பாடல் எண் எல்லைகள்
சொற்பிரிப்பு முறைகடவுள் வாழ்த்து #1 கடவுள் வாழ்த்து மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர் திரை நீர் வேலி உலகு #2 சேரன் தாயர் அடைப்ப மகளிர் திறந்திட தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை கண்டு உலாஅம் வீதி கதவு #3 வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் மாமையே அன்றோ இழப்பது மாமையின் பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் பொன் ஊறி அன்ன பசப்பு #4 கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான் #5 வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என #6 புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் என்-கொல் இவர் அறிந்தவாறு #7 கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை காணிய சென்ற என் நெஞ்சு #8 ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு #9 வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை கண்டாள் ஒழிந்தாள் கலாம் #10 இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு சொல்லும் பழியோ பெரிது #11 காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் நெஞ்சம் களம்கொண்ட நோய் #12 மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் சொல்லவே வேண்டும் நம குறை நல்ல திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் உலகம் கிடந்த இயல்பு #13 நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு அழலும் என் நெஞ்சம் கிடந்து #14 அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சு இலை வேல் கோ கோதை நாடு #15 களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே பூம் புனல் வஞ்சி அகம் #16 வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற்கு அனையார் மற மன்னர் வானத்து மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் கோன் சேரன் கோதை என்பான் #17 பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் வள் இதழ் வாடாத வானோரும் வானவன் வில் எழுதி வாழ்வர் விசும்பு #18 அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு #19 வீறு சால் மன்னர் விரி தாம வெண்கொடையை பாற எறிந்த பரிசயத்தால் தேறாது செம் கண் மா கோதை சின வெம் களி யானை திங்கள் மேல் நீட்டும் தன் கை #20 அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் காய் சின வேல் கோதை களிறு #21 மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா வயிர கடக கை வாங்கி துயர் உழந்து புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை கண்ணுற்று வீழ்ந்தார் களம் #22 கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை செம் கண் சிவப்பித்தார் நாடு #23 வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து ஊர் அறியலாகா கிடந்தனவே போரின் முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் நகை இலை வேல் காய்த்தினார் நாடு மேல் #24 சோழன் திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை கண்ணார காண கதவு #25 குதலை பருவத்தே கோழி கோமானை வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் துலங்கு நீர் மா மருட்டி அற்று #26 சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய நீல வலையில் கயல் போல் பிறழுமே சாலேக வாயில்-தொறும் கண் #27 அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் திண் தேர் வளவன் திறத்து #28 அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் நீர் மேல் எழுந்த நெருப்பு #29 நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல திரிதரும் பேரும் என் நெஞ்சு #30 ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின் பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு காளையை கண்படையுள் பெற்று #31 புலவி புறக்கொடுப்பன் புல்லியின் நாண் நிற்பன் கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ கண்ணார கண்டறியாவாறு #32 கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் செங்கோல் வடுப்படுப்ப சென்று #33 கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு எலாஅம் முறைகிடந்தவாறு #34 என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ புரவலர் கொள்ளும் பொருள் #35 தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் கோவலர் வாய் வைத்த குழல் #36 அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் செங்கோன்மை செந்நின்றவாறு #37 நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு பெண் தன்மை இல்லை பிடி #38 செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு உரையாயோ யான் உற்ற நோய் #39 வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் தோள் அழுவம் தோன்ற தொழுது #40 பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப்பாய் #41 நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் பண்டு அன்று பட்டினம் காப்பு #42 தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை சேனை அறிய கிளவேனோ யானை பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி நெடு வீதி நேர்பட்ட-போது #43 காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே நல் யானை கோ கிள்ளி நாடு #44 மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ சால மருவியதோர் தன்மைத்தால் காலையே வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் பொற்பு ஆர் உறந்தை அகம் #45 மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும் முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே கொற்ற போர் கிள்ளி குடை #46 அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலம்பி தன் கூடு இழந்தவாறு #47 நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே பெரும் தண் உறந்தையார் கோ #48 கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே கல் ஆர் தோள் கிள்ளி களிறு #49 கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் கோழியர் கோ கிள்ளி களிறு #50 பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே இலங்கு இலை வேல் கிள்ளி களிறு #51 முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம் #52 இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன் நாமம் பாராட்டாதார் நாடு மேல் #53 பாண்டியன் காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு என்னை-கொல் கைம்மாறு இனி #54 வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை கண்-கொண்டு நோக்கல் என்பாள் #55 கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை வெறும் கூடு காவல்கொண்டாள் #56 களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் கொய் தளிர் அன்ன நிறம் #57 வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் யார்க்கு இடுகோ பூசல் இனி #58 தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் அளியானேல் அன்று என்பார் ஆர் #59 மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ நீர் ஒழுக பால் ஒழுகாவாறு #60 புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா நகுவாரை நாணி மறையா இகுகரையின் ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் கோமான் பின் சென்ற என் நெஞ்சு #61 களி யானை தென்னன் கனவில் வந்து என்னை அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் என் காண்பேன் என் அலால் யான் #62 கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் தண் கண் அருள் பெறுமா தான் #63 தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா #64 ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் கனவும் இழந்திருந்தவாறு #65 கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் கொண்டிருக்க பெற்ற குணம் #66 அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக செறிவார் தலை மேல் நடந்து மறி திரை மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை கூட ஒரு நாள் பெற #67 கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் என் பெறா வாடும் என் தோள் #68 இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது கொற்கை குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் கருதியார் கண்ணும் படும் #69 கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர் அம்மனை காவல் உளேன் #70 என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல் அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் கண்படாவாறே உரை #71 மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் வாரத்தால் தோற்றேன் வளை #72 துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம் சாலேகம் சார நட #73 எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை ஐயப்படுவது உடைத்து #74 போரகத்து பாயுமா பாயாது உபாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் கதவம் கொண்டு யாமும் தொழ #75 ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி கனவட்டம் கால் குடைந்த நீறு #76 பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை மாறன் வழுதி மணவா மருள் மாலை சீறியோர் வாடை சினந்து #77 வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் கோட்டு மண் கொள்ளா முலை #78 நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு #79 மாணார் கடந்த மற வெம் போர் மாறனை காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ நாணோடு உடன்பிறந்த நான் #80 செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் வரி வளை நின்றன வையையார் கோமான் புரி வளை போந்து இயம்ப கேட்டு #81 உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு #82 கூடல் பெருமானை கூடலார் கோமானை கூட பெறுவனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து #83 குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல் நாடு அறி கௌவை தரும் #84 ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் எல்லாம் எனக்கோ இடர் #85 யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் எய்தாது இரா கழிந்தவாறு #86 புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார் நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் இரா அளிப்பட்டது இது #87 பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் மலை படுப யானை வய மாறன் கூர் வேல் தலை படுப தார் வேந்தர் மார்பு #88 நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் நகை முத்த வெண்குடையான் நாடு #89 