைதொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே

#1667
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளை
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல்
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே

#1668
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே

#1669
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும்
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன் என் கன வளையே

#1670
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே

#1671
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே

#1672
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே

#1673
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே

#1674
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வர திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே

#1675
கொங்கு மலி கரும் குவளை கண் ஆக தெண் கயங்கள்
செங்கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும்
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே

#1676
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே

#1677
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ் மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே

#1678
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ

#1679
வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம்பெருமான்
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ

#1680
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான்
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ

#1681
நீர் மலிகின்றது ஓர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம்பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ

#1682
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி
பார் ஆர் உலகம் பரவ பெரும் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம்பெருமான்
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ

#1683
மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரை பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ

#1684
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன்
காமன் தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ

#1685
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல்
கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ

#1686
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
கந்தம் கமழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ

#1687
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
கண்ட சீர் வென்றி கலியன் ஒலி மாலை
கொண்டல்_நிற_வண்ணன் கண்ணபுரத்தானை
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ

#1688
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே

#1689
மாரி மா கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே

#1690
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே

#1691
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெம் திறல் கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே

#1692
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில்
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே

#1693
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே

#1694
கலங்க மா கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால்
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே

#1695
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி
தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே

#1696
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே

#1697
வார் கொள் மென் முலை மடந்தையர் தடம் கடல்_வண்ணனை தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த
கார் கொள் பைம் பொழில் மங்கையர்_காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே

#1698
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1699
பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப
கரும் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1700
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்
வல் ஆள் அரக்கர் குல பாவை வாட முனி-தன் வேள்வியை
கல்வி சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1701
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகலுற்று
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1702
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1703
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள்
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன்
கரும் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1704
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன்
கலை மா சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1705
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும்
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1706
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே

#1707
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன்
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே

#1708
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள்
குயம் மிடை தட வரை அகலம் அது உடையவர்
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்
கயம் மிடை கணபுரம் அடிகள்-தம் இடமே

#1709
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே

#1710
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை
மயலுற வரை குடை எடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல்
கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே

#1711
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள்
காதல்செய் கணபுரம் அடிகள்-தம் இடமே

#1712
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ
கண்டவர் கணபுரம் அடிகள்-தம் இடமே

#1713
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே

#1714
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர்
கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே

#1715
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே

#1716
புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும்
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை
கலம் மனு கணபுரம் அடிகள்-தம் இடமே

#1717
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே

#1718
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின்
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன்
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள்
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1719
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1720
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும்
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1721
உளைந்த அரியும் மானிடமும் உடனாய் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து
பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1722
தொழும் நீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி-பால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1723
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும்
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1724
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி
வெய்ய சீற்ற கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்து
செய்த வெம் போர் நம்பரனை செழும் தண் கானல் மணம் நாறும்
கைதை வேலி கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1725
ஒற்றை குழையும் நாஞ்சிலும் ஒரு-பால் தோன்ற தான் தோன்றி
வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண்-பால் செல்ல வெம் சமத்து
செற்ற கொற்ற தொழிலானை செம் தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1726
துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே

#1727
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும்
ஆனான் தன்னை கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே

#1728
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே

#1729
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே

#1730
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ

#1731
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்கார கனியை அடைந்து உய்ந்துபோனேனே

#1732
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே

#1733
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்தி கண்டாய்
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே

#1734
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே

#1735
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே

#1736
கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை
கண் ஆர கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று-கொலோ

#1737
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகில்_வண்ணன் கண்ணபுரத்தானை
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே

#1738
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்துஉகந்து உன்தனக்கே
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே

#1739
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே

#1740
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே

#1741
பெண் ஆனாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்
மண் ஆளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே

#1742
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே

#1743
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை
பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ
காத்தி போல் கண்ணபுரத்து உறை அம்மானே

#1744
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல்
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ணபுரத்து உறை அம்மானே

