முத்தொள்ளாயிரம்

பாடல் எண் எல்லைகள்

  1. கடவுள் வாழ்த்து
  2. சேரன் (2-23)
  3. சோழன் (24-52)
  4. பாண்டியன் (53-109)


சொற்பிரிப்பு முறை

கடவுள் வாழ்த்து
#1 கடவுள் வாழ்த்து
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை
முன்னம் படைத்த முதல்வனை பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர் திரை நீர் வேலி உலகு


#2 சேரன்
தாயர் அடைப்ப மகளிர் திறந்திட
தேய திரிந்த குடுமியவே ஆய் மலர்
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை
கண்டு உலாஅம் வீதி கதவு

#3
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர்
மாமையே அன்றோ இழப்பது மாமையின்
பல் நூறு கோடி பழுதோ என் மேனியில்
பொன் ஊறி அன்ன பசப்பு

#4
கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல்
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்

#5
வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும்
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார்
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என

#6
புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம்
கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான்
என்-கொல் இவர் அறிந்தவாறு

#7
கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல்
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை
காணிய சென்ற என் நெஞ்சு

#8
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு

#9
வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம்
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை
கண்டாள் ஒழிந்தாள் கலாம்

#10
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய்
செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு
சொல்லும் பழியோ பெரிது

#11
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என்
நெஞ்சம் களம்கொண்ட நோய்

#12
மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும்
சொல்லவே வேண்டும் நம குறை நல்ல
திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால்
உலகம் கிடந்த இயல்பு

#13
நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய
ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில்
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு
அழலும் என் நெஞ்சம் கிடந்து

#14
அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம்
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சு இலை வேல் கோ கோதை நாடு

#15
களிகள் களிகட்கு நீட்ட தம் கையால்
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே
பூம் புனல் வஞ்சி அகம்

#16
வானிற்கு வையகம் போன்றது வானத்து
மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து
மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர்
கோன் சேரன் கோதை என்பான்

#17
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின்
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின்
வள் இதழ் வாடாத வானோரும் வானவன்
வில் எழுதி வாழ்வர் விசும்பு

#18
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல்
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு

#19
வீறு சால் மன்னர் விரி தாம வெண்கொடையை
பாற எறிந்த பரிசயத்தால் தேறாது
செம் கண் மா கோதை சின வெம் களி யானை
திங்கள் மேல் நீட்டும் தன் கை

#20
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர்
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள்
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான்
காய் சின வேல் கோதை களிறு

#21
மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா
வயிர கடக கை வாங்கி துயர் உழந்து
புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை
கண்ணுற்று வீழ்ந்தார் களம்

#22
கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை
செம் கண் சிவப்பித்தார் நாடு

#23
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து
ஊர் அறியலாகா கிடந்தனவே போரின்
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான்
நகை இலை வேல் காய்த்தினார் நாடு

மேல்


#24 சோழன்
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன்
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை
கண்ணார காண கதவு

#25
குதலை பருவத்தே கோழி கோமானை
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய்
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர்
துலங்கு நீர் மா மருட்டி அற்று

#26
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய
நீல வலையில் கயல் போல் பிறழுமே
சாலேக வாயில்-தொறும் கண்

#27
அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும்
என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான்
திண் தேர் வளவன் திறத்து

#28
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து
பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல்
நீர் மேல் எழுந்த நெருப்பு

#29
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல
திரிதரும் பேரும் என் நெஞ்சு

#30
ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம்
கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின்
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு
காளையை கண்படையுள் பெற்று

#31
புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன்
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர்
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ
கண்ணார கண்டறியாவாறு

#32
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம்
பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்ப சென்று

#33
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம்
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு
எலாஅம் முறைகிடந்தவாறு

#34
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம்
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்

#35
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன்
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம்
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய்
கோவலர் வாய் வைத்த குழல்

#36
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன்
செங்கோன்மை செந்நின்றவாறு

#37
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும்
நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம்
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு
பெண் தன்மை இல்லை பிடி

#38
செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல்
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால்
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு
உரையாயோ யான் உற்ற நோய்

#39
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய்
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என்
தோள் அழுவம் தோன்ற தொழுது

#40
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி
அளியிடை அற்றம்பார்ப்பாய்

#41
நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு
தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய்
பண்டு அன்று பட்டினம் காப்பு

#42
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை
சேனை அறிய கிளவேனோ யானை
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி
நெடு வீதி நேர்பட்ட-போது

#43
காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன்
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே
நல் யானை கோ கிள்ளி நாடு