மைந்தரோடு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் நெடு மாட கூடல் அகம் #90 மடங்கா மயில்_ஊர்தி_மைந்தனை நாளும் கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை இன் தமிழால் யாம் பாடும் பாட்டு #91 செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் அடி மிசையே காணப்படும் #92 கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் மன்னவனே மார்பின் மறு #93 கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் போர் வேந்தன் பூசல் இலன் #94 நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி முறையோ என நின்றார் மொய்த்து #95 நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா பொன் உரைகல் போன்ற குளம்பு #96 அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே அம் கண் மா ஞாலத்து அரசு #97 நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன் காமர் நெடும் குடை காவலன் ஆணையால் ஏம மணி பூண் இமையார் திருந்து அடி பூமி மிதியா பொருள் #98 செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் வேம் ஆல் வயிறெரிய வேந்து #99 மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே மொய் இலை வேல் மாறன் களிறு #100 உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு மாற்றார் மதில் திறக்கும் ஆல் #101 தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் எறி கதிர் வேல் மாறன் களிறு #102 அடு மதில் பாய அழிந்தன கோட்டை பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் தென்னவர் கோமான் களிறு #103 வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் #104 ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே பல் யானை அட்ட களத்து #105 வாகை வன மாலை சூடி அரசு உறையும் ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றம் கொள்ளாதார் நாடு #106 பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே ஈன் பேய் உறையும் இடம் #107 கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த மண் நேரா மன்னரை கண்டு #108 தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் கண் இரத்தம் தீர்க்கும் மருந்து #109 இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின மன்னன் மதிலாய என்று மேல் |
சீர்பிரிப்பு முறைகடவுள் வாழ்த்து #1 கடவுள் வாழ்த்து மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் பின்னரும் ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி யுலகு #2 சேரன் தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்றேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு #3 வாமான்றேர்க் கோதையை மான்றேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது மாமையிற் பன்னூறு கோடி பழுதோஎன் மேனியிற் பொன்னூறி யன்ன பசப்பு #4 கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணி லடைத்தா டனிக்கதவம் அன்னை யடைக்குமேல் ஆயிழையாய் என்னை யவன்மே லெடுத்துரைப்பார் வாயு மடைக்குமோ தான் #5 வரைபொரு நீண்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேன்மாந்தைக் கோவே நிரைவளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார் செங்கோலன் அல்லன் என #6 புன்னாகச் சோலை புனற்றெங்கு சூழ்மாந்தை நன்னாக நின்றலரு நன்னாடன் என்னாகங் கங்கு லொருநாட் கனவினுட் டைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு #7 கடும்பனித் திங்கட்டன் கைபோர்வை யாக நெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல் ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை காணிய சென்றவென் னெஞ்சு #8 ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக் காணிய சென்று கதவடைத்தேன் நாணிப் பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு #9 வருக குடநாடன் வஞ்சிக்கோ மானென் றருகல ரெல்லாம் அறிய ஒருகலாம் உண்டா யிருக்கவவ் வொண்டொடியாள் மற்றவனைக் கண்டா ளொழிந்தாள் கலாம் #10 இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது நெஞ்சம் நிறையழித்த கள்வனென் றஞ்சொலாய் செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்குச் சொல்லும் பழியோ பெரிது #11 காராட் டுதிரந்தூ யன்னை களனிழைத்து நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ போராட்டு வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென் னெஞ்சங் களங்கொண்ட நோய் #12 மல்லனீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினுஞ் சொல்லவே வேண்டும் நமகுறை நல்ல திலகங் கிடந்த திருநுதலா யஃதால் உலகங் கிடந்த இயல்பு #13 நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய ஊரிரே யென்னை யுயக்கொண்மின் போரிற் புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் நெஞ்சங் கிடந்து #14 அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் புள்ளினம்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு #15 களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற் களிகள் விதிர்த்திட்ட வெங்கட் டுளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே பூம்புனல் வஞ்சி யகம் #16 வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் வானத்து மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான் #17 பல்யானை மன்னர் படுதிறை