இ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


இக
இகணை
இகல்
இகழ்
இகா
இகு
இகுளை
இகூஉ
இங்கு
இசை
இஞ்சி
இட்டிகை
இட்டு
இட
இடங்கர்
இடர்
இடி
இடுக்கண்
இடும்பை
இடுமயிர்
இடூஉ
இடைகழி
இண்டு
இணர்
இத்தி
இதக்கை
இதணம்
இதல்
இதை
இப்பி
இம்பர்
இமிர்
இமில்
இமிழ்
இயக்கன்
இயம்
இயம்பு
இயவர்
இயவு
இயவுள்
இர
இரங்கு
இரட்டு
இரத்தி
இரலை
இரவம்
இரவல்
இரவலர்
இரவுரை
இரற்று
இரி
இரியல்
இரீஇ
இரு
இருங்குன்றம்
இருங்கோவேள்
இருப்பை
இருபிறப்பாளர்
இரும்
இரும்பு
இரும்பொறை
இருவி
இருவை
இருள்
இரை
இல்லம்
இல்லி
இலக்கம்
இலங்கு
இலங்கை
இலஞ்சி
இலம்படு
இலம்பாடு
இலவம்
இலி
இலிற்று
இவர்
இவறு
இவுளி
இழி
இழிசினன்
இழிபிறப்பாளன்
இழுக்கு
இழுகு
இழுது
இழை
இளக்கு
இளகு
இளவேனில்
இளி
இளிவரல்
இளிவரவு
இளிவு
இளை
இற்செறி
இற்றி
இற
இறடி
இறல்
இறவு
இறா
இறால்
இறாவு
இறு
இறுகிறுக்கு
இறுகிறுக
இறுகு
இறும்பு
இறும்பூது
இறுவரை
இறை
இறைகூடு
இறைகூர்
இறைகொள்
இறைச்சி
இறைஞ்சு
இன்மை
இன்னம்
இன்னை
இனை

இக

– (வி) 1. தாண்டு, கட, leap over, go beyond
2. நீங்கு, put away, eradicate

1.

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19

தொலைதூரத்தையும் தாண்டி ஒளிறும் சினமகன்ற மேனி

2.

முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40

வருத்தம் நீங்கியிருந்த முதுமை வாய்க்கப்பெற்ற இரவலனே!

மேல்


இகணை

– (பெ) ஒரு மரம், a tree
சவுக்குமரம் என்பர்.

விசும்பு உற நிவந்த மா தாள் இகணை

பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/1,2

மேல்


இகல்

1. (வி) மாறுபடு, be inimical, disgaree
– 2. (பெ) மாறுபாடு, பகை, enmity, disagreement

1.

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4

போரிட்டு மாறுபட்ட புலியைப் பிளந்த பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானை

இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ – கலி 105/48,49

இருபெரும் வேந்தர் தம்முள் மாறுபட்டு எதிர்ப்பட்ட
போர்க்களம் போன்று காட்சியளித்தது தொழு.

2.

இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72

பெரிய போர்த்தொழின்கண் மாறுபாடுற்ற வல்லைமையுடையோர்

இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே – அகம் 0/4

பகையை அழித்து, கையினில் குந்தாலியுடன் மழுப்படை

மேல்


இகழ்

1. (வி)

1. கவனக்குறைவுடன் இரு, be careless or negligent
2. ஏளனம்செய், அவமதி, insult, slight

2. (பெ) பழி, நிந்தனை, vilification, despise

1.1

எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே – நற் 98/8-10

எமது தந்தை பேணும் காவலுடைய அகன்ற மாளிகையின்
தூங்காமல் காவல்காக்கும் காவலர் சோர்ந்துபோகும் வேளை நோக்கி
இரவில் வந்து என்னைச் சந்தித்துச் செல்வதைக் காட்டிலும் கொடுமையானவை

1.2.

திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின்
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/12-14

ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை
மலர்கள் ஏளனம் செய்யும் கண்ணையுடையவளாக மாற்றிவிட்டு அவளைக் துறப்பாயேல், அது உன்
புகழுக்கு நேர்ந்த பெரிய கரும் புள்ளியாய் ஆகிவிடாதா?

2.

யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற – புறம் 40/6,9

யாங்கள், உன்னைப் பழி சொல்வோர் கழுத்து வணங்க
புகழை உரைப்போர் பொலிவு தோன்ற

மேல்


இகா

(இ.சொ) முன்னிலை அசை, a second person verbal expletive

கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12

“கேட்டால், நாம் என்னவாவது செய்யவேண்டுமோ? ஒன்றும் வேண்டாம், பெண்ணே!

மேல்


இகு

(வி) 1. தாழ்ந்துவிழு, descend
2. தாழ ஒலியெழுப்பு sound as a drum
3. பரப்பிவிடு, spread over

1.

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு – சிறு 13

மெல்லிதாகக் கீழே இறங்கும் மேகங்களின் அழகைக் கொண்டு

2.

கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – அகம் 112/14

கூட்டமான மான்கள் தாழ ஒலிக்கும் மிளகுக்கொடிகள் படரும் மலைச்சாரலில்

3.

தருகணாளர் குடர் தரீஇத் தெறுவரச்
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/10,11

இறந்துபட்ட வீர மறவர்களின் குடலை வெளியே இழுத்துக் குவியலாக
சிவந்த செவியையுடைய பருந்து அச்சம்தோன்றப் பரப்பிவிடும்

மேல்


இகுளை

(பெ) பெண்ணின் தோழி

வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/8

வள்ளைப்பாட்டைக் கூவிப்பாடுவோம் வா தோழியே நாம்

மேல்


இகூஉ

– (வி.எ) இன்னிசை அளபெடை, புடைத்துக்கொண்டு, beating (the drum)
இகு – (பறை)அறை, beat (as a drum)

இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/3,4

இனிய ஓசையுடன் முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடித்துக்கொண்டு
முரசுகளைச் சுமப்பதால் காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க,

மேல்


இங்கு

1. (வி) அழுந்தத் தங்கு, stay deep
– 2. (பெ) இந்த இடம், here, this place

1.

ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/8

ஆரக் கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம் போல வேல் மார்பில் அழுந்தித்தங்க

2.

இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3

மேல்


இசை

1. (வி) 1.இசைக்கருவிகளை வாசி, play musical instruments
2. கூறு, அறிவி, express, indicate

– 2 (பெ)

1. இனிய ஓசை, melody
2. புகழ், praise, fame

1.1

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182

1.2

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர – பொரு 66,67

விரும்பி வந்தார்க்குத் தடையில்லாத நல்ல பெரிய வாசலில்
கூறாமற் புகுந்து என் வறுமை தீர

2.1

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240

2.2

பல்லியக் கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு – சிறு 125,126

பல இசைக்கருவிகளையுடைய கூத்தரைக் காப்பவனாகிய பெரும் புகழையுடைய
நல்லியக்கோடனை விரும்பிய கருத்துடன்

மேல்


இஞ்சி

(பெ) 1. உறைப்பான கிழங்கு வகை, ginger
2. கோட்டை மதில் ramparts of a fort

1.

இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் – மது 289

2.

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92

மலையைப் போன்ற உயர்ச்சி கொண்ட விண்ணைத் தொடும் கோட்டைமதில்

மேல்


இட்டிகை

(பெ) – செங்கல், செங்கல் கட்டுமானம்

இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/13

செங்கல்லாலான நீண்ட சுவரிலுள்ள விட்டம் விழுந்ததாக

நாள் பலி மறந்த நரைக்கண் இட்டிகை – அகம் 287/6

நாள்தோறும் நடைபெறும் பலியை மறந்ததினால் வெறிச்சோடிப்போன செங்கல் மேடைb

மேல்


இட்டு

– (பெ) சிறுமை, ஒடுக்கம், smallness, narrowness

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482

கல்லை உளியால் கொத்தினாற்போன்ற ஒடுங்கிய வாயையுடைய கமண்டலம்

மேல்


இட

– (வி) – விசைப்போடு திற, forcibly open, பிள, crack, break, இடம்பெயர், dislodge

செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/6

செம்பின் மூடியை வலியத்திறந்ததைப் போல் மணம் ஒருங்கு சேர்ந்து

இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து – கலி 101/25

உயிரினங்களை அழிக்கும் எருமைக்கடா மீது ஏறிவரும் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து

உளியம்
சிதலை
ஒருங்கு முயன்றெடுத்த நனைவாய் நெடுங்கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – அகம் 81/1-5

கரடியானது,
கறையான்கள்
தம் நனைந்த வாயால் சேர்ந்து வருந்திக் கட்டிய நெடிய உச்சியை
இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் மூச்சுவிட்டு இடம்பெயர்த்து இரைதேரும்

மேல்


இடங்கர்

(பெ) முதலை வகை, estuarine crocodyle (crocodylus porosus)

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257

பார்க்க : கராம்

மேல்


இடர்

(பெ) இடையூறு, துன்பம், difficulty, distress

குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368

குன்றினிடத்தே உளவாகிய பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்தே

மேல்


இடி

1. (வி)

1. தகர், துகளாக்கு, collapse, demolish, pound
2. இடியோசை செய், thunder

 2. (பெ)

1. பொடிசெய்யப்பட்டது, powder
2. இடியோசை, thunder

1.1

இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20

கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் சென்று

1.2

கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/10

கார்காலத்தில் இடிக்கும் இடியேற்றைப் போல முழங்கும் முரசின்

2.1

இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் – மலை 512

பொடியான கற்கண்டின் கலப்பை ஒத்த நறிய வடுக்களையுடைய மாவினது

2.2

இடி என முழங்கும் முரசின் – புறம் 17/39

இடியைப் போல முழங்கும் முரசினது

மேல்


இடுக்கண்

(பெ) – பிறரால் வரும் துன்பம், misery from others

இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் – மலை 18

வருத்துதலைச் செய்யாமல் வழிச்செல்வோரைப் போக்கும்

மேல்


இடும்பை

(பெ) துன்பம், suffering

நாடன், இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8

காதலன், இரவில் வருதலாகிய துன்பத்திலிருந்து நாம் பிழைக்கவேண்டி

மேல்


இடுமயிர்

(பெ) கவரி மயிர், decorative hair
குதிரைகளின் தலையின் உச்சியில் இணைத்துத் தைக்கப்படும் அலங்கார முடி

கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 391

ஒழுங்குபட்ட பிடரியினையுடைய, அணியப்பட்ட கவரி மயிரையும் உடைய குதிரையும்

மேல்


இடூஉ

(வி.எ) 1. இடையிட்டு, intervening, happening or occurring in the middle
2. இடப்பட்டு, இட்டுக்கொண்டு, putting on
3. மேற்கொண்டு, undertaking
4. கீழே எறி, throw down

1.

இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1

(நாம் ஒன்றனைக் கருதியிருந்தோம்) அதனை இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்டாகா நின்றன
– இடூ, படூ என உகரம் நீண்டு, உகரம் பெற்று இடூஉ,படூஉ என்றாயினமை அறிக
– பின்னத்தூரார் உரை விளக்கம்

2.

கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9

செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்துகிடந்தாற் போல

3.

யாண்டு பல கழிய வேண்டுவயின் பிழையா
தாள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
நெடும் பரி புரவி கைவண் பாரி – அகம் 78/19-22

பல ஆண்டுகள் கழியவும், போரை விரும்பிச்செய்யும் இடத்தினின்றும் பெயராமல்
முயற்சியை மேற்கொண்டு வென்று, பகைவர் வாட்போரினைக் கலக்கி
நிமிர்ந்த கொம்புகளையுடைய களிற்றினையுடைய மூவேந்தரையும் பிறக்கிடச்செய்த
மிக்க விரைவினையுடைய குதிரையினையும் கைவண்மையினையும் உடைய பாரிவேளின்
– நாட்டார் உரை.
– தாள் இடூஉ – முயற்சியை மேற்கொண்டு – புலவர்.அ.மாணிக்கம் உரை விளக்கம்.
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய – அகம் 115/9

4.

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை – அகம் 115/8-11

எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு முன்னர் வாழ்த்திய, (பின்னர்) ஒடித்து எறிந்த
வளம் பொருந்திய ஒலியையுடைய வளைந்த கோட்டினை ஒத்த ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
சுடரும் பூக்களையுடைய கொன்றையினது

மேல்


இடைகழி

 (பெ) இடைக்கட்டு,
Intermediate space between the entrance door and the second doorway in an Indian old house

புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து – பட் 144,145

சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(இரேழி)களையும் உடைய
மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில்

விண்பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
உலக இடைகழி அறை வாய் – புறம் 175/6-8

விசும்பைத் தோயும் நெடிய குடையினையும் கொடி அணிந்த தேரினையும் உடைய மோரியரது
திண்ணிய ஆரம் சூழ்ந்த சக்கரம் இயங்குவதற்கு வெட்டிக் குறைக்கப்பட்ட
மலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண்

மேல்


இண்டு 

(பெ) கொடிவகை Eight-pinnate soap-pod, l. cl., Acacia intsiacaesia;
வல்லிய பெரும் தலை குருளை மாலை

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/5,6

வலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள், மாலையில்
மானை நோக்கியபடி, இண்டங்கொடிகள் படர்ந்தேறிய ஈங்கைப் புதர்களைக் கொண்ட சுரம்

மேல்


இணர்

 (பெ) கொத்து, குலை, bunch of flowers or fruits

நீடு இணர்க் கொன்றை கவின் பெற காடு – அகம் 364/5

நீண்ட கொத்துக்களைக் கொண்ட கொன்றையால் காடு அழகுபெற

இன மாவின் இணர்ப் பெண்ணை – பட் 18

இனமான மாமரங்களினையும், குலைகளையுடைய பனைகளையும்

மேல்


இத்தி

 (பெ) ஒரு வகை அத்தி மரம், White fig, l.tr., Ficus infectoria;

புல் அரை இத்தி புகர் படு நீழல் – அகம் 77/13

புல்லிய அடியினையுடைய இத்தியின் புள்ளிபட்ட நிழலிலே

மேல்


இதக்கை

 (பெ) பனங்காயின் தலையிலுள்ள தோடு, Integument on the top of a palmyra fruit

அத்த நடுகல் ஆளென உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – அகம் 365/4-6

காட்டு வழியிலுள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த
காட்டு யானையின் சிதைந்த வளமான நகம்
பெரிய பனங்காயின் தோடு போல் பெயர்ந்து விழும் இடத்தில்

மேல்


இதணம்

– (பெ) விளைநிலத்தில் உள்ள காவற்பரண், watch-tower in a corn-field

உயர் நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ – மலை 204

உயரமான இடத்தில் இருக்கும் பரணில் ஏறி, கைகளைத் தட்டி

மேல்


இதல் 

(பெ) காடை, quail
இதன் காலில் உள்ள முள், செம்முல்லையின் அரும்புக்கு உவமிக்கப்படும்.

புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை – அகம் 23/3

புதரின் மேல் உள்ள செம்முல்லையின் காடையின் முள் போன்ற சிவந்த அரும்புகள்

மேல்


இதை

 (பெ) 1. பாய்மரக்கப்பலின் பாய், sail of a ship
2. புன்செய்நிலம் field for dry cultivation

1.

வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536

வெள்ளிய பாயை விரித்த காற்றால் தரப்பட்ட வங்கக் கப்பல்

2.

இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3

புன்செய் நிலமான புனத்தில் விளைந்த வரகின் நன்றாகக் குத்திய அரிசியோடு

மேல்


இப்பி

 (பெ) சிப்பி, pealr-oyster shell

முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1

முற்றி நீண்ட சிப்பியின் முத்துப்போன்ற ஒழுங்குபட்ட மணலில்

மேல்


இம்பர்

 (பெ) இந்த உலகம், இந்த இடம், this world, this place

வம்ப வேந்தன் தானை
இம்பர்நின்றும் காண்டிரோ வரவே – புறம் 287/13,14

பகை வேந்தனின் படைகளை
இங்கிருந்தே காண்பீராக அவற்றின் வரவை

மேல்


இமிர்

 (வி) ரீங்காரம் செய், buzz
வண்டு வகைகளான சுரும்பு, தும்பி, ஞிமிறு ஆகியவை பறக்கும்போது எழுப்பும் ஒலி.

வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/3
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48
தொடிமகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18

buzzing என்பதற்குரிய தூய தமிழ்ச்சொல் இமிர்தல்.

வீணையின் ஒரு நரம்பை இழுத்து விட்டால் ‘டொய்ங்ங்ங்ங்ங்ங்..’ என்று ஒலிக்குமே
அதுவும் இமிர்தல்தான்.

கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 147

இந்த அடி இமிர்தலோடு அதன் ஒலிக்குறிப்பையும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

சில வேளைகளில் குழல், தூம்பு போன்ற துளைக் கருவிகள் மெல்லிய ஓசை எழுப்புவதுவும்
இமிர்தல் எனப்பட்டுள்ளது.

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் – பரி 19/41

மேல்


இமில்

 (பெ) காளையின் திமில், Hump on the withers of an Indian bull

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330

தன் கூட்டத்தை விட்டு விலகிய ஆடுகின்ற திமிலைக் கொண்ட நல்ல காளை

KONICA MINOLTA DIGITAL CAMERA

மேல்


இமிழ்

 (வி) இனிதாக முழங்கு, hum, roar sweetly

இமிழ் என்பதற்கு இனிமை என்ற ஒரு பொருள் உண்டு. எனவே இமிழ் என்னும் ஓசைக்குறிப்பு
இனிமையான ஒலிக்குறிப்பைக் குறிக்கும்.

தோற்கருவிகளில் முரசு, முழவு ஆகியவை இமிழும் என்கின்றன இலக்கியங்கள்.

ஒரு முரசை ஒரு கோல் கொண்டு ஓங்கி அறைந்தால் ‘டம்’ என்ற பேரொலி எழும்பும்.
மாறாக, இரு கைகளிலும் கோல்களை வைத்துக்கொண்டு மாறி மாறி ‘டம, டம, டம, டம’-வென்று
உரக்கவும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல் ஓசை எழுப்புவதே இமிழ்தல்.

இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் – புறம் 58/12
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி – புறம் 99/9
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை – புறம் 394/8

என்ற அடிகள் முரசு இமிழ்வதைக் கூறும்.

மாலை நேரத்தில் ஒரு பெரிய ஆலமரத்தில் வந்து அடையும் பலவகைப் பறவைகள் ஒலி எழுப்புவதைக்
கேட்டிருக்கிறீர்களா? அதுவும் இமிழ்தலே.

பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் – குறு 320/6
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை – ஐங் 143/1
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/3

ஆகிய அடிகள் கூட்டமான பறவைகள் ஒலி எழுப்புதலை இமிழ்தல் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

அருவியின் பெருவெள்ளம் உயரத்திலிருந்து ‘சல்’- என்ற இரைச்சலுடன் விழுவதைக் கேட்டிருக்கிறிர்களா?
அதுவும் இமிழ்தலே.

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/23

என்ற அடிகள் இதனை உணர்த்தும்.

அமைதியான நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து அந்தக் கடல் ஓசை எழுப்பதைக் கேட்டிருக்கிறீர்களா?
மிகப் பெரும்பாலான இடங்களில் சங்க இலக்கியங்கள் இமிழ் என்ற குரலுக்குக் கடலையே குறிப்பிடுகின்றன.

பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/4
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5

கடலின் அலைகள் எழுப்பும் அந்தக் காதுக்கினிய இரைச்சலைக் கேட்கும்போது அது இமிழ்கின்றது
என்று உணர்வீர்!

யாழின் ஒரு நரம்பை இழுத்துவிட்டால் எழுவது இமிர் இசை என்று கண்டோம்.
ஆனால் யாழ் என்பது நரம்புகளின் தொகுதி அல்லவா?
அது எழுப்பும் ஓசையும் சில நேரங்களில் இமிழ்கிறது என்கின்றன பரிபாடலும் கலித்தொகையும்.

கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/38
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17

என்ற அடிகளில் யாழ் இமிழ்வதைக் காண்கிறோம்.

இனிய ஓசை எழுப்பும் இசைக்கருவிகளை இன்னியம் என்பர். இவை எழுப்பும் ஒலிகளும் இமிழ்தலே.

கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3

என்ற அடிகள் மத்தளம் போன்ற இன்னியங்கள் இமிழ்கின்றன என உரைக்கின்றன.

கீழ்க்கண்ட பலவித ஓசைகளை உற்றுக்கேளுங்கள்.

கம்புள் சேவல் இன் துயில் இரிய,
வள்ளை நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழ பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன் கை வினைஞர் அரி பறை இன் குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலிய
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது. 254 – 267

கம்புட்கோழி (தன்)இனிய உறக்கம் கெட்டோட,
வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்,
கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,
சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும்,
தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்
வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய
துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்
விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள்
(தம்மிடத்து)தாழ வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட
அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும்
அகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க,
ஆக, மீன்விற்போர் கூவிவிற்கும் ஓசை, கரும்பு ஆட்டும் ஓசை, வண்டியோட்டுபவர்கள்
காளைகளை ஓட்டும் ஓசை, நெல்லறுப்போருக்கான பறையோசை, நகரின் விழாக்கொண்டாடும்
ஆரவார ஓசை, மகளிர் கணவன்மாரொடு சேர்ந்து நீராடும் ஓசை என ஆகிய அனைத்து ஓசைகளும்
அகன்ற பெரிய வானத்தில் எழுந்து ஆங்கு வாழ்வாருக்கு இனிதாகச் சேர்ந்து ஒலித்தன

என்கிறது மதுரைக்காஞ்சி.