#44
மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ
சால மருவியதோர் தன்மைத்தால் காலையே
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன்
பொற்பு ஆர் உறந்தை அகம்

#45
மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும்
முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே
கொற்ற போர் கிள்ளி குடை

#46
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ
சிலம்பி தன் கூடு இழந்தவாறு

#47
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து
முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும்
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே
பெரும் தண் உறந்தையார் கோ

#48
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர்
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே
கல் ஆர் தோள் கிள்ளி களிறு

#49
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும்
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்
கோழியர் கோ கிள்ளி களிறு

#50
பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு

#51
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து
பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம்

#52
இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில்
ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன்
நாமம் பாராட்டாதார் நாடு

மேல்


#53 பாண்டியன்
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன்
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு
என்னை-கொல் கைம்மாறு இனி

#54
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார்
மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை
கண்-கொண்டு நோக்கல் என்பாள்

#55
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை
வெறும் கூடு காவல்கொண்டாள்

#56
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம்
கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின்
கொய் தளிர் அன்ன நிறம்

#57
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை
கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால்
யார்க்கு இடுகோ பூசல் இனி

#58
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும்
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன்
அளியானேல் அன்று என்பார் ஆர்

#59
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள்
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு

#60
புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா
நகுவாரை நாணி மறையா இகுகரையின்
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார்
கோமான் பின் சென்ற என் நெஞ்சு

#61
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை
அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன்
என் காண்பேன் என் அலால் யான்

#62
கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய்
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன்
தண் கண் அருள் பெறுமா தான்

#63
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம்
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து
என் கண் புகுந்தான் இரா

#64
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன்
கனவும் இழந்திருந்தவாறு

#65
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல்
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டிருக்க பெற்ற குணம்

#66
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை
கூட ஒரு நாள் பெற

#67
கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும்
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும்
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல்
என் பெறா வாடும் என் தோள்

#68
இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம்
கொற்கையே அல்ல படுவது கொற்கை
குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம்
கருதியார் கண்ணும் படும்

#69
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன்
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை
கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர்
அம்மனை காவல் உளேன்

#70
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல்
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும்
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என்
கண்படாவாறே உரை

#71
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என்
வாரத்தால் தோற்றேன் வளை

#72
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய்
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம்
சாலேகம் சார நட

#73
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான்
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால்
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை
ஐயப்படுவது உடைத்து

#74
போரகத்து பாயுமா பாயாது உபாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல்
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம்
கதவம் கொண்டு யாமும் தொழ

#75
ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி
கனவட்டம் கால் குடைந்த நீறு

#76
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை
மாறன் வழுதி மணவா மருள் மாலை
சீறியோர் வாடை சினந்து

#77
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல்
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம்
கோட்டு மண் கொள்ளா முலை

#78
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான்
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு

#79
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால்
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ
நாணோடு உடன்பிறந்த நான்

#80
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர்
வரி வளை நின்றன வையையார் கோமான்
புரி வளை போந்து இயம்ப கேட்டு

#81
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான்
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான்
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு

#82
கூடல் பெருமானை கூடலார் கோமானை
கூட பெறுவனேல் கூடு என்று கூடல்
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து

#83
குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம்
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின்
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல்
நாடு அறி கௌவை தரும்

#84
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால்
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய்
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர்
எல்லாம் எனக்கோ இடர்

#85
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இரா கழிந்தவாறு

#86
புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார்
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம்
இரா அளிப்பட்டது இது

#87
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல்
நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல்
மலை படுப யானை வய மாறன் கூர் வேல்
தலை படுப தார் வேந்தர் மார்பு

#88
நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும்
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு

#89
மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும்
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன்
நெடு மாட கூடல் அகம்

#90
மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும்
கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள்
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு

#91
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும்
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன்
அடி மிசையே காணப்படும்

#92
கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய்
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய்
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார்
மன்னவனே மார்பின் மறு

#93
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர்
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர்
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள்
போர் வேந்தன் பூசல் இலன்

#94
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன்
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள்
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி
முறையோ என நின்றார் மொய்த்து

#95
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா
பொன் உரைகல் போன்ற குளம்பு

#96
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள்
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே
அம் கண் மா ஞாலத்து அரசு

#97
நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன்
காமர் நெடும் குடை காவலன் ஆணையால்
ஏம மணி பூண் இமையார் திருந்து அடி
பூமி மிதியா பொருள்

#98
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன்
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய்
வேம் ஆல் வயிறெரிய வேந்து