தந்துய்ம்மின் மல்லல் நெடுமதில் வாங்குவிற் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வர் விசும்பு #18 அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வொள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் சுரும்பொடு வண்டாடு பக்கமு முண்டு குறுநரி கொண்டாடு பக்கமும் உண்டு #19 வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற வெறிந்த பரிசயத்தால் தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை #20 அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சால் மன்னர் எயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கோதை களிறு #21 மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் துயருழந்து புண்ணுற் றழைக்குங் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம் #22 கரிபரந் தெங்குங் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு #23 வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத் தூரறிய லாகா கிடந்தனவே போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு மேல் #24 சோழன் திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம் உறந்தயர்கோன் தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு #25 குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை வதுவை பெறுகென்றா ளன்னை யதுபோய் விளைந்தவா வின்று வியன்கானல் வெண்டேர்த் துலங்குநீர் மாமருட்டி யற்று #26 சுடரிலைவேற் சோழன்றன் பாடலம் ஏறிப் படர்தந்தான் பைந்தொடியார் காணத் தொடர்புடைய நீல வலையிற் கயல்போற் பிறழுமே சாலேக வாயிடோறுங் கண் #27 அன்னையுங் கோல்கொண் டலைக்கும் அயலாரும் என்னை யழியுஞ்சொற் சொல்லுவர் நுண்ணிலைய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் றிறத்து #28 அலங்குதார்ச் செம்பியன் ஆடெழிற்றோள் நோக்கி விலங்கியான் வேண்டா வெனினும் நலந்தொலைந்து பீர்மேற் கொளலுற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல் நீர்மே லெழுந்த நெருப்பு #29 நாணொருபால் வாங்க நலனொருபா லுண்ணெகிழ்ப்பக் காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற யாமத் திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் னெஞ்சு #30 ஊட லெனவொன்று தோன்றி யலருறூஉங் கூட லிழந்தேன் கொடியன்னாய் நீடெங்கின் பாளையிற் றேன்றொடுக்கும் பாய்புன னீர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று #31 புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன் கலவி களிமயங்கிக் காணே னிலவியசீர் மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ கண்ணாரக் கண்டறியா வாறு #32 கனவினுள் காண்கொடா கண்ணுங் கலந்த நனவினுள் முன்விலக்கு நாணும் இனவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று #33 கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சந் தண்டப் படுவ தடமென்றோள் கண்டாய் உலாஅ மறுகில் உறையூர் வளவற் கெலாஅ முறைகிடந்த வாறு #34 என்னெஞ்சு நாணு நலனு மிவையெல்லாம் மன்னன் புனனாடன் வௌவினான் என்னே அரவக லல்குலாய் ஆறிலொன் றன்றோ புரவலர் கொள்ளும் பொருள் #35 தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன் மண்ணகங் காவலனே யென்பரால் மண்ணகங் காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க் கோவலர்வாய் வைத்த குழல் #36 அறைபறை யானை யலங்குதார்க் கிள்ளி முறைசெயு மென்பராற் றோழி யிறையிறந்த அங்கோ லணிவளையே சொல்லாதோ மற்றவன் செங்கோன்மை செந்நின்ற வாறு #37 நீணீலத் தார்வளவ னின்மேலா னாகவும் நாணீர்மை யின்றி நடத்தியால் நீணிலங் கண்டன்மை கொண்டலருங் காவிரி நீர்நாட்டுப் பெண்டன்மை யில்லை பிடி #38 செங்கான் மடநாராய் தென்னுறந்தை சேறியேல் நின்கான்மேல் வைப்பனென் கையிரண்டும் நன்பாற் கரையுரிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய் #39 வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென் றிரக்கண்டாய் வாளுழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென் தோளழுவந் தோன்றத் தொழுது #40 பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் நீயோ களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி அளியிடை அற்றம்பார்ப் பாய் #41 நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையும் நீலமுந் தைவந் தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு #42 தானைகொண் டோடுவ தாயிற்றன் செங்கோன்மை சேனை யறியக் கிளவேனோ யானை பிடிவீசும் வண்டடக்கைப் பெய்தண்டார்க் கிள்ளி நெடுவீதி நேர்பட்ட போது #43 காவல் உழவர் களத்தகத்துப் போரேறி நாவலோஓ வென்றழைக்கும் நாளோதை காவலன்றன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு #44 மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச் சால மருவியதோர் தன்மைத்தால் காலையே விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பார் உறந்தை யகம் #45 மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை #46 அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் எந்தை இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு #47 நின்றீமின் மன்னீர் நெருநற் றிறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே பெருந்தண் ணுறந்தையார் கோ #48 கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார்தோட் கிள்ளி களிறு #49 கச்சி யொருகால் மிதியா வொருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு #50 பாற்றின மார்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையு மோடி நரிகதிப்ப ஆற்ற அலங்கலம் பேய்மகளி ராட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு #51 முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம் #52 இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற வரியிளஞ் செங்காற் குழவி அரையிரவின் ஊமன்தா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு மேல் #53 பாண்டியன் காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித் யாப்படங்க வோடி யடைத்தபின் மாக்கடுங்கோன் நன்னலம் காணக் கதவந் துளைதொட்டார்க் கென்னைகொல் கைம்மா றினி #54 வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கலென் பாள் #55 கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென வேட்டாங்குச் சென்றவென் னெஞ்சறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறுங்கூடு காவல்கொண் டாள் #56 களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பார் இழக்க அணியாகங் கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின் கொய்தளிர் அன்ன நிறம் #57 வழுவிலெம் வீதியுள் மாறன் வருங்கால் தொழுதேனைத் தோணலமுங் கொண்டான் இமிழ்திரைக் கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால் யார்க்கிடுகோ பூச லினி #58 தானேற் றனிக்குடைக் காவலனார் காப்பதுவும் வானேற்ற வையக மெல்லாமால் யானோ எளியேனோர் பெண்பாலே னீர்ந்தண்டார் மாறன் அளியானேல் அன்றென்பார் ஆர் #59 மன்னுயிர் காவல் தனதான அவ்வுயிருள் என்னுயிரும் எண்ணப் படுமாயின் என்னுயிர்க்கே சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு #60 புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா இகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்பின் சென்றவென் னெஞ்சு #61 களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை யளியா னளிப்பானே போன்றான் றெளியாதே செங்காந்தண் மென்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பே னென்னலால் யான் #62 கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணும் நனவில் எதிர்விழிக்க நாணும் புனையிழாய் என்கண் ணிவையானால் எவ்வாறோ மாமாறன் தன்க ணருள்பெறுமா தான் #63 தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி களையினுமென் கைதிறந்து காட்டேன் வளைகொடுபோம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந் தென்கண் புகுந்தான் இரா #64 ஓராற்றான் என்கண் இமைபொருந்த அந்நிலையே கூரார்வேல் மாறனென் கைப்பற்ற வாரா நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன் கனவும் இழந்திருந்த வாறு #65 கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேல் வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற் கொண்டிருக்கப் பெற்ற குணம் #66 அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச் செறிவார் தலைமே னடந்து மறிதிரை மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக் கூட வொருநாட் பெற #67 கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவுஞ் செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும் மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால் என்பெறா வாடுமென் தோள் #68 இப்பியீன் றிட்ட எறிகதிர் நித்திலங் கொற்கையே யல்ல படுவது கொற்கைக் குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலங் கருதியார் கண்ணும் படும் #69 கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித் தொடியுலக்கை கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானுமோர் அம்மனைக் காவல் உளேன் #70 என்னை உரையலென் பேருரையல் ஊருரையல் அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந் தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென் கண்படா வாறே யுரை #71 மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும் கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார் ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென் வாரத்தால் தோற்றேன் வளை #72 துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப் பிடியேயா னின்னை யிரப்பல் கடிகமழ்தார்ச் சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ் சாலேகஞ் சார நட #73 எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான் புலாஅல் நெடுநல்வேல் மாறன் உலாஅங்கால் பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை ஐயப் படுவ துடைத்து #74 போரகத்துப் பாயுமா பாயாது பாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ கூர்வேல் மதிவெங் களியானை மாறன்றன் மார்பங் கதவங்கொண்ட் யாமுந் தொழ #75 ஆடுகோ சூடுகோ ஐதார் கலந்துகொண் டேடுகோ டாக எழுதுகோ நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு #76 பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல அணியிழை அஞ்ச வருமால் மணியானை மாறன் வழுதி மணவா மருண்மாலைச் சீறியோர் வாடை சினந்து #77 வாருயர் பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல் ஏரிய வாயினு மென்செய்யுங் கூரிய கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை #78 நாணாக்காற் பெண்மை நலனழியும் முன்னின்று