எனவே பலவித இனிமையான ஒலிகள் ஒன்றுசேர்ந்து கேட்போரை மகிழ்விக்கும் வகையில்
ஒலிப்பதே இமிழ்தல் என இதனால் பெறப்படுகிறது.

மேல்


இயக்கன்

 (பெ) ஒரு சங்ககால மனிதர், a person in sangam priod
இந்த இயக்கன் என்ற மனிதர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர்

பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரைசால்
அந்துவன் சாத்தனும் ஆதன் அழிசியும்
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/11-15

பொய்யாத புதுவருவாயையுடைய மையல் என்னுமூர்க்குத் தலைவனான
மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரையுடைய ஆந்தையும், புகழ் அமைந்த
அந்துவஞ்சாத்தனும், ஆதனழிசியும்,
வெய்ய சினத்தையுடைய இயக்கனும் என இவர் உட்பட பிறரும்
எனது கண் போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய

மேல்


இயம்

(பெ) இசைக்கருவி, musical instrument(s)
பல்லியம், இன்னியம், முருகியம் என்பவை தெரிவுசெய்யப்பட்ட இயங்களின் சேர்க்கை ஆகும்.

முருகனுக்கு வெறியாட்டு அயரும்போது பலவித இசைக்கருவிகள் முழங்கும். அது பல்லியம்.

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/1,2

ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையாகிய பலியை வைத்து
நீ ஒடும் ஆற்றின் இடைக்குறையின்கண் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க

இனிமையாக இசைக்கக்கூடிய இசைக்கருவிகளின் கூட்டு இன்னியம்.

கழைக்கூத்தாடியின் சிறுமி தூக்கி நிறுத்திய கழைகளுக்கு இடையே நடக்கும்போது மக்களைக்
கவர்வதற்காக இனிமையாகச் சில தோற்கருவிகளை வாசிப்பர். அது அரிக்கூட்டு இன்னியம்

அரிக் கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் – குறி 193,194

அரித்தெழும் ஓசையைக் கூட்டுதலை உடைய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, ஆடுகின்ற மகள்
கயிற்றில் ஏறி நடக்கும் நடையில்

முருகனுக்கு உகந்த இசைக்கருவிகள் முருகியம் என்னப்பட்டன.

குறமகள், முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243

குறத்தி, முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்து

மேல்


இயம்பு

 (வி) பேசு, சொல், அழை, இவற்றைப்போல் ஒலி எழுப்பு, speak, call, sound as a musical instrument
காலைப்பொழுது விடிகிறதை சேவல் கூவித் தெரிவிப்பது இயம்புதல்

பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கை பூ முகை மலர – புறம் 398/3,4

பொறிகளையுடைய சிறகுகளைக் கொண்ட சேவல்கோழி காலைப் பொழுது விடிந்ததை அறிந்து கூவித் தெரிவிக்க

ஒரு நாளின் காலைப்பொழுதை முரசறைந்து அறிவிக்கும்போது அது இயம்புதல் ஆகிறது

படு கண் முரசம் காலை இயம்ப – மது 232

ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசம் பள்ளியெழுச்சியாக காலையில் ஒலிக்க

காலையில் தம் மாடுகளை வேலைக்கு நடத்திச் செல்ல வரும் உழவர்கள் ஆசையுடன் அவற்றுடன்
சிறிதுநேரம் உரையாடுவர். அதுவும் இயம்புதல்தான்

இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4

சில நேரங்களில் புல்லாங்குழல் ஊதுவதுவும் நம்மை அழைப்பது போலிருக்கும்.
அப்போது மலரைச் சுற்றும் தும்பிகள் எழுப்பும் குரலும் இயம்புதலே என்கிறது பரிபாடல்

ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப – பரி 22/40, 41

பள்ளத்துச் சேற்றில் சிக்கிக்கொண்ட ஆண்யானையைக் காப்பாற்ற முடியாத பெண்யானை
வேதனையில் அழைப்புவிடுத்து எழுப்பும் ஒலி, மலைக் குகைகளில் சென்றொலிப்பது
இயம்புதல் என்னப்படுகிறது.

தாழ்கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெருமரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் – அகம் 8: 9 – 12

இனிமையான அல்லது குழைவான குரலில் அழைப்பதுபோல் அல்லது அறிவிப்பதுபோல்
ஒலித்தலே இயம்புதல்

மேல்


இயவர் 

(பெ) இசைப்போர், persons playing musical instruments
இயம் என்பது இசைக்கருவி. அதனை இயக்குவோர் இயவர்.

இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழல்
– நற் 113/10,11

இம்மென்னும் ஒலியோடே பெரிய களத்தில் குழல் ஊதுவோர் ஊதுகின்ற
ஆம்பலின் அழகான குழல்

கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7

கடிப்பினைக் கொண்டு முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடியணிந்த தோளையுடைய இயவர்கள்

மேல்


இயவு

 (பெ) ஆட்கள், வாகனங்கள், விலங்குகள் நடமாட்டத்தால் உருவான/உருவாக்கப்பட்ட பாதை, way

இடிச் சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20

கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் நடந்து

நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323

நல்ல அழகினையுடைய நெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையாக

இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10

பெருங்களிறு இயங்கும் பெரிய காட்டு வழியில்

மேல்


இயவுள் 

(பெ) இறைவன், தலைவன், supreme being

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274

சான்றோர் புகழ்ந்து பாடும் பெரிய பெயரையுடைய இறைவனே!

மேல்


இர 

1. (வி)

1. யாசகம் கேள், beg
2. வேண்டு. entreat, pray, solicit

2. ஒரு மரம், இரவம், a tree, பார்க்க : இரவம்

1.1.

உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6

தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,

1.2.

எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே – குறு 374/1-4

நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;

2.

இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை – அகம் 125/3

இரவம் வித்தினை ஒக்கும் அரும்பு முதிர்ந்த ஈங்கையினது
– இர – ஒரு மரம்; இஃது இரவு, இரவம் எனவும் வழங்கும்.
-நாட்டார் உரை, விளக்கம்

மேல்

இரங்கு

(வி) 1. பேரொலி எழுப்பு, roar
2. கருணைகாட்டு, அனுதாபம் கொள், show sympathy or grace
1.
பேரிரைச்சலோடு கூடிய முழக்கம் இரங்குதல் எனப்படுகிறது.

பாறைகளுக்கு நெடுவே பாய்ந்துவரும் ஆற்று நீரை,

கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று – புறம் 192/8

என்கிறது புறநானூறு

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி – புறம் 174/8
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி – குறு 134/5

என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும்.

சிலநேரங்களில் பொங்கிவரும் அலைகளைக்கொண்டு கரைகளில் மோதிப் பேரிரைச்சலைக் கடல்
உருவாக்கும். அப்பொழுது அதனை இரங்கு கடல் என வருணிக்கின்றன நம் இலக்கியங்கள்.

இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/6

பாடு எழுந்து இரங்கு முந்நீர் – அகம் 400/25
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை – அகம் 70/14

என்ற அடிகளால் இதனை உணரலாம்.

முரசுகளைப் பலவிதங்களில் ஒலிக்கலாம். அதனைப் பெருமுழக்கத்தோடு ஒலிக்கும்போது அதனை
இரங்கு முரசு என்கிறோம்.

இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 137/1
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று – புறம் 211/5
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/14
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப – புறம் 397/5

போன்ற அடிகள் பெருமுழக்கத்தை எழுப்பும் முரசுகளை இரங்கும் முரசு என்று குறிப்பதைக் காணலாம்.

மாட்டுவண்டியில் கரடுமுரடான பாதையில் பயணம்செய்திருக்கிறீர்களா?
கற்களின் மேலும், கற்பாறைகளின்மேலும் சக்கரம் ஏறி இறங்கும்போது ஏற்படும் பெரும் சத்தத்தையும்
இரங்குதல் என்கின்றது அகநானூறு.

இங்கே ஒரு குதிரை பூட்டிய தேரின் சக்கரம் எழுப்பும் ஒலியைக் கேளுங்கள்.

விடுவிசைக் குதிரை விலங்கு பரி முடுகக்
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
கார்மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/18-20

மேகங்கள் கடமுட என்று முழங்குவதைப் போல், கற்கள் உள்ள பாதையில் விரைந்து செல்லும்
தேரின் சக்கரங்கள் கல்லில் மோதி இரங்குகின்றன என்கிறார் புலவர்.

2.

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும்காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/4,5

மழுவாகிய கூர்மையான படைக்கலத்தையும், கடும் வலிமையும் கொண்ட ஒருவன் (யமன்)
கட்டிக்கொண்டு போகுங்காலத்து நீர் நிலைக்கு பரிதவிப்பீர்.

மேல்


இரட்டு 

(வி) 1. மாறிமாறி ஒலி, sound alternately, 2. இரண்டிரண்டாக ஒலி, sound double

1.

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
————— ———- —————- ————–
கால் கிளர்ந்தன்ன வேழம் – திரு 80-82

தாழ்கின்ற மணி மாறி ஒலிக்கின்ற பக்கத்தினையும்
————- ———– ——— ———
காற்று எழுந்ததைப் போன்ற களிறு

2.

விரல் ஊன்று படுகண் ஆகுளி கடுப்பக்
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 140,141

விரல்கள் ஊன்றிப் பதியும் முழங்கும் கண்ணையுடைய உடுக்கினைப் போல
பேராந்தை இரண்டிரண்டாய் ஒலி எழுப்பும் நீண்ட மலையின் சரிவினில்

மேல்


இரத்தி

 (பெ) இலந்தை, Jujube-tree. m. tr., Zizyphus jujuba

1.

இலந்தை மரத்தின் அடிமரம் பொலிவிழந்து இருக்கும். இதன் காய் உருண்டு திரண்டு இருக்கும்.

புல் அரை இரத்தி பொதி புற பசும் காய் – நற் 113/2

புன்மையான அடிப்பகுதியையுடைய இலந்தை மரத்தின் பொதிந்த மேற்பகுதியையுடைய பசிய காய்கள்

2.

இந்த மரம் உயரமாக வளரும், ஊர்ப்பொதுவிடங்களில் வளரும்.

இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12

இலந்தை மரம் ஓங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண்
– பொதி – அம்பலம்

3.

இந்த மரத்தின் உச்சிப்பாகம் பரட்டையாக – காய்ந்துபோய் – இருக்கும்.

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் – புறம் 325/11,12

உலர்ந்த தலையையுடைய இரத்திமரத்தின் அசைகின்ற நிழலில்
மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்பெய்து விளையாட்டயரும்

மேல்


இரலை

 (பெ) ஒரு வகை மான், கலைமான், stag
இதில் ஏறு எனப்படும் ஆண்மானைப் பற்றிய வருணனை.

பெரிய கழுத்தை உடையது –

மா எருத்து இரலை – நற் 69/4

பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடையது –

இரு திரி மருப்பின் அண்ணல் இரலை – அகம் 34/4

அஞ்சாத வலிய பார்வையை உடையது –

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5

கருமையான கொம்புகளையுடையது –

கரும் கோட்டு இரலை – அகம் 74/9

முதுகு வெண்மையானது –

வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை – அகம் 139/10

அறல் பட்ட கொம்புகளையுடையது –

அறு கோட்டு இரலை – பட் 245

கொம்புகள் வலப்பக்கமாக முறுக்கியிருக்கும் –

வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9

பெண்மானூடன் துள்ளி விளையாடும் –

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

மேல்


இரவம்

(பெ) – ஒரு வகை மரம், இருள்மரம், Ironwood of Ceylon, l.tr., Mesua ferrea
இதன் இலையை வீட்டு வாசலில் செருகிவைத்தால் தீயசக்திகள் வீட்டுக்குள் வாரா
என்பது பண்டையோர் நம்பிக்கை.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
————————— ———————-
காக்கம் வம்மோ காதல் அம் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281/1-9

தீவிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனை இறைப்பில் செருகி
————————- ———————-
காப்போமாக வருக, அன்புடைய தொழியே;
வேந்தனைக் குறித்துச் செய்யப்பெற்ற இடுக்கனைத் தான் ஏற்றுக் காத்த
பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலை அணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவற்குண்டான புண்களை

மேல்


இரவல்

 (பெ) யாசகம் கேட்டல், alms-taking

இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி – அகம் 32/4

இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி

மேல்


இரவலர்

 (பெ) – பரிசிலர், solicitors of gift

இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7

பரிசில் தேடி வருவோர்க்குக் கொடுக்கும் வள்ளண்மையுடையவனின் நாடு

மேல்


இரவுரை 

(பெ) இரப்புரை, இரப்பு மொழி, pleading

மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என
என் வரவு அறீஇ – புறம் 398/12-16

முழுமதி போன்ற வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப்பறையை
தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து
நின்னை நினைந்துவரும்பரிசிலருடைய கொள்கலம் நிரம்ப அரிய பொருள்களை வழங்குபவனே
எம்மிடத்து நீங்காத அன்புற்ர நிலையையுடையனாகுக என்று நிற்கும்
என் வரவை அறிந்து
– தடாரியின் ஓசை, அதனை இயக்கும் பொருநரது குறிப்பை உணர்த்தும்வகையில் எழுப்பப்படுமாகலின்
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து என்றார்.
– ஔவை.சு.து.உரை,விளக்கம்.

மேல்


இரற்று

 (வி) சத்தமிடு, shriek, as a stork or crane

அம்ம வாழி தோழி கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/1-4

கேட்பாயாக, தோழியே! நம் தலைவன்
நேரில் எதிர்ப்படவில்லையெனினும், நாம் போகலாமா,
கடலோரத்திலுள்ள நாரை ஓங்கிக் குரலெழுப்பும்
மடல்கள் உள்ள அழகிய பனைகளைக் கொண்ட அவனுடைய நாட்டிற்கு?

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு – ஐங் 152/1-3

வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
செயலற்றுப்போய் ஓங்கிக் குரலெழுப்பும் கடற்கரைச் சோலையுடைய அழகிய நிலப்பகுதியின்

மேல்


இரி 

(வி) 1. ஓடு, flee
2. வருந்து, be distressed
3. கெடு, அழி, be destroyed, ruined
4. கெடு, அழி, destroy, ruin
5. ஓட்டு, விரட்டு, scare away, drive away

1.

கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/7,8

கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்
கண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட

2.

வேறுபட்டு
இரீஇய_காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/7-9

நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக்கருதி
எம்மை இல்லின்கண் இருத்திய காலத்து, யாம் வருந்தியக்கால்
பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ?
– பின்னத்தூரார் உரை

3.

இதையும் கயிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும்
திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55

(கப்பலின்)பாயும், கயிறும், மரங்களும் கெட்டுப்போக,
சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும்
திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது;

அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8

எனது அரித்த ஓசையைச் செய்யும்பெரிய தடாரிப்பறை கண் கிழியுமாறு கொட்டி

4.

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – நற் 383/8

பாம்பின் மீது சினந்து விழுந்து கொல்லும் இடியுடன்,

5.

கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/2,3

கவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலி
நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்களை வெருட்டி ஓட்டும்

மேல்


இரியல்

 (பெ) அலறியடித்துக்கொண்டு விரையும் ஓட்டம், bursting out
ஒரு மரத்தின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் பறவைகள், திடீரென்று மிக அருகில்
ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டால், எவ்வாறு பதறியடித்துக்கொண்டு பறந்தோடுமோ
அதுவே இரியல்.

தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரி புகு பொழுதின் இரியல்போகி
————— ———— ———— —————
கறையணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 201-204

உழுது விதைத்த பின்னர் களையெடுத்துவிட்ட தோட்டத்தை
அறுவடைக்காக நுழையும்போது, (அது வரை அங்கு வாழ்ந்துகொண்டிருந்த காடைகள்) பயந்து ஓடி
தங்குமிடத்தில் சேரும்.

மருட்சி, வெருட்சி, பதற்றம், கலக்கம், விரைவு – எல்லாம் கலந்த ஒரு ஓட்டமே இரியல்.
ஒரு கோழியின் இரியல் இங்கு காட்டப்பட்டுள்ளது.


மேல்


இரீஇ 

(வி.எ) 1. இருத்தி, வைத்து, placing
2. இருந்து, being, staying
3. இரித்து, ஓட்டி, driving away
இரீஇ என்ற சொல் சங்க இலக்கியத்துள் 19 முறை வருகிறது. அவற்றுள், 15 முறை, இச் சொல் ஓர் அடியின்
இறுதிச் சீராகவே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1.

புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 159,160

(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்

வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ – அகம் 182/2

வளைந்த மூங்கிலாலாய வலிய வில்லைத் தோளில் இருத்தி

2.

கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – மலை 549

கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சான்றோர் இருக்கும் நல்ல பேரத்தாணிக்கண்ணே இருந்து
– பொ.வே.சோ.உரை

மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/10

மழையை இருந்து பெய்யத்தொடங்கின மேகங்கள்
இங்கே ’இருந்து’ என்பதை – மாறாது ஒரு தன்மையாய் என்பார் பின்னத்தூரார்.
– நிலைத்திருந்து என்பார் புலியூர்க் கேசிகனார்.
– ஒரே நிலையில் என்பார் ச.வே.சு. அவர்கள்

கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ – ஐங் 388/2

கரிய அடிப்பகுதியையுடைய இந்த யா மரத்தினது கொடுகோடாக அமைந்த புல்லிய நிழலின்கண்ணே இருந்து

3.

தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ – அகம் 298/12

தாழ்ந்த பூமாலைக்கண் ஊதும் வண்டினை ஓட்டி

மேல்


இரு 

1. (வி)

1. தங்கு, stay
2. நிலைபெறு, remain, abide
3. குறிப்பிட்ட நிலையில் அல்லது வடிவில் அமை, be in a specified state or condition

2. (பெ.அ)

1. இரண்டு, two
2. பெரிய, big
3. கரிய, dark, black

1.1

ஊஉர் அலர் எழ சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனை – குறு 262/1-3

ஊரில் பழிமொழி உண்டாக, தெருவே கூடிப்பேச,
நிற்காமல் வருத்துகின்ற அறமற்ற அன்னை
தானே இருக்கட்டும், தன் வீட்டில்

1.2

செரு வேல் தானை செல்வ நின் அடியுறை
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/54-56

போர் வெற்றியினையுடைய வேற்படை ஏந்திய செல்வனே! உன் திருவடியில் வாழ்வதை
உரிமையோடு சொந்த ஊரில் இருப்பது போல்,
நீங்காமல் இருக்கவேண்டும், எம் சுற்றத்தாரோடு கூடி

1.3

இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன் – புறம் 315/4,5

மனையின் இறைப்பில் செருகப்பட்ட தீக்கடைகோலைப் போல
தன் வலி தோற்றாது ஒடுங்கி இருக்கவும் வல்லன்

2.1

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய – பொரு 146

இரண்டு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி

2.2

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1

அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,

மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14

நீலமணி ஒழுகினாலொத்த கருமைநிறத்தையுடைய பெரிய தண்டினையுமுடைய
– நச்.உரை

2.3

வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் – புறம் 285/3

வளைந்த கரிய கோட்டினையுடைய இனிய இசையை எழுப்பும் சிறிய யாழையுடைய
– ஔவை.சு.து.உரை

மேல்


இருங்குன்றம்

 (பெ) அழகர்மலை, azhagarmalai
மதுரையைச் சுற்றியுள்ள எட்டு குன்றுகளில் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்ததாகக் கூறுவர்.
அவற்றுள் ஒன்று இந்த இருங்குன்றம்,. இன்று இது அழகர்கோயில், அழகர்மலை, திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படுகிறது

தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம் – பரி 15/14

தாங்கும் பெரிய நிலைமையையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் என்ற திருமாலிருஞ்சோலை

மேல்


இருங்கோவேள்

 (பெ) சங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period
அன்றைய தமிழகத்தின் வடபகுதியாகிய எருமைநாட்டைச் (இன்றைய மைசூர்ப்பகுதி) சேர்ந்த துவரை என்னும்
நகர்க்கண்ணிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர் வழியினன்.
பாரி இறந்தபின்னர்,அவன் மகளிர் இருவரை மணந்துகொள்ளும்படி கபிலர் இவனை வேண்ட
இவன் மறுத்துவிட்டான். புறம் 201,202 ஆகிய பாடல்கள் இவனைப் பற்றிய செய்திகளைக் கூறும்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இருங்கோவேள் உள்ளிட்ட எழுவரைப் போரில்
வென்றான்.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க – அகம் 36/13-20

கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய –
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக

சோழன் கரிகாலன் இவன் குலத்தை அழித்தான்.