#99
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய் இலை வேல் மாறன் களிறு

#100
உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு
மாற்றார் மதில் திறக்கும் ஆல்

#101
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும்
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன்
எறி கதிர் வேல் மாறன் களிறு

#102
அடு மதில் பாய அழிந்தன கோட்டை
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல்
தென்னவர் கோமான் களிறு

#103
வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார்
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன்
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம்

#104
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன்
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும்
புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே
பல் யானை அட்ட களத்து

#105
வாகை வன மாலை சூடி அரசு உறையும்
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றம் கொள்ளாதார் நாடு

#106
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய்
திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின்
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே
ஈன் பேய் உறையும் இடம்

#107
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான்
மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல்
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த
மண் நேரா மன்னரை கண்டு

#108
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன்
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து

#109
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல்
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல்
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின
மன்னன் மதிலாய என்று

மேல்

சீர்பிரிப்பு முறை

கடவுள் வாழ்த்து
#1 கடவுள் வாழ்த்து
மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் பின்னரும்
ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு


#2 சேரன்
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்றேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு

#3
வாமான்றேர்க் கோதையை மான்றேர்மேற் கண்டவர்
மாமையே யன்றோ இழப்பது மாமையிற்
பன்னூறு கோடி பழுதோஎன் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு

#4
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணி
லடைத்தா டனிக்கதவம் அன்னை யடைக்குமேல்
ஆயிழையாய் என்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்

#5
வரைபொரு நீண்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என

#6
புன்னாகச் சோலை புனற்றெங்கு சூழ்மாந்தை
நன்னாக நின்றலரு நன்னாடன் என்னாகங்
கங்கு லொருநாட் கனவினுட் டைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு

#7
கடும்பனித் திங்கட்டன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை
காணிய சென்றவென் னெஞ்சு

#8
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு

#9
வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென்
றருகல ரெல்லாம் அறிய ஒருகலாம்
உண்டா யிருக்கவவ் வொண்டொடியாள் மற்றவனைக்
கண்டா ளொழிந்தாள் கலாம்

#10
இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென் றஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச்
சொல்லும் பழியோ பெரிது

#11
காராட் டுதிரந்தூ யன்னை களனிழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்
னெஞ்சங் களங்கொண்ட நோய்
#12
மல்லனீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினுஞ்
சொல்லவே வேண்டும் நமகுறை நல்ல
திலகங் கிடந்த திருநுதலா யஃதால்
உலகங் கிடந்த இயல்பு

#13
நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே யென்னை யுயக்கொண்மின் போரிற்
புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்
கழலுமென் நெஞ்சங் கிடந்து

#14
அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் புள்ளினம்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு

#15
களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற்
களிகள் விதிர்த்திட்ட வெங்கட் டுளிகலந்
தோங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே
பூம்புனல் வஞ்சி யகம்

#16
வானிற்கு வையகம் போன்றது வானத்து
மீனிற் கனையார் மறமன்னர் வானத்து
மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர்
கோன்சேரன் கோதையென் பான்

#17
பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வர் விசும்பு

#18
அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வொள்வேல்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் சுரும்பொடு
வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு

#19
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற வெறிந்த பரிசயத்தால் தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை

#20
அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சால் மன்னர்
எயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கோதை களிறு

#21
மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா
வயிரக் கடகக்கை வாங்கித் துயருழந்து
புண்ணுற் றழைக்குங் குறுநரித்தே பூழியனைக்
கண்ணுற்று வீழ்ந்தார் களம்

#22
கரிபரந் தெங்குங் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையுங் கூடி எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு

#23
வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்
தூரறிய லாகா கிடந்தனவே போரின்
முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு

மேல்


#24 சோழன்
திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் உறந்தயர்கோன்
தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு

#25
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை பெறுகென்றா ளன்னை யதுபோய்
விளைந்தவா வின்று வியன்கானல் வெண்டேர்த்
துலங்குநீர் மாமருட்டி யற்று

#26
சுடரிலைவேற் சோழன்றன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத் தொடர்புடைய
நீல வலையிற் கயல்போற் பிறழுமே
சாலேக வாயிடோறுங் கண்

#27
அன்னையுங் கோல்கொண் டலைக்கும் அயலாரும்
என்னை யழியுஞ்சொற் சொல்லுவர் நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்டேர் வளவன் றிறத்து

#28
அலங்குதார்ச் செம்பியன் ஆடெழிற்றோள் நோக்கி
விலங்கியான் வேண்டா வெனினும் நலந்தொலைந்து
பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே லெழுந்த நெருப்பு

#29
நாணொருபால் வாங்க நலனொருபா லுண்ணெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் னெஞ்சு