#1745
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே

#1746
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ணபுரத்து உறை அம்மானே

#1747
கண்ட சீர் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே

#1748
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன்
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும்
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1749
கவள மா கதத்த கரி உய்ய பொய்கை கராம் கொள கலங்கி உள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1750
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1751
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண்
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம்
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1752
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1753
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும்
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1754
வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை
பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன்
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1755
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
திரை கொணர்ந்து உந்தி வயல்-தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1756
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில்
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே

#1757
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே

#1758
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா

#1759
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த
சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா

#1760
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு
சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா

#1761
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா

#1762
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா

#1763
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா

#1764
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா

#1765
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்-கொல் நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா

#1766
எண் திசையும் எறி நீர் கடலும் ஏழ்_உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா

#1767
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே

#1768
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே

#1769
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு
முருகு வண்டு உன் மலர் கைதையின் நீழலில் முன் ஒரு நாள்
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம்
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே

#1770
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே

#1771
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே

#1772
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே

#1773
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே

#1774
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய்
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே

#1775
அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய்
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே

#1776
ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே

#1777
இலங்கு முத்தும் பவள கொழுந்தும் எழில் தாமரை
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல்
கலங்கல் இல்லா புகழான் கலியன் ஒலி மாலைகள்
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே

#1778
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே

#1779
முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன்
பொன்னம் கழி கானல் புள் இனங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே

#1780
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள்
பவ்வ திரை உலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே

#1781
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால்
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன்
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே

#1782
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும்
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே

#1783
சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால்
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே

#1784
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல்
தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெம் தழலே வீசுமே

#1785
தூம்பு உடை கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த
பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு
பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெம் தழலே

#1786
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே

#1787
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார்
மன்னவராய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே

#1788
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1789
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே
ஊதை திரிதந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதைமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1790
காலையும் மாலை ஒத்துண்டு கங்குல் நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1791
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன்
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1792
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி
பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1793
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்து இழையார்
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1794
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என்
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1795
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என்
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு
ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1796
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும்
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1797
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச
கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின்

#1798
அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும்
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே

#1799
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர் போலும்
செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே

#1800
வாழ கண்டோம் வந்து காண்-மின் தொண்டீர்காள்
கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர்
ஏழை செம் கால் இன் துணை நாரைக்கு இரை தேடி
கூழை பார்வை கார் வயல் மேயும் குறுங்குடியே

#1801
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மணம் நாறும் குறுங்குடியே

#1802
கவ்வை களிற்று மன்னர் மாள கலி மா தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும்
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான்
கொவ்வை கனி வாய் கிள்ளை பேசும் குறுங்குடியே

#1803
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில்
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே

#1804
வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள்
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே

#1805
நார் ஆர் இண்டை நாள்மலர் கொண்டு நம் தமர்காள்
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள்
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே

#1806
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே

#1807
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம்
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே

#1808
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1809
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1810
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று
பேணுவார் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல்
நீள் நிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1811
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல்
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1812
மஞ்சு தோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் என கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1813
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1814
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் என கொண்டு வாளா
பேயர் தாம் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல்
தீ உலாம் வெம் கதிர் திங்களாய் மங்குல் வான் ஆகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1815
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல்
சந்து சேர் மென் முலை பொன் மலர் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1816
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உய கருதினாயேல்
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

#1817
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன்
கறை உலாம் வேல் வல்ல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே

#1818
முந்துற உரைக்கேன் விரை குழல் மடவார் கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1819
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில்
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன்
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1820
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1821
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1822
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில்
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1823
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில்
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1824
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர் செழும் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1825
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில்
கதம் மிகு சினத்த கட தட களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1826
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தன பொழிலின் தாழ் சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே

#1827
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும்
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே

#1828
மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ

#1829
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூ_உலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும்-கொலோ கயல் கண்ணி எம் காரிகையே