இருங்கோவேள் மருங்கு சாய – பட் 282

இருங்கோவேளின் குலம் (முழுதும்)அழிய

மேல்


இருப்பை 

(பெ) இலுப்பை மரம், south Indian mahua

வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை – அகம் 267/6

பூனையின் அடியினை ஒத்த குவிந்த அரும்பினையுடைய இருப்பை

மேல்


இருபிறப்பாளர் 

(பெ) அந்தணர், Brahmin
மார்பில் நூல் அணிவதற்கு முன்னர் ஒரு பிறப்பும், பின்னர் ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினை உடையவர்.

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 182

அந்தணர் தாங்கள் வழிபடும் காலம் அறிந்து வாழ்த்தி நிற்க

மேல்


இரும்

 (பெ.அ) 1. கரிய, black, 2. பெரிய, large, great, vast

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72

கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மலர்ந்த

இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167

பெரிய தொகுதியாக உள்ள நண்டின் சிறிய கருக்களை ஒத்த

மேல்


இரும்பு 

(பெ) 1. கரும்பொன், iron, the black metal
2. இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பொருள், ஆயுதம், Instrument, weapon made of iron

1.

இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை – நற் 249/1

இரும்பைப் போன்ற கரிய கிளைகளையுடைய புன்னைமரத்தின்

2.

இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193

கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின

நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப – பெரும் 285,286

நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்

கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த – பெரும் 437

வலிய கையினையுடைய கொல்லன் சம்மட்டியை உரத்துக் கொட்டின

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80

பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து

இரும்பு கவர்வு_உற்றன பெரும் புன வரகே – மலை 113

(இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்

இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த – நற் 133/9

இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த

புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன்
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் – பதி 74/10-14

புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,
கூர்மையை உடைய ஊசியால், உள்புறத்தில் தைத்து, தொழிலில் வல்லவன்
சூடுவதற்குரிய நிலையை உண்டாக்கி, ஒளி திகழும் தோற்றத்தை உண்டாக்குவதால்

இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58

வாளால் இரண்டாக அரியப்பட்ட மாவடுவைப் போன்ற, மை தீட்டப்பெற்ற கண்ணின் ஒளி பாய்ந்து

இரும்பு ஊது குருகின் இடந்து – அகம் 81/5

இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் உயிர்த்துப் பெயர்த்து

இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் – புறம் 309/1

இரும்பாலாகிய படைக்கலங்கள் வாய் மடிந்து ஒடியும்படியாகப் பகைவரைக் கொன்று

பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8

பிடியானை மூச்சுவிட்டாற் போலக் காற்றுவிடும் கைகோப்புப் பொருந்திய உலைத்துருத்தியின் வாயிரும்பு போலும்

மேல்


இரும்பொறை 

(பெ) ஒரு சேர அரச மரபு, a chEra kingdom lineage

பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின்
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/9-11

பலவாகிய வேற்படையையுடைய இரும்பொறையே, நினது அரசியல்முறை செம்மையாக நடத்தலால்
நாடோறும் நாட்டவரெல்லாம் நின்னைத் தொழுது பரவுவதாலும்
உயர்ந்த நிலைமையினையுடைத்தாகிய தேவருலக வாழ்வுக்குரிய ஒழுக்கத்தால் உயர்ந்த சான்றோர் பரவி
வாழ்த்துதலாலும்
– இவன் இளஞ்சேரல் இறும்பொறை என்பான்.

நின் பாடிய அலங்கு செந்நா
பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேளுலகத்து – புறம் 22/31-35

நின்னைப்பாடிய விளங்கிய செவ்விய நா
பிறருடைய புகழைச் சொல்லாமல்
பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எம் கோவே!
மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு
தேவருலகத்தை ஒக்கும்
– இவன் சேரமான் யானைகண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து என்னும் நூல் சேர மன்னர்களைப் பற்றியது. இதிற்கண்ட சேர மன்னர்களை
உதியஞ்சேரல் , அந்துவஞ்சேரல் இரும்பொறை என்ற இரண்டு மரபினராகப் பிரிப்பர் வரலாற்று உரையாசிரியர்
ஔவை.சு.துரைசாமி அவர்கள்.
சங்க கால அரசர்களில் இரும்பொறை என்னும் பெயருடன் 7 அரசர்கள் காணப்படுகின்றனர்.

1. பெருஞ்சேரல் இரும்பொறை – பதிற்றுப்பத்தில் 8-ஆம் பத்துத் தலைவன் – இவனைப் பாடிய புலவர் அரிசில் கிழார்
2. இளஞ்சேரல் இரும்பொறை – பதிற்றுப்பத்தில் 9-ஆம் பத்துத் தலைவன்
– இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்
3. குட்டுவன் இரும்பொறை – 9-ஆம் பத்துத் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை
– இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்
4. அந்துவஞ்சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார்
5. கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் நரி வெரூஉத் தலையார்
6. குடக்கோச் சேரல் இரும்பொறை – இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்
7. சேரமான் யானைகண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
– இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார் & கூடலூர் கிழார்

மேல்


இருவி

 (பெ) தினை முதலியவற்றின் அரிதாள், Stubble of grain especially of Italian millet;

குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி – அகம் 38/13,14

வளைந்த பாரமான கதிரை முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள் பொருந்திய
கொய்து ஒழிந்த வறும் புனத்தையும் நோக்கி

மேல்


இருவை

 (பெ) பார்க்க – இருவி

சிறுதினை கொய்த இருவை வெண் கால் – ஐங் 286/1

மேல்


இருள் 

1. (வி)

1. கருப்பாக இரு, be black in colour
2. இருண்டிரு, be dark
3. ஒளி குறை, மங்கு, turn dim

 2. (பெ)

1. இருட்டு, darkness
2. இரவு, night
3. கருமை நிறம், black colour
4. மயக்கம், clouded state of mind, delusion

1.1

புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5

முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலை

1.2

பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் – குறு 314/3

மழை இறங்கி இருண்ட தனிமைகொண்ட மாலைப் பொழுதிலும்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/17,18

பால் தன் இனிமையொழிந்து புளிப்பினும், ஞாயிறு தன் ஒளி இழந்து இருண்டுபோனாலும்
நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும்

1.3

கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து – கலி 41/6

கொடி விட்டவாறு மங்கிய ஒளியில் மின்னல் ஏற்படுத்திய வெளிச்சத்தில்

2.1

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10

இருட்டு உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்

2.2

இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின்
இன மணி நெடும் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே – புறம் 145/8-10

இது நின்பால் யாம் இரந்த பரிசில், அஃதாவது, இந்த இரவின்கண்
இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப்போய்
காண்டற்கு இன்னாதாக உறைகின்ற உன் மனைவியின் பொறுத்தற்கரிய நோயைத் தீர்ப்பாயாக

2.3

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2

ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை

2.4

இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445

கூறாமலே)குறிப்பால் தெரிந்து உணரும் மயக்கமற்ற காட்சியையுடையனாய்,

மேல்


இரை 

1. (வி) உரக்க ஓசை எழுப்பு, roar, as sea
– 2. (பெ) பறவை, விலங்குகளின் உணவு, feed, prey

1.

தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும்
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 414-416

கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து,
கல்லென்ற ஓசையையுடைய காட்டினில் கடல் போல் இரைச்சலிடும்
பலவித ஆட்டினங்களைக்கொண்ட மந்தைகள்(இருக்கும் இடத்தில்) இராத்தங்குபவராய்ச் சேர்ந்தால்,

2.

பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287

பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,

இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313

இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,

உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255

இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 90

இரையைத் தேர்ந்தெடுத்து (அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து)நகரும் வளைந்த காலையுடைய முதலையுடன்,

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1

இரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது

களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/11

களிறாகிய இரை தப்பிவிட்டமையின் பெரிய வாயினையுடைய வேங்கை

மேல்


இல்லம் 

(பெ) 1. வீடு, house
2. தேற்றா மரம், Clearing-nut tree, Strychnos potatorum

1.

பசி_பிணி_மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/11,12

பசிநோய் தீர்க்கும் மருத்துவனது மனை
அணித்தோ தூரிதோ எங்களுக்கு நீர் சொல்லுமின்

2.

இல்லம் என்ற மரம், தேற்றா அல்லது தேத்தா எனப்படும்.
இதற்குத் தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/1,2

முல்லைக்கொடியில் கூரிய நுனியையுடைய (அரும்புகள்) தோன்ற, தேற்றாமரத்தின் முகையுடன்,
பசிய காம்புகளைக் கொண்ட கொன்றைமுகைகள் தம் மெல்லிய கட்டுகள் அவிழ

கலங்கலான நீரைத் தெளியப்படுத்த இந்த மரத்தின் கொட்டையைப் பயன்படுத்துவர்.

கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்ற
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழில் மார்பனைச் சார்ந்து – கலி 142/64-66

கலத்தில் உள்ள நீர் கலங்கியிருந்தால், தேற்றாமரத்தின் விதையைக் கொண்டு தேய்க்க,
கலங்கிய நீர் தெளிவது போல் மனம் தெளிந்து நலம் பெற்றாள்,
நல்ல அழகான மார்பினையுடையவனைச் சேர்ந்து.

மேல்


இல்லி 

(பெ) சிறு துவாரம், துளை (மாதர் முலைக்காம்பில் உள்ளவாறு), Orifice, as of the teat

இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை – புறம் 164/4

துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை

மேல்


இலக்கம்

(பெ) 1. ஒளி, பிரகாசம், light, brightness
2. பயிற்சிக்குக் குறிபார்த்து எய்யும் இலக்கு, target

1.

இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல – பரி 13/8

இரு வேறுபட்ட ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் பிரகாசத்தைப் போல

2.

தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன – புறம் 4/5,6

கேடயங்கள், ஒலித்துத் தைத்த அம்புகளால் துளை பெற்றன
தவறாமல் அம்பெய்த இலக்குகள் போன்றன

மேல்


இலங்கு

 (வி) ஒளிர், பிரகாசி, shine, glitter

நீர் நிறைந்த ஒரு கண்மாயின் கரையில் நின்றுகொண்டு, உச்சிப்பொழுதில், அந்த நீர்ப்பரப்பைப்
பார்க்கும்போது, எழுந்துவிழும் சிறிய அலைகளின்மீது சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும்போது அந்த
நீர்ப்பரப்பு தகதகக்குமே, அதுதான் இலங்குதல்.
வைரம். வைடூரியம் போன்ற நவரத்தினக் கற்கள் நிறையப் பதிக்கப்பெற்ற ஒரு தங்க அட்டிகை
பளபளவென்று மின்னுமே, அதுதான் இலங்குதல்.
பளிச்சிடும் வெள்ளைப் பற்களை இலங்கு வெள் எயிறு என்கின்றன இலக்கியங்கள்.

இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 34
இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3

பார்க்க அவிர்

மேல்


இலங்கை 

(பெ) மாவிலங்கை எனப்படும் ஊர், the city called ilangkai the great.

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொன் மா இலங்கை கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 116-120

நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,

இங்கு பாடப்படும் மன்னன் ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் ஆவான். இவனது நாடு ஓய்மாநாடு. இதில் உள்ள
ஊர்களில் மாவிலங்கையும் ஒன்று. நல்லியக்கோடன் பெருமாவிலங்கைத் தலைவன் என்று சிறப்பித்துக்
கூறப்படுகிறான். எனவே இது அவனுடைய தலைநகராகலாம் என்பர். ஆனால் அவன் கிடங்கில் கோமான்
என்றும் கூறப்படுகிறான். எனவே இந்த மாவிலங்கையே, கிடங்கில் என்றும் அழைக்கப்பட்டது என்பர்.
ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனம் பகுதியாகும்.

நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி ஆதன் கிணையேம் பெரும – புறம் 379/6,7

நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான
ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப்பொருநராவோம் பெருமானே!

இங்குக் கூறப்படும் வில்லி ஆதன், ஓய்மான் வில்லியாதன் எனப்படுவான். எனவே இவன் ஓய்மான்
நல்லியக்கோடனின் வழித்தோன்றலாவான்.

மேல்


இலஞ்சி

 (பெ) 1. வாவி, நீர்நிலை, tank, reservoir
2.. கோட்டைச் சுவர், மதில், wall round a city

1.

முது நீர் இலஞ்சி பூத்த குவளை – நற் 160/8
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/2

(குண்டு = ஆழம்)

கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி – புறம் 37/10

மேல்


இலம்படு

 (வி) வறுமையடை, become poor

இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 576,577

வறுமையில்வாடும் புலவர்கள் ஏந்திய கைகள் நிறைய,
அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்

மேல்


இலம்பாடு

 (பெ) வறுமை, ஏழ்மை, poverty, destitution

இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13

வறுமையால் வருந்திய என் சுற்றத்தார்

மேல்


இலவம் 

(பெ) இலவு, ஒரு வகை மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum;

நீண்ட நடுப்பகுதியை உடையது –

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83

நடுப்பகுதி முட்களையுடையது

முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1

நடுப்பகுதி கருமையானது

கரும் கால் இலவத்து – அகம் 309/7

தீப்பிடித்து எரிகிற நிறத்தில் பூக்கக்கூடியது

எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் – ஐங் 368/1
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/10
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/14,15

பெண்களின் சிவந்த உதடுகளுக்கு இலவம்பூவின் இதழ்கள் உவமிக்கப்படுகின்றன – பார்க்க – படம்

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27

மேல்


இலி 

(பெ) இல்லாதது, இல்லாதவன்/இல்லாதவள்,
that which does not have, one who does not have

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137

குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,

அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன் – கலி 42/26,27

அஞ்சவேண்டியதற்கு அஞ்சாத அறங்கெட்டவன் அல்லன் என்
நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டவன்!

மேல்


இலிற்று

(வி) சுர, spring (as milk from the breast, water from a fountain)
புதிதாய்ப் பிறந்த குழந்தைக்காகத் தாய்ப்பால் பொங்கிச்சுரப்பது இலிற்றுதல்.

புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8

யாழினை மீட்டும்போது அதன் நரம்புகளுக்குள் பொதிந்து கிடக்கும் இசை அமுதமாய்ச் சுரக்கிறதாம்.

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் – சிறு 227

மேல்


இவர் 

1. (வி) கொஞ்சம் கொஞ்சமாக மேலே/முன்னே செல்லுதல், ascend, move forward
2. இவன், இவள் – மரியாதைப் பன்மை, This person, used as an honorific term of reference;
1.
இரையைப் பிடிப்பதற்காக, முன்னங்கால்களை வளைத்துக்கொண்டு முதலை ஊர்ந்து போகிறதே அதுவே இவர்தல்.

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 90

பீர்க்கங்கொடிகள் நரம்புகளால் (tendrils) இறுகப்பிடித்துக்கொண்டு மேலே ஏறுகின்றனவே அதுவும் இவர்தல்.

பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10

செங்குத்தான மலைப்பகுதியில் சிங்கங்கள் காலால் பற்றிக்கொண்டு ஏறுகின்றதுவும் இவர்தலே

குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்கு (கலித். 86, 32).

(இறுவரை = செங்குத்தான மலைப்பகுதி)
வறண்டு கிடந்த ஆற்றில் புதிதாய்ப் பாயும் வெள்ளம் ஊர்ந்து ஊர்ந்து செல்வதுவும் இவர்தலே!

இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27

மேல்


இவறு 

(வி) கடல் அலைபோல் உருளு, To roll, as billows, to and fro,
இவறு

திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/2 (திரை = கடல் அலை)

மேல்


இவுளி 

(பெ) குதிரை, horse

கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு – புறம் 197/1

(கால்,வளி= காற்று)

மேல்


இழி

(வி) 1. இறங்கு, descend, விழு, fall
2. தாழ், become low in stature

1.

குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2

(குன்றிலிருந்து இறங்கும் அருவியைப் போன்று வெண்மையான தேர் விரைந்து செல்ல)

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/5

(பாறையின் மீது விழும் அருவியைப் போன்று மிகுந்து ஒலிக்கின்ற)

மேல்


இழிசினன்

 (பெ) – நாகரிகம் குறைந்தவன், uncivilized person

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று – புறம் 82/3,4

(கட்டிலிலுக்குக் கயிறு கட்டும் இழிசினனின் கையில் உள்ள
வாரைச் செலுத்தும் ஊசியைக் காட்டிலும் விரைவானது)

மேல்


இழிபிறப்பாளன் 

பார்க்க – இழிசினன்
இவர்கள் மிகக் கடினமான உழைப்பாளிகளாதலால் இவர்களின் உள்ளங்கை கருத்திருக்கும்

இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப – புறம் 170/5

மேல்


இழுக்கு

 (வி) 1. வழுக்கி விழு, slip and fall down
2. துன்பப்படு, suffer pain
3. நழுவு, நழுவவிடு, தவறவிடு, lose
– (பெ) 4. வழுக்கு நிலம், slippery ground
5. இழிவு, களங்கம், disgrace, blemish

1.

இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து – அகம் 107/14

(சரியில்லாத ஏற்றமான வழியில் வழுக்கிவிழுந்து மிக்க முடமாகி)

2.

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301

(முள்ளம்பன்றி தன் முள்களால் தாக்க, அதனால் துன்பப்பட்ட கானவரின் அழுகையும்)

3.

கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4

(ஆண்குரங்கு தொட்டவுடன் நழுவிவிழுந்த பூ மணக்கும் பலாப்பழம்)

இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16

(இனிய செருக்கையுடைய மகிழ்ச்சியைத் தவறவிட்டவனாகி)

4.

நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258

(சிக்குள்ள கொடிகளும், வழுக்கு நிலமும், முட்டான வழிகளும்)

மேல்


இழுகு

(வி) பூசு, smear

கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம் 281/3,4

கையை மெல்ல எடுத்து மையாகிய மெருகினைப் பூசி
வெண்சிறுகடுகைத் தூவி, ஆம்பல் குழலை ஊதி

மேல்


இழுது

 (பெ) வெண்ணெய், கொழுப்பு போன்ற மென்மையான பொருள்,
Thick semi-liquid substance like butter, fat, grease

இழுதின்

அன்ன வால் நிண கொழும் குறை – புறம் 150/9

(இழுதைப் போன்ற வெண்மையான கொழுப்புச் சேர்ந்த தசை)

மேல்


இழை 

1. (வி)

1. நெய்து துணியை உருவாக்குவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகச் செய் / உருவாக்கு
make or construct as though make a cloth by weaving
2. இடு, பதி, place, inlay
3. வரை, எழுது, draw, paint
4. கோடிடு, draw a line
5. ஒட்டி உறவாடு, be close together
6. நெசவுசெய், நெய், weave

2. (பெ)

1. அணிகலன், அலங்காரப்பொருள்கள், Jewellery, Ornament
2. நூல், thread

1.1

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3

பூமியைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டிலும் உயரமானது;
கடலைக் காட்டிலும் அளத்தற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள
கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து
பெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்

1.2

செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான்
வையை உண்டாகும் அளவு – பரி 32/1-4

திருமகளுக்கு இட்ட திலகம் போல், தனது தலைமைப் பண்பிற்கு ஏற்ப,
இந்த உலகத்தில் திகழ்ந்து புகழால் பொலிந்து விளங்குவதன்றி,
பொய்யாகிப்போய்விடுமோ மதுரை நகரின் புகழ்? ஒப்பனை செய்யப்பட்ட தேரினையுடைய பாண்டியனின்
வையை ஆறு இருக்கும் காலம் அளவும்.

1.3

சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ – கலி 64/12-14

வண்டுகள் ஒலிக்கும் பூக்களைக் கொண்ட மாலையையுடைய அழகிய நல்ல பெண்ணே! நான் உனது
திருத்தமான அணிகலன் அணிந்த மென்மையான தோள்களில் வரைந்த, இதோ இங்கிருக்கிற,
கரும்புப் படங்கள் எல்லாம் உன் உழவினால் உண்டானதன்றோ?

1.4

சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப – அகம் 289/9-11

நாம் சேய்மைக்கண் உறையும் தனிமையால் நாள்தோறும் முறைமுறையாகக் கோடிட்டுவந்த
திண்ணிய சுவரினைப் பார்த்து உடனுறையப்பெறாமையை நினைந்து கண்ணீர்
நூல் அற்று உதிரும் முத்துக்களைப் போல முகிழ்த்தமுலை மீது தெறித்துவிழ

அக் காலத்தில் நாள்காட்டிகள் கிடையா. எனவே, நாள்களைக் கனக்கிட, செம்மண் சுவற்றில் சுண்ணாம்பாலோ
சுண்ணாம்புச் சுவற்றில் செம்மண் கட்டியாலோ ஒவ்வொருநாளும் ஒரு சிறிய கோடு போடுவார்கள். இதனை
வைத்து நாள்களைக் கணக்கிடுவார்கள். இவ்வாறு கோடுபோடுவதை இங்கி இழைத்தல் என்கிறார் புலவர்.

1.5

முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248

(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்

1.6

வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 39/9,10

வெண்மையான பருத்தி நூலால் இழைக்கப்படாத, நுண்ணிய மயிர் போன்ற இழைகளையுடைய,
பொறித்து வைத்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும்,

2.1.