#30
ஊட லெனவொன்று தோன்றி யலருறூஉங்
கூட லிழந்தேன் கொடியன்னாய் நீடெங்கின்
பாளையிற் றேன்றொடுக்கும் பாய்புன னீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று

#31
புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி களிமயங்கிக் காணே னிலவியசீர்
மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு

#32
கனவினுள் காண்கொடா கண்ணுங் கலந்த
நனவினுள் முன்விலக்கு நாணும் இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று

#33
கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சந்
தண்டப் படுவ தடமென்றோள் கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு

#34
என்னெஞ்சு நாணு நலனு மிவையெல்லாம்
மன்னன் புனனாடன் வௌவினான் என்னே
அரவக லல்குலாய் ஆறிலொன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள்

#35
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்

#36
அறைபறை யானை யலங்குதார்க் கிள்ளி
முறைசெயு மென்பராற் றோழி யிறையிறந்த
அங்கோ லணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு

#37
நீணீலத் தார்வளவ னின்மேலா னாகவும்
நாணீர்மை யின்றி நடத்தியால் நீணிலங்
கண்டன்மை கொண்டலருங் காவிரி நீர்நாட்டுப்
பெண்டன்மை யில்லை பிடி

#38
செங்கான் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்
நின்கான்மேல் வைப்பனென் கையிரண்டும் நன்பாற்
கரையுரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்
குரையாயோ யானுற்ற நோய்

#39
வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே
மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென் றிரக்கண்டாய்
வாளுழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோளழுவந் தோன்றத் தொழுது

#40
பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா
ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் நீயோ
களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி
அளியிடை அற்றம்பார்ப் பாய்

#41
நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையும் நீலமுந் தைவந் தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு

#42
தானைகொண் டோடுவ தாயிற்றன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ யானை
பிடிவீசும் வண்டடக்கைப் பெய்தண்டார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது

#43
காவல் உழவர் களத்தகத்துப் போரேறி
நாவலோஓ வென்றழைக்கும் நாளோதை காவலன்றன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு

#44
மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால் காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை யகம்

#45
மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை

#46
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு

#47
நின்றீமின் மன்னீர் நெருநற் றிறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே
பெருந்தண் ணுறந்தையார் கோ

#48
கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு

#49
கச்சி யொருகால் மிதியா வொருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு

#50
பாற்றின மார்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையு மோடி நரிகதிப்ப ஆற்ற
அலங்கலம் பேய்மகளி ராட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு

#51
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மாட்டி எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம்

#52
இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ் செங்காற் குழவி அரையிரவின்
ஊமன்தா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு

மேல்


#53 பாண்டியன்
காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்
யாப்படங்க வோடி யடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவந் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி

#54
வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கலென் பாள்

#55
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டாங்குச் சென்றவென் னெஞ்சறியாள் கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்

#56
களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம்

#57
வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோணலமுங் கொண்டான் இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூச லினி

#58
தானேற் றனிக்குடைக் காவலனார் காப்பதுவும்
வானேற்ற வையக மெல்லாமால் யானோ
எளியேனோர் பெண்பாலே னீர்ந்தண்டார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர்

#59
மன்னுயிர் காவல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு

#60
புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றவென் னெஞ்சு

#61
களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான் றெளியாதே
செங்காந்தண் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பே னென்னலால் யான்

#62
கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும் புனையிழாய்
என்கண் ணிவையானால் எவ்வாறோ மாமாறன்
தன்க ணருள்பெறுமா தான்

#63
தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி
களையினுமென் கைதிறந்து காட்டேன் வளைகொடுபோம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா

#64
ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறனென் கைப்பற்ற வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு

#65
கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேல்
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்

#66
அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற

#67
கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவுஞ்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடுமென் தோள்

#68
இப்பியீன் றிட்ட எறிகதிர் நித்திலங்
கொற்கையே யல்ல படுவது கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலங்
கருதியார் கண்ணும் படும்

#69
கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித் தொடியுலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானுமோர்
அம்மனைக் காவல் உளேன்

#70
என்னை உரையலென் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
கண்படா வாறே யுரை

#71
மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை

#72
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயா னின்னை யிரப்பல் கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ்
சாலேகஞ் சார நட

#73
எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன் உலாஅங்கால்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ துடைத்து

#74
போரகத்துப் பாயுமா பாயாது பாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர்வேல்
மதிவெங் களியானை மாறன்றன் மார்பங்
கதவங்கொண்ட் யாமுந் தொழ

#75
ஆடுகோ சூடுகோ ஐதார் கலந்துகொண்
டேடுகோ டாக எழுதுகோ நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு

#76
பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
அணியிழை அஞ்ச வருமால் மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து

#77
வாருயர் பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல்
ஏரிய வாயினு மென்செய்யுங் கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை

#78
நாணாக்காற் பெண்மை நலனழியும் முன்னின்று
காணாக்காற் கைவளையுஞ் சோருமால் காணேனான்
வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்டெவ்வந் தீர்வதோர் ஆறு

#79
மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கா லாயிரமுஞ் சொல்லுவேன் கண்டக்காற்
பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன்பிறந்த நான்

#80
செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு

#81
உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் புகுவான்
திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு

#82
கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவேனேல் கூடென்று கூடல்
இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும்
பிழைப்பிற் பிழைபாக் கறிந்து

#83
குடத்து விளக்கேபோற் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி புறப்படின்
ஆபுகு மாலை யணிமலையிற் றீயேபோல்
நாடறி கௌவை தரும்

#84
ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி யிருந்தாள் எனவுரைப்பர் வேற்கண்ணாய்
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோ இடர்

#85
யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்
தானூட யானுணர்த்தத் தானுணரான் தேனூறு
கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு

#86
புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர் நல்ல
விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது

#87
பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேற்
றலைபடுப தார்வேந்தர் மார்பு

#88
நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்த ரிளங்கமுகின் பாளையும் சிந்தித்
திகழ்முத்தம் போற்றோன்றுஞ் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையா னாடு

#89
மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி எங்கும்
தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூட லகம்

#90
மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளுங்
கடம்பம்பூக் கொண்டேத்தி யற்றால் தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை
இன்தமிழால் யாம்பாடும் பாட்டு

#91
செங்க ணெடியான்மேற் றேர்விசைய னேற்றியபூப்
பைங்கண்வெள் ளேற்றான்பால் கண்டற்றால் எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்

#92
கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்ப்
பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால் யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு

#93
கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாட்
போர்வேந்தன் பூச லிலன்

#94
நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத் தரசர் திறைகொள்
இறையோ வெனவந் திடம்பெறுத லின்றி
முறையோ வெனநின்றார் மொய்த்து

#95
நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரைசை யறநிமிர்ந்து பொங்கா அரசர்தம்
முன்முன்னா வீழ்ந்த முடிக ளுதைத்தமாப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு

#96
அருமணி யைந்தலை யாடரவம் வானத்
துருமேற்றை யஞ்சி யொளிக்கும் செருமிகுதோட்
செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு

#97
நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பூ ணிமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்

#98
செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன்
உருமி னிடிமுர சார்ப்ப அரவுறழ்ந்
தாமா வுகளு மணிவரையி னப்புறம்போய்
வேமால் வயிறெரிய வேந்து

#99
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லா மெமதென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு

#100
உருவத்தார்த் தென்னவ னோங்கெழில் வேழத்
திருகோடுஞ் செய்தொழில் வேறால் ஒருகோடு
வேற்றா ரகல முழுமே யொருகோடு
மாற்றார் மதில்திறக்கு மால்

#101
தோற்ற மலைகட லோசை புயல்கடாஅங்
காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் கூற்றுங்
குறியெதிர்ப்பைக் கொள்ளுந் தகைமைத்தே யெங்கோன்
எறிகதிர்வேல் மாறன் களிறு

#102
அடுமதில் பாய வழிந்தன கோட்டைப்
பிடிமுன் பழகதழில் நாணி முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேற்
றென்னவர் கோமான் களிறு

#103
வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார்
புருவ முரிவுகண் டஞ்சி நரிவெரீஇச்
சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்

#104
ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி யானையும்
புல்லார் பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே
பல்யானை யட்ட களத்து

#105
வாகை வனமாலை சூடி யரசுறையும்
ஓகை உயர்மாடத் துள்ளிருந்து கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு

#106
பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையி னுய்யாதார் தேயம் முறைமுறையின்
ஆன்போ யரிவயர்போ யாடவர்போ யாயீன்ற
ஈன்பே யுறையு மிடம்

#107
கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையாற் பிடித்தவேற்
கண்ணேரா வோச்சிக் களிறணையாக் கண்படுத்த
மண்ணேரா மன்னரைக் கண்டு

#108
தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின்
றழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் கழலடைந்து
மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமறன்
கண்ணிரத்தந் தீர்க்கு மருந்து

#109
இருங்களி றொன்று மடப்பிடி சார
லிலங்கருவி நீராற் றெளிக்கும் நலங்கிளர்வேற்
றுன்னரும்போர்க் கோதை தொடாஅன் செருக்கின
மன்னன் மதிலாய வென்று

மேல்