காணாக்காற் கைவளையுஞ் சோருமால் காணேனான் வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டெவ்வந் தீர்வதோர் ஆறு #79 மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கா லாயிரமுஞ் சொல்லுவேன் கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நாணோ டுடன்பிறந்த நான் #80 செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை போந்தியம்பக் கேட்டு #81 உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி நகுவாய்முத் தீன்றசைந்த சங்கம் புகுவான் திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான் உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு #82 கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேல் கூடென்று கூடல் இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து #83 குடத்து விளக்கேபோற் கொம்பன்னார் காமம் புறப்படா பூந்தார் வழுதி புறப்படின் ஆபுகு மாலை யணிமலையிற் றீயேபோல் நாடறி கௌவை தரும் #84 ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால் மாற்றி யிருந்தாள் எனவுரைப்பர் வேற்கண்ணாய் கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர் எல்லாம் எனக்கோ இடர் #85 யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு #86 புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார் நில்லா யிரவே நெடிதென்பர் நல்ல விராமலர்த் தார்மாறன் வெண்சாந் தகலம் இராவளிப் பட்ட திது #87 பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேற் றலைபடுப தார்வேந்தர் மார்பு #88 நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்த ரிளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றுஞ் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையா னாடு #89 மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி எங்கும் தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூட லகம் #90 மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளுங் கடம்பம்பூக் கொண்டேத்தி யற்றால் தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன்தமிழால் யாம்பாடும் பாட்டு #91 செங்க ணெடியான்மேற் றேர்விசைய னேற்றியபூப் பைங்கண்வெள் ளேற்றான்பால் கண்டற்றால் எங்கும் முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும் #92 கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால் யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு #93 கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் நண்ணாதீர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாட் போர்வேந்தன் பூச லிலன் #94 நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் திறைகொள் இறையோ வெனவந் திடம்பெறுத லின்றி முறையோ வெனநின்றார் மொய்த்து #95 நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யறநிமிர்ந்து பொங்கா அரசர்தம் முன்முன்னா வீழ்ந்த முடிக ளுதைத்தமாப் பொன்னுரைகற் போன்ற குளம்பு #96 அருமணி யைந்தலை யாடரவம் வானத் துருமேற்றை யஞ்சி யொளிக்கும் செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு #97 நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால் ஏம மணிப்பூ ணிமையார் திருந்தடி பூமி மிதியாப் பொருள் #98 செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமி னிடிமுர சார்ப்ப அரவுறழ்ந் தாமா வுகளு மணிவரையி னப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து #99 மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு #100 உருவத்தார்த் தென்னவ னோங்கெழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் வேறால் ஒருகோடு வேற்றா ரகல முழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால் #101 தோற்ற மலைகட லோசை புயல்கடாஅங் காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளுந் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு #102 அடுமதில் பாய வழிந்தன கோட்டைப் பிடிமுன் பழகதழில் நாணி முடியுடை மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேற் றென்னவர் கோமான் களிறு #103 வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம் #104 ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி யானையும் புல்லார் பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே பல்யானை யட்ட களத்து #105 வாகை வனமாலை சூடி யரசுறையும் ஓகை உயர்மாடத் துள்ளிருந்து கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு #106 பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையி னுய்யாதார் தேயம் முறைமுறையின் ஆன்போ யரிவயர்போ யாடவர்போ யாயீன்ற ஈன்பே யுறையு மிடம் #107 கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான் மடித்தவாய் சுட்டிய கையாற் பிடித்தவேற் கண்ணேரா வோச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு #108 தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின் றழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் கழலடைந்து மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமறன் கண்ணிரத்தந் தீர்க்கு மருந்து #109 இருங்களி றொன்று மடப்பிடி சார லிலங்கருவி நீராற் றெளிக்கும் நலங்கிளர்வேற் றுன்னரும்போர்க் கோதை தொடாஅன் செருக்கின மன்னன் மதிலாய வென்று மேல் |