இழை

அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
இழைகள் அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் – குறு 345/1

2.2.

வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 80

(வியர்வையில் நனைந்து, கிழிந்ததைத் தைத்ததினால் வேறு நூல் நுழைந்த)

மேல்


இளக்கு

 (வி) அசைத்து நெகிழச்செய், shake and make less firm, as a peg driven into the ground

வெளில் இளக்கும் களிறு போல – பட் 172

கட்டுக்கம்பத்தை (அசைத்து அசைத்து)நெகிழ்க்கும் ஆண்யானை போன்று

மேல்


இளகு 

(வி) அதிர், அசை, agitate, shake

மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர
சோறு அடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – பெரும் 363-367

மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின்
பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி,
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை அதிரும்படி விழுகின்ற
கெடாத புதுவருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்து

மேல்


இளவேனில்

(பெ) கோடைக்காலத்தின் முற்பகுதி (சித்திரை, வைகாசி மாதங்கள்),
Early hot period (mid April to mid June)

இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7

(இறுத்தருதல் = வந்து நிலைபெறுதல்)

மேல்


இளி 

(பெ) 1. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற
ஏழுவகை சுரங்களில் ஐந்தாவது சுரம், the fifth note of the gammut
2. சிறுமை, dishonour, disgrace

1.

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7

(இளி என்ற ஓசையை ஒலிக்கும் குறுகிய குழாய் இசைக்கருவியான தூம்புடன்)

2.

இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3

(இன்பமுறக் கூடியும், சிறுமை தோன்றப் பணிந்தும்)

மேல்


இளிவரல் 

(பெ) இழிவு, disgrace

இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44

(இல்லத்துக்கு நீ தனியே செல்லிதல் இழிவு)

மேல்


இளிவரவு

 (பெ) – இழிவான நிலை, state of disgrace

இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87

(இல்லாமையை உணர்ந்து அவர் தம் இழிந்த நிலையைக் கூறுவதற்கு முன்)
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு – பரி 20/71

மேல்


இளிவு 

(பெ) – பார்க்க – இளிவரவு

இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/2
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10

மேல்


இளை

 1. (வி)

1. உடல் மெலி, grow lean
2. சோர்வடை, grow weary, fatigued

2. (பெ) பாதுகாவல், protection

1.1.

காடு தேர் மட பிணை அலற கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/5-7

தன் கலையினைக் காட்டில் தேடும் இளைய பெண்மான் கதற, ஆண்மானின்
ஓடித் தப்புதற்குரிய தொடையினைச் சிதைத்த செந்நாயின் ஆண்
வெய்யிலை வெறுத்து மெலியும் வெப்பம் பொருந்தியன
– நாட்டார் உரை

1.2

காடு தேர் மட பிணை அலற கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/5-7

தன் கலையினைக் காட்டில் தேடும் இளைய பெண்மான் கதற, ஆண்மானின்
ஓடித் தப்புதற்குரிய தொடையினைச் சிதைத்த செந்நாயின் ஆண்
வெய்யிலை வெறுத்துச் சோர்வடையும் வெப்பம் பொருந்தியன
– இந்தப் பொருள் ஏற்புடையதெனத் தோன்றுகிறது.
– gets tired in the hot sun that it hates என்றே பொருள் கொள்கிறார் vaidehi herbert அவர்கள்.

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2

பகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் சோர்ந்துவிட்டன

2.

இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாது – பதி 28/5

(பாதுகாவலை இனிது தந்து விளைச்சலைப் பெருக்கி)

இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/15

(பாதுகாவலை உடைய பேடை அஞ்சியோட ஒலித்து எழுந்து

மேல்


இற்செறி 

(வி) வீட்டில் அடைந்துகிட, be confined to house

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/1-3

விளையாட்டுத் தோழியருடன் ஓரை என்னும் ஆட்டத்தை ஆடாமல்
இள மங்கையர் தமது வீடுகளில் அடைந்துகிடத்தல்
அறநெறி ஆகாது; வீட்டின் செல்வமும் குன்றும் என்று

மேல்


இற்றி

 (பெ) இத்தி, ஒரு வகை அத்தி மரம், Tailed oval-leaved fig tree, White fig tree, Ficus infectoria;
குட்டையான நடுமரத்தை உடையது
பரட்டையான உச்சிப்பகுதியை உடையது
நீளமான விழுதுகளை விடுவது

குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6

மேல்


இற 

(வி) 1. கடந்து செல், pass over, go beyond
2. போ, நீங்கு, leave, depart
3. வரம்புகட, transgress
4. மிகு, excell, surpass
5. மரணமடை, die

1.

செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/4

செழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான்

2.

இடை கொண்டு பொருள்_வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/8,9

பிரிவினை மேற்கொண்டு, பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
உடைந்த நெஞ்சம் வருந்திச் சோர்வுற, தன் அழகு கெடுவாள் அன்றோ

3.

எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/63

எண்ணிலடங்காப் புகழினைக் கொண்டுள்ளாய்! எழிலான மார்பினைக் கொண்டுள்ளாய்

4.

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/22

மிக உயர்ந்த கற்பினையுடையவளுக்காக வருத்தம் கொள்ளாதீர்!

5.

குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார் – புறம் 74/1,2

பிள்ளை மரணமடைந்து பிறந்தாலும், தசைத்தடியாகிய மணை பிறநதாலும்
அவற்றையும் ஆள் அல்ல என்று கருதாது வாள் ஓக்குதலில் தவறார்

மேல்


இறடி 

(பெ) தினை, italian millet

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169

(நிறம் மிகுந்த வடிவினையுடைய தினைச் சோற்றைப் பெறுவீர்)

மேல்


இறல்

 (பெ) கேடு, அழிவு, ruin, disaster

நலன் உடையார் மொழி-கண் தாவார் தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்_கால்
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 22/6-8

நற்குணம் உடையவர் தாம் கூறிய மொழியினின்றும் மாறுபடார், நீ மகளிரின் நலத்தைத்
தேனைத் தேடிச் செல்லும் தேனீக்கள் போல் நுகர்ந்து, அதற்குக் கைம்மாறாகக் கேட்டினைக் கொடுக்கும்போது,
வேறு யாரோ என்றாகிவிட்ட நாங்கள் என்ன கூறமுடியும், உம் பொருளாசை குறித்து?

மேல்


இறவு 

(பெ) இறால்மீன், Prawn, shrimp, macroura;

இறவு அருந்திய இன நாரை – பொரு 204
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1

(இறால் மீனின் முதுகினைப் போன்ற சொரசொரப்பான பெரிய அடிப்பகுதி(யை உடைய தாழை))

துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2

(மெல்லிய பஞ்சுப்பிசிர் போன்ற தலையையுடைய இறால் மீன்களோடு திரளான மீன்களைப் பெறுவீர்)

முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17

(வளைந்த முதுகினையுடைய இறால் மீனுடன் பல மீன்களைக் குவிக்கும்)

முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1

(முள்ளைப் போன்ற கால்களையுடைய இறால்மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டம்)

இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2

(இறால்மீனைப் போன்று வளைந்த வாயை உடைய பேடையுடன்)

மேல்


இறா 

(பெ) இறால் மீன் – பார்க்க இறவு
இறால்களில் சிவப்பு, வெள்ளை எனப் பல வகை உண்டு

சே இறா எறிந்த சிறு வெண்_காக்கை – நற் 31/2
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து – அகம் 170/12

மேல்


இறால்

(பெ) தேன், தேனடை, honey, honeycomb

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5

(தேனுடன் கூட்டி ஆக்கிய வண்டு மொய்க்கும் கள்)

பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேன் உடை நெடு வரை – நற் 185/9,10

(வண்டுகள் செய்த பல கண்களைக் கொண்ட தேனடையில்
தேனை உடைய உயர்ந்த மலை)

மேல்


இறாவு

– (வி) சீவு, வழி, scrape off

கழுதில் சேணோன் ஏவொடு போகி
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி
நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்
முளி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து – மலை 243-249

காவற்பரண் மீது உயரத்தில் இருப்பவன் ஏவிவிட்ட அம்போடு ஓடிப்போய்,
வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர,
மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு, 245
வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,
இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றியைக் கண்டால்,
(முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்
அடர்ந்த புகை வீசாமல், வாட்டி மயிர்போக வழித்துவிட்டு (வெந்ததை)உண்டு
– இறாவுதல் – தீயின் வாட்டி மயிர் போகச் சீவுதல்
– பொ.வே.சோ.உரை விளக்கம்

மேல்


இறு 

(வி) 1. முறி, ஒடி, snap, break
2. வரி, கப்பம் முதலியன செலுத்து, pay as tax, debt.,
3. தங்கு, stay
4. சடங்குகளைச் செய், observe (religious) rites
5. அம்பு முதலியன தை, pierce through, gore

1.

மடக்கிளி எடுத்தல் செல்லா தடக்குரல்
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி – அகம் 38/12,13

(இளமையான கிளிகள் தூக்கிச் செல்லமுடியாத அளவுக்குப் பெரிய கதிராகிய
வளைந்த பாரத்தை முறித்த கோலாகிய தலையையுடைய தட்டைகள்

2.

பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/13,14

(பெரிய களிற்றின் கொம்போடு புலியின் வரிவரியான தோலை இறையாகச் செலுத்தச்செய்யும்
அறனில்லாத அரசன் ஆளுகின்ற)

3.

கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் – அகம் 397/13

(கரிய அடிப்பகுதியை உடைய யா மரத்தில் பருந்து வந்து தங்கும்)

4.

அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் – புறம் 2/22

(மாலைப் பொழுதில் அந்தணர்கள் தம் மாலை சடங்குகளைச் செய்யும்)

5.

அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை – புறம் 19/9

(அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடையயானை)

மேல்


இறுகிறுக்கு

 (வி) மிகவும் இறுக்கு, make it very tight

கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/58,59

மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின்
வடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு

மேல்


இறுகிறுக

 (வி.அ) மிகவும் இறுக்கமாக, very tightly

தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை
ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ – பரி 10/10,11

காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலை,
ஏணிப்படுகால் ஆகிய இடையணிகளை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு,

மேல்


இறுகு

(வி) 1. முறுகி அழுத்தமாகு, அடர்ந்து செழி, become tight, be luxuriant
2. மண் முதலியன கெட்டிப்படு, harden, as land dried by the sun.

1.

துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த – மலை 131,132

(பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ நின்ற தோட்டத்தின் வாழைமரங்களில்,
இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன;

2.