#1830
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டு உகந்த கருமாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே

#1831
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே

#1832
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ

#1833
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ

#1834
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து
கள்ள சகடு உதைத்த கருமாணிக்க மா மலையை
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ

#1835
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மா மலையை
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியை கைதொழவும் முடியும்-கொல் என் மொய் குழற்கே

#1836
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே

#1837
தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

#1838
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி
செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே

#1839
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம்
தெய்வம் நாற வரும் திருக்கோட்டியூரானே

#1840
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரை கற்றை சந்தனம் உந்தி வந்து அசை
தெள்ளு நீர் புறவில் திருக்கோட்டியூரானே

#1841
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும்
தேறல் வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே

#1842
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர்
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர்
திங்கள் தான் அணவும் திருக்கோட்டியூரானே

#1843
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக்கோட்டியூரானே

#1844
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக்கோட்டியூரானே

#1845
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ் திருக்கோட்டியூரானே

#1846
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும்
தேவதேவபிரான் திருக்கோட்டியூரானே

#1847
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்_தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே

#1848
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே

#1849
பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே

#1850
வேலை ஆலிலை பள்ளி விரும்பிய
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியை காண்டும் நாங்கூரிலே

#1851
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனை பேரில் வணங்கி போய்
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே

#1852
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண்
விடலையை சென்று காண்டும் மெய்யத்துள்ளே

#1853
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே

#1854
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனை சென்று காண்டும் வெஃகாவுளே

#1855
பத்தர் ஆவியை பால்மதியை அணி
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினை சென்று விண்ணகர் காண்டுமே

#1856
கம்ப மா களிறு அஞ்சி கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்பு உலாம் பொழில் கோட்டியூர் கண்டு போய்
நம்பனை சென்று காண்டும் நாவாயுளே

#1857
பெற்ற மாளிகை பேரில் மணாளனை
கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த
சொல் திறம் இவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே

#1858
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1859
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1860
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான்
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இ குடி தன்னை பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1861
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1862
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து
வம்பு உலாம் கடி காவில் சிறையா வைத்ததே குற்றம் ஆயிற்று காணீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1863
ஓத மா கடலை கடந்து ஏறி உயர்கொள் மா கடி காவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1864
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1865
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1866
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1867
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில்
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ

#1868
ஏத்துகின்றோம் நா தழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மை தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடுகின்றோம் குழமணிதூரமே

#1869
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப்போனான் குழமணிதூரமே

#1870
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று
கோலம் ஆக ஆடுகின்றோம் குழமணிதூரமே

#1871
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால்
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி ஆடுகின்றோம் குழமணிதூரமே

#1872
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மை கொல்லாதே
குன்று போல ஆடுகின்றோம் குழமணிதூரமே

#1873
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம் காண் வெம் கதிரோன் சிறுவா
கொல்லவேண்டா ஆடுகின்றோம் குழமணிதூரமே

#1874
மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும் மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர் குழமணிதூரமே

#1875
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை_வண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே

#1876
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால்
சூடி போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்-மின்
கூடிக்கூடி ஆடுகின்றோம் குழமணிதூரமே

#1877
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தை
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று ஆடு-மினே

#1878
சந்த மலர் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெற பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே

#1879
வங்க மறி கடல்_வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ
செம் கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட உன்னை கூவியும் காணாதிருந்தேன்
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே

#1880
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவி குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்

#1881
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய்
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்

#1882
மைத்த கரும் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய்

#1883
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய்

#1884
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ண கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ
நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே

#1885
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடை தெய்வங்கள் காண
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய்

#1886
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்று இனம்-தோறும் மறித்து கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே

#1887
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மை பனுவல் நூல் கொண்டு செம் கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே

#1888
பூம் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்து புடைக்க புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி

#1889
தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி

#1890
தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி

#1891
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார்_வண்ணனே கொட்டாய் சப்பாணி

#1892
சோத்து என நின்னை தொழுவன் வரம் தர
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி

#1893
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நான் அவல் அப்பம் தருவன் கருவிளை
பூ அலர் நீள் முடி நந்தன் தன் போர் ஏறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி

#1894
புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து
துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளை பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி

#1895
யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாய வலவை பெண் வந்து முலை தர
பேய் என்று அவளை பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி

#1896
கள்ள குழவியாய் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டு தாயாய் வருவாளை
மெள்ள தொடர்ந்து பிடித்து ஆருயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி

#1897
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி

#1898
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1899
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால்
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன்
நன்று உண்ட தொல் சீர் மகர கடல் ஏழ் மலை ஏழ்_உலகு ஏழ் ஒழியாமை நம்பி
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1900
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால்
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1901
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1902
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ்
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1903
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1904
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1905
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1906
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே

#1907
நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல்
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே

#1908
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்து தயிர் கடைகின்றான் போலும்

#1909
காலை எழுந்து கடைந்த இ மோர் விற்க போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ

#1910
தெள்ளிய வாய் சிறியான் நங்கைகாள் உறி மேலை தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ

#1911
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான்
பொய் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ

#1912
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ

#1913
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ

#1914
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும்

#1915
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே

#1916
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராட போனேன்
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தை சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே

#1917
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரம் நாழி நெய்யை
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ

#1918
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும்

#1919
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும்

#1920
தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தாம் செய்வரோ
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும்

#1921
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல்
மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர் கலிகன்றி
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே

#1922
காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து
போது மறுத்து புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ

#1923
துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவர் ஆக முடித்து கலி கச்சு கட்டி
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ

#1924
கருள கொடி ஒன்று உடையீர் தனி பாகீர்
உருள சகடம் அது உறுக்கி நிமிர்த்தீர்
மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது என்னோ

#1925
நாமம் பலவும் உடை நாரண நம்பீ
தாம துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ

#1926
சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ

#1927
ஆன் ஆயரும் ஆநிரையும் அங்கு ஒழிய
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ

#1928
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ

#1929
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இ காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர்
எக்கே இது என் இது என் இது என்னோ

#1930
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்
கூடி குரவை பிணை கோமள பிள்ளாய்
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ

#1931
அல்லி கமல_கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி
எல்லி பொழுது ஊடிய ஊடல் திறத்தை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லி துதிப்பார் அவர் துக்கம் இலரே

#1932
புள் உரு ஆகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே

#1933
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே

#1934
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து
கார் முகில்_வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே

#1935
மல்கிய தோளும் மான் உரி அதளும் உடையவர் தமக்கும் ஓர் பாகம்
நல்கிய நலமோ நரகனை தொலைத்த கரதலத்து அமைதியின் கருத்தோ
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே

#1936
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும்
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான்
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே

#1937
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே

#1938
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா

#1939
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கரும் கடல்_வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் என கருதுகின்றாயே

#1940
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே

#1941
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த
பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே

#1942
திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள்-தன் கணவன்
மரு தார் தொல் புகழ் மாதவனை வர
திருத்தாய் செம்போத்தே

#1943
கரையாய் காக்கை பிள்ளாய்
கரு மா முகில் போல் நிறத்தன்
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர
கரையாய் காக்கை பிள்ளாய்

#1944
கூவாய் பூம் குயிலே
குளிர் மாரி தடுத்து உகந்த
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர
கூவாய் பூம் குயிலே

#1945
கொட்டாய் பல்லி குட்டி
குடம் ஆடி உலகு அளந்த
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர
கொட்டாய் பல்லி குட்டி

#1946
சொல்லாய் பைங்கிளியே
சுடர் ஆழி வலன் உயர்த்த
மல் ஆர் தோள் வடவேங்கடவனை வர
சொல்லாய் பைங்கிளியே

#1947
கோழி கூ என்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று
கோழி கூ என்னுமால்

#1948
காமற்கு என் கடவேன்
கரு மா முகில்_வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய
காமற்கு என் கடவேன்

