குண்டலகேசி கிடைத்துள்ள பாடல்கள்


#1
முன் தான் பெருமை-கண் நின்றான் முடிவு எய்து-காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே

#2
நோய்க்கு உற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்ககில்லார்
தீக்கு உற்ற காதல் உடையார் புகை தீமை ஓரார்
போய் குற்றம் மூன்றும் அறுத்தான் புகழ் கூறுவேற்கு என்
வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் வழு அல்ல அன்றே

#3
வாயுவினை நோக்கி உள மாண்ட வய நாவாய்
ஆயுவினை நோக்கி உள வாழ்க்கை அதுவே போல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத
தூயவனை நோக்கி உள துப்புரவும் எல்லாம்

#4
போற்றல் உடை நீக்குதல் பொடி துகள் மெய் பூசல்
கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுள் நிற்றல்
சார்த்தர் இடு பிச்சையர் சடை தலையர் ஆதல்
வார்த்தை இவை செய் தவம் மடிந்து ஒழுகல் என்றான்

#5
வகை எழில் தோள்கள் என்றும் மணி நிற குஞ்சி என்றும்
புகழ் எழ விகற்பிக்கின்ற பொருள் இல் காமத்தை மற்றோர்
தொகை எழும் காதல்-தன்னால் துய்த்து யாம் துடைத்தும் என்பார்
அகை அழல் அழுவம்-தன்னை நெய்யினால் அவிக்கல் ஆமோ

#6
அனல் என நினைப்பில் பொத்தி அகம் தலை கொண்ட காம
கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார்
நினைவிலா புணர்ச்சி-தன்னால் நீக்குதும் என்று நிற்பார்
புனலினை புனலினாலே யாவர் போகாமை வைப்பார்

#7
போதர உயிர்த்த ஆவி புக உயிர்க்கின்றதேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலை பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்

#8
அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகி தன் சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டா கூற்றின் யார் உய்தும் என்பார்

#9
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இ இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ

#10
கோள் வலைப்பட்டு சாவாம் கொலைக்களம் குறித்து சென்றே
மீளினும் மீள காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லா
நாள் அடிஇடுதல் தோன்றும் நம் உயிர் பருகும் கூற்றின்
வாளின்-வாய் தலை வைப்பாக்கு செல்கின்றோம் வாழ்கின்றோமா

#11
நன் கனம் நாறும் இது என்று இ உடம்பு நயக்கின்றது-ஆயின்
ஒன்பது வாயில்கள்-தோறும் உள் நின்று அழுக்கு சொரிய
தின்பது ஓர் நாயும் இழுப்ப திசை-தொறும் சீ பில்கு போழ்தின்
இன்ப நல் நாற்றம் இதன்-கண் எவ்வகையால் கொள்ளலாமே

#12
மாறுகொள் மந்தரம் என்றும் மரகத வீங்கு எழு என்றும்
தேறிட தோள்கள் திறத்தே திறந்துளி காமுற்றது-ஆயின்
பாறொடு நாய்கள் அசிப்ப பறிப்பறி பற்றிய போழ்தின்
ஏறிய இ தசை-தன்-மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ

#13
உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த பெரும் பை
மறைப்பில் விழைவிற்கு சார்வாய் மயக்குவதேல் இ உறுப்பு
குறைத்தன போல் அழுகி குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பில் கிடந்த பொழுதின் வேண்டப்படுவதும் உண்டோ

#14
எனது என சிந்தித்தலால் மற்று இ உடம்பு இன்பத்துக்கு ஆமேல்
தினை பெய்த புன்கத்தை போல சிறியவும் மூத்தவும் ஆகி
நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினை பாவி யான் எனது என்னல் ஆமோ

#15
இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை
அறம் கொள் கோல் அண்ணல் மும் மத யானையான்

#16
சீற்றம் செற்றுப்போய் நீக்கி செங்கோலினால்
கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை
மாற்றமே நவின்றான் தடுமாற்றத்து
தோற்றம் தன்னையும் காமுற தோன்றினான்

#17
மண்ணுளார் தம்மை போல்வார் மாட்டாதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறை அன்று என்பார்

#18
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறும் என்று உரைப்பது நன்று

#19
வேரி கமழ் தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொலிவு இன்றி நின்றான்
பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்

பாடல்கள் – 19
அடிகள் – 76
சொற்கள் – 463
கட்டுருபன்கள் – 13
தொடரடைவுச் சொற்கள் – 416