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் – நற் 265/1

காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
இறுகு புனம் – dried land – Vaidehi Herbert
இறுகு புல் எனக்கொண்டு, காய்ந்த புல் என்று பொருள்கொள்வார் பின்னத்தூரார்.
இறுகு புனம் – காய்ந்து இறுகிப்போன நிலம் – கட்டாந்தரை என்று பொருள்கொள்ளல் சிறந்தது எனத்
தோன்றுகிறது.

மேல்


இறும்பு 

(பெ)குறுங்காடு, thicket

மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495

(மயில்கள் ஆடித்திரியும் மரங்கள் நிறைந்த குறுங்காட்டில்)

மேல்


இறும்பூது

 (பெ) அதிசயம், வியப்பு, wonder, amazement

இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18

(வியப்பு மிக்க அழகிய மலர் பலவும் மணம்பரப்பி)

மேல்


இறுவரை

(பெ) செங்குத்தான மலைப்பகுதி, cliff

குன்ற இறுவரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32

குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்

இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/4

மலை முகட்டினின்றும் வீழ்ந்திறப்பார் போல அச்சம் உண்டாக நடுங்கி

பார்க்க – இவர்

மேல்


இறை

1. (வி) ஆழத்திலிருந்து நீரை எடு, draw water as from a well
2. (பெ)

1. குடிசை வீட்டுக் கூரையின் சாய்வான பக்கம், sloping roof
2. நீட்டிக்கொண்டிருக்கும் கூரையின் உட்பக்கம், eaves of a roof3. தோளிலிருந்து இரண்டு பக்கமும் இறங்கும் பகுதி,
that part of the body that descends from the shoulders.
4. அரசுக்குச் செலுத்துவது, share of the produce accruing to the king as rent;
5. அரசன், தலைவன், king, master, chief
6. சிறிதளவு, an insignifican quantity
7. முன்கை, forehand
8. தங்குதல், abiding
9. கடவுள், supreme god
10. மரத்தின் தாழ்வான பகுதி, lower part of a tree
11. உயரம், height

1.

நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/4,5

உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
கையால் இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல

பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் – கலி 144/46,47

பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன்,

2.1.

குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265

ஒடுக்கமாக இறங்கும் கூரையினையுடைய குடிசையின் பறியையுடைய முன்பக்கம்

2.2.

இறைஉறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439

இறங்கிய கூரையின் நீட்டிய பாகத்தின் உட்பக்கத்தில் தங்கும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்

2.3.

நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231

அழகிதாக இரண்டுபக்கமும் இறங்கும் முன்கையைப் பிடித்து உம் வீட்டார் தர

2.4.

திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319

திருத்தமான வேலினை உடைய அரசனுக்குப் புதிதாக அளிக்கும் பொருளாக இருக்கும் என்று

2.5.

அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8

அஞ்சவேண்டாம் என்ற அரசன் கைவிட்டான் என்று

2.6.

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1

மான்கள் அண்ணாந்து உண்டதால் சிறிதளவே வளைந்த உயர்ந்த கிளைகள்

2.7.

 இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10

முன்கையிலுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் அணிந்த சிறுபெண்

2.8.

இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3

தங்கும்படியாக உயர்ந்த வழியை அடுத்துள்ள மரத்தில்

2.9.

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79

தண்டிக்கின்ற இறைவனை ஆற்றுங்கள், அவன் அடியினைச் சேர்ந்து புகழுங்கள்.

2.10.

இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9

கிளைகள் தழ்ழ்ந்திருக்கும் நிழலின் ஒரு பக்கத்தில் தனிமைத் துயரோடு பெருமூச்செறியும்

2.1.1.

ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/27

ஏந்திய கொடிகளும்,உயர்ந்த கோட்டைமதிலும்

மேல்


இறைகூடு 

(வி) அரசாள் (நிலையாய்த் தங்கு), rule over (permanently stay)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79

ஈரும் பேனும் இருந்து அரசாண்டு (நிலைகொண்டு)

நன் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/7-9

நல்ல நெற்றியில்
புதிதாய் வந்து அரசாளும் (நிலையாய்க் குடியிருக்கும்) பசலைக்கு
மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!
– நன் நுதல் இருந்து இறைகூடி என்று கொள்வார் பின்னத்தூரார். நல்ல நெற்றியிலிருந்து
நிலைமிகுதலைக் கொண்ட பசலை நோய்க்கு –

மேல்


இறைகூர்

 (வி) தங்கு, dwell, abide

ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5

ஈரினது திரளோடு தங்குதல் மிக்க
பேனாகிய பகையை ஒரு பகை என்பேனோ

தெறல் மறவர் இறைகூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/5,6

பொருதலை இயல்பாகவுடைய மறவர் வந்து தங்குதலால்
சுமை மிகுவதால் நிலமும் சுளியும்படியாக

முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை
புள் இறைகூரும் மெல்லம்புலம்ப – அகம் 10/3,4

கூனல்பட்டு முதிர்ந்த புன்னைமரத்தின் பெரிதாய் நின்ற கரிய கிளைகளில்
பறவைகள் மிகத் தங்கியிருக்கும் நெய்தல் நிலத் தலைவனே!

இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் மூலம் கூட்டமாய்த் தங்கியிருத்தலை இறைகூர்தல் என்கிறோம்
எனக் கொள்ளலாம்.

மேல்


இறைகொள் 

(வி) தங்கு, stay

வால் இணர் படு சின குருகு இறைகொள்ளும்
அல்கு_உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/4,5

நீண்ட பூங்கொத்துகள் உள்ள தாழ்ந்த கிளையில் கொக்குகள் தங்கும்,
மக்கள் தங்குவதற்குரிய கடற்கரைச் சோலையில் உள்ள உயர்ந்த, மணல் இறுக்கமாய் அமைந்த கரையில்

கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் – பதி 70/15

கற்புநெறிக்கண்ணே தங்கின மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியினையுடைய

மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121

வலிமை தங்குதல்கொண்ட அகன்றுயர்ந்த மார்பிடத்தே

மேல்


இறைச்சி 

(பெ) இன்பம் தருவது, That which is agreeable, pleasing

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் – கலி 8/9

கேட்பவர்க்கு இன்பம் பயப்பதாய், விரலால் இயக்கப்பெற்று இசைக்கும் யாழ்த்தண்டின்

இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9

இன்பமாய் இருந்த காதலர்க்கு இனிமை தருவதாய் அவர்க்கு வேண்டுவனவற்றை முன்பு செய்தாய்,

மேல்


இறைஞ்சு

(வி) 1. தாழ், கவிழ், hang low
2. கெஞ்சு, மன்றாடு, plead, implore
3. வளை, bend low
4. வணங்கு, pay reverence;

1.

நலம் கெழு திரு முகம் இறைஞ்சி – அகம் 299/13

நலம் பொருந்திய அழகிய முகத்தைக் கவிழ்த்து

2.

இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5

இனிதாக அமர்ந்த காதலன் மன்றாடி, தன் அடிகளில் விழுந்து

3.

பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெரும் ததரல் – குறு 213/3

பசிநோயைத் தீர்க்கும்பொருட்டு வளைத்த பரிய பெரிய மரப்பட்டையினை

4.

இறைஞ்சுக பெரும நின் சென்னி – புறம் 6/19

வணங்குக, அரசனே உன் தலை.

மேல்


இன்மை 

(பெ) 1. இல்லாமை, Total negation of existence, being without something
2. வறுமை, poverty

1.

நன் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/7-9

நல்ல நெற்றியில்
புதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு
மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!

2.

துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என
தன் அறி அளவையின் தரத்தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென் – பொரு 125-129

‘துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன், 125
பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக’ என்று
தான் அறிந்த அளவால் தரத்தர, யானும்
யான் அறிந்த அளவில் (எனக்கு)வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,
(என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன்,

மேல்


இன்னம் 

(பெ) 1. இப்படிப்பட்ட நிலையிலுள்ளவர் (தன்மை), (we) being in such a state
2. மேலும், இன்னும், more than this

1.

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/1-3

நம் காதலர் எப்படிப்பட்டவராயினும் இனி அவர் பற்றிய நினைவை விட்டுவிடு,
அப்படி இருப்பதற்காக வருந்தவேண்டாம் தோழியே! நாம்
இப்படிப்பட்டவராய் ஆகிவிடும்படி நம்மைத் துறந்துசென்றோரின் நட்பு இனி நமக்கு எதற்கு?

நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/1-3

அழகிய நெற்றி பசந்திடவும், பெரிய தோள் மெலிந்திடவும்
உண்ணாமையாலாய வருத்தத்தால் உயிர் நீங்க மெலிந்து
நாம் இந் நிலையினமாகவும் இங்கு நம்மைவிட்டுப் பிரிந்தார் நம் தலைவர்

2.

வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ
செம் வாய் வானத்து ஐயென தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/1-3

வளையலை உடைத்தது போல ஆகி, பலரும் தொழ
சிவந்த இடத்தையுடைய வானத்தில் விரைவாகத் தோன்றி
இன்னும் பிறந்தது பிறை! அந்தோ!
– பிரிவானே யான் நலியாநிற்பவும், மேலும் பிறையும் பிறந்து வருத்தும் என்பாள், இன்னம் பிறை
பிறந்தன்று என்றாள். பொ.வே.சோ உரை விளக்கம்.

மேல்


இன்னை 

(பெ) (நீ) இப்படிப்பட்டவன் (முன்னிலை), (you) being in a such a state

வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/1-3

“வண்டுகள் மொய்க்கும்படியாக அரைத்த சந்தனத்தை செழும்பப் பூசிய
பார்க்கத் தெவிட்டாத இனிய தோற்றத்தினையும், பரத்தைமைப் பண்பையும் கொண்ட அகன்ற மார்பினனே!
முன்பெல்லாம் நீ இப்படிப்படவன் இல்லை! இங்கு இரவினில் வந்திருக்கிறாய்!

மேல்


இனை

(வி) 1. வருந்து, grieve, வருத்து, cause grief
(பெ) 2.. துன்பம், grief
(பெ.அ) 3. இன்ன வகையான, of this degree

1.

இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12

வருந்துகின்ற பார்வையையுடைய இவளின் மையுண்ட கண்களில் கண்ணீர் விடாமல் சொரிகின்றது

இனை வனப்பின் மாயோய் – கலி 108/53

வருத்துகின்ற அழகினையுடைய மாநிறத்தவளே!

2.

இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/4

இத்தகைய தன்மையோடேதுன்பம் பெரிதும் எய்தும்

3.

இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/19

இத்தகைய நல்ல தன்மைகள் உடைய காட்டில் சென்றார்

மேல்