#1949
இங்கே போதும்-கொலோ
இன வேல் நெடும் கண் களிப்ப
கொங்கு ஆர் சோலை குடந்தை கிடந்த மால்
இங்கே போதும்-கொலோ

#1950
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன்

#1951
தொண்டீர் பாடு-மினோ
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன்
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடு-மினோ

#1952
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே-கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன்

#1953
காரும் வார் பனி கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை தான் ஈரும் என்னையே

#1954
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெம் கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண் திரை புணரி வண்ணனார்
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே

#1955
அங்கு ஓர் ஆய் குலத்துள் வளர்ந்து சென்று
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை-கொலோ
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே

#1956
அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே-கொலோ
பொங்கு மா கடல் புலம்புகின்றதே

#1957
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே-கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரி கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே

#1958
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து
ஆவியே இலக்கு ஆக எய்வதே

#1959
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
ஆலி வந்ததால் அரிது காவலே

#1960
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டுபண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே

#1961
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்
சென்ற மாயனை செங்கண்மாலினை
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே

#1962
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற
அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ

#1963
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய்
ஏங்கு வேய் குழல் என்னோடு ஆடும் இளமையே

#1964
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன்
அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே

#1965
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்

#1966
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல்
பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே

#1967
ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள் தாம்
பாழிமையான கனவில் நம்மை பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே

#1968
காமன் தனக்கு முறை அல்லேன் கடல்_வண்ணனார்
மா மணவாளர் எனக்கு தானும் மகன் சொல்லில்
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள்
மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே

#1969
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே

#1970
காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில்_வண்ணரை கண்களால் காணல் ஆம்-கொலோ

#1971
வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே

#1972
மன் இலங்கு பாரதத்து தேர் ஊர்ந்து மாவலியை
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ்
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர்
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே

#1973
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர்
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண்
பெரும் தோள் நெடுமாலை பேர் பாடி ஆட
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே

#1974
அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே

#1975
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி
சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார் தம்மையே

#1976
தம்மையே நாளும் வணங்கி தொழுவார்க்கு
தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே

#1977
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும்
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே

#1978
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற இவை என்ன மாயங்கள்
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே

#1979
பாடோமே எந்தை பெருமானை பாடிநின்று
ஆடோமே ஆயிரம் பேரானை பேர் நினைந்து
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடோமே கூட குறிப்பு ஆகில் நல் நெஞ்சே

#1980
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும்
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்_வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப்பெற்றோமே

#1981
பெற்று ஆரார் ஆயிரம் பேரானை பேர் பாட
பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை
கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல்
உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே

#1982
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர்
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே

#1983
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும்
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே

#1984
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிரம் மண் சுமந்த வடகுன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே

#1985
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே

#1986
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே

#1987
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே

#1988
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர்
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே

#1989
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே

#1990
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி உக உண்டு வெண்ணெய் மருவி
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே

#1991
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ்
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே

#1992
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே

#1993
தந்தை தளை கழல தோன்றி போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே

#1994
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏச போய் ஆய்ப்பாடி
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இ
ஏழ்_உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே

#1995
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே

#1996
வண்ண கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ
கண்ணி குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே

#1997
கன்ற பறை கறங்க கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே

#1998
கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே

#1999
பார் மன்னர் மங்க படைதொட்டு வெம் சமத்து
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே

#2000
கண்டார் இரங்க கழிய குறள் உருவாய்
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ்_உலகுக்கும் மிக்கான் காண் சாழலே

#2001
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே

#2002
மை நின்ற கரும் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம்
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர்
எ நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்-மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே

#2003
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம்
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே

#2004
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய்
ஒற்றை கை வெண் பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட
கொற்ற போர் ஆழியான் குணம் பரவா சிறு தொண்டர் கொடிய ஆறே

#2005
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம்
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனி தலைவன் முழங்கு ஒளி சேர் திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட
கனி களவ திருவுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே

#2006
பார் ஆரும் காணாமே பரவை மா நெடும் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே

#2007
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே

#2008
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே

#2009
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட
நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே

#2010
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே

#2011
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கை கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே

#2012
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலை
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே

#2013
நீள்வான் குறள் உருவாய் நின்று இரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை
கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே

#2014
தூயானை தூய மறையானை தென் ஆலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே

#2015
கூடா இரணியனை கூர் உகிரால் மார்வு இடந்த
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை
தோடு ஆர் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே

#2016
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
கையானை கை தொழா கை அல்ல கண்டாமே

#2017
கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்ட-கால்
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே

#2018
கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே

#2019
வெறி ஆர் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானை செம் கண் நெடியானை சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே

#2020
தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமா கொண்டான் தட மலர் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே

#2021
மெய் நின்ற பாவம் அகல திருமாலை
கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கை நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை
ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே

#2022
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ

#2023
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி
காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல்
ஆற்ற துளங்கா நிற்பன் ஆழி வலவா

#2024
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல்
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா

#2025
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி
இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா

#2026
கொள்ள குறையாத இடும்பை குழியில்
தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி
வெள்ளத்து இடைப்பட்ட நரி இனம் போலே
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா

#2027
படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே

#2028
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்
பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ

#2029
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ

#2030
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரை கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே

#2031
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன்-தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம்மேல்
என்றும் வினை ஆயின சாரகில்லாவே

திருமங்கை ஆழ்வார் – திருக்குறுந்தாண்டகம்


#2032
நிதியினை பவள தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாள கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே

#2033
காற்றினை புனலை தீயை கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே

#2034
பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற
மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே

#2035
கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் உலகம் கொண்ட
பூ கெழு வண்ணனாரை போதர கனவில் கண்டு
வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே

#2036
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன்
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே

#2037
மூவரில் முதல்வன் ஆய ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே

#2038
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்தன் தலை மிசை மன்னுவாரே

#2039
வானிடை புயலை மாலை வரையிடை பிரசம் ஈன்ற
தேனிடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார்
மானிட பிறவி அந்தோ மதிக்கிலர் கொள்க தம்தம்
ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே

#2040
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போல குழையுமால் என்தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே

#2041
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன்
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில்_வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே

#2042
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே

#2043
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மை இல் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே

#2044
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினை கண்டுகொண்டு என் கண் இணை களிக்குமாறே

#2045
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே

#2046
முன் பொலா இராவணன்-தன் முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே

#2047
மாய மான் மாய செற்று மருது இற நடந்து வையம்
தாய் அ மா பரவை பொங்க தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடை சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு சூட்டுவன் தொண்டனேனே

#2048
பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார் என்பது இ உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே

#2049
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே

#2050
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே

#2051
வானவர்-தங்கள்_கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடி செங்கண்மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்து
ஊனம் அது இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே

#2052
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே

திருமங்கை ஆழ்வார் – திருநெடுந்தாண்டகம்


#2053
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செம் தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்ட-போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே

#2054
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செம் கண்ண வண்ணன் தன்னை கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே

#2055
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே

#2056
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

#2057
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே

#2058
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய
கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே

#2059
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார் வானத்து உள்ளாய் கள்வா காமரு பூம் காவிரியின் தென்-பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே

#2060
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே

#2061
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே

#2062
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே

#2063
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே

#2064
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே

#2065
முளை கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ_உலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே

#2066
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே

#2067
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே

#2068
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே

#2069
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே

#2070
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே

#2071
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாள பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே

#2072
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே

#2073
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால்
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே

#2074
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன
கள் ஊரும் பைம் துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்ட-போது
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே

#2075
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

#2076
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

#2077
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதை தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே

#2078
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே

#2079
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன்
பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே

#2080
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே

#